Thursday, November 20, 2014

சில வாரங்களுக்குள் நான் வாசித்தவற்றில் என்னை பாதித்தவை 20.11.2014

சிலரின் புனைவுகளைக் கண்டு நான் வியப்பதுண்டு. வாசித்துப் பல நாட்களாகியும் அக்கதையையோ கதையின் மாந்தர்களையோ மறக்க முடிவதில்லை. சிலரது கதைகளை வருடங்கள் பலவாகியும் மனதிலிருந்து அகற்ற முடிவதில்லை.

சில வாரங்களுக்குள் நான் வாசித்தவற்றில் என்னை ஏதோ ஒரு வகையில் பாதித்த சில இங்கே -

1) சயந்தன் எழுதிய சற்றே நீளமான ஒருசொட்டுக் கண்ணீர் சிறுகதை. காலச்சுவடில் பிரசுரமாகியிருக்கிறது. இதை இரண்டு நாட்களாக (18-19.11.2014) வாசித்தேன்.

ஒரு ஈழவிடுதலைப் போராளியை மையப்படுத்திய கதை. போராட்ட காலத்தின் அனுபங்கள் சில விபரிக்கப் பட்டுள்ளன. கண்டிப்பாகப் பதிந்து வைக்க வேண்டிய தகவல்கள். போரின் பின்னான போராளியின் புலம்பெயர்வும், மனஉளைச்சல்களும் என்று ஒரு காத்திரமான கதை. ஈழத்துப் பேச்சுத்தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் போது, பேசுவதை சிற்சில இடங்களில் எழுத்துத் தமிழுக்கு மாற்றியுள்ளமை கதையில் காணப்படும் ஒரு குறையாகவே கருதுகிறேன். (உதாரணமாக - "நீங்களும் இயக்கத்திலிருந்து வந்தவர்தானே. கேட்கிறேன் என்று குறை விளங்காதீர்கள். அமைப்பிலிருந்து செத்துப்போகாத ஒருவனால் உயிரோடு எப்படி இந்தச் சனங்களின் நடுவில் நிற்கமுடிகிறது.." இப்படித் தொடர்கிறது. இது சாதாரணமாக நாம் எழுதும் தமிழ்தான். ஆனால் கதையின் மற்றைய பகுதிகளில் சாதாரணமாக எழுதப்பட வேண்டியவையே பேச்சுத் தமிழில் எழுதப் பட்டுள்ளன. அது நன்றாகவும், இயல்பாகவும்தான் இருக்கிறது. ஆனால் அதனோடு இப்படியான வசனங்கள் ஒட்டாது நிற்கின்றன.) அதையும் சயந்தன் கவனத்தில் கொண்டிருந்தால் ஒரு அருமையான நெடுங்கதை.

2) கே.என்.சிவராமன் எழுதிய தேங்க்ஸ் (சிறுகதை) - தினகரன் தீபாவளி மலரில் பிரசுரமானது.  – நேற்றுத்தான் (19.11.2014) வாசித்தேன்.

அழகிய காதல்கதை

3)அ. முத்துலிங்கம் எழுதிய நான்தான் அடுத்த கணவன் - இதை சிலவாரங்களுக்கு முன் வாசித்தேன். காலச்சுவடில் பிரசுரமாகியிருக்கிறது.

அ. முத்துலிங்கத்தின் வழமையான எள்ளல் கலந்த எழுத்துக்களுடன் கூடிய சிறுகதை.

4) அ.முத்துலிங்கத்தின் 'கோப்பைகள்'  - இதுபற்றி கிரிதரன் எழுதியிருந்ததால் தேடி எடுத்து வாசித்தேன். விகடன் தீபாவளி மலரில் பிரசுரமானது.


5) சாதனா எழுதிய அக்கா சிறுகதை. ஆக்காட்டி இதழில் வெளியாகியுள்ளது.

