Monday, February 07, 2005

இதமான பொழுதுகளில் ஒன்று.

சனி நீராடு என்று சொல்லி ஊரில் சனிக்கிழமைகளில் நீராடுவதும் அதற்கு முன் எண்ணெய் தேய்த்து உடலை மசாஜ் செய்விப்பதுவும் ஆண்களுக்குரிய விடயங்களாகவே இருந்தன.

மசாஜ் செய்விப்பதற்கென்று ஆண்கள்தான் உரிய இடத்துக்குப் போய்வருவதை நான் கண்டிருக்கிறேன். வீடுகளில் கூட காலை அமுக்கி விடுவதும் கையைப் பிடித்து விடுவதும் ஆண்களுக்கே செய்யப் பட்டன.

பெண்களுக்கு இந்த சுகங்கள் தேவையில்லை என்று கருதி விட்டார்களோ என்னவோ..?

தப்பித்தவறி ஒரு ஆண் அதாவது ஒரு கணவன் தனது மனைவிக்கு கால் கை பிடித்து, அதையும் யாராவது பார்த்து விட்டால் போதுமே. ஊர் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரித்தான். மென்று தள்ளி விடுவார்கள்.

ஆனால் வெளிநாடுகளில் அப்படியல்ல. பெண்களுக்கு மசாஜ் அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்து. ஆண்களுக்கும் கிடைக்கும்தான். ஆனால் பெண்களைத்தான் அடிக்கடி மசாஜ் செய்விக்க அனுப்புவார்கள்.

கணினிக்கு முன் அதிகமாக இருப்பவர்கள், நிறைய எழுதுபவர்கள்... என்பதில் தொடங்கி மனஅழுத்தத்துக்கு ஆளானவர்கள் வரை என்று பலரும் தோள்மூட்டுகளிலும், கழுத்துப் பகுதியிலும் ஏற்படும் இறுக்கத் தன்மையால் பாதிக்கப் படுகிறார்கள். இந்தப் பாதிப்புகள் பெண்களைத் தாக்குவதற்கான காரணிகள்தான் அதிகம் என்பது மருத்துவர்களின் கருத்து. இதற்கு மருத்துவரீதியான உடற்பயிற்சியோடு மசாஜ்யும் அவசியம் என்பதுவும் அவர்களின் கருத்து.

இந்த மசாஜ் செய்விப்பது இருக்கிறதே மிகமிக இதமான ஒரு விடயம். இதற்கென்றே படித்த பெண்கள் (ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள்தான் இதில் வல்லுனர்கள்) கைவிரல்களினால் மெதுமெதுவாக எமது தோள்களிலும், முதுகிலும் லாவகமாக அழுத்தி குறிப்பிட்ட நரம்புகளையும் மசில்ஸ்களையும் கண்டு பிடித்து.... அது மிக மிக இதமான விடயம்.

இந்தச் சலுகையை நான் தவற விடுவதே இல்லை. அடிக்கடி வைத்தியரிடம் சென்று எனது தோள்மூட்டு இறுகி விட்டதைச் சொல்லி மசாஜ் செய்விப்பதற்கான அனுமதியை எடுத்து விடுவேன். மருத்துவரின் அனுமதியுடன் செய்விக்கும் போது மருத்துவக் காப்புறுதி நிறுவனமே இதற்கான செலவை ஏற்றுக் கொள்ளும். ஒரு சிறுதொகையை மட்டுமே நான் கட்ட வேண்டி இருக்கும். (ஒரு தடவை மருத்துவர் எழுதித் தந்தால் ஆறு தடவைகள் மசாஜ் கிடைக்கும். ஆறு தடவைக்குமாக நான் கொடுக்கும் பணம் ஒரு தடவைக்கான பணத்தை விடக் குறைவாகவே இருக்கும்.) ஆனால் இந்த சலுகைகளை எங்கள் தேசத்துப் பெண்கள் அவ்வளவாகப் பயன் படுத்துவதில்லை. நானோ அந்தப் பொழுதுகளை மிகுந்த ஆத்மார்த்தமான உணர்வுடன் அனுபவிப்பேன்.

இந்த மசாஜ்யை கணவன்மார்கள் கூட மனைவியருக்குச் செய்யலாம். கற்றவர்கள் போலச் செய்ய முடியாவிட்டாலும் களைத்துப் போயிருக்கும் மனைவியின் தோள்களை இதமாக அழுத்தி விடுவது மனைவியின் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் மிகவும் இதமாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு மருத்துவர் சொன்னார் இந்தத் தொடுகைகளே உடலின் முக்கால்வாசி வருத்தங்களைத் துரத்தி விடும் என்று.

இதற்கென்று கற்றவர்கள் அன்றி வேறுயாரும் இப்படியான மாசஜ்களை செய்யக் கூடாது என்று சொல்வார்கள். உண்மைதான். கற்றவர்கள் போல நரம்புகளைத் தேடி அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் எலும்புகள் அழுத்தப் பட்டு விடும்.

3 comments:

  1. //வீடுகளில் கூட காலை அமுக்கி விடுவதும் கையைப் பிடித்து விடுவதும் ஆண்களுக்கே செய்யப் பட்டன.//

    அய்யோ, என் மாமன் ஒருத்தரிடம் மாட்டிக்கொண்டால் இதேதான் தொல்லை. சிறுவர் சிறுமியர் யார் கிடைத்தாலும் ஜம்பமாகப் படுத்துக்கொண்டு காலை அமுத்தச் சொல்லி...அது ஒரு தண்டனை...

    ReplyDelete
  2. எங்க தாத்தாவிற்கு கால் பிடித்துவிட்டால் காசு கொடுப்பாரே. :))தலை நரை முடி பத்துக்கு 5 பைசா (பிடிங்கத்தான்)

    ReplyDelete
  3. ரவியா
    தாத்தாவுக்கு வயசு ஏற ஏற நீங்கள் பணக்காராகியிருப்பீங்களோ...?

    ReplyDelete