Wednesday, June 19, 2013

அப்பாவைப் பற்றிய நினைவுகள்


அப்பாவைப் பற்றிய நினைவுகள் என் நினைவுகளிலிருந்து நீங்குவதில்லை. குறிப்பாக எனது ஒவ்வொரு முன்னேற்றத்தின் போதும் அப்பாவை நெஞ்சார நினைத்துக் கொள்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு விடயங்களையும் எவ்வளவு நாசூக்காகவும், தந்திரமாகவும் எனக்குப் போதித்து என்னை ஆளாக்கினார் என்பதை நினைந்து நினைந்து வியப்பேன். எனது கல்வி, கலை, ஒழுங்கு... போன்ற விடயங்களில் அதீதமான கண்டிப்போடும், கவனிப்போடும் அம்மா என்னை நேர்த்தியாக்கும் போது, விளையாட்டு விளையாட்டாகவே அப்பா என்னை நேர்த்தியாக்கினார். மடியில் வைத்துக் கதைகள் சொல்லி, கடற்கரையில் தானும் குழந்தையாகி என்னோடு ஓடிப்பிடித்து விளையாடி, சரித்திரக்கதைகளை நடித்துக் காட்டி..

அதே நேரத்தில் சில கஷ்டங்களின் போதும், தடுமாற்றங்களின் போதும் கூட அப்பாவை நினைக்காமல் இருக்க முடிவதில்லை. அப்பா சில விடயங்களில் கவனம் செலுத்துமாறு பலதடவைகள் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஏனோ நான் அவ்விடயங்களில் கவனம் செலுத்தாது மிகவம் அசிரத்தையாக இருந்து விட்டேன். அதனால் ஏற்படும் பின்னடைவுகளின் போது அப்பாவின் சொல்லைக் கேட்டிருக்கலாமே என்று மனம் பேதலிக்கத் தவறுவதில்லை.
17.6.2013

No comments:

Post a Comment