இந்த எழுத்து உத்தி எனக்குப் பிடித்திருந்தது. கொஞ்சம் ஷோபாசக்தியின் எழுத்தின் சாயல். கொஞ்சம் பிறமொழிக்கதைகளின் சாயல். நல்ல கதை.

6) ஷோபாசக்தியின் எழுச்சி சிறுகதையையும் வாசித்தேன்.

மாறுபட்ட இவரின் எழுத்தின் உத்தி வாசிக்கத் தொடங்கி விட்டால் நிறுத்த முடிவதில்லை.

7) ஷோபாசக்தியின் தங்கரேகை சிறுகதை சிலவாரங்களுக்குள் நான் வாசித்தவற்றில் ஒன்று.

8)  கருணாகரமூர்த்தியின் வடிவான கண்ணுள்ள பெண் வாசித்தேன். இவரின் எழுத்துக்களில் இன்னொரு விதமான உத்தி. பொய்யோ, மெய்யோ என்று தெரியாமலும் மெய்தான் என்பது போன்றும் பிரமையை ஏற்படுத்தக் கூடிய கதைகள். எதுவாயினும் கதை சார்ந்த இடத்தின் பலதகவல்களையும் எமக்குத் தந்து விடுவார். இக்கதை இவரின் இடை கதை போல இனிப்பான கதை.

9) தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (சிறுகதை)

10) தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய அனந்தசயனம் காலனி (சிறுகதை)

11) சிறீவத்சன் (என். சுப்பிரமணியன்) எழுதிய வேறு நதியில் அந்த ஓடம் (இலக்கியச் சிந்தனை - 1995 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான ரத்தத்தின் வண்ணத்தில் இருந்து )

12) இவைகளோடு இன்னொரு பேய்க்கதை வாசித்தேன். அருமையாக எழுதப் பட்டிருந்தது. அதை எந்தத் தளத்தில் வாசித்தேன். யார் எழுதியது என்பதெல்லாம் ஞாபகத்தில் இல்லை.

வாசிப்பது சுகமானது. வாசிப்பது தவம் போன்றது.

ஒரு வட்டத்துக்குள்ளேயே ...

நாங்கள் பல சமயங்களில் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம். வெளியில் எட்டிப் பார்க்கும் போதுதான் தெரிகிறது எங்களைச் சுற்றி எத்தனை சந்தோசங்கள் உள்ளன என்று.

Tuesday, November 18, 2014

Crailsheimer Str - 17.11.2014

ஐந்து நிமிடங்களில் போகக் கூடிய எனது வேலைத்தளத்துக்கு நேற்று 50 நிமிடங்கள் தேவைப்பட்டன. 15 நிமிடங்கள் முதலே வெளிக்கிட்டிருந்தேன். எனது சிறுவீதியைக் கடந்து பெரிய வீதிக்குப் போன பொழுதுதான் நிலைமை சரியில்லை என்பது தெரிந்தது. அடுக்கடுக்காய் வாகனங்கள். 15 நிமிடங்கள் இருக்கின்றனதானே, போய் விடுவேன் என நினைத்தேன். இல்லை. ஆமை அதை விட வேகமாக நகரும் என்று தோன்றியது. எனது வேலை நேரத்தையும் தாண்டி பத்து நிமிடங்கள் போய் விட்டன.

எனது பொறுப்பாளருக்கு அறிவித்தாக வேண்டும். கைத்தோலைபேசியை ஒருவாறு வெளியில் எடுத்து விட்டுப் பார்த்தேன். என் பக்கத்தில் பொலிஸ்கார் ஒன்றும் என்னோடு சேர்ந்து ஊர்ந்து கொண்டிருந்தது.இருக்கிற ரென்சனுக்குள் இது வேறு. 

