Monday, March 14, 2005
குழந்தைகள் சம்பாதிக்கலாமா?
உதயா குழம்பியிருக்கிறார். இதில் குழம்புவதற்கு அவசியம் இல்லையென்றே நான் கருதுகிறேன்.
குழந்தைகளிடம் இதைச் செய் என்றோ, அல்லது இதைச் செய்யாதே என்றோ ஒரேயடியாகத் தடுத்து விடக் கூடாது. ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு விதமான தன்மை இருக்கும். ஒரு குழந்தை பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும். இன்னொன்று இன்னொரு விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும். அதனால் முதலில் நாங்கள் பார்க்க வேண்டியது அந்தக் குழந்தையின் இயல்பான தன்மையைத்தான். இந்தத் தன்மையுள்ள இந்தக் குழந்தை இந்த வழியில் போனால் என்ன நடக்கும் என்பதைக் கருத்தில் எடுத்தே நாம் அவர்களை வழிக்குக் கொண்டு வரப் பார்க்க வேண்டும்.
13வயதில் உழைக்கத் தொடங்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கையின் குறிக்கோளே பணமாக மாறலாம்.(அதனால் கல்வி தடைப் படலாம்)
13வயதில் உழைக்கத் தொடங்கும் இன்னொரு குழந்தை அப் பணத்தை எப்படிச் செலவழிப்பது எனக் கற்றுக் கொள்ளலாம்.(அதனால் வாழ்க்கையில் திட்டமிட்டுச் செலவு செய்யக் கற்றுக் கொள்ளலாம்.) 13வயதில் உழைக்கத் தொடங்கும் இன்னுமொரு குழந்தையோ சேமிக்கக் கற்றுக் கொள்ளலாம். இப்படியே 13வயதில் உழைக்கத் தொடங்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக அதைப் பயன்படுத்தி... பலாபலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்களின் எதிர்காலம் ஒவ்வொரு விதமாக அமையலாம். ஆதலால் எடுத்தவாக்கில் 13வயதுக் குழந்தையைப் பணம் சம்பாதிக்க விடுவது தப்பு என்று சொல்லி விடவோ, அல்லது அந்த முயற்சியைத் தடுத்து விடவோ கூடாது.
மாறாக குழந்தைக்கு எங்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். படிப்பும் அதனோடு கூடிய எதிர்காலமும் முக்கியம் என்பதை மெதுமெதுவாகப் புரிய வைக்க வேண்டும். அப்படியெல்லாம் புரிய வைத்தும் குழந்தைக்கு பணத்தில்தான் நாட்டம் அதிகம் என்னும் பட்சத்தில்தான் நாங்கள் குழந்தையை ஒரு குறிப்பிட்ட அளவு சம்பாதிப்பதோடு நிறுத்த வேண்டும்.
ஒரு உதாரணம்
எனது மகன் திலீபன் 12வயதாக இருக்கும் போது எங்களது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஜேர்மனிய இளைஞன் ஒருவன் பேப்பர் போடும் வேலை செய்து கொண்டிருந்தான். அந்த இளைஞனுக்கு 14வயது என்பதால் அவன் சட்டப் படியான அனுமதியோடு பதிவு செய்து அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தான். எப்படியோ திலீபனுக்கும் அந்த இளைஞனுக்கும் நட்பு ஏற்பட்டதில் திலீபன் சனிக்கிழமை காலைகளில் அந்த இளைஞனுக்கு பேப்பர் போடுவதற்கு உதவி செய்தான். அந்த இளைஞன் மாதம் முடிய தனக்குக் கிடைக்கும் 200மார்க்கில் 50 மார்க்கை திலீபனுக்குக் கொடுத்தான்.
இதையிட்டு நான் எந்தக் குழப்பமும் அடையவில்லை. உதவியாகச் செய்த போதும் பணம் கொடுத்தானே எனச் சந்தோசப் பட்டேன். எனது மகனுக்கு அப்படிப் பணம் கிடைத்தது மிகுந்த உற்சாகமாக இருந்தது. தொடர்ந்தும் 14வயது வரை உதவி செய்து மாதாமாதம் 50மார்க்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தவன் 14 வயதானதும் அந்த இளைஞனின் உதவியோடு தானே தனக்கென ஒரு பகுதியை எடுத்து இன்னும் கூடிய பணத்தைச் சம்பாதிக்கத் தொடங்கினான். 19வயது வரை எந்தப் பிரச்சனையுமின்றி அவ்வேலையைத் தொடர்ந்தான்.
இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால்
இப்படி 12வயதிலேயே சம்பாதிக்கத் தொடங்கியது எனது மகனின் வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முதல் மாதம் 50மார்க் கிடைத்ததுமே அவன் எனக்குச் சொன்னது "அம்மா எனது பள்ளிக்கூட கொப்பி, புத்தகச் செலவுகளை நானே பார்க்கிறேன். காணாவிட்டால் கேட்கிறேன்." என்பதுதான். அது மட்டுமல்லாமல் அதிலே 10மார்க்குகளைக் கடிதத்துள் வைத்து ஊருக்கும் அனுப்பினான். மிகுதிப்பணத்தில் தனக்குத் தேவையானவைகளை வாங்கினான். கூடிய பங்கு அவைகள் புத்தகங்களாக இருந்தன. பாடல் கசட்டுகளும் இருந்தன. அதமமான செலவு என்று எதுவுமே செய்ததில்லை. பணம்தான் வாழ்க்கை என்று இன்றுவரை ஆனதுமில்லை. அந்த வேலை அவனது கல்விக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்கவில்லை. பெருமைப்படுமளவுக்கு வகுப்பில் முதல்மாணவனாகவே எப்போதும் இருந்து, எமது நகரப் பாடசாலைகளில் முதல் மாணவனாகவே தேர்ச்சி பெற்று, தற்போது நல்ல வேலையிலும் இருக்கிறான். அதே நேரத்தில் பணத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்யவும் கற்றுக் கொண்டிருக்கிறான்.
No comments:
Post a Comment