Thursday, June 02, 2005

காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததா?


அவர் ஒரு பெரிய நாட்டாண்மை போலத்தான் நடந்து கொள்வார். பேச்சும் செயலும் தன்னை விட்ட ஆட்கள் இல்லையென்பது போலத் தொனிக்கும். வார்த்தைகளில் அதிகாரம் உதிர்க்கும். பணம் அவரிடம் கொட்டிக் கிடப்பதால் திமிர் அவர் நடையில் துள்ளும்.

அவர் வீட்டுக்குள் ஆடுகள் வந்து பூங்கன்றுகளில் வாய் வைத்து விட்டால் போதும். தனது உயிரைக் கிள்ள யாரோ வந்து விட்டது போலக் கோபப் படுவார். தகாத வார்த்தைகளால் அந்த வாய் பேசாப்பிராணிகளைத் திட்டிக் கொட்டுவார். எட்டிப் பிடிக்க முடிந்தால் பிடித்து அந்த ஆட்டுக் குட்டிகளின் ஒற்றைக்காலை முறித்து விடுவார். பெரிய ஆடுகள் என்றால் அதற்கென ஒரு கொட்டன் வைத்திருந்து, அதனால் அடித்து காலை முறித்து விடுவார்.

அவர் வீட்டுக் கேற் சரியாகப் பூட்டப் படாமல் இருக்கும் சமயங்களில் அவர் வீட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு ஆட்டின் காலும் முறிக்கப் படும் போது அந்த ஆடுகளும் குட்டிகளும் எழுப்பும் அவலக்குரல்கள் இன்னும் கூட என் ஞாபகத்துள் உறைந்து கிடக்கின்றன.

எங்கள் வீதியில் ஒரு சமயத்தில் நொண்டி நொண்டிச் செல்லும் ஆடுகளே அதிகமாகியிருந்தன. வசதி குறைந்தவர்கள் ஆடுகளை ஊர்களில் மேயவிட்டுத்தான் வளர்த்தார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை. இவர் கால்களை முறிக்கிறார் என்பதற்காக ஆடுகளை வீட்டில் வைத்துச் சாப்பாடு போட அவர்களால் முடியவில்லை. ஆனாலும் மனம் நொந்து சாபமிட்டார்கள். திட்டிக் கொட்டினார்கள். எல்லாம் தமக்குள்ளேயும் அவருக்குப் பின்னேயும்தான். நேரே நின்று "நீ செய்வது சரியா?" எனக் கேட்க யாருக்கும் துணிவு வரவில்லை.

கால ஓட்டத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்குக் கால் முறிந்து விட்டது. எந்த வைத்தியத்திலும் காலைப் பொருத்த முடியாமல் போய் விட்டது. பணம் எவ்வளவு செலவழித்தும் பலனளிக்கவில்லை. அவர் எழுந்து நடப்பதாயினும் மனைவியின் துணை தேவைப்பட்டது. திமிர்த்த நடை ஊன்றுகோலுக்குள் பதுங்கிப் போனது.

கால் இனிப் பொருந்தும் என்ற நம்பிக்கையும் விடுபட்ட போது அவர் முழுவதுமாகத் தொய்ந்து போய் விட்டார். நொண்டிய படி ஆடுகள் வந்து பயிர்களைத் தின்று தின்று போயின. கத்திக் கத்திக் கூப்பிட்டுத்தான் மனைவியிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டார். ஊன்று கோல் மட்டும் போதாமல் மனைவியிடம் அடிக்கடி மண்டியிட்டார். அதிகாரமும் ஆணவமும் அவரது நித்திய படுக்கையான மரக்கட்டிலுக்குள் முடங்கிப் போயின.

இப்போதும் எனக்குள்ளே எழும் கேள்வி. காகம் இருக்கப் பனம்பழம் வீழ்ந்ததா?
சந்திரவதனா
2.6.2005

5 comments:

  1. ஒருவேளை இப்படிக்கூட இருக்கலாம்!

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்;

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்;

    துப்பாக்கி ஏந்தியவன், துப்பாக்கியாலேயே சாவான்.

    ReplyDelete
  2. ஞானபீடம்
    எல்லாம் வெறும் லாம் தானே.

    தினை விதைத்தவர்கள் வினையையும்
    வினை விதைத்தவர்கள் தினையையும் அறுக்கிறார்களே!
    இவர்களுக்கான காலத்தின் பதில் என்ன?

    முற்பகல் கெடுதல் செய்தவர்கள்
    பிற்பகலில் நன்றாக வாழ்கிறார்களே!
    இவர்களுக்கான காலத்தின் பதில் என்ன?

