Monday, May 25, 2020

CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை


நான் என்னும் பெருங்கனாக் கொண்ட உமையாழின் எழுத்துக்கள், சில வருடங்களின் முன், Facebookஇன் மூலந்தான் எனக்கு அறிமுகமாயின. வழமையாக எனக்குக் கிடைத்த எழுத்துக்களிலிருந்து மாறுபட்ட, சுவாரஸ்யமான அந்த எழுத்துக்களைதேடித் தேடி வாசித்தேன். பிரித்தானியாவில் குடியேற முன்னர் ஆறாண்டு காலம் சவுதியில் வாழ்ந்த உமையாழ் தான் வாழ்ந்த அந்த சவுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும் அப்போது தொடராக எழுதினார்.  அதை மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்து காத்திருந்து வாசித்தேன். 

இதேநேரம் இந்த `உமையாழ்´ என்ற பெயரும் பெண்கள் பற்றிய உமையாழின் பதிவுகளும் இவரொரு பெண்ணா ஆணா என்ற குழப்பத்தையும் அவ்வப்போது என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன.  

எதுவாயினும் எவராயினும் என்ன? உமையாழின் எழுத்துக்கள் எனக்குப் பிடித்தன. ஒன்று விடாமல் படித்துத் தீர்த்தேன்.

அந்த வகையில் சில ஆண்டுகள் கழித்து என் கரம் கிட்டிய உமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை` நூலை பெரும் எதிர்பார்ப்புடனேயே கையில் எடுத்தேன்.

அட்டைப்படம் ஆர்ப்பட்டமில்லாத, அமைதியானதொரு நீரோவியம். அதை வரைந்தவர் பற்றியோ, வடிவமைத்தவர் பற்றியோ எந்த ஒரு குறிப்பையும் புத்தகத்தில் காணவில்லை. ஒருவேளை றஷ்மியாக இருக்கலாம்.

பின்னட்டையில் உமையாழின் படத்துடன்
எங்களூரின் மொழியும், இந்தத் தமிழை நாங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்கு எப்போதும் உவப்பானது. கொஞ்ச நாட்களாக என்னுடைய தனிப்பட்ட பாவனையில் இருந்து நழுவிக்கொண்டிருக்கும் அந்தத் தமிழை, எழுதிக் கடக்கிற போது நான் அடைகிற ஆனந்தம் அளவிட முடியாதது. அவற்றின் எச்சங்களை நான் பதிவுசெய்ய வேண்டாமா! போலவே அரேபிய பாலைவனங்களில் அலைந்த திரிந்த ஆறாண்டுகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஆச்சரியங்களையும் நான் எங்கே போய் வெளிப்படுத்துவேன்! இப்போது, நீலக்குளிர் பிரதேசம் எனக்குள் பொழிகிற, உறைய வைக்கும் இந்தக் குளுமை எனக்கானதுதானா! அல்லது நான் வேரோடிஎனது கரையை போய்ச் சேர்ந்து விட வேண்டுமா?
கடந்து வந்த நிலமெல்லாம் பெரும் ஆச்சரியங்கள்தான். ஆகவே நிலங்களை எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தக் கதைகளுக்குள் உலவுகின்ற மனிதர்கள் எங்கிருந்து வந்து சேர்ந்தவர்கள்!  அவர்களுக்கும் எனக்குமான பந்தம் என்ன என்கிற கேள்விகள்தான் என்னை அலைக்கழிக்கின்றன.
என்ற உமையாழின் மனவரிகள் பதியப் பட்டிருக்கின்றன.

உள்ளே  அர்த்தங்களிலிருந்தான விடுதலை என்ற தலைப்பில் உமையாழின் நூல் பற்றிய முகவுரையோ அணிந்துரையோ நன்றியுரையோ ஏதோ ஒன்று உமையாழினால் எழுதப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் நான் முகவுரை, அணிந்துரை, பதிப்புரை... போன்றவைகளை கடைசியாகவே படிப்பேன். அதனால் அதைக் கடந்து நூலைப் படிக்கத் தொடங்கினேன். உள்ளே சிறிதும் பெரிதுமாக ஒன்பது கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன.

கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட உமையாழ் அந்தக் கிழக்கிலங்கையின் ஒரு ஊரையும், அங்கு வாழ் மக்களின் இயல்புகளையும், பழக்கவழக்கங்களையும் தொகுப்பின் முதற்கதையான ´ஊர்க்கத` யினூடு எம்முன் விரிக்கிறார். 

முந்தைய காலத்தில், அனேகமான எங்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் `ஒரு ஊரில் ஒரு இராஜா/அரசன் இருந்தான்´ என்றோ அல்லது `ஒரு ஊரில்  ஒரு இராணி இருந்தாள்´ என்றோ தான் தொடங்கியிருக்கின்றன. இங்கே இந்தக் கதை அப்படித் தொடங்கவில்லை. `மூன்றாவதாகவும் பிறந்த பெண்குழந்தையை ஏற்கெனவே தோண்டியிருக்கும் குழியில் போட வேண்டிய சடங்கை தந்தையே செய்ய வேண்டும்...´ இப்படித்தான் தொடங்குகிறது. கி.மு நான்காம் நூற்றாண்டுக் கதையை மடியில் படுத்திருக்கும் 13-14 வயது நிரம்பிய உமையாழுக்கு சாலியாப் பெரியம்மா சொல்லத் தொடங்குகிறா. (கதையை தன்னிலையில் இருந்து உமையாழ் எழுதியதால்  அந்தச் சிறுவன் உமையாழ்தான் என மனம் எண்ணிக் கொண்டது) கதை சொல்லும் சாலியாப் பெரியம்மாவைப் பற்றிய விவரணங்களோடு,  இஸ்லாமிய மதத்தவர்கள் வாழும் ஒரு ஊரின் கதை, அதன் பேச்சு வழக்கு, அங்கு வாழ் மக்களின் வாழ்க்கைமுறை... என்று பலவிடயங்களையும் கதை சொல்லி விடுகிறது.

No comments:

Post a Comment