Tuesday, November 07, 2023

அம்மாவின் தையல் மெஷின்

 

பராமரிப்பு நிலையத்துக்குப் போய் உடல் தேறி, நடமாடித் திரியத் தொடங்கிய ஒரு பொழுதில் அம்மா கேட்டா என்ரை தையல் மெசின் எங்கை? அதைக் கொணர்ந்து தா. நான் தைக்கோணும் என்று.

அம்மாவின் உடல், பொருள், ஆவி அனைத்தும் அந்தத் தையல் மெசினிக்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு. ஊரில் இருந்த போதே அம்மா நன்றாகத் தைப்பா. அப்போது அம்மாவிடம் ஒரு உஷா(USHA) தையல் மெசின் இருந்தது. அந்த மெசின் புதிதாக எங்கள் வீட்டுக்கு வந்த போது எனக்கு மூன்று நான்கு வயதாக இருந்திருக்கலாம். அது ஒரு ஒரு கனவு போலத்தான் எனக்கு இப்போது ஞாபகமாக இருக்கிறது.

ஆனால் காலாட்டித் தைக்கும் அந்தத் தையல் மெசின் இல்லாத எங்கள் வீட்டை ஒருபோதுமே என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அது எப்போதும் எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையில் வெளிச்சம் நன்றாகப் படும் ஒரு இடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும். எங்கள் அண்ணன் தனது றலி சைக்கிளை தேங்காய் எண்ணெய் பூசிப் பூசி துடைத்து வைப்பது போல அம்மா இந்தத் தையல் மெசினை, மெசின் ஒயில் போட்டு துடைத்துத் துடைத்து எப்போதும் புதிது போலவே பளிச்சென்று வைத்திருப்பா. நினைத்த நேரமெல்லாம் அதிலிருந்து தைக்கக் கூடியவாறு எல்லாம் ஆயத்தமாகவே அந்த மெசின் எப்போதும் இருக்கும். எங்களில் யார் வேண்டுமானாலும், ஒரு சின்னக் கிளியல் எங்கள் சட்டைகளில் வந்தாலும் உடனே அதிலிருந்து தைத்து விடுவோம். தம்பி பார்த்திபன் கூடத் தைப்பான்.

அந்த மெசினில் அம்மா தைத்து விட்டவையோ எண்ணிலடங்கதாவை. பிள்ளைகள் எங்களுக்கு மட்டுமல்லாது சொந்தங்களுக்கு நட்புகளுக்கு... என்று அம்மா ஊருக்கெல்லாம் சும்மா சும்மா தைத்துக் கொடுப்பா. கஷ்டப்பட்டவர்களுக்கு தானே துணி வாங்கித் தைத்துக் கொடுப்பதற்கும் அம்மா தயங்கியதில்லை. இத்தனைக்கும் அம்மாவுக்கு நேரம் என்பதே இருக்காது. ஆனாலும் தனது நித்திரையைத் தியாகம் பண்ணியாவது தைத்து விடுவா. அம்மா அவைகளுக்கெல்லாம் பணம் வாங்கியிருந்தா என்றால் பெரும் பணக்காரி ஆகியிருப்பா.

அம்மாவின் தையல் பலரும் வியந்து வியந்து பார்க்குமளவுக்கு அத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.

அம்மாவிடம் ஒரு டிசைன் புத்தகம் இருந்தது. அதை அப்பாதான் வாங்கிக் கொடுத்ததாக அம்மா சொன்ன ஞாபகம். அதில் விதம் விதமான சட்டை வடிவங்கள் இருந்தன. அம்மா புதுப்புது டிசைன்களைக் கண்டுபிடித்துத் தைப்பதற்கு அந்தப் புத்தகமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

அம்மா தானே தனக்குத் தைத்துப் போட்ட, ட்ரெசிங் கவுண்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவை அந்தளவுக்கு கனகச்சிதமாக, பிரமாதமான அழகாக இருக்கும்.

அத்தனையையெல்லாம் தைத்த அந்த உஷா(USHA) தையல் மெசின், பிள்ளைகள் எங்களுக்குள் நன்றாகத் தைக்கக் கூடிய தங்கை பிரபாவுடன் அந்த ஆத்தியடி வீட்டிலேயே தங்கி விட்டது

ஆனாலும் யேர்மனிக்கு வந்த கொஞ்ச நாட்களில் அம்மா தனக்கென ஒரு தையல் மெசின் வாங்கி விட்டா.

