Saturday, February 12, 2005

அமிழ்ந்த காதல்


மாரிக்கிணறு நிரம்பியிருந்தது. கிண்ணத்தால் எட்டி அள்ளிக் குளிக்கலாம் போலிருந்தது. குளிரை நினைத்தால்தான் பயமாக இருந்தது. பல்லைத் தீட்டி முகம் கழுவி தேநீர் ஒன்றைக் குடித்து விட்டுக் குளிக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

இன்னும் சரியாக விடியவில்லை. அம்மா எனக்காக வேளைக்கே எழும்பி விட்டா. இருட்டில் ஆட்டில் பால் கறந்திருப்பா. குசினிக்குள் ஆட்டுப்பால் தேநீர் ஆற்றும் வாசம் கிணற்றடிக்கும் வந்தது.

நேற்று ரியூசனால் வரும் போது கோகிலாவிடம் இருந்த எனது கெமிஸ்றி நோட்ஸ் கொப்பியை வாங்கிக் கொண்டு வந்தேன். படிக்க வேண்டும். அதுதான் வேளைக்கே எழும்பி விட்டேன்.

கோகிலாவை நினைக்கத்தான் பாவமாக இருந்தது. அவளுக்கு எப்படியோ கோணந்தீவு ராசுவிடம் காதல் வந்து விட்டது. காதலுக்கு என்ன தெரியும். அது சாதிமத பேதம் பார்த்து வருவதில்லைத்தானே.

ராசுவின் அப்பா பனையேறிக் கள்ளுச் சீவுகிறவர். வாழ்வது கொட்டில் வீட்டில். தேவகியின் அப்பா வங்கியில் வேலை செய்கிறார். சாதித்தடிப்பு என்று இல்லாவிட்டாலும் சாதி பார்ப்பவர். வாழ்வது மாளிகை போன்று இல்லாவிட்டாலும் வசதியான பெரிய வீட்டில். உணர்வுகளை விட மானம், மரியாதைக்கு முக்கியம் கொடுக்கும் சுபாவம் கொண்டவர்.

அவரது காதுக்கு ஏற்கெனவே விடயம் எட்டியதில் வீட்டில் ஒரு பனிப்போரே நடந்து முடிந்து விட்டது. அவளை அடி, உதை என்று துவைத்து எடுத்து விட்டார். அவனை மறந்து விட வேண்டுமென்ற கண்டிப்பான நிபந்தனையுடன்தான் பாடசாலைக்குப் போவதற்கான அனுமதியும் கொடுத்திருந்தார். அடிக்கும் உதைக்கும் பயந்து காதல் போய் விடுமா..? அது இன்னும் பலமாகத் தொடர்ந்தது.

இந்த நிலையில்தான், நேற்று ரியூசனால் வீட்டுக்குத் திரும்பி வரும்போது யாருக்கும் தெரிய வராது என்ற அசட்டுத் துணிச்சலுடன் அவள் பிய்ந்து கிடந்த வேலிக்கு மேலால் எட்டி ராசுவிடம் கடிதத்தைக் கொடுத்தாள். அந்த நேரம் பார்த்து துளியும் எதிர் பாராத விதமாய் அவர் அந்த ஒழுங்கையால் சைக்கிளில் வந்தார்.

அவர் பார்த்த பார்வையும் கோகிலா ஏறு சைக்கிள்ளை என்று உறுக்கிய விதமும் எனக்கே நடுக்கத்தை ஏற்படுத்தியது. "இன்னும் எங்களுக்குள்ளை தொடர்பு இருக்குது எண்டு அப்பாவுக்குத் தெரிஞ்சால் அப்பா என்னைக் கொண்டு போடுவார்" என்று அவள் ஏற்கெனவே சொல்லியது என் ஞாபகத்தில் வந்தது. நான் மௌனமாய் வீட்டுக்கு விரைந்து விட்டேன்.

நேற்றுக் கட்டாயம் அவள் வீட்டில் பிரளயம் நடந்திருக்கும். இன்று பள்ளிக்கூடத்தில் தான் என்ன நடந்ததென்று சொல்லுவாள். ம்.. வருவாளோ..! சிலவேளை இனி அவளைப் பள்ளிக்கூடத்துக்கு விடவும் மாட்டினம்.

நினைவுகளோடு தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவிக் கொண்டிருந்த போதுதான் செய்தி வந்தது "கோகிலா கிணற்றுக்குள் விழுந்து இறந்து விட்டாள்" என்று.

காலையில் அவளின் அம்மா நித்திரைப் பாயிலிருந்து எழும்பி கிணற்றடிக்கு வநத போது அவளின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததாம்.

பெற்றவர்களினதும் உடன் பிறப்புகளினதும் ஓலத்துக்கு மேலால், ஊரின் ஊகங்கள் பலவாறாக ஒலித்தன. "சாமிக்கு பூ வைக்கிறதுக்காண்டி காலைமை எழும்பி கிணத்துக்கட்டிலை ஏறியிருப்பாள். தவறி விழுந்திருப்பாள்..... என்ற அவளின் அம்மா அப்பாவின் பதிலை நம்பியும் நம்பாமலும்... ஊர் பலதையும் மென்று கொண்டிருந்தது. நான் மௌனம் காத்தேன்.

சந்திரவதனா
12.2.2005

2 comments:

  1. அன்பினிய சந்திர...,
    அப்பாடி.. மனதிற்குள் நீங்கள் அறியாமல் உங்களின் ஒவ்வொரு
    பதிவிற்கும் பின்னூட்டம் எழுதிக் கொண்டிருந்தவள் இன்று ஒருவழியா
    நேரடியாவே வந்துவிட்டேன் மதியிடம் கூட இது குறித்து(பிரமித்து)
    சொல்லியிருக்கிறேன்.

    எல்லாப் பதிவுகளையும் இல்லாவிட்டாலும் எனக்குப் பிடித்தவற்றை
    படித்து வருகிறேன் புகைப்பட ஆல்பம்கூட எப்பவோஓஓஓஒ
    பார்த்துவிட்டேன் அத்தனையும் நன்று!

    அன்பு
    மீனா.

    அப்புறம் சந்திர இந்தக் கதையின் கதாநாயகி கோகிலாதானே?
    ஒரு இடத்தில் தேவகியென்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. மிகவும் நன்றி மீனா.
    சிலரின் பதில்களில் மனதைத் தழுவும் ஒரு வித இதம் இருக்கும்.
    எப்போதுமே உங்கள் பதில்களில் அப்படித்தான் உணர்கிறேன்.

    அந்தப் பெயர். இது என்னிடம் அடிக்கடி ஏற்படும் தவறு.
    நான் எழுதுவதெல்லாமே எனக்கோ அல்லது என்னைச் சுற்றியொ நடந்த உண்மையின் புனைவுகள் என்பதால் சில சமயங்களில் உண்மையான பெயர்களும் என் கதைகளுக்குள் புகுந்து விடுகின்றன.

    இது 30வருடங்களுக்கு முந்திய நிகழ்வானாலும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டு அடிக்கடி என்னைத் தொந்தரவு படுத்தும் நினைவு. நேற்று எழுதி விட்டேன். இனி சற்று இந்த நினைவிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை.

    ReplyDelete