Thursday, September 03, 2015

எம்மவர்கள் எழுதுவதிலோ, புனைவதிலோ தாழ்ந்தவர்கள் அல்லர்.

உங்களை நோவதை என்னால் தவிர்க்க முடியவில்லை இரவி அருணாச்சலம்! ஜெயமோகனின் எழுத்தை நான் குறை கூறவில்லை. அது நல்லதாக இருக்கலாம். அதன் சுவை உங்களுக்கு தேவாமிர்தத்தை விட மேலாகவும் இருக்கலாம்.

அவரது படைப்பைப் போல ஒரு படைப்பை உங்களால் தர முடியாது என நீங்கள் கருதினால் அது உங்கள் மீது அதாவது உங்கள் எழுத்துக்கள் மீது உங்களுக்கு உள்ள அபிப்பிராயம் எனக் கொள்ளலாம். ஆனால் ///என் சக ஈழத்துப் படைப்பாளிகள் எவராலும் அவ்வாறான படைப்பினைத் தந்துவிட முடியாது என்பது என் திண்ணம்/// என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? இன்று மட்டுமல்ல, முன்னும்பல தடவைகள் இப்படி எழுதி விட்டீர்கள்.

உயிரை உருக்கும், நெஞ்சத்தைக் கிள்ளும்... எத்தனை படைப்புகளை (புனைவுகளும் அடக்கம்) எம்மவர்கள் (நீங்கள் குறிப்பிடும் அந்த உங்கள் சக படைப்பாளிகள் ) தந்து விட்டார்கள். அப்படியான எம்மவர்களது உயிர் தீண்டும் படைப்புகளை ஜெயமோகனால் தர முடியுமா?

ஜெயமோகனின் எழுத்துகளோ அல்லது வேறுயாரது எழுத்துக்களோ உங்களுக்குப் பிடித்திருந்தால் அவைகளையும், அவர்களையும் தாரளாமாகப் பாராட்டுங்கள். தவறேதும் இல்லை. அவர்களை உயர்த்துவதாக நினைத்து எம்மவர்களைத் தாழ்த்தாதீர்கள்.

எம்மவர்கள் எழுதுவதிலோ, புனைவதிலோ தாழ்ந்தவர்கள் அல்லர்.

என்னிலும் இரண்டு வயது இளையவரான ஜெயமோகன் தனது 30 ஆவது (1992) வயதில் 'டார்த்தீனியம்' என்ற குறுநாவலை எழுதியிருந்தார். இன்றைய நாளின் ஒரு பகுதியை அதனை வாசிப்பதற்காக ஒதுக்கி இருந்தேன். அது அவமாகக் கழியவில்லை. ஒன்றைச் சொல்வேன், உணர்க; ஒருபோதும் என்னால் அவ்வாறான படைப்பைத் தர முடியாது. என் சக ஈழத்துப் படைப்பாளிகள் எவராலும் அவ்வாறான படைப்பினைத் தந்துவிட முடியாது என்பது என் திண்ணம். (நான் தவறாக ஏதும் எழுதியிருந்தால் என்னை நோகாதீர்கள்; என் தவறை எனக்கு எடுத்துரையுங்கள்)
அதன் ஒவ்வொரு வரிகளை, ஒவ்வொரு பந்திகளை வாசித்து நிமிர்கிறபோது 'இந்த எழுத்து எப்படிச் சாத்தியம்' என்றே குமைகிறேன். 'நாங்கள்' சொந்த அனுபவத்தை அற்புதமாகப் 'புனைந்து' விடுவோமல்லோம்; 'எழுதி' விடுவோம். ஆனால் ஜெயமோகன் போன்றவர்கள் அதனைப் புனைவாக்கி படைத்து விடும் வித்தை எம்மால் கைக்கொள்ள முடியா ஓன்று. தற்சமயம் ஜெயமோகன் எழுதிய 'வெள்ளையானை' வாசித்தபடி உள்ளேன். அது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கதை. மிகக் கவனமாக அதனைச் செதுக்கி இருக்கிறார், ஜெயமோகன். அதன் சாத்தியப்பாடுகள் எப்பொழுதும் என்னைத்திகைப்பில் ஆழ்த்துகிறது.
என் எழுத்து சிலருக்கு அதிர்ச்சியாகக் கூட அமையலாம். ஆயினும் என்ன செய்வது? என் மனசைச் சொன்னேன். அதற்கப்பால் என்னால் செய்யத் தக்கது யாது உள?
Posted by Iravi Arunasalam on Wednesday, September 2, 2015

No comments:

Post a Comment