Thursday, March 10, 2005
வாரபலன்
குமரேஸ் பழைய பஞ்சாங்கம் பற்றி எழுதியுள்ளார். அதைப் பார்த்ததும் கடந்த வாரம் நடந்த ஒரு விடயம் நினைவில் வந்தது.
எனது மகன் கடமையாற்றும் பத்திரிகையில் வாரபலன் வரும். கடந்த வாரம் அந்தப் பகுதிக்குரியவர் வரவில்லை என்பதால் தான்தான் அதை எழுதினேன் என எனது மகன் சொன்னான். "எப்படி எழுதினாய்?" என்று கேட்டேன். "இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னான ஒரு பத்திரிகையை எடுத்து அதில் உள்ளவற்றில் சில பலன்களை அங்கு இங்கு என்று மாற்றி விட்டுப் போட்டேன்" என்றான். அப்படித்தான் வழமையாக எழுதுபவரும் செய்வாராம்.
எனக்கு ஒரே சிரிப்பாய்ப் போய் விட்டது. ஏனெனில் வேலையிடத்தில் எனது சக வேலையாட்கள் அந்தப் பலன்களை விழுந்து விழுந்து வாசிப்பது மட்டுமல்லாமல், சிலசமயங்களில் அதில் சொன்னதற்கமையவும் ஏதாவது செய்வார்கள்.
இந்த வாரமும் அவர்கள் வாசித்த போது நான் சிரித்தேனே தவிர உண்மையைச் சொல்லவில்லை. இரகசியம் காக்கப் படவேண்டிய கட்டாயம் எனக்கு.
தெரிதல், ஒருபேப்பர்
தெரிதல் பற்றி ஈழநாதன் எழுதிய போது அதைப் பெற்றுக் கொள்ள எனக்கும் விருப்பம் என்று குறிப்பிட்டேன். பத்மனாபஐயருக்கு இது விடயமாக மின்னஞ்சல் செய்வதாகவும் சொன்னேன். ஆனால் நான் எழுத முன்னமே தெரிதல்கள் என்னை வந்தடைந்தன. இது பத்மனாபஐயரின் பாராட்டத்தக்க செயற்பாடுகளில் ஒன்று.
அடுத்து இவ்வாரம் வந்த பத்திரிகைகள்
முதலில் ஒருபேப்பர் 15, 16, 17. இரண்டு நாட்கள் கழித்து ஒரு பேப்பர் 18. எல்லாவற்றையும் வாசித்து விட்டு ஒரு சிறு குறிப்பாவது தர முயற்சிக்கிறேன்.
ஒரு பேப்பர் என்ற பெயர் எல்லோரையும் தொந்தரவு செய்வதால், அப்பேப்பருக்கு இன்னொரு பேப்பர் அல்லது கண்டறியாத பேப்பர் எனப் பெயர் வைக்கலாமென ஆசிரியர் குழு 17வது பேப்பரில் யோசித்துள்ளது. இனி 18வது பேப்பரைச் சரியாக வாசித்தால்தான் பெயர் வைத்தார்களோ அல்லது வைதார்களோ என்று தெரிய வரும்.
எப்படித் தமிழில் எழுதுவது?
உதவுங்கள்!
எப்படித் தமிழில் எழுதுவது என்று ஒரு பெண் என்னிடம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நான் அப்பெண்ணுக்கு தமிழ் எழுத்துக்களை எங்கிருந்து தரவிறக்கலாம், எப்படி சுரதாவின் செயலியில் விரும்பிய வடிவங்களுக்கு மாற்றலாம் என்பதையெல்லாம் தெரியப் படுத்தினேன். அதற்கான அவரது பதில் அஞ்சலைப் பார்த்த போதுதான் அவருக்கு தமிழில் தட்டுவதே எப்படி என்பது தெரியாமலிருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. சரி அதற்காக ஒரு விளக்கப் படத்தை அனுப்பலாமென்ற கூகிளில் தேடினேன். சரியான எதுவுமே கிடைக்கவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதற்கான முகவரியைத் தந்துதவுங்கள்.