Monday, September 11, 2006

அன்று ஏன் கேட்டேன் ? - Noorjan


பகலில் என்றால் எட்டிலிருந்து பத்து நிமிடங்களும் இரவில் சுற்றுப் பாதையால் வருவதால் 15இலிருந்து 20நிமிடங்களும் எடுக்கும் வேலைக்கான அந்தப் பேருந்துப் பயணத்தின் அந்தச் சில நிமிடங்களுக்குள் எத்தனையோ பேரைச் சந்திப்பேன். சில நேரங்களில் எதிர் பாராதபடி தெரிந்தவர்கள் யாராவது பயணத்தில் இணைவதால் அவை இனிய சந்திப்புக்களாகி என்னை மகிழ்சியில் ஆழ்த்தியும் இருக்கின்றன.

அன்று வந்தவள் நூர்ஜான். அவள் எனது மகளுடன் சின்ன வகுப்பில் படித்தவள். எமது வீட்டுக்கு அருகிலேயே அவளது வீடும் இருந்ததால், வளர்ந்து வேறு வேறு பாடசாலைகளில் படிக்கும் போதும் அவளும் எனது மகளும் நண்பிகளாகவே இருந்தார்கள்.

தற்போது பல வருடங்களாக அவளுக்கும் எனது மகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாயினும் என்னைப் பேருந்தினுள் கண்டால் அவள் வந்து என்னருகில் அமர்ந்து விடுவாள். ஏதோ, எனது நண்பி போல மிக உற்சாகமாக என்னுடன் கதைத்துக் கொண்டு வருவாள். இம்முறை சந்திப்பு கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிகளின் பின்னேயே நடந்தது.

நாங்கள் சந்தோசமாகக் கதைத்துக் கொண்டு வந்தோம். அவள் தனது வேலையிடத்து அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வந்தாள். பேரூந்து உரிய இடத்துக்கு வருவதற்கு சற்று முன்பாக வழமைக்கு மாறாக "உனது அப்பா எப்படி இருக்கிறார்?" என்று கேட்டேன். ஒருநாளுமே நான் அவளது அப்பாவைப் பற்றி அவளிடம் கேட்டதில்லை. அன்று ஏனோ கேட்டு விட்டேன். அப்படியே அவள் கண்கள் குளமாகி விட்டன.

"அப்பா போன நவம்பரில் இரத்தப் புற்றுநோய் வந்து இறந்து விட்டார்" என்றாள். நான் அதிர்ந்த போது "நாங்களுந்தான் அதிர்ந்தோம். சும்மா காய்ச்சல்தான் வந்தது. குடும்பவைத்தியரிடம் போன போது மருத்துவமனைக்கு அனுப்பினார். இரண்டு கிழமை மருத்துவமனையிலேயே இருந்த அப்பா வீடு திரும்பவில்லை. இறந்து விட்டார்" என்றாள். சொல்லி முடிக்கும் போது அவள் குமுறி அழத் தொடங்கி விட்டாள்.

பேரூந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு நடக்கும் போது என் மனதும் கனத்துப் போயிருந்தது. அவளது அப்பாவைப் பல தடவைகள் கண்டிருக்கிறேன். ஆனாலும் அவளோடு அவர் பற்றி ஒரு போதும் பேசியதில்லை. அன்று ஏன் கேட்டேன் என்று எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அவளது சோகத்தைக் கிளறியதால் வருத்தமாகவும் இருந்தது.

சந்திப்பு நடந்து சில மாதங்கள் கடந்து விட்டாலும் சோகத்தையும் மீறிய ஒரு ஆச்சரியம் என்னுள் கேள்வியாகி நிற்கின்றது.

சந்திரவதனா
11.9.2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 4

பெற்றவரும் அந்நாளில் பிள்ளைகள்தானே - மனம்
பித்தாகிப் போகு முன்னே கல்லுகள்தானே!
பிள்ளைகளும் பின்னாளில் பெற்றாராகலாம் - அவர்
கல்லான மனங்களெல்லாம் பித்தாய் மாறலாம்!

அம்மா அப்பா ஆனபின்தான் அனுபவம் விளங்கும் - பெற்ற
அன்னை தந்தை செய்வதெல்லாம் அறிவுக்குத் துலங்கும்!
சும்மா சொன்னாப் புரிவதில்லை இந்தத் தத்துவம் - இதை
சொல்லாமலே புரிய வைக்கும் வாழ்க்கைத் தத்துவம்.
´
மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்