கைத்தொலைபேசியில் பேசப் போய் தண்டம் கட்ட வேண்டி வரலாம். என்ன செய்வது என்று யோசிக்கையில் இன்னும் ஐந்து நிமிடங்கள் ஓடிவிட்டன.
எப்படியும் அறிவித்தாக வேண்டும். என்ன செய்யலாமென யோசித்து.. கைத்தொலைபேசியை பக்கத்து இருக்கையில் வைத்து ஒரு குறுஞ்செய்தி எழுதினேன். எழுதும் போது பயமாக இருந்தது. பொலிஸ் காணலாம். நகரும் போது முன் காருடன் இடிபடலாம். பின் கார் வந்து இடிக்கலாம். இருந்தும் `traffic இல் நிற்கிறேன். விரைவில் வந்து விடுவேன்´ என்று எழுதி பொறுப்பாளருக்கும், சக வேலைத்தோழியருக்கும் ஒருவாறு அனுப்பினேன்.

அதன்பின் பாதி ரென்சன் குறைந்தது போன்ற உணர்வு.

என்ன நடந்திருக்கும். ஏனிந்த தாமதம் எதுவும் புரியவில்லை. அப்படியொரு நிலை முன்பு ஒரு போதும் அந்த வீதியில் வந்ததும் இல்லை. ஏதாவது பாரிய விபத்தாக இருக்குமோ று பலதையும் மனம் சிந்தித்தது. பொலிஸ் கார்கள் பின்னும், முன்னும், பக்க வாட்டிலும் என்று சேர்ந்து ஊர்ந்தன.

50 நிமிடங்கள் கழித்து வேலைத்தளத்தை அடைந்த போது, என் தவறு என்று எதுவும் இல்லையெனினும் மனதுள் ஒரு குற்றஉணர்வு. ஒரு பதட்டம். அவசரமாக உள் நுழைந்தேன்.

ஆச்சரியமாக இருந்தது. ஒருவருமே அங்கில்லை. என்ன, ஏது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒவ்வொருவராய் இன்னும் அரைமணிநேரம், ஒருமணி நேரம் என்று கழித்து வந்தார்கள்.
அதன் பின்தான் பொறுப்பாளர் வந்தார். அவரும் இடையில் எங்கோ மாட்டுப்பட்டிருந்தாராம்.

குறிப்பிட்ட ஒரு வீதி ஒரு பெரிய திருத்தத்துக்காக மூடப்பட்டு விட்டதாம். அதனால் மற்றைய வீதிகள் எல்லாமே நிரம்பி வழிகின்றனவாம். பொறுப்பாளர் சொன்ன போதுதான் அந்தத் திருத்தம் பற்றியும், பாதையடைப்பு பற்றியும் செய்தித்தாளில் வாசித்தது ஞாபகத்தில் வந்தது. ஆனாலும் அது இத்தகைய பாதிப்பைத் தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இன்னும் இரண்டு கிழமைக்கு இதே பல்லவிதான்.

Monday, November 17, 2014

வாசிப்பது சுகமானது

தினமும் எவ்வளவோ வாசித்தாலும், முன்னர் போன்றதான வாசிப்பின் அளவு இன்றைய காலகட்டத்தில் குறைந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும்.

இன்றும் நேற்றுமாக வாசித்தேன் என்று மனதுக்குள் திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடிய சில படைப்புகளை வாசித்தேன்.

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய
1) ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (சிறுகதை)
2) அனந்தசயனம் காலனி (சிறுகதை)

சிறீவத்சன் (என். சுப்பிரமணியன்) எழுதிய
1) வேறு நதியில் அந்த ஓடம் (இலக்கியச் சிந்தனை - 1995 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான ரத்தத்தின் வண்ணத்தில் இருந்து )

இவைகளோடு ஜா. மாதவராஜ் எழுதிய சே குவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து...) வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details


வாசிப்பது சுகமானது!

சந்திரவதனா
17.11.2014

Tuesday, November 04, 2014

தொடுதல்

மென்மையான தொடுதல்களின்
உன்னதம் தெரியாதவர்கள் எம்மில் பலர்.
கணவன் மனைவியர் கூட
கட்டிலில் மட்டுமே தொட்டுக் கொள்பவர்களாய்..

சந்திரவதனா
4.11.2014