    துப்பாக்கி தூக்கிய பலர் வெளிநாடுகளில் சுகபோகம்
    அனுபவிக்கிறார்களே!
    இவர்களுக்கான காலத்தின் பதில் என்ன?

    ReplyDelete
  3. காலத்தின் பதில் காலப்போக்கில் தான் தெரிய வரும்.

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்;
    எனினும் தர்மமே வெல்லும்.

    ReplyDelete
  4. இந்த விஞ்ஞான யுகத்திலும் இதையெல்லாம் நம்புகிறீர்களா?

    இனியில்லையென்ற அளவுக்கு யாரையாவது சித்திரவதை செய்தவர்கள்
    ஒரு துப்பாக்கிச் சூட்டில் பொட்டென்று போய் விடுகிறார்கள்.
    அவர்களுக்கு அதனால் துன்பம் இல்லை. இறந்து விட்டார்கள்.´(நீங்கள் சொன்ன அந்த சூது எந்தக் கவலையுமின்றித் தூங்கி விடுகிறதே!) துன்பம் சுற்றத்துக்கும் சூழலுக்குமே.

    ReplyDelete
  5. உங்கள் கதைகளையும் அதன் பின் நீங்கள் எழுதிய கருத்துகளையும் படித்தேன். சில நம்பிக்கைகள் உண்மையா பொய்யா என்று ஆராய்வது ஒன்று. அதனால் நன்மையா தீமையா என்று நோக்குவது இன்னொன்று.

    ஒருவனின் செய்கையின் விளைவுகளை அவன் பெறுவான் என்பது ஓரளவு உண்மையே. இது உளரீதியாக அவனைப் பாதிக்கும். மற்றவருக்குத் தீங்கு நினைக்காத மனம் நிறைவாக இருக்கின்றது. மற்றவர்களுக்கு நன்மை செய்கின்ற மனிதன் மனதில் மகிழ்ச்சி பெருகுகின்றது. தீங்கையே நினைப்பவன் அந்த தீய நினைவாலேயே தன் மன அமைதியை அழித்துக் கொள்கின்றான். அவன் செய்கைகள் அவனைப் பாதிக்கின்றன. Every action has a reaction விஞ்ஞானரீதியான விளக்கமும் உண்டு. ஒவ்வொரு விளைவுக்கும் பின்னால் ஒரு பின் விளைவு இருக்கின்றது.

    பிள்ளையாரை உதைத்தவரையும், ஆட்டுக் காலை ஒடித்தவரையும் வைத்து நாங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. 83 -ல் கால் கை ஒடிந்தவர் எல்லோரும் யாரையும் உதைக்கவில்லை. தப்பியிருக்கும் நாங்கள் எல்லோரும் தப்பே செய்யாதவர்கள் அல்ல. எங்கள் மனதில் ஒரு குறை இருக்கின்றது. நாங்கள் நம்புகின்றவற்றிற்குச் சாதகமானவற்றையே பார்க்கின்றோம். இதற்குச் சாத்திரம் பார்ப்பவர்கள் நல்ல உதாரணம். சாத்திரக்காரர் பலவற்றைச் சொல்லுவார். வேலை கிடைக்கும். கஷ்டங்கள் வரும். அவர் சொன்னவை பலவற்றை மறந்தாலும். ஒரு சில சம்பவங்களை வைத்து அவர் சொன்னவாறே நடந்ததாக எண்ணி வியப்படைகின்றோம்.. அவை சாதரணமாகவே நடப்பவையாகவே இருக்கும்.

    வினை விதைத்தவன்....போன்ற கருத்துகள் சமூக வாழ்வின் நன்மை கருதி ஆக்கப் பட்டவை. அன்றைய மனிதன் சட்டங்கள், காவல் துறையினரை நம்பி வாழவில்லை. இன்று துப்பாக்கியையும் சிறைச்சாலையையும் காட்டி சமூக கட்டமைப்பைக் காக்க முயல்கின்றோம். அதையே அன்றைய மனிதர் கடவுள், ஊழ்வினை, நம்பிக்கைகள் என்று பயமுறுத்தி சமூகத்தில் சுமூக நிலையை உருவாக்கினார்கள. கற்பு கூட அமைதியான சமூக வாழ்வுக்காக ஏற்பட்டது என்று கூறலாம். இரண்டு வழி முறைகளும் தனி மனிதனின் சிந்தனையை விடுதலையைக் கட்டுப்படுத்துகின்றன. அல்லது அவன் சுயமாகச் சிந்தித்து சமூகத்தின் நன்மை கருதி நடக்க முடியாதவன் என்ற கருத்தில உருவாக்கப்பட்டவை.
    (ஒரு சொற்பொழிவு நடத்தி விட்டேனோ?)

    ReplyDelete