அது அம்மாவுக்குப் பிடித்த உஷா மெசின் அல்ல. ஆனாலும் ஓரளவு தரமான ஒரு மின்சாரத் தையல் மெசின். ஊரளவு இல்லாவிட்டாலும் அம்மா கடைசி காலம் வரை அந்த மெசினில் நிறையவே தைத்தா. பலருக்கும் தைத்துக் கொடுத்தா.

அந்த மெசினைத்தான் கொணர்ந்து தரும்படி கேட்டா. பராமரிப்பு நிலையத்துக்கு அதைக் கொண்டு போகலாமோ!‘ என்பது கூட எனக்குத் தெரியாதிருந்தது. அவர்களுடன் கதைத்துப் பார்த்தேன். அவ ஆசைப்பட்டால் கொணர்ந்து குடுங்கள் என்றார்கள்

நான் அதை அங்கு கொண்டு போனதும் அம்மாவின் முகத்தில் அப்படியொரு பிரகாசமும் சந்தோசமும்.

அதற்கு மேலால் அங்குள்ளவர்கள், வேலை பார்ப்பவர்கள்... எல்லோருமே அந்த மெசினை ஒரு காட்சிப் பொருள் போலக் கருதி அம்மாவின் அறைக்கு வந்து வந்து பார்த்தார்கள். அதன் பிறகுதான் அம்மா அங்கு போட்டுக் கொண்டு திரிகின்ற அழகழகான சட்டைகள் எல்லாம் அம்மாவே தைத்தவை என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது.

எல்லோரும் ஒருநாள் ஒரு திருவிழா போல ஒன்றாகக் கூடி அம்மாவின் தையல் திறமையைப் பற்றிக் கூறி அம்மாவைப் புகழ்ந்தார்கள். பாராட்டினார்கள். அவர்களது பதிவுப்புத்தகத்தில் அம்மாவோடு நேர்காணல் செய்து, அம்மாவைப் பற்றி ஒரு கட்டுரையும் எழுதி வைத்தார்கள். அம்மா மிகமிக மகிழ்ந்திருந்தா.

அது வரை காலமும் அம்மா தைத்ததற்கான வெகுமதி அப்போது தான் கிடைத்தது போன்ற ஒருவித புளகாங்கிதமான உணர்வோடு நானும் மகிழ்ந்திருந்தேன்.

அந்தத் தையல் மெசின் இப்போது எனது புத்தகங்கள், பேப்பர்கள், எழுதி முடிக்காத குறை குறையான எழுத்துகள், கொப்பிகள், பேனைகள்... இவைகளோடு பெரும் பொக்கிஷமாக... என்னோடு.

சந்திரவதனா
07.11.2023 
                                                                                                                                             

உப்பில்லாத பருப்புக்கறியும் சோறும்

உப்பில்லாப்பண்டம் குப்பையிலே என்பார்கள்.
 

அந்த முறை மாவீரன் சுசீலன் தான் கப்டன் மயூரனை Pajero  வாகனத்தில் அவனது சின்னக்கா பிரபாவிடம் கூட்டிக் கொண்டு வந்தான்.

 
“பிரபாக்கா, மயூரனுக்கு நல்லாச் சமைச்சுக் குடுங்கோ. நல்ல குளிர்ந்த சாப்பாடுகள் குடுங்கோ“ என்று சொல்லி விட்டுச் சென்றான். 
 
போன முறை சுசீலன் தனியாக மயூரனின் கடிததத்துடன் வந்த போது “பிரபாக்கா, மயூரன் சரியான சென்சிற்றீவ். எப்பவும் உங்களை, அம்மாவை, குடும்பத்தை... எண்டு நினைச்சுக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார். கண் கலங்குவார். அதுதான் அண்ணை(தலைவர்) அடிக்கடி அவருக்கு லீவு குடுக்கிறவர். ‘போய் அம்மாவைப் பார்த்திட்டு வாடா‘ எண்டு சொல்லி அனுப்பிறவர். இப்ப அவர் முக்கியமான வேலையிலை நிற்கிறார். வரவே ஏலாது. அதுதான் கடிதம் கொணர்ந்தனான்...“ என்று சொன்னவன்.
 
இப்போது மயூரனோடு வந்திருந்தான். மயூரனின் அம்மா, அப்பா... ஒருவரும் அப்போது ஊரில் இருக்கவில்லை. இந்திய இராணுவத்தின் தொல்லை தாங்க முடியாது யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள்.
 
