Friday, August 19, 2005

புத்தகம் பேசுது இதழுக்கு பாமா அளித்த பேட்டி


தமிழ் தலித் இலக்கியப் படைப்பாளிகளுள் மிக முக்கியமானவர் பாமா. இவரது முதல் படைப்பான கருக்கு மூலமாக பரந்த தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். தன் வாழ்க்கையையே சாட்சியாய் வைத்து தலித் மக்களின் அவல வாழ்க்கையை பாசாங்கின்றி பதிவு செய்தவர் அதுவரை பேசப்படாதிருந்த சகலவிதமான சமூக மௌனங்களையும் தனது தனித்துவமான தலித்மொழியினால் கலைக்க முயற்சித்தவர்.
புத்தகம் பேசுது என்னும் இதழுக்கு பாமா அளித்த பேட்டியின் ஒரு பகுதி

தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்

நீங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை (வசவு) எழுதுறதா விமர்சன வட்டாரத்திலே ஒரு முணுமுணுப்பு இருக்கே...?

பாமா படிச்ச பொண்ணுதானே நிறைய கெட்ட வார்த்தைகளை எழுதியிருக்கேன்னு சொல்றாங்க. தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் தான் ஆயதம் எங்களாலே கத்தி வச்சுகிட்டு சண்டை போடமுடியாது. தற்காப்புக்கும் கெட்ட வார்த்தைகள் தான். அடிக்கிறவன் வேணுமானா நல்ல வார்த்தையா பேசலாம் அடிபட்டவன் என்ன வார்த்தையை பேசுவான்? அப்படித்தான் பேசமுடியும். நீங்க எப்படி எங்ககிட்டேருந்து நல்ல வார்த்தையை எதிர்பார்க்கிறீங்க காலம் முழக்க சாதியைச் சொல்லி அடிக்கிறே, பெண்ணுன்னு சொல்லி ஒதுக்குறே, பொருளாதார ரீதியா ஒடுக்குறே, கலாச்சார ரீதியா இழிவுபடுத்துறே இவ்வளவுவையும் தாங்கிகிட்டு நாங்க நல்ல வார்த்தை தான் பேசணும்னா சாத்தியம் இல்லே அப்படி எழுதினா அது உண்மைக்குப் புறம்பா எழுதுற விசயம் தான்.

இப்போது நிறைய பெண் கவிஞர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் பெண்மொழி சமூகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியாதா இருக்கு. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

நிறைய பெண் கவிஞர்கள் பெண் உடல் சார்ந்து, பெண் பிரச்சினைகள், பெண்பாலியல் சார்ந்து நிறைய கவிதைகள் எழுதுறாங்க. அதை நான் குறைச்சு மதிப்பிடல. அதே சமயத்துல பெண்களுக்கு வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் இருக்குதில்லே.. பிரசவம், குழந்தைப்பேறு பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது, வயசுக்கு வருவது இந்த மாதிரி விசயங்கள் இவையெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு தலித் பெண்ணுக்கு பிரச்னைகளே இல்லை. இதைவிட பயங்கரமான பிரச்னைகளெல்லாம் இருக்கு. நிறைமாச கர்ப்பத்தோட வயல்ல குனிஞ்சு நட்டுகிட்டு வர்ற பெண்களை பார்த்திருக்கேன். மரத்திலே தொட்டி கட்டி போட்டு குழந்தை பசியோட கத்திக்கிட்டே கிடக்கும் வேலையை முடிச்சிட்டுதான் பாலுட்டவே முடியும். இப்படியெல்லாம் பிரச்னை இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு இவங்க எழுதுறாங்களேன்னு. ஒருகனமில்லத விசயமாத்தான் எனக்குப்படுது அதனால இதையெல்லாம் சிலாகிச்சு என்னால பாராட்ட முடியல.

உங்கள் தலித் மொழிநடைக்கு நிறைய விமர்சனங்கள் வந்ததில்லையா..? - மிகுதி

11 comments:

  1. இணைப்புக்கு நன்றி. பாமாவின் முதற்கேள்விக்கான பதிலை அடிப்பட்டவர்கள் என்ற வகையிலே தலித், பெண்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் பலருக்கெதிராகச் சொல்லலாம்; வேண்டுமானால், வசைக்குப் பதிலாக, துப்பாக்கி, தோட்டா என்றும் போட்டுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  2. இந்தப்பதிவுக்கும், ஊடறு சுட்டிக்கும் நன்றி சந்திரவதனா.

    ReplyDelete
  3. Thanks a lot for the link Chandravathana. Her response for the first question is fantastic. Thanks once again.

    -Mathy

    ReplyDelete
  4. சந்திரவதனா,

    பதிவிற்கும் சுட்டிக்கும் நன்றி.

    ஒன்று தோன்றுகிறது.

    சமூகத்திலே அடக்குமுறைகள் இரண்டு விதம்.

    1. ஆண்களும் பெண்களுமான குறிப்பிட்ட ஒரு வகுப்பினரை ஆண்களும் பெண்களுமான இன்னொரு/பல வகுப்பினர் ஒடு(து)க்குவது.
    2. இந்த வகுப்புக்கள் எல்லாம் சேர்த்த ஒரு குறுக்கு வெட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை.

    பாமா ஒரு தலித் பெண் படைப்பாளி. இதில் மற்றெல்லாவற்றையும் விட இவருக்கு பெரிதாய்த் தோன்றுவது முதல் பிரச்சனையே என்று இந்தப் பதிலில் இருந்து தெரிகிறது.

