நேற்று நான் வேலைக்குச் சென்ற போது அவள் வேலைத்தளத்து வாசலில் காத்து நின்றாள்.
24 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தவள், கடைசி வருடங்களில் ஏதோ ஒரு வித அதிருப்தியினால் அவதிப்பட்டுக் கொண்டே இருந்தாள். வேலையை விட்டு விடப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். எப்போதும் எமது தலைமை அதிகாரியிலிருந்து அடிமட்டத்தில் உள்ளவர் வரை எல்லோரிலும் ஏதேதோ குறைகள் கண்டு பிடித்து எல்லோரையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது நச்சரிப்பும், எரிச்சலும்... தாங்காது அவள் வேலையை விட்டுப் போனால் காணும் என்று நினைக்கும் அளவுக்கு எல்லோருமே வந்து விட்டிருந்தார்கள். அவ்வப்போது தமக்குள் அவள் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். என்னோடு அவள் நல்ல மாதிரி நடந்து கொண்டிருந்தாலும் அவளது தொணதொணப்பைக் கேட்க முடியாமல் நான் கூட அவள் வேலையை விட்டுப் போய் விட்டால் நல்லதேன்றே ஒரு கட்டத்தில் நினைத்தேன்.
அந்த நாளும் வந்தது.
திடீரென்று வேலையின் இடையில் தலைமைப்பொறுப்பாளரின் அறைக்குச் சென்று சில பல குறைகளைச் சொல்லித் திட்டி விட்டு தான் இராஜினாமா செய்யப் போகிறேன் என்று சொல்லி விட்டாள்.
அவளது அநாகரீகமான செயல் தலைமை அதிகாரிக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர் அமைதியாக „மிகவும் சந்தோசம், போய் விடு“ என்று சொல்லி அவளை அனுப்பி விட்டார். அத்தோடு அவளுக்கும் எனக்குமான தொடர்பு மெதுமெதுவாகக் குறைந்து விட்டது. மீண்டும் மீண்டுமாய் அவள் தொலைபேசியில் அழைத்து, குறைகளே சொல்வதை என்னால் கேட்க முடியாதிருந்தது.
அவள் சென்ற பின்னான எனது வேலை நேரங்கள் அமைதியாகவே கழிந்தன. மற்றைய தோழிகள் எல்லோருமே „அப்பாடா போய் விட்டாள்“ என்று மிகுந்த ஆசுவாசத்துடன் இருந்தார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றினாலும் அவ்வப்போது அவள் இல்லாத குறை தென்படத்தான் செய்தது.
அவளைப் போல அறிவார்ந்து பேசக் கூடிய, எந்தத் பொருள் பற்றிப் பேசினாலும் அது பற்றிப் பேசவோ, தர்க்கிக்கவோ கூடிய இன்னும் சொல்லப் போனால் கதைக்க, சிரிக்க அவ்வப்போது கோபப் பட… என்று அவளைப் போல யாருமே அவள் போன இந்த ஒன்பது மாதங்களில் எனக்குக் கிடைக்கவில்லை. அவள் என் வாழ்வில் ஏதோ ஒரு சிறு பங்கு இடத்தையாவது எடுத்திருந்தாள்.
நான் அவளை என து 31 வது வயதில் முதன் முதலாகச் சந்தித்த போது உலகின் பல கூறுகளை எனக்குத் தெரியாது. ஜெர்மன் மொழியும் அவ்வளவாகத் தெரியாது. அவளுக்கு ஆங்கிலம் துளியும் தெரியாது. ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட போலந்து நாட்டுக்காரி அவள். ஆனாலும் நிறையவே பேசினோம். நிறையவே சிரித்தோம். பேசவே கூடாது என்று எனது சமுதாயம் எனக்குத் தடை விரித்திருந்த விடயங்களைக் கூடப் பேசினோம். சேர்ந்து சாப்பிட்டோம். ஐஸ்கிறீம் சுவைத்தோம். தேநீர் அருந்தினோம். வாய் விட்டுச் சிரித்தோம்.
அந்த அவளேதான் எனக்காக என் வேலைத்தள வாசலில் காத்து நின்றாள். என்னைக் கண்டதும் ஓடி வந்து இறுகக் கட்டி அணைத்தாள். எனக்குள்ளும் ஏதோ ஒரு சந்தோசம் அலை புரண்டது. கிட்டத்தட்ட பத்துநிமிடங்கள் நின்று பேசி விட்டுச் சென்றாள். மீண்டும் அதே அறிவார்ந்த பேச்சு. சிரிப்பு...
எந்தவித சிந்தனையுமின்றி, வார்த்தைகளைத் தேடிப் பொறுக்கித்தான் பேச வேண்டும் என்ற பயமின்றி இயல்பாகப் பேசக் கூடிய இப்படியான உறவுகளும் கண்டிப்பாக வேண்டுமென்பதை அதன் பின்னான என் மனதின் சந்தோசம் எனக்கு உணர்த்தியது.
சந்திரவதனா
17.9.2015
Thursday, September 17, 2015
Thursday, September 03, 2015
எம்மவர்கள் எழுதுவதிலோ, புனைவதிலோ தாழ்ந்தவர்கள் அல்லர்.
உங்களை நோவதை என்னால் தவிர்க்க முடியவில்லை இரவி அருணாச்சலம்! ஜெயமோகனின் எழுத்தை நான் குறை கூறவில்லை. அது நல்லதாக இருக்கலாம். அதன் சுவை உங்களுக்கு தேவாமிர்தத்தை விட மேலாகவும் இருக்கலாம்.
