Monday, October 02, 2006

பயமுறுத்தும் பாடல்



நதி - 11.5.2006

சிலவாரங்களுக்கு முன் ஒரு நாள் நான் சமைத்துக் கொண்டிருந்த போது வரவேற்பறையில் பேப்பரையும் பென்சிலையும் வைத்து கிறுக்கிக் கொண்டிருந்த என் பேத்தி விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். வந்த வேகத்தில் எனது கால்களைக் கட்டிப் பிடித்து "அப்பம்மா..!" என்றாள். அவள் விழிகளில் பயம் குடி கொண்டிருந்தது.

எதையோ கண்டு பயந்து விட்டாள் என்பது எனக்குத் தெரிந்தது. எதுவாக இருக்கும் என்பதுதான் தெரியவில்லை. ஏதாவது சிறு பூச்சி வந்திருக்குமோ? யோசனையுடன் அடுப்பில் இருந்த எண்ணெய்ச் சட்டியைத் தூக்கித் தள்ளி வைத்து விட்டு, அவளையும் தூக்கிக் கொண்டு சமையலறையை விட்டு வெளியேறி வரவேற்பறையில் புகுந்து பார்த்தேன். ம்.. நான் தொலைக்காட்சியை கிண்டர் சணலுக்கு மாற்ற மறந்திருந்தேன்.

அவள் கண்களை இன்னும் பயத்துடன் விரித்து தொலைக்காட்சியைப் பார்த்த படி எனக்குக் காட்டினாள். சந்திரமுகி படத்துக்காக, ஜோதிகா கண்களை முழுசிய படி ஆடிக் கொண்டிருந்தாள். ராரா, சரசக்கு ராரா... பாடல் போய்க் கொண்டிருந்தது.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பாடலா இவளைப் பயமுறுத்தியது? இந்தப் பாடலை தமது பிள்ளைகளின் விருப்பமாகப் பல பெற்றோர் உங்கள் விருப்பத்தில் வந்து கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். இவளுக்கு இரண்டு வயதுதானே.! அதுதான் பயந்தாளோ என்ற கேள்வி என்னுள் எழுந்தாலும் என்னால் அந்தப் பாடல்தான் அவளைப் பயமுறுத்தியிருக்கும் என்று முழுமையாக நம்ப முடியவில்லை. ஆனால் அன்று அதற்கு மேல் அவளை தாக்காட்டி விட்டு விட்டு தொடர்ந்து சமைக்க முடியவில்லை. அவளது அம்மா வரும்வரை அவள் எனது இடுப்பை விட்டு இறங்கவில்லை.

அதன் பின், எதற்காக அப்படிப் பயந்திருப்பாள் என்ற கேள்வியோடு, இடையிடையே கவனித்துப் பார்த்துக் கொண்டே வந்தேன். மீண்டும் அந்தப் பாடல் கடந்த வாரம் வந்தது. அதே மாதிரி அவள் விழுந்தடித்து ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். "ரீவீயை நிப்பாட்டுங்கோ "என்று பயத்துடன் சிணுங்கினாள்.

இப்போது திடப் படுத்திக் கொண்டேன், அவளது பயத்துக்குக் காரணம் அப்பாடல்தான் என்பதை.

பாடல் காட்சியை விடுத்து அப்பாடலைக் கேட்கும் போது எனக்கு அந்தப் பாடல் ரசிக்கக் கூடிய வகையில் பிடித்தே இருந்தது.

சந்திரவதனா
2.10.2006

11 comments:

  1. நானே பயந்துதான் போனேன் அந்த பாடலை பார்த்தபோது!

    பார்க்க அல்ல கேட்க சுவையான பாடல் ரா ரா சரசக்க ரா ரா!

    சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. சந்திரவதனா!
    சொல்லுறேனெனக் குறைவிளங்கக் கூடாது; அந்தப் பிள்ளைக்கு சாதாரணமாகவே கண் கொஞ்சம் முழி; அதுக்கை இப்படி??முழிச்சா?, பிள்ளை பயப்படாதோ!!!சுத்திப்போடுங்கோ!!!
    என்ன? எண்ணெய்ப்பிள்ளையோ?,,வண்ணப்பிள்ளையோ என பேத்தியை;நல்லெண்ணையில தோய்தெடுத்து;விட்டிருக்கிறீர்களோ?,,,என்கம்மா!!!நான் சின்னனயிருக்கேக்க இப்படிச் சொல்லித் தான் எண்ணைவைப்பார்!!!; எனக்குத் தலைக்குள் ஏதோஊருவது போல் இருக்கும், ஓடிப்போய் கொடியில் கிடக்கும், அவவின் சேலையில் தலைதுடைப்பேன்;அவவுக்கு தோய்க்கும் வேலை வைக்க வேண்டுமென??
    ம்......அதன் அருமை தெரிகிறது.
    பேத்தியின் முகத்தைப் பார்த்தால், அமைதியான சுவாகம் போல கிடக்குது.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  3. குழந்தை தானே !

    என் நாலு வயது மகள் இப்பாடலை மிகவும் விரும்பிப் பார்க்கிறாள் :)

    ReplyDelete
  4. அந்தப்பாடல் என்று மட்டுமில்லை.ஜோதிகா வரும் சில காட்சிகளும் குழந்தைகளைப் பயமுறுத்துவதுபோலதான் இருக்கும்

    நாம் விளக்கிச் சொல்லிவிட்டால் பயம்போய் விடும்!

    ReplyDelete
  5. தம்பி
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. பாலுமகேந்திராவின் "கதை நேரம்" என்கிற தொடர் சன்டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காலம். (5 வருடங்களுக்கு முன்பு) title போடப்படும் போது வரும் ஒரு ஹம்மிங் மாதிரி ஒலிக்கப்படும் ராகத்தை கேட்கும் போதெல்லாம் அப்போது ஒரு வயதாகியிருக்கும் என் மகள் காரணமேயின்றி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விடுவாள். ஒவ்வொரு வாரமும் இது நடக்கும். இப்போது அந்தத் தொடர் மக்கள் தொலைக்காட்சியல் சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இப்போது என் மகளுக்கு இந்த நிகழ்வை ஞாபகப்படுத்தி இப்போதும் ஏதாவது அந்த ஒலி அவளை சலனப்படுத்துகிறதா என்று பார்க்கும் போது "ஈ"யென்று இளிக்கிறாள்.

    ReplyDelete
  7. யோகன்
    உங்கள் கணிப்பு சரியானதுதான். நதி மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவள்.
    எதையும் ஒன்றுக்கு இரண்டு முறையாக யோசித்தே செயற் படுத்துவாள். ஒரு அடி எடுத்து வைப்பதாயினும் யோசித்தே வைப்பாள். சிந்து இதற்கு நேர் எதிர். நினைப்பதற்கு முன் செய்து விடுவாள்.

    ReplyDelete
  8. பாலாa
    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    யோகன்
    எண்ணெய் வைப்பதில்லை.
    தலையைக் கழுவியதும் நல்ல சுருட்டையாக இருக்கும். மூன்றாம் நான்காம் நாளில் சுருட்டையாக இருந்தாலும் எண்ணெய் அப்பி வைத்தது போல வந்து விடும். அவளது உடல்வாசி அல்லது தலைமயிரின் தன்மை அப்படி.

    ReplyDelete
  9. SP.VR.SUBBIAH
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  10. வைசா, சுரேஸ்கண்ணன்
    உங்கள் வரவுகளுக்கும், கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி

    ReplyDelete
  11. அட தியேட்டரில் பார்த்த நாங்களே முதல் தடவை சற்று ஆடித்தான் போனோம். குழந்தைதானே :)

    ReplyDelete