Friday, August 19, 2005
புத்தகம் பேசுது இதழுக்கு பாமா அளித்த பேட்டி
தமிழ் தலித் இலக்கியப் படைப்பாளிகளுள் மிக முக்கியமானவர் பாமா. இவரது முதல் படைப்பான கருக்கு மூலமாக பரந்த தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். தன் வாழ்க்கையையே சாட்சியாய் வைத்து தலித் மக்களின் அவல வாழ்க்கையை பாசாங்கின்றி பதிவு செய்தவர் அதுவரை பேசப்படாதிருந்த சகலவிதமான சமூக மௌனங்களையும் தனது தனித்துவமான தலித்மொழியினால் கலைக்க முயற்சித்தவர்.
புத்தகம் பேசுது என்னும் இதழுக்கு பாமா அளித்த பேட்டியின் ஒரு பகுதி
தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்
நீங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை (வசவு) எழுதுறதா விமர்சன வட்டாரத்திலே ஒரு முணுமுணுப்பு இருக்கே...?
பாமா படிச்ச பொண்ணுதானே நிறைய கெட்ட வார்த்தைகளை எழுதியிருக்கேன்னு சொல்றாங்க. தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் தான் ஆயதம் எங்களாலே கத்தி வச்சுகிட்டு சண்டை போடமுடியாது. தற்காப்புக்கும் கெட்ட வார்த்தைகள் தான். அடிக்கிறவன் வேணுமானா நல்ல வார்த்தையா பேசலாம் அடிபட்டவன் என்ன வார்த்தையை பேசுவான்? அப்படித்தான் பேசமுடியும். நீங்க எப்படி எங்ககிட்டேருந்து நல்ல வார்த்தையை எதிர்பார்க்கிறீங்க காலம் முழக்க சாதியைச் சொல்லி அடிக்கிறே, பெண்ணுன்னு சொல்லி ஒதுக்குறே, பொருளாதார ரீதியா ஒடுக்குறே, கலாச்சார ரீதியா இழிவுபடுத்துறே இவ்வளவுவையும் தாங்கிகிட்டு நாங்க நல்ல வார்த்தை தான் பேசணும்னா சாத்தியம் இல்லே அப்படி எழுதினா அது உண்மைக்குப் புறம்பா எழுதுற விசயம் தான்.
இப்போது நிறைய பெண் கவிஞர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் பெண்மொழி சமூகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியாதா இருக்கு. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
நிறைய பெண் கவிஞர்கள் பெண் உடல் சார்ந்து, பெண் பிரச்சினைகள், பெண்பாலியல் சார்ந்து நிறைய கவிதைகள் எழுதுறாங்க. அதை நான் குறைச்சு மதிப்பிடல. அதே சமயத்துல பெண்களுக்கு வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் இருக்குதில்லே.. பிரசவம், குழந்தைப்பேறு பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது, வயசுக்கு வருவது இந்த மாதிரி விசயங்கள் இவையெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு தலித் பெண்ணுக்கு பிரச்னைகளே இல்லை. இதைவிட பயங்கரமான பிரச்னைகளெல்லாம் இருக்கு. நிறைமாச கர்ப்பத்தோட வயல்ல குனிஞ்சு நட்டுகிட்டு வர்ற பெண்களை பார்த்திருக்கேன். மரத்திலே தொட்டி கட்டி போட்டு குழந்தை பசியோட கத்திக்கிட்டே கிடக்கும் வேலையை முடிச்சிட்டுதான் பாலுட்டவே முடியும். இப்படியெல்லாம் பிரச்னை இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு இவங்க எழுதுறாங்களேன்னு. ஒருகனமில்லத விசயமாத்தான் எனக்குப்படுது அதனால இதையெல்லாம் சிலாகிச்சு என்னால பாராட்ட முடியல.
உங்கள் தலித் மொழிநடைக்கு நிறைய விமர்சனங்கள் வந்ததில்லையா..? - மிகுதி