Friday, August 11, 2006

மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று


குண்டுச் சத்தங்களில் ஊரே குழம்பிப்போய், அன்று 85 இல் என் வீட்டுக் கோடியில் ஓர் அரவம். எண்ணிலாப் பயத்துடன் என்னென்று பார்த்தேன். அவன் நின்றான்.

தொண்டை வரண்ட நிலையில், மூச்சு வாங்கிய அவனைப் பார்த்து, "குடிக்க ஏதும் தரவா?” எனக் கேட்டேன். "வேண்டாம்" என்றது அவன் வாய், "வேணும்" என்றது அவன் முகத்தின் பாவம்.

நெல்லிரசம் கலந்து நான் கொடுத்த கிளாசை வாங்கி மூச்சைப் பிடித்த படி குடிக்கும் போது ஓரக் கண்ணால் ஓராயிரம் நன்றி சொன்னான்

அவன் பெயர் தெரியாது எனக்கு. அவன் முகம் தெரியும். அவன் இலட்சியம் தெரியும். மறக்காத அவன் முகத்தை மறக்காது தேடுகிறேன். கிடைக்கவில்லை இன்னும்.

என் வீட்டுக் கோடியும், வேர்வை வடிந்த அவன் முகமும், குடித்து விட்டுத் திருப்பித் தந்த கிளாசில் விரல்கள் படித்த குருதிக் கறையும், "திக்கத்துக்குள்ளை நாலு பேரை முடிச்சிட்டனக்கா" சொன்ன படியே இராணுவ நகர்வுகளை உணர்த்தும் சத்தங்கள் கேட்டு, தோளில் தொங்கிய கிரனைட் பையுடன் நொண்டியபடி அவன் ஓடிய போது அவன் பின்னங்கால்களில் வழிந்த குருதியும் இன்னும் மறக்கவில்லை.

7 comments:

  1. kashtama irunduchhunga..
    padikkumbodu

    ReplyDelete
  2. குருதிவழியும் கதைகள் கோடியுண்டு. உருக்கமான, உணர்வுபூர்வமான பதிவு.
    நீங்கள் குறிப்பிடுவது
    '' ஒப்பரேஷன் லிபரேஷன் '' காலப்பகுதியென்று நினைக்கின்றேன்.
    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அனிதா, மலைநாடான்
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. கண் துஞ்சார்
    பசி நோக்கார்
    மெய் வருத்தம் பாரார்
    கருமமே கண்ணாயினார்!

    அந்தக் கருமம் உயிர்க்கருமமாயின் உணர்வுக் கருமமாயின்....எத்தனை சொன்னாலும் உணர்ச்சி பெருகும்.

    பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்றுச் சங்கே முழங்கு!!!

    ReplyDelete
  5. மறக்கமுடியாத நாட்கள், நான் நினைக்கிறேன், திக்கம் சந்தியில் கன்னிவெடிமூலம் தூக்கப்பட்ட ட்ரக் வண்டிச்சம்பவமென்று, அதன் பின் நடந்த ராணுவத்தின் பொதுமக்கள் மீதான தாக்குதலில், எமது சித்தியினதும், மாமியினதும் வீடுகள் எரிக்கப்பட்டன, எனது நண்பரின் தந்தையும் சுட்டுக்கொல்லப்பட்டார், சுடப்படும்போது கையில் வைத்திருந்த ஒருவயது தங்கை இப்போது திருமணமாகி லண்டனில் வசிக்கிறார். அவரது சடலத்தைகூட சுடலைக்கு எடுத்து செல்லமுடியாது, சித்தப்பாவின் காணிக்குள் எரித்தோம்.
    அழியாத சின்னமாக மதகுக்குகீழ் இன்னமும் ட்ரக்வண்டியின் எஞ்சிய துண்டுகள் கிடக்கின்றன.

    ReplyDelete
  6. இப்படி எத்தனையோ அழியாத நினைவுகள்

    ReplyDelete
  7. றாகவன், தமிழ், கானாபிரபா

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    தமிழ்
    மறக்க முடியாத, துயரம் தோயந்த அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete