Friday, February 25, 2005

இது சரிதானா?


ஐரோப்பியக் கலாச்சாரம் ஒரு தீண்டத்தகாத விடயம் எனக் கருதும் ஐரோப்பியத் தமிழர்கள், ஐரோப்பியாவில் தமது பிள்ளைகள் சிகரெட் புகைத்தாலோ அல்லது மது அருந்தினாலோ அல்லது காதலித்தாலோ....

ஐரோப்பியாவுக்கு வந்ததால்தான், தமது பிள்ளைகள் இப்படியான பழக்கங்களைப் பழகிக் கெட்டலைகிறார்கள். என்று சொல்லித் தலையிலடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இப்படித் தலையிலடித்துக் கொள்ளும் பெற்றோராகிய இவர்கள், முக்கியமாகத் தந்தையர் ஊரிலேயே தமது பருவ வயதில் சிகரெட் புகைக்கத் தொடங்கி, மது அருந்தத் தொடங்கி இன்னும் அதை இங்கு ஐரோப்பியாவிலும் தொடர்கிறார்கள்.

அத்தோடு ஐரோப்பியாவில் வாழ்வதால்தான் தமது பிள்ளைகள் காதல் என்னும் மாயவலையில் சிக்கி மாய்கிறார்கள் என்று சொல்லி ஐரோப்பியக் கலாச்சாரத்தைத் திட்டும் இவர்களில் அனேகமானோர் ஊரில் காதல் செய்யாமல் இருக்கவில்லை.

சிகரெட், மது, காதல் இவைகள் மூன்றுமே ஊரிலும் இளைஞர்களை விட்டு வைக்காத போது ( இதை அநுபவரீதியாக உணர்ந்திருந்தும், தெரிந்திருந்தும்)
எம்மவர்கள் அர்த்தமற்ற முறையில் ஐரோப்பியக் கலாச்சாரத்தைச் சாடுகிறார்களே!

இது சரிதானா?

6 comments:

  1. //சிகரெட், மது, காதல் இவைகள் மூன்றுமே ஊரிலும் இளைஞர்களை விட்டு வைக்காத போது ( இதை அநுபவரீதியாக உணர்ந்திருந்தும், தெரிந்திருந்தும்)
    எம்மவர்கள் அர்த்தமற்ற முறையில் ஐரோப்பியக் கலாச்சாரத்தைச் சாடுகிறார்களே!//

    Nice article. this should be discused more. Bytheway, may be we can categarize love separatly from the evil ones( smoke and alcohal).

    ReplyDelete
  2. சந்திரவதனா நான் நினைக்கிறேன் நாம் முதலில் எமது பிள்ளைகளில் நம்பிக்கை வைக்கவேண்டும். குடி சிகரெட் காதல் போன்றவற்றை பெரிதாக்கி பூடகமாக நடக்கும் போது தான் அவர்களுக்கம் அது ஏதோ பெரிய விடையமாகத் தோன்றும். முடிந்தவரை அவர்களுடன் கதைத்து அவர்கள் பழகுபவர்கள் செய்பவை போன்றவற்றை நாம் தெரிந்து கொண்டால் பிரச்சனை இருக்காது.
    எனது அனுபவம் ஒன்றை இங்கே கூற விரும்புகின்றேன். எனது மகன் ஒருநாள் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டான். நடக்கமுடியாமல் ஒரே சத்தி. அவனது நண்பன் எனது வீட்டிற்குத் தொலைபேசியில் அழைத்துத் தாம் கூட்டி வருவதாகவும் எனது மகன் நடக்க முடியாமல் இருக்கின்றார் வாசலில் நின்று உள்ளே கூட்டிச்செல்லும் படியும். நான் அப்படியே வாசலில் நின்று அவனை உள்ளே அழைத்துச் சென்றேன். ஒரே சத்தி. நான் அவற்றைத் துடைத்து அவனது உடுப்பை மாற்றிப் படுக்க விட்டேன்.
    அவனது வாயிலிருந்து வந்தது ஒன்றே ஒன்றுதான்.
    mom I am sorry I won’t do it again
    நான் அடுத்த நாள் கதைக்கும் போது சொன்னேன் குடிப்பது தவறில்லை ஆனால் உனது அளவு உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். உனது நடத்தை மற்றவர்களின் fun ஐக் கெடுக்கக் கூடாது என்று. அவன் சிரித்தபடி சொன்னான் வேண்டாம் இது இனி என்று. குடித்தாலும் அளவாகக் குடிப்பான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    ReplyDelete
  3. சாடுவோருக்கு சாடுவதற்கு என்று ஏதாவது வேண்டும், அதற்குக் கிடைத்தது கலாச்சாரம்! எந்தக் கலாச்சாரத்தில்தான் இவையெல்லாம் நடக்காமல் உள்ளது?

    ReplyDelete
  4. இது விடயத்தில் அம்மாக்களை விட அப்பாக்கள்தான் பிள்ளைகளுடன் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதை அனேகமான குடும்பங்களில் காண முடிகிறது.

    ReplyDelete
  5. முத்து, முதல்வன், சுமதி, ராதாகிருஸ்ணன்
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    சுமதி சொல்வது போலப் பிள்ளைகளுடன் நட்பாகப் பழகும் போதும், தவறுகள் செய்தாலும் அரவணைத்து, அவர்களுடன் கதைக்கும் போதும் அவர்களிடம் ஏற்படும் உளரீதியான நம்பிக்கை அதிகம்.

    குடித்து விட்டு வரும் போது, அடியடா பிடியடா என்று பெற்றோரும் வீட்டைக் கூத்துக் களமாக்கினால் இந்தப் பிரச்சனைகள் வேண்டாமென்று பிள்ளைகள் அடுத்த தரம் களவாகக் குடித்து விட்டு வருவார்கள். தவறை அருகிருந்து ஆறுதலாக எடுத்துச் சொல்லும் போதும், அதனாலான பாதிப்புக்களை விளக்கும் போதும், பிள்ளைகள் தம் தவறை உணர்வதும், எது சரி? எது பிழை? என்று ஆலோசித்து நடப்பதும், குழப்பம் வரும் போது தாமாகவே பெற்றோரோடு அது பற்றிக் கதைத்துத் தீர்வைத் தேடிக் கொள்வதும் சாத்தியமாகிறது.

    எனது பிள்ளைகள் எதுவானாலும் என்னோடு கதைத்துக் கொள்வார்கள். அவர்களது முதல் நட்பு நான்தான். எந்த அந்தரங்கத்தையும் என்னோடு பேசித் தீர்வைத் தேடிக் கொள்வார்கள். நானும் அவர்களிடம் எதையுமே வற்புறுத்துவதில்லை. "இப்படிச் செய்தால் இன்ன இன்ன விளைவுகள் ஏற்படும்." என்பதை விளக்குவேன். இறுதியாக அவர்களது வயதைச் சுட்டி இந்த வயதிற்கு முடிவை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்பேன். நானே முடிவைச் சொல்லும் போது அது திணிப்பாகிறது. முடிவை அவர்கள் கையில் விட்டு "உடனே தீர்மானிக்காதே. கொஞ்சம் நேரமெடுத்து யோசி" என்று விடும் போது அவர்களாகவே சரியான வழிக்கு வருகிறார்கள்.

    சுமதி(கறுப்பி) குறிப்பிடுவது போல நாம் பிள்ளைகளை நம்ப வேண்டும். அப்போதுதான் அவர்கள் எம்மை நம்பி எம்மிடம் தமது பிரச்சனைகளைச் சொல்லி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுவார்கள்.

    ReplyDelete