    // நிறைய பெண் கவிஞர்கள் பெண் உடல் சார்ந்து, பெண் பிரச்சினைகள், பெண்பாலியல் சார்ந்து நிறைய கவிதைகள் எழுதுறாங்க. அதை நான் குறைச்சு மதிப்பிடல. அதே சமயத்துல பெண்களுக்கு வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் இருக்குதில்லே.. பிரசவம், குழந்தைப்பேறு பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது, வயசுக்கு வருவது இந்த மாதிரி விசயங்கள் இவையெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு தலித் பெண்ணுக்கு பிரச்னைகளே இல்லை. இதைவிட பயங்கரமான பிரச்னைகளெல்லாம் இருக்கு. நிறைமாச கர்ப்பத்தோட வயல்ல குனிஞ்சு நட்டுகிட்டு வர்ற பெண்களை பார்த்திருக்கேன். மரத்திலே தொட்டி கட்டி போட்டு குழந்தை பசியோட கத்திக்கிட்டே கிடக்கும் வேலையை முடிச்சிட்டுதான் பாலுட்டவே முடியும். இப்படியெல்லாம் பிரச்னை இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு இவங்க எழுதுறாங்களேன்னு. ஒருகனமில்லத விசயமாத்தான் எனக்குப்படுது அதனால இதையெல்லாம் சிலாகிச்சு என்னால பாராட்ட முடியல. //

    என்னைப் பொறுத்த மட்டில் இரண்டும் பெரிய பிரச்சனைகளே. பாமா தன் பெண்மொழி ஊடான வெளிப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்பது என் எண்ணம். (இதுவரை பாமா எழுதியதைப் படித்ததில்லை. மேலே குறிப்பிட்ட இந்தப் பதிலை முன்வைத்துச் சொல்கிறேன்)

    ReplyDelete
  5. நன்றி சந்திரவதனா!

    ReplyDelete
  6. அருமையான பேட்டி. நன்றி சந்திரவதனா

    ReplyDelete
  7. நன்றி சந்திரவதனா.
    இந்தவாரம் பாமா சிங்கப்பூர் வருகிறார்.

    பேச சந்தர்ப்பம் கிடைத்தால் பேசலாம். பார்ப்போம்.

    எம்.கே.குமார்.

    ReplyDelete
  8. பெயரிலி, டிசே தமிழன், சுரேஷ் கண்ணன், மதி கந்தசாமி, எம்.கே.குமார், ரோஸா வசந், தங்கமணி, பிரகாஸ், கண்ணன் உங்கள் அனைவரினதும் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பாமாவின் பேட்டியின் இரண்டாவது பகுதியையும் இணைத்துள்ளேன்.

    ReplyDelete
  9. கண்ணன்
    நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் பாமாவின் இருப்பில் அவர் அனுபவித்த பார்த்த விடயங்கள் அவரை மிகவும் பாதித்திருக்கிறது. தள்ளி நின்று பார்க்கும் எங்களுக்கு ஏற்பட்ட மனவலியை விட அதிகப்படியான மனவலி, உள்ளிருந்து அனுபவித்த அவருக்கு ஏற்பட்டிருக்கும். அந்தப் பாதிப்பில்தான் அவர் அப்படிச் சொல்லியிருப்பார். அவர் சொல்வது போல அதன் வலியும், பயங்கரமும் அதிகமானதாகக் கூட இருக்கலாம்.

    ஆனால் அவர் குறிப்பிட்டது போல மற்றவையெல்லாம் பிரச்சனையில்லை என்று தள்ளி விடவும் முடியாது. அதேநேரம் பிரசவம், குழந்தைப்பேறு, பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது....
    இவைகளெல்லாம் பிரச்சனையான விடயங்களாகத்தான் இருக்கும் என்றும் இல்லை. பிரசவத்தின் போதான அசௌகரியங்களை நானும் அனுபவித்தேன். ஆனால் தற்சமயம் என்னிடம் எஞ்சி நிற்பது அதன் போதான இனிமையான நினைவுகள் மட்டுமே. அது போலத்தான் இயற்கையோடு ஒட்டிய ஒவ்வொரு விடயமும். பிரசவம், குழந்தைப்பேறு, பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது.. இவைகளின் போது எம்மைச் சுற்றியுள்ளவர்களின் புரிந்துணர்வுகளும் ஒத்துதவிகளுமே அந்த நேரங்களைக் கடினமாகவோ அல்லது இனிமையாகவோ மாற்றுகிறது.

    இவற்றில் வயசுக்கு வருவது என்பது மிகவும் அசௌகரியமான ஒன்றுதான். இங்கு எந்த இனிமையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதன் பின்னான எம்மவரின் நடைமுறைகளும் சடங்குகள் சம்பிரதாயங்களும்.. கூடவேயான உடல் உபாதைகளும் எல்லாமே கஸ்டமான விடயங்களே.

    ஒரு நிறைமாதப் பெண் வயலில் குனிந்து வேலை செய்வது மிகவும் கடினாமனது. அதையும் விட, தனது குழந்தை பாலுக்காய் கதறும் போது வேலை செய்து கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு பெண்ணுக்கு ஏற்படுமாயின் அது இன்னும் கடினமானது. இந்த நிலைகள் தலித் பெண்களுக்கும் தேயிலைத் தோட்டப் பெண்களுக்கும் அதிகமாக வாய்த்திருக்கிறது என நினைக்கிறேன். அதனால்தான் பாமா அப்படிக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    எது எப்படியாயினும் நீங்கள் சொல்வது போல

    1. ஆண்களும் பெண்களுமான குறிப்பிட்ட ஒரு வகுப்பினரை ஆண்களும் பெண்களுமான இன்னொரு/பல வகுப்பினர் ஒடு(து)க்குவது.
    2. இந்த வகுப்புக்கள் எல்லாம் சேர்த்த ஒரு குறுக்கு வெட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை.

    இரண்டுமே பெரிய பிரச்சனைகளே.

    ReplyDelete