Friday, September 09, 2005
பாட்டியும் partyயும்
நான் ஜேர்மனிக்கு வந்து சில மாதங்களில் எனது அகதி அந்தஸ்து கோரிக்கைக்கான வழக்கு நடை பெற்றது.
ஜேர்மன் மொழியைக் கேட்டாலே சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்ப்பது போன்ற உணர்வு அப்போது எனக்கு. உனது Tochter(மகள்) என யாராவது என்னோடு கதைத்தாலே, நான் அவர்கள் டொக்டரைப் பற்றி ஏதோ சொல்கிறார்கள் என நினைப்பேன். இப்படியான நிலையில், எனது வழக்குக்கு எனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் கண்டிப்பாகத் தேவை என்ற நிலை இருந்தது. அதனால் ஒரு இந்தியர் எனக்கு மொழிபெயர்ப்பாளராக வந்திருந்தார்.
நான் தமிழில் எனது அகதி அந்தஸ்து கோரிக்கைக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க, அவர் அதை ஜேர்மனிய மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் எனது பாட்டி பற்றி என்னவோ சொன்னார். என்னடா இது! நான் பாட்டியைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று யோசித்து மீண்டும் எனது கருத்தைச் சொன்னேன். அவர் மீண்டும் எனது பாட்டி பற்றியே சொன்னார்.
அப்போதுதான் எனக்கு விளங்கியது நான் party(கட்சி) என்று சொல்ல அவர் அதை இப்படி மொழிபெயர்க்கிறார் என்று. உடனேயே நான் எனது வழக்கறிஞரிடம் தவறைச் சுட்டிக் காட்டி எனது வழக்குக்கு பழுது வராமல் பார்த்துக் கொண்டேன்.
டோண்டு ராகவனின் பதிவைப் பார்த்த போது பல சமயங்களில் எனது நினைவில் வந்து போகும் இவ்விடயம் மீண்டும் நினைவில் வந்தது.
காலத்தின் கவிக்கூர் இவன்
நேற்று எனக்குக் கிடைத்த புத்தகம் சஞ்சீவ் காந்தின் உராய்வு கவிதை நூல். 54 கவிதைகளுடன், மூனாவின் ஓவியங்களுடன் புத்தகம் அழகாய் உள்ளது.
சஞ்சீவ்காந்த், இளைஞனாய் என்னுள் வியப்பை ஏற்படுத்தியவன். அவன் கவிதைகளில் ஒன்று வானலையில் பாடலாக ஒலித்த போதும், தானே வந்து தன் குரலில் ஐபிசி வானொலியில் கவிதைகளை மிக அழகாக வாசித்த போதும் மனம் சிலிர்த்திருக்கிறேன். இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்க வளர்ந்த இளைஞனின் கவிதை நூல் ஒன்று என் கரங்களில் தவழும் போது உண்மையிலேயே மகிழ்சியாக இருக்கிறது.
திரு.தாசீசியஸ் அவர்கள் மதிப்புரையாகவோ, முகவுரையாகவோ ஒரே ஒரு வரி சொல்லியுள்ளார். காலத்தின் கவிக்கூர் இவன். அழகான அர்த்தமான வரி.
கவிதைகளை ஒவ்வொன்றாக வாசித்து அவை பற்றிய எனது கருத்துக்களை எழுத வேண்டுமென்று ஆசை. முயற்சிக்கிறேன்.
ஒரு பேப்பர் - 30 (Sep02-15, 2005)
ஒரு பேப்பரின் 30வது வெளியீடு கிடைத்துள்ளது. 29வது கிடைக்கவில்லை. ஆதலால் இனி எனக்கு அனுப்ப மாட்டார்கள் என்றே நினைத்தேன். இணையத்தில் வாசிக்கவும் நேரம் சரியாக அமையவில்லை. மீண்டும் என்னை நினைத்து 30ஆவது பேப்பரை அனுப்பியுள்ளார். அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.
ஒரு பேப்பர் 30இல் இளைஞனின் உராய்வு கவிதைநூல் வெளியீடு, எல்லாளனின் வழமையான கொஞ்சம் யோசியுங்க, சேயோனின் சற்று மாறுதலுக்காக, கந்தையா சண்முகத்தின் பண்பாடு, இவைகளோடு இந்தியனின்(தாத்தா இல்ல) ஈழத்தழிழருக்கு நான் எழுதிக் கொள்வது, உமா மகாலிங்கத்தின் சமரசம் இல்லையேல் சமாதானம் இல்லை, கருணாவின் கமரா, டொக்டர் பாலேந்திரனின் தம்பதிகளாக வாழ்வது எப்படி?, திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தாளவாத்தியக் கலைஞர் முத்து சிவராஜாவுடனான பேட்டி, கொழுவியின் கொலிஜ் கொலிஜ், எம்.கே.குமாரின் ஜனநாயகமும் சன் டிவி குழுமமும், தமிழ்டுபுக்குவின் ஜொள்ளித் திரிந்ததொரு காலம், குழலியின் இணையத்தில் அழகுக்கிளி அசின், சுரேஸின் பெனாத்தல் சுரேஷ் - ஒரு தியாகி, கரிச்சான் குஞ்சனின் ஒற்றைப் பனைமரம், அரசுவின் கண்ணகி தீவிரவாதியா?, கே.எஸ் பாலச்சந்திரனின் விசிலடிச்சான் குஞ்சுகள், சினிமா... என்று பல சுவையான அம்சங்கள் உள்ளன.
அறுவைப்பக்கத்தில் தமிழ்பித்தனின் தொலைபேசியால், முகமூடியின் எஸ்.ஏ.ராஜ்குமார் தினமூடி சந்திப்பு இன்னும் இவையின்றி தமிழ்சினிமா இல்லை(எழுதியவர் பெயரைத் தவற விட்டு விட்டார்களாம்) என்பன இடம் பெற்றுள்ளன.
குறிப்பிடும் படியாக பல கட்டுரைகள் ஒரு பேப்பருக்காகவே பிரத்தியேகமாக எழுதப் பட்டுள்ளன.
பூராயம் பகுதியில்தான் ஒரு வாசகர் - பெயர் சங்கரப்பிள்ளை - விம்பிள்டனில் இருந்து எழுதியிருக்கிறார்.
"ஒரு பேப்பரை ஒரு பவுணுக்காவது வில்லுங்கோ. ஓசியாக் குடுத்தா மரியாதை இல்லை" என்று.
விற்கப்படும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் சில காலங்களுக்குள் காணாமற் போவது பற்றி அவருக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன்.
சரி, பேப்பரை மேலோட்டமாகப் பார்த்து எழுதியுள்ளேன். வாசித்து எனது அபிப்பிராயங்களை எழுதுவேன் என்று எந்த வாக்குறுதியும் நான் தரவில்லை. நேரம் அப்படி. இனித்தான் வாசிக்க வேண்டும். வாசிக்கும் போது ஏதாவது ஒரு விடயம் மனதை உதைத்தாலோ அல்லது மனதைத் தழுவினாலோ வந்து அது பற்றி எழுதுகிறேன்.
சந்திரவதனா
9.9.05