பிரபா வேலையில் நின்றாள். சுசீலனையும் மயூரனையும் வீட்டுக்குப் போகும்படி அனுப்பி விட்டு, விடயத்தைச் சொல்லி அவசர லீவு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்து அவசரம் அவசரமாகச் சோறும் கறிகளும் சமைத்துக் கொடுத்த போது “நல்ல ருசியா இருக்கக்கா“ என்று சொல்லிச் சொல்லி மிகுந்த ஆசையோடு மயூரன் அவைகளைச் சாப்பிட்டான்.
 
அவன் அத்தனை ஆசையாகவும் ரசித்தும் ருசித்தும் சாப்பிடுவதைப் பார்க்க, அவனது சின்னக்கா பிரபாவுக்கு மனசு நிறைந்து ஆனந்தத்தில் கண்கள் கலங்கின. நிறைந்த திருப்பியோடுதான், தான் சாப்பிடத் தொடங்கினாள். அப்போது தான் ‘கறிகளில் வழமையான சுவையில்லை‘ என்பதை உணர்ந்தாள். மரவள்ளிப் பிரட்டலுக்கு உப்பு துப்பரவாகக் காணாமல் இருந்தது. ‚அவசரத்தில் இப்படிச் சமைத்து விட்டேனே!‘ என்ற வருத்தத்துடன் “என்னடா இந்தச் சாப்பாட்டையே ‘ருசி, ருசி‘ எண்டு சொல்லிச் சாப்பிட்டனி? வாயிலையே வைக்கேலாமல் கிடக்குது. ஒரு சொல்லுச் சொல்லியிருந்தியெண்டால் மரவள்ளிக் கறிக்குள்ளை கொஞசம் உப்புத் தண்ணியைத் தெளிச்சுக் கலந்து விட்டிருப்பனே“ என்றாள்.
 
அதற்கு மயூரன் “உப்பு இல்லாட்டில் இப்ப என்ன? நாங்கள் உப்பில்லாமலும் சாப்பிடுவம்“ என்றான்.
 
ஏன் உப்பில்லாமல்..? பிரபா யோசனையோடு கேட்டாள்.
அப்போதுதான் மயூரன் அதைச் சொன்னான்.
 
“நாங்கள் நித்தியகுளம் காட்டுக்குள்ளை இருக்கக்கை எங்களுக்கு ஒவ்வொருநாளும்பருப்புக்கறியும் சோறும் தான் சாப்பாடு. ஒரு கட்டத்திலை நாங்கள் கொண்டு போன உப்பு முழுசா முடிஞ்சிட்டுது. 
 
அண்ணை(தலைவர்) உப்பு வாங்க இரண்டு போராளிகளை அனுப்பி வைச்சார். போனவர்கள் திரும்பவில்லை. இந்தியன் ஆமியியோடை போராட வேண்டிய நிலை வந்து வீரமரணமடைந்து விட்டார்கள்.
 
அது பெரும் சோகம். அந்தச் சோகத்தைத் தாங்க முடியாத அண்ணை(தலைவர்) சொன்னார் ‘நாங்கள் இந்தக் காட்டிலையிருந்து வெளியேறுகிறவரை, ‘அவர்கள் நினைவாக‘ உப்பில்லாமலே சாப்பிடுவம்‘ என்று.
 
அதுக்குப்பிறகு இரண்டு மாசங்களுக்கு மேலை, நாங்கள் உப்பேயில்லாத பருப்புக்கறியும் சோறும்தான் சாப்பிட்டனாங்கள்.
 
'என்னண்டடா அதைச் சாப்பிட்டனிங்கள்? அண்ணையும்(தலைவர்) அதையே சாப்பிட்டவர்?'
 
'அண்ணையைப் பற்றி என்ன நினைக்கிறிங்கள்? அவர் ஒரு நாளும் பாரபட்சம் பார்க்கிறதேயில்லை. எல்லாருக்கும் என்ன சாப்பாடோ அதைத்தான் அவரும் சாப்பிடுவார். அவருக்கெண்டு ஒரு ஸ்பெஷல் சாப்பாடும் ஒருநாளும் செய்யிறேல்லை. உப்பில்லாத பருப்புக்கறியும் சோறும்தான் அண்ணையும் அந்த இரண்டு மாசங்களுக்கு மேலான நித்தியகுளக் காட்டுவாழ்க்கையிலை சாப்பிட்டவர்.“ என்றான்.

சந்திரவதனா
07.11.2023