அவரது படைப்பைப் போல ஒரு படைப்பை உங்களால் தர முடியாது என நீங்கள் கருதினால் அது உங்கள் மீது அதாவது உங்கள் எழுத்துக்கள் மீது உங்களுக்கு உள்ள அபிப்பிராயம் எனக் கொள்ளலாம். ஆனால் ///என் சக ஈழத்துப் படைப்பாளிகள் எவராலும் அவ்வாறான படைப்பினைத் தந்துவிட முடியாது என்பது என் திண்ணம்/// என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? இன்று மட்டுமல்ல, முன்னும்பல தடவைகள் இப்படி எழுதி விட்டீர்கள்.
உயிரை உருக்கும், நெஞ்சத்தைக் கிள்ளும்... எத்தனை படைப்புகளை (புனைவுகளும் அடக்கம்) எம்மவர்கள் (நீங்கள் குறிப்பிடும் அந்த உங்கள் சக படைப்பாளிகள் ) தந்து விட்டார்கள். அப்படியான எம்மவர்களது உயிர் தீண்டும் படைப்புகளை ஜெயமோகனால் தர முடியுமா?
ஜெயமோகனின் எழுத்துகளோ அல்லது வேறுயாரது எழுத்துக்களோ உங்களுக்குப் பிடித்திருந்தால் அவைகளையும், அவர்களையும் தாரளாமாகப் பாராட்டுங்கள். தவறேதும் இல்லை. அவர்களை உயர்த்துவதாக நினைத்து எம்மவர்களைத் தாழ்த்தாதீர்கள்.
எம்மவர்கள் எழுதுவதிலோ, புனைவதிலோ தாழ்ந்தவர்கள் அல்லர்.
அவரது படைப்பைப் போல ஒரு படைப்பை உங்களால் தர முடியாது என நீங்கள் கருதினால் அது உங்கள் மீது அதாவது உங்கள் எழுத்துக்கள் மீது உங்களுக்கு உள்ள அபிப்பிராயம் எனக் கொள்ளலாம். ஆனால் ///என் சக ஈழத்துப் படைப்பாளிகள் எவராலும் அவ்வாறான படைப்பினைத் தந்துவிட முடியாது என்பது என் திண்ணம்/// என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? இன்று மட்டுமல்ல, முன்னும்பல தடவைகள் இப்படி எழுதி விட்டீர்கள்.
உயிரை உருக்கும், நெஞ்சத்தைக் கிள்ளும்... எத்தனை படைப்புகளை (புனைவுகளும் அடக்கம்) எம்மவர்கள் (நீங்கள் குறிப்பிடும் அந்த உங்கள் சக படைப்பாளிகள் ) தந்து விட்டார்கள். அப்படியான எம்மவர்களது உயிர் தீண்டும் படைப்புகளை ஜெயமோகனால் தர முடியுமா?
ஜெயமோகனின் எழுத்துகளோ அல்லது வேறுயாரது எழுத்துக்களோ உங்களுக்குப் பிடித்திருந்தால் அவைகளையும், அவர்களையும் தாரளாமாகப் பாராட்டுங்கள். தவறேதும் இல்லை. அவர்களை உயர்த்துவதாக நினைத்து எம்மவர்களைத் தாழ்த்தாதீர்கள்.
எம்மவர்கள் எழுதுவதிலோ, புனைவதிலோ தாழ்ந்தவர்கள் அல்லர்.
என்னிலும் இரண்டு வயது இளையவரான ஜெயமோகன் தனது 30 ஆவது (1992) வயதில் 'டார்த்தீனியம்' என்ற குறுநாவலை எழுதியிருந்தார். இன்றைய நாளின் ஒரு பகுதியை அதனை வாசிப்பதற்காக ஒதுக்கி இருந்தேன். அது அவமாகக் கழியவில்லை. ஒன்றைச் சொல்வேன், உணர்க; ஒருபோதும் என்னால் அவ்வாறான படைப்பைத் தர முடியாது. என் சக ஈழத்துப் படைப்பாளிகள் எவராலும் அவ்வாறான படைப்பினைத் தந்துவிட முடியாது என்பது என் திண்ணம். (நான் தவறாக ஏதும் எழுதியிருந்தால் என்னை நோகாதீர்கள்; என் தவறை எனக்கு எடுத்துரையுங்கள்)
அதன் ஒவ்வொரு வரிகளை, ஒவ்வொரு பந்திகளை வாசித்து நிமிர்கிறபோது 'இந்த எழுத்து எப்படிச் சாத்தியம்' என்றே குமைகிறேன். 'நாங்கள்' சொந்த அனுபவத்தை அற்புதமாகப் 'புனைந்து' விடுவோமல்லோம்; 'எழுதி' விடுவோம். ஆனால் ஜெயமோகன் போன்றவர்கள் அதனைப் புனைவாக்கி படைத்து விடும் வித்தை எம்மால் கைக்கொள்ள முடியா ஓன்று. தற்சமயம் ஜெயமோகன் எழுதிய 'வெள்ளையானை' வாசித்தபடி உள்ளேன். அது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கதை. மிகக் கவனமாக அதனைச் செதுக்கி இருக்கிறார், ஜெயமோகன். அதன் சாத்தியப்பாடுகள் எப்பொழுதும் என்னைத்திகைப்பில் ஆழ்த்துகிறது.
என் எழுத்து சிலருக்கு அதிர்ச்சியாகக் கூட அமையலாம். ஆயினும் என்ன செய்வது? என் மனசைச் சொன்னேன். அதற்கப்பால் என்னால் செய்யத் தக்கது யாது உள?
Posted by Iravi Arunasalam on Wednesday, September 2, 2015