Monday, September 18, 2006

உளவியல் - சூசி


இவள் சூசி. வயது 24. இவளைத் தினமும் காண்பேன். நான் வேலை முடிந்து திரும்பும் போது எனது பஸ் தரிப்பிடத்துக்கு முதல் தரிப்பிடத்தில் பேரூந்தில் ஏறுவாள். இரவு எட்டுமணியளவில் அவள் பேரூந்தில் ஏறும் போது ஆரம்பத்தில் நண்பனைச்(காதலன்) சந்திக்கவோ அன்றி டிஸ்கோவுக்கோ செல்கிறாள் என்றுதான் நினைத்தேன். பின்னர்தான் ஒருநாள் ஒரு ரெஸ்ரோறண்ட் டில் உணவு பரிமாறிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

மிகவும் அழகானவள் என்று சொல்ல முடியாவிட்டாலும் மிக அழகாக ஒரு குழந்தை போலச் சிரிக்கக் கூடியவள். குண்டாக இருந்தாலும் ஆசைப்பட வைக்கும் குழந்தைத்தனமான முகம். இவள் நூர்ஜான் போலவோ அன்றி அனெக்கிரேட் போலவோ என் பக்கத்துக்கு வரமாட்டாள். ஆனால் என்னைக் கண்டதுமே மிகவும் நட்பாகச் சிரித்து ஹலோ என்பாள். அந்தச் சிரிப்பும் பார்வையும் வார்த்தைகளையும் விட அர்த்தமானவை.

இவளும் என் கடைசி மகனுடன் கின்டர் கார்டனிலிருந்து படிக்கத் தொடங்கினாள். ஆனால் நான்காம் வகுப்பில் தரம் பிரிக்கும் போது வேறு வகுப்புக்குப் போய் விட்டாள். ஆனாலும் ஒரே பாடசாலைதான். முன்னர் இவளை எப்போதுமே இவளது தந்தையுடன்தான் காண்பேன். அவரும் மிகவும் நட்பாகச் சிரித்து கொண்டு ஹலோ சொல்வார். சூசியைக் காணும் போதெல்லாம் முதலாம் வகுப்பில் நடந்த அந்த சம்பவம் என் நினைவில் வந்து போகும்.

அப்போது, எனது மகனின் வகுப்பு மாணவர்கள் எல்லோரையும் பட்டம் விளையாட அழைத்துச் செல்லப் போவதாக அவனின் வகுப்பு ஆசிரியர் அறிவித்திருந்தார். அதற்கான பட்டத்தைக் கட்டுவதற்கு முதல்நாளே பெற்றோரும் வந்து உதவ வேண்டுமெனவும், பட்டம் விடும் நாளில் அங்கு பார்பிக்கிய+வும் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டும் இருந்தார். முதல் நாள் பாடசாலைக்குச் சென்று மகனுடன் சேர்ந்து பட்டம் கட்டினேன். பெற்றோர்கள் பலருடன் கதைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சந்தோசமாக அன்றைய பொழுது கழிந்தது. அடுத்தநாள் பட்டம் கட்டியது பற்றி எமது நகரப் பத்திரிகையிலும் புகைப்படங்களுடன் வந்திருந்தது.

பார்பிக்கியூவுக்கான உணவுகளுடன் நானும் மகனும் பாடசாலைக்குச் சென்று உரிய இடத்துக்கு ஆசிரியர் மாணவர் பெற்றோர்களுடன் பயணமானோம். அது ஒரு குதூகலமான பயணம். இடம் மலைக்குன்றுகளைக் கொண்ட சோலைகள் போல அடர்ந்த அழகான இடம். சிலரது தாய்மார், சிலரது தந்தைமார் என்று அனேகமான ஒவ்வொரு மாணவருடனும் பெற்றோர்களில் ஒருவர் வந்திருந்தார்கள். அப்போது எனக்கு டொச்(ஜேர்மனிய மொழி) ஒரு பெரிய பிரச்சனையான விடயமாக இருந்தாலும் ஆங்கிலமும் கலந்து முடிந்தவரை அவர்களுடன் உரையாடினேன்.

பட்டம் விட்டு, பார்பிக்கியூ முடித்து எல்லோரும் ஓய்வாக அமர்ந்த போது பெற்றோர்கள் ஒரு இடத்திலும், மாணவர்கள் எல்லோரும் ஒரு இடத்திலும் என்று கூடினார்கள். சிறிது நேரத்தில் எனக்கு பெற்றொரோடு இருப்பதை விட மாணவர்களிடம் போனால் நல்லாயிருக்கும் போலிருந்தது.

நான் எழுந்து அவர்கள் பக்கம் போன போதுதான் சூசி என் பார்வையில் பிரத்தியேகமாகப் பட்டாள். ஒரு சிறிய குன்றின் மேல் ஒரு நீண்ட சுள்ளித் தடியுடன் நின்ற அவளைச் சுற்றி கீழே மற்றைய மாணவர்கள் நின்றார்கள். அவள் தனது முகத்துக்குத் துளியும் ஒவ்வாத பாவனையில் ஒரு கோபக்காரி போல நின்றாள். "நான்தான் உங்களின் அம்மா" என்றாள். இடையிடையே மாணவர்களில் யாராவது ஒருவரின் பெயரைக் கூப்பிட்டு "நீ சரியில்லாத பிள்ளை. நீ படிக்கவில்லை. நான் உன்னை அடிப்பேன்...." என்றெல்லாம் பலவாறாகத் கத்திக் கத்தித் திட்டினாள். சிலரைத் தன்னிடம் கூப்பிட்டு அடிப்பது போலப் பாவனை பண்ணினாள். தலைமயிரைப் பிடித்து உலுப்பினாள். ஒரு மாணவனைக் கூப்பிட்டு "இன்று நீ உனது கட்டிலில் படுக்க முடியாது. வெளியில்தான் படுக்க வேண்டும"; என்று கோபமாகச் சொன்னாள். தடியை சுழற்றிச் சுழற்றிக் கொண்டு குன்றிலே அங்கும் இங்குமாய் திரும்பினாள். தொங்கினாள்.

அது ஒரு விளையாட்டு என்றாலும் என்னால் அதை ரசிக்க முடியாதிருந்தது. அவளது குழந்தைத் தனமான முகத்துக்கு ஒவ்வாத அந்த விளையாட்டை அந்த மாணவர்கள் அத்தனை பேரும் ரசித்தார்கள்.

வீடு திரும்பிய பின்னும் அவளது அந்த விளையாட்டு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. ஒரு சில நாட்கள் கழித்து எனது மகனிடம் "சூசி எப்படியான பிள்ளை?" எனக் கேட்டேன். நல்ல பிள்ளை. ஆனால் அவ்வளவு படிக்க மாட்டாள்" என்றான்.

சிறிது நேரம் கழித்து "அவளது அம்மா எப்படி?" என்றேன். "அவளின்ரை அம்மா அவளையும் அவளின்ரை அப்பாவையும் விட்டிட்டுப் போட்டாவாம். சேர்ந்து இருந்த போதும் நல்லாக் குடிப்பாவாம். சூசியை அடிப்பாவாம். அப்பாவோடை எப்பவும் சண்டை போடுவாவாம்... அவ வேறை அப்பாவோடை போட்டாவாம்...." அவன் சொல்லிக் கொண்டே போனான்.

சந்திரவதனா
18.9.2006

No comments:

Post a Comment