Monday, January 31, 2005

காணாமற் போய்விட்டது.


எனது பதிவொன்று பதிந்த உடனேயே காணாமற் போய்விட்டது.
ஏன்..?
தொடரும் இப்பிரச்சனைக்கான நிவர்த்தியை யாராவது கண்டு பிடித்தீர்களா?

இட்லி செய்யும் இன்னுமொருமுறை


நா.கண்ணன் இட்லி செய்யும் முறையைத் தந்துள்ளார்.
எனக்குத் தெரிந்த இன்னுமொருமுறை.

உழுந்தை ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். (ஏறத்தாழ 7-8 மணித்தியாலங்கள். குளிர் பிரதேசங்களில் ஊறுவதற்கு ஊரை விடக் கூடிய நேரம் தேவைப் படுகிறது.) பின்னர் கழுவிச் சுத்தம் செய்து, பசுந்தாக அரைத்தெடுங்கள்.

1கப் உழுந்துக்கு 2கப் ரவை என்ற அளவில் எடுத்து, ரவையை ஆவியில் 20 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.

அவிந்த ரவை நகச்சூட்டுக்கு வந்ததும் அரைத்த உழுந்துடன் சேர்த்து சிறிதளவு உப்பும் போட்டு இட்லியாக ஊற்றக் கூடிய தன்மை வருமளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து 10-12மணித்தியாலங்களுக்கு மூடி வையுங்கள்.

பின்னர் அவித்துப் பாருங்கள். கண்டிப்பாகப் பூப் போல வரும்.

Saturday, January 15, 2005

பதிப்புகளோடு...


அச்சில் பதித்து விட்டு புத்தகங்களை விற்கவும் முடியாமல், வீட்டில் வைக்கவும் இடமில்லாமல் கட்டியழுபவர்கள் ஒரு புறமிருக்க சந்தா கட்டியிருந்தும், புத்தகங்கங்களும், பத்திரிகைகளும் இடைநடுவில் வராது நின்று விடுவது இன்னொருபுறம் நடக்கிறது. இது விடயத்தில் இராதாகிருஷ்ணன் கொஞ்சம் மனம் நொந்திருக்கிறார்.

இந்த நிலையில் எந்த சந்தாவும் கட்டாமல் முழுக்க முழுக்க இலவசமாய் என் வீடு தேடி வரும் பத்திரிகைகளையும் அதை அனுப்பி வைக்கும் உரிமையாளர்களையும் நான் நன்றியோடு அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

முதலாவதாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக லண்டனிலிருந்து என் வீடு தேடி வரும் வடலி பத்திரிகை. இப்பத்திரிகையில் நல்ல நல்ல பயனுள்ள கட்டுரைகள் இடம் பிடித்திருக்கும்.

அடுத்து, தற்போது சில மாதங்களாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் லண்டனிலிருந்து என் வீடு தேடி வரும் ஒருபேப்பர் பத்திரிகை. இப்பத்திரிகை வருகின்ற ஒவ்வொரு முறையும் எனது பிள்ளைகள் அதன் லேஅவுட்டையும் பெயரையும் வைத்து சிரிப்பலைகளோடு ஒரு விமர்சனம் செய்யாமல் விடுவதில்லை. உள்ளடக்கம் கூட சுவை சுவாரஸ்யம் கலந்து பயனுள்ள விடயங்களோடுதான்......

Thursday, January 13, 2005

தேடல்




அலை கொண்டு போனவர்களை
அல்பத்தில் தேடுகிறான் இவன்

Wednesday, January 12, 2005

தேடல்




உறைவிடத்தையும்
உடைமைகளையும் மட்டுமல்ல
கடல் கொண்டு போன
உறவுகளையும் தேடுகிறான் இவன்

இப்படியம் சிலர்

இன்று ஒரு தொலைபேசி அழைப்பு இந்தப் பத்திரிகையில் இருந்து வந்தது.
இந்தச் செய்தியை அவர்களது பத்திரிகையில் பார்த்து விட்டு ஒரு தமிழன் தொலைபேசியில் அழைத்து
"நீங்கள் எப்படி இந்தச் செய்தியை உங்கள் பத்திரிகையில் போடலாம்.
TROவும் Tigerம் ஒன்றுதானே. நீங்கள் கொடுக்கும் காசெல்லாம் Tigerக்குத்தானே போகுது...." என்று சண்டை போட்டாராம்.

இப்படி ஒரு தமிழனே சொன்ன பின் தாம் என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். ஒரு தமிழனே சொன்ன பின் தாம் அந்தச் செய்தியைப் போட்டதற்காக வருந்துகிறோம் என்றார்கள்.

எவ்வளவோ கதைத்தும் அவர்கள் திருப்தி அடையவில்லை.
ஒருவேளை நாளைய அவர்கள் பத்திரிகையில் TROவுக்கு உதவி செய்ய வேண்டாமென்ற செய்தி வரலாம்.

நாடு நலிந்து கிடக்கிறது. உதவி தேவைப்படுகிறது. அதை TRO செய்கிறது. அதைக் கெடுக்க எப்படி இவர்கள் துணிகிறார்கள். மனிதநேயத்தை மறந்து போனார்களோ? கோபதாபங்களைப் பார்க்கும் நேரமா இது? எல்லோரும் ஒன்று கூடி உதவ வேண்டாமா?

Saturday, January 01, 2005

இயற்கையின் சீற்றம் இத்தனை கொடியதா..?

எதை எழுதுவது? எப்படி எழுதுவது?
புதுவருடம் இத்தனை சோகத்தைச் சுமந்து வரப்போகிறதென யாராவது நினைத்தோமா..?
போரின் வடுக்கள் ஆறுமுன்னே எங்கள் சந்தோசங்களைக் கடல் கொண்டு போகுமென துளியாவது உணர்ந்தோமா?
அலை வந்து தழுவும்... தாலாட்டும்.. என்றுதான் எண்ணியிருந்தோம். இத்தனை கோரமாய் உயிர் பறித்துப் போகுமென்று எண்ணினோமா?
கண்மூடி முழிக்க முன் எம்முன்னே இத்தனை அழிவுகள் நடக்கும் என்று கனவிலாவது கண்டோமா?
போர்க்காலங்களில் போலக் கூட இம்முறை வருடத்தை வரவேற்க முடியவில்லை.
யாருக்கும் வாழ்த்துச் சொல்லவும் ஒப்பவில்லை. மனசு மலைத்துப் போய் நிற்கிறது.

உறவுகளைப் பறிகொடுத்த எங்கள் உறவுகளின் ஓலங்கள் மனதைப் பிசைகின்றன. கண்கள் பனிக்கின்றன.

இயற்கையின் சீற்றம் இத்தனை கொடியதா..?

கடலே எழுந்தே வீழ்ந்ததே...!