Tuesday, December 02, 2014

நான் வாசித்தவற்றில் என்னை பாதித்தவை 2.12.2014

நிறைய வாசித்திருக்கிறேன் என்றுதான் எப்போதும் எனக்குள் ஒரு நினைப்பு. வாசிக்காதவைதான் நிறைய என்பது சில கட்டுரைகளை வாசிக்கும் போதும், சில சம்பவங்களைச் சந்திக்கும் போதும்தான் தெரிகிறது.

*  நான் எஸ். பொ வை இப்போதுதான் வாசிக்கிறேன். என் தங்கை எஸ். பொ என்றால் உயிரையே விடுவது போலக் கதைப்பாள். அப்படி என்ன அவரில் என்று யோசித்து விட்டு இருந்து விடுவேன். அவரது படைப்புகளில் நான் வாசித்தது என்றால் மிகமிகச் சொற்பமே! இப்போதுதான் தேடுகிறேன். கொஞ்சம் கொஞ்சம் வாசிக்கிறேன்.

1) நேற்று படுக்கையில் இருந்த படியே முகப்புத்தகத்தைத் திறந்த போது அருண்மொழிவர்மனின் இந்தக் கட்டுரை ´எஸ்பொ வாழ்ந்த வரலாற்றில் வாழ்ந்த நனவிடை` வாசிக்கக் கிடைத்தது. படுக்கையில் எனது கைத்தொலைபேசியில் வாசிப்பது என்பது சற்று அசௌகரியமானதுதான். சிறிய எழுத்துக்கள். ஆனாலும் வாசித்தேன்.

இப்போது சில நாட்களாக இப்படியான ஒவ்வொருவரின் கட்டுரைகளையும் தேடித்தேடியே எஸ்.போ என்ற ஒரு எழுத்தாளனை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் அவரது படைப்புகள் இணையவெளியில் குறைவாகவே உள்ளன.

 எஸ். பொ நூலகத்தில்

* சின்ன வயதில் தி. ஜானகிராமனின் பல கதைகளை வாசித்திருக்கிறேன். தொடராக வரும் போதே கூட வாசித்திருக்கிறேன். ஆனாலும் அப்போது சில விடயங்களிலான விளக்கங்கள் குறைவாகவே இருந்தன. இரவி அருணாச்சலம் என நினைக்கிறேன். முகப்புத்தகத்தினூடு தி. ஜானகிராமனை நினைவு படுத்தியிருந்தார். தேடியதில் வாசிக்கக் கிடைத்தவை.

2)  குழந்தைக்கு ஜுரம் (22.11.2014) வாசித்தேன்.
3)  சிறுகதை எழுதுவது எப்படி? – தி.ஜானகிராமன்  - 1969 இல் மகரம் என்பவர் தொகுத்தது.

கூடவே தி. ஜானகிராமன் பற்றிய, அவர் படைப்புகள் பற்றிய சிலவற்றையும் வாசித்தேன். அவைகளே ஒவ்வொரு கதைகள் போல மிகச்சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. மேலும் மேலும் வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றன. அவற்றில் உடன் என் நினைவுக்கு வருபவை

4) காலச்சுவட்டில் சுகுமாரன்  எழுதிய மோகமுள் - (தி. ஜானகிராமன்) மோகமுள் பற்றிய பதிவு - மோகப் பெருமயக்கு

* அம்மா வந்தாள் பற்றி குறிப்பிடத்தக்க பல பதிவுகள். அக்கதையை ஒரே ஒருவர் மட்டும் திட்டி நாகரிகமற்ற முறையில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அது யாரென்பது ஞாபகத்தில் இல்லை. மற்றும் படி எல்லோருமே அதை மிகவும் ரசித்து, வாசித்து எழுதியிருந்தார்கள். அவைகளில் நான் வாசித்த சில

5) தி ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ வெங்கட் சாமிநாதன் எழுதியிருந்தார்.
6) அம்மா வந்தாள் - தி ஜானகிராமன்
7) அம்மா வந்தாள் (1) - சாருநிவேதிதா
8) தி.ஜானகிராமனின் – அம்மா வந்தாள்! நாவலின் மீள் விமர்சனம் - காலச்சுவடுக்காக சுகுமாரன் எழுதியிருந்தார்.

9) இவைகளோடு சிவமேனகை எழுதிய மூன்று தமிழ் சங்கங்களிலும் ஈழத்தவர்களின் பங்களிப்பு வாசித்தேன்.

10) நேற்று உஷா சுப்ரமணியனின் ஒரு சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. உஷா வலைப்பூக்கள் மூலம் ஏற்கெனவே அறிமுகமான ஒரு பெண் எழுத்தாளர். முன்னர் அவரோடு மின்னஞ்சல் தொடர்பும் இருந்தது. காலவோட்டத்தில் அத்தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும் நினைவுகளில் இருந்து விட்டுப் போய் விடவில்லை. இலக்கியச் சிந்தனை யின் 1995 ம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான ரத்தத்தின் வண்ணத்தில் புத்தகத்தில் உஷாவின் த்ரில் த்ரில் இருந்தது ஆச்சரியமான சந்தோசம். அக்கதை ஏற்கெனவே ஒக்டோபர் 1995 இல் ஆனந்தவிகடனில் பிரசுரமாகியுள்ளதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11) இவைகளோடு எஸ். பொ வின் ´சடங்கு` பற்றிய சில பதிவுகளும் வாசிக்கக் கிடைத்தன. நான் இதுவரை வாசிக்காதவற்றில் இந்த சடங்கு நாவலும் ஒன்று. சுவாரஸ்யம் குன்றாத கதையாக இருக்கும் என்ற நினைப்பில் இணையம் முழுக்க தேடினேன். கிடைக்கவேயில்லை. 

Monday, December 01, 2014

இணைபிரியாத இளஞ்சோடிகள்

அன்றொரு நாள் அவர்கள்
இணைபிரியாத இளஞ்சோடிகள்
கை கோர்த்தும்
உதடு உரசியும்
இடை வளைத்தும்
இறுக அணைத்தும்
சுற்றியுள்ளவர்களை
பொறாமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்

பின்பொரு நாள் அவர்கள்
பிரியப் போவதாக
பிரஸ்தாபித்தார்கள்

இன்றும் அவர்கள்
கை கோர்த்தும்
உதடு உரசியும்
இடை வளைத்தும்
இறுக அணைத்தும்
சுற்றியுள்ளவர்களை
பொறாமைப் படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்
வேவ்வேறு துணைகளுடன்...

சந்திரவதனா
1.12.2014