Friday, February 11, 2005

உயிரோடு திரும்புவேனா..?


இன்று நாம் நினைத்ததும் தாயகம் சென்று திரும்புகிறோம். அப்படிச் செல்ல முடியாத ஒரு நிலை அன்று இருந்தது. அந்தப் பொழுதில் நான் என் குழந்தைகளை யேர்மனியில் விட்டுவிட்டு போர்முகம் காட்டி நிற்கும் என் தாயகத்தை நோக்கிப் பயணித்த போது என்னுள் எழுந்த உணர்வுகளில் ஒரு துளி.
1997 மார்கழியில் தாயகம் சென்ற போது...

யேர்மனிய மண்விட்டு மேலெழுந்து
விண்ணோக்கி முன்னேறும் விமானத்துள்...
"உயிரோடு திரும்புவேனா - நான்
உயிரோடு திரும்புவேனா...?"
அலைமோதும் எண்ணங்கள்
நெஞ்சில் சதிராட நான்...

கருவோடு உருவாகி
உயிரோடு உறவாடும் - என்
உதிரத்து உறவுகளை
யேர்மனியில் விட்டு வரும் பரிதவிப்பு
அவர்கள் சிறகிழந்து விடுவார்களோ
என்ற பதைபதைப்பு

சின்ன வயசிலே
சிட்டாகப் பறக்கையிலே
தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட
பட்டு மேகங்களினூடே
விமானம் வட்டுமிட்டுப் பறக்கையிலே
மேகத்தைத் தொட்டுப் பார்க்கவோ
ஒரு மெட்டுக் கட்டவோ
சொட்டுக்கூட ஆசையின்றிய படபடப்பு
"உயிரோடு நான் - என்
உதிரத்து உறவுகளிடம் திரும்புவேனா...!"
என்ற பயத்துடிப்பு

கருக்கொண்ட நாள் முதலாய்
கர்ப்பப்பையில் காத்து
வெளிவந்த பின்னாலும்
அன்புச் சிறகுகளினால் அணைத்த
அம்மாவையும்
உயிரோடு போராடும் கனமான வேளையிலும்
என் முகங்காண ஏங்கி நிற்கும்
அப்பாவையும் பார்க்க
விழி சிவந்து
மனம் கசிந்து
பயணிக்கும் என்னுள்ளே படபடப்பு
"என் உதிரத்து உறவுகளிடம்
உயிரோடு திரும்புவேனா...!"
என்ற பரிதவிப்பு

கடல் தாண்டி மலை தாண்டி
பனி தாண்டி வெண்முகில் தாண்டி
தரையிறங்கும் விமானத்துள் சலசலப்பு
கரை வந்த அலை வந்து
மனம் தொட்ட சிலுசிலுப்பு
அங்கோடி இங்கோடி
வயிற்றிற்கோர் வழிதேடி
மீண்டும் தாயின் இறகுக்குள்
ஒழிந்து கொள்ளும் உயிர்த்துடிப்பு

இருந்தும்...
"உயிரோடு திரும்புவேனா - நான்
உயிரோடு உயிரோடு திரும்புவேனா...?"
அலைமோதும் எண்ணங்கள்
என் நெஞ்சோடு...

சந்திரவதனா
12.12.1997

No comments:

Post a Comment