Thursday, February 10, 2005

போதுமானவை


இது எனது கவிதை அல்ல.
1998 இல் ஆனந்தவிகடனில் பிரசுரமான இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்ததால் இதை பத்திரப் படுத்தி வைத்திருந்தேன். படித்துப் பாருங்கள் சிலசமயம் உங்களுக்கும் பிடிக்கலாம்.


அவர் இவர் என்று ஆட்களைப் பற்றி
உதட்டைத் திறந்து உட்கார வராதீர்கள் என்னிடம்......!

பூக்களைப் பற்றிப் பேசத் தெரிந்தால் வாருங்கள்!
நமது நேரமும் மணக்கும் - அன்றியும்
பொய்கள் சொன்னதாய் பூக்களைப் பற்றிக்
குறை கூற முடியாது உங்களால்!

அவர் இவர் என்று நபர்களைப் பற்றி
நாக்கை அசைக்க வாராதீர்கள் என்னிடம்......!
நல்லபடி தொடங்கி - மூன்றாவது வாக்கியத்தில்
முட்களை மூடி வைப்பீர்கள்

வானவில் பற்றி உங்கள் வசம் வார்த்தைகள் உண்டா?
அப்படியானால் அள்ளி வாருங்கள்!
நம் உரையாடலுக்கும் வண்ணங்கள் கிடைக்கும் - அன்றியும்
கட்சி மாறியதாய்க் கட்டாயம் உங்களால்
அதன் மேல் களங்கம் கற்பிக்க முடியாது!

அவர் இவர் என்று எவர் பற்றியும்
பேச வராதீர்கள் என்னிடம்......!
ஆரோகணத்தில் அவரை ஆலாபனை செய்து
அவரோகணச் சேற்றில்
மூச்சுத் திணறப் புதைத்து விடுவீர்கள்.

அருவியை நதியை கடலை அறிவீர்களா?
உரையாட இவை பற்றிக் கருத்திருந்தால் வாருங்கள்!
நம் அனுபவ நரம்புகளும் குளிரும் - அன்றியும் அவை
இளிச்சவாயர்கள் கால்களை இடறி விட்டு ஏற்றம் பெற்றதாய்
புகார் செய்ய முடியாது உங்களால்!

ஆகவே........
அவர் இவர் என்று ஆசாமிகள் பற்றியல்லாது
பேச முடியாதெனில்
வராதீர்கள் என்னிடம்........

- தமிழன்பன் -
நன்றி - ஆனந்தவிகடன்

No comments:

Post a Comment