Friday, April 28, 2017

வெள்ளாவி - விமல் குழந்தைவேல்

வெள்ளாவி நூலை நூலகத்திலிருந்து தரவிறக்கி வைத்து விட்டு மறந்து விட்டேன். ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் ஞாபகம் வந்து எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். தொடக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது. விமல் குழந்தைவேலுவின் முகப்புத்தகப் பதிவுகளைத்தான் இதுவரை வாசித்திருக்கிறேன். இதுதான் அவரது நான் வாசிக்கும் முதல் நாவல்.

பரஞ்சோதி என்பது ஒரு சிறுமியின் பெயர். எனக்கு அதை ஆண் பெயராகத்தான் தெரியும். ஆனாலும் அச்சிறுமியும், புளியம்மரமும் மனதுள் ஒருவித குறுகுறுப்பையும் ஊர் நினைவுகளையும் கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக அந்தப் பேச்சுத் தமிழ் அருமை.

எங்கு சென்றாலும் நூலைத் தொடரவேண்டும் என்ற ஆவல் மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. மிகவும் நன்றாகத் தொடரும் என்றே நம்புகிறேன்.

சந்திரவதனா
28.04.2017

Tuesday, April 18, 2017

அவனென்ன செத்தா போய்விட்டான்?

நெஞ்சுக்குள் பந்து உருள்வது போலச் சிலசமயங்களில் சில துயரங்கள் எம்மை அழுத்தும். மறந்து விட்டோம் என்று நினைப்பவை கூடச் சிலபொழுதுகளில் கிளர்ந்தெழுந்து எம்மை வாட்டும்.

இதற்கு இதுதான் நியதி. இது மாற்ற முடியாத காயம் என்று தெரிந்தாலும் பேதைமனம், மறுகிக்கொண்டே இருக்கும்.

அப்படித்தான் மனதைத் துயரம் அழுத்தும் ஒரு பொழுதில் அவளின் அறைக்குள் நுழைந்தேன்.

„இதோ பார். எங்கள் Sonnenshine (சூரியப்பிரகாசம்) வருகிறாள். இரண்டு மூன்று நாட்களாக எங்கே போயிருந்தாய்? நீ வந்தாலே எங்கள் அறை ஒளிரும். எப்படி உன்னால் இப்படி எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க முடிகிறது..!“

அன்ரோனெலா மூச்சு விடாமல் அடுக்கிக் கொண்டே என்னை வரவேற்றாள். அவளுடன் அவ்வறைக்குள் இருந்த மற்றவர்களும் என்னை இன்முகத்துடன் வரவேற்றார்கள். எனக்கே ஆச்சரியமாகவிருந்தது. ´அகத்தின் அழகு முகத்தில் தெரியும்` என்பார்கள். என் துயரத்தை என் முகம் இவர்களுக்குக் காட்டவில்லையா?

யோசனை ஒரு புறம் இருந்தாலும், அவர்களது வரவேற்பில் என் அகம் குளிரமாலில்லை. துன்பத்தின் மேல் ஒரு மகிழ்ச்சி விரவிப் படர்ந்தது.

சற்று நேரம் அளவளாவினோம்.

வாரஇறுதியில் பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தாள். அவளது ஒற்றை மகனால் விழாவுக்கு வர முடியாமற் போய் விட்டது. வரவில்லை. அவளுக்கு அது ஒரு குறைதான். ஒரேயொரு மகன். உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோரும் கூடிக் குதூகலித்திருந்த போது அவன் மட்டும் இல்லை.

சுசானே கேட்டாள் „நீ உன் மகனைக் கண்டிக்கவில்லையா? நீ கவலைப் பட்டிருப்பாய் என்று அவனுக்குத் தெரியாதா?“ என்று

உடனே அன்ரொனெலா மறுத்தாள். „இல்லை. நான் அப்படி ஏதாவது சொல்லி அவனுக்குள் ஒரு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்த விரும்பவில்லை. பல்கலைக்கழகப் படிப்பு. நிறையப் படிக்க இருந்திருக்கலாம். வரமுடியாது போனதால் அவனே தனக்குள் வருந்தியிருக்கலாம். பிறகு நானும் சொல்லி அவனை இன்னும் ஏன் வருத்துவான்? முன்னரென்றால் நான் இப்படித்தான் எல்லாவற்றிற்கும் வருந்துவேன். கத்துவேன். சண்டை பிடிப்பேன். வாக்குவாதப் படுவேன். அதனாலேயே மனவுளைச்சலில் அல்லாடுவேன். பின்னர் ஒரு உளவியல் நிபுணர்தான் சொன்னார் „அவனோ அவளோ வரவில்லையென்றோ, பேசவில்லையென்றோ, நீ சமைத்ததைச் சாப்பிடவில்லையென்றோ வருந்தாதே. அவனென்ன செத்தா போய்விட்டான்? எங்கோ சந்தோசமாக வாழ்கிறான்தானே“ என்று. அதற்குப் பிறகு நான் இப்படியான விடயங்களுக்காக பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை“ என்றாள்.

உண்மைதான். இப்படியான விடயங்களுக்காக மனதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லைத்தான்.

இருந்தாலும் அவனோ அல்லது அவளோ எம்மிடையே மிகச்சாதரணமாகச் செத்துத்தான் போகிறார்கள் என்பதை அவளுக்கோ, மற்றவர்களுக்கோ சொல்லாமல், சிரித்துக் கொண்டே விடைபெற்றேன்.

சந்திரவதனா
18.04.2017

Tuesday, April 11, 2017

வார இறுதியில் 3 தமிழ்ப்படங்கள் பார்த்தேன் (Revelations)



Netflix இல் நான்கு தமிழ்ப்படங்கள் போட்டிருந்தார்கள்.

விசாரணை, ரேடியோப்பெட்டி, நிலா, Revelation. விசாரணை ஏற்கெனவே பார்த்ததுதான்.

அதனால் ரேடியோப்பெட்டி, நிலா, Revelation மூன்றையும் நாளுக்கொன்றாய்ப் பார்த்தேன்(தோம்). மூன்றும் வெவ்வேறு கோணத்தில் அமைந்த கதைகள். மிகச்சாதாரணமாகச் சொல்லப்படுகின்றன.

நன்றாக இருந்தன.

ரேடியோப்பெட்டி - மகனால் உதாசீனம் செய்யப்பட்ட தந்தையை (+தாயையும்) மையப்படுத்திய கதை.

நிலா - ஒரு ரக்சி ரைவரையும், அவனுக்குப் பிரியமானவளையும் மையப்படுத்திய கதை.

Revelation - இந்த மூன்றிலும் சற்று அதிகமாக எனக்குப் பிடித்த படம். பாத்திரங்கள் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறார்கள். கதை பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்ல விரும்பவில்லை, இன்னும் பார்க்காதவர்களுக்காக.

11.04.2017