Thursday, March 31, 2005

ஒரு பேப்பர்(19)


வார இறுதியில் எனக்குக் கிடைத்த பத்திரிகை ஒரு பேப்பர்(19).
இளவரசர் சார்ள்ஸ்க்கு மட்டக்களப்பு முருகன் கோவிலில் ஒரு சிறுமி பொட்டு வைக்கும் காட்சியுடன் முதற் பக்கம். உள்ளே வழமையான சமாச்சாரங்கள்தான். சின்னதான... பெரிதான.. என்று சினிமாவிலிருந்து அரசியல் வரை பல செய்திகள்.

சயந்தனின், சுவாரஸ்யமான முறையில் எழுதப் பட்ட, நிதர்சனமான, ஆமியும் அரிசியும் 14ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. 70களின் முற்பகுதியில் சிறீமாவின் ஆட்சிக்காலத்திலும் கிட்டத்தட்ட இப்படியான ஒரு நிலை இருந்தது. பாணுக்கு வரிசையில் நிற்பதுவும், பாண் கிடைக்காமல் திரும்பி வருவதும் என்று... அதைப் பற்றி ஆறுதலாக வடிவாக எழுத வேண்டும். அந்த நேரத்தில் முருங்கையிலைச் சுண்டலும், மரவள்ளி அவியலும்தான் பலருக்குத் தஞ்சம். மரவள்ளிக்கிழங்குக்கு இஞ்சிச் சம்பல் செய்து சாப்பிட்டு இறந்தவர்களும் உண்டு.

மொறீசியஸ் பற்றிய ஒரு விபரமான கட்டுரை திரு அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

அடுத்து வன்கூவர் கனடாவிலிருந்து ரிஷியின் உங்களால் முடிந்தால் எங்களால் முடியும் - இந்திய அமெரிக்க இராணுவப் பயிற்சிகள் சம்பந்தமான கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் ரிஷியைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். உடனே ஏதோ அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி என நினைத்து விடாதீர்கள். அது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ரிஷி வழங்கும் பல விடயங்களை ஐபிசி வானொலியில் மிகவும் ரசித்துக் கேட்டிருக்கிறேன். எந்த ஒரு விடயமானாலும் சுவாரஸ்யம் கலந்து தனக்கென்று ஒரு பாணி வைத்து வழங்குவாரே, மிகவும் அபாரமாக இருக்கும். எந்த அரசியலையும் ஒரு சிறுகதை போல.. ஒரு நகைச்சுவை போல அவர் தரும் பாணிக்கு ஈடு அவரேதான். அத்தனை அருமையாக வழங்குவார்.

வசந்தனின் அப்பா துவக்குச் செய்வார் அனுபவப் பதிவும் இடம் பெற்றுள்ளது.

அறுவைப் பக்கத்தில் அதிகமான சமயங்களில் அல்வாசிட்டி விஜய்தான் இடம் பிடிப்பார். இம்முறை சுபமுகா இடம் பிடித்துள்ளார். எப்படி இருக்கு இந்தமாசம். கண்டிப்பாக அதை வாசித்து உங்கள் மாதபலன்களுக்கு ஏற்ப வாழ்வைத் தொடருங்கள். எல்லாளன் காண்டக்காரரிடமே தனது பிறந்ததிகதி பெருவிரல் அடையாளம் கொடுத்து வாசிக்க விட்டிருக்கிறார். சொன்ன படியே எல்லாம் பொருந்தியிருக்கிறதாம்.

வாசகர் பக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது. வாசகர்கள் துணிந்து தமது கருத்தைச் சொல்கிறார்கள். படத்துக்குத் தமிழில் பெயர் வை, பாடலைத் தமிழில் எழுது, என்றெல்லாம் எழுதி விட்டு ஒரு பேப்பர் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே என்று Eastham பரணிதரன் கோபப் பட்டிருக்கிறார்.

இதேநேரம் சேயோனும் எண் சாத்திரப்படி பெயர் வைப்பதிலிருந்து வெள்ளைக்காரனுக்கு விளங்கும் படியாக இருக்க வேண்டும் என்று பெயர் வைக்கிறார்கள் என்பது வரை தமிழ்ப்பெயர் வைக்காதவர்களைச் சாடியிருக்கிறார்.

வாசகர் பக்கத்தில் வந்த இன்னொரு விடயம் அதை அப்படியே தருகிறேன்.

மாட்டினார் ஐயா

ஐரோப்பிய தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியினைப் பார்த்தேன். அது சட்ட ஆலோசனை பற்றியது. ஆந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு சட்ட ஆலோசகர் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்.

அந்த வேளை ஒரு நபர் அவருடன் தான் வக்கீல் ஒருவரால் ஏமாற்றப் பட்டதாகவும், பணமும் வீணாக்கப் பட்டதாகவும் கூறி அவரை சட்டத்தின் முன் எப்படிப் பிடிப்பதென்று கேள்வி கேட்டார்.

அதற்கு வக்கீல் சட்ட ஒழுங்குகள் பற்றியும் எப்படியான வழிவகைகள் இருக்கிறது என்றும் விளக்கினார். அதற்கு அந்த நபர் வித்தியாசமான ஒரு கேள்வியைக் கேட்டார். அது என்னவெனில் தான் கொடுத்த பணத்தை எல்லாம் அந்த வக்கீல் என்ன செய்திருப்பார் என்பதே. அதற்கு அந்த வக்கீல் இந்தக் கேள்வியை உங்கள் வழக்கினை எடுத்த அந்த வக்கீலிடம்தான் கேட்க வேண்டும் என்றார். இதற்கு அந்த நபர் இப்படிச் சொன்னார். அதான் ஐயா கேட்கிறன். அந்தக் காசையெல்லாம் என்ன செய்தனியள். வக்கீலின் முகத்தில் ஈயாடவில்லை. மறுநொடி தொலைக்காட்சியில் விளம்பரம்.


சர்வேஸ்வரன்
Ilford.

ஐரோப்பியத் தொலைக்காட்சி ஒன்றில் சட்ட ஆலோசனை நிகழ்ச்சி நடைபெறுவதை நானும் ஓரிரு தடவைகள் கவனித்தேன். அது எனக்கோ யேர்மன் வாழ் தமிழருக்கோ பிரயோசனமில்லாத ஒரு நிகழ்ச்சி. முழுக்க முழுக்க லண்டன் பிரச்சனைகளை மையப் படுத்தியது. அதிலும் நேயர்களின் கேள்விகளுக்கு அரைகுறையான பதிலே வழங்கப் பட்டு அவர்களைத் தம்மோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளுமாறு சொல்லப்படும். இது அந்த வழக்கறிஞர்களுக்கான விளம்பரம் போலவே எனக்குத் தோன்றும். அதனால் மேற்கொண்டு நான் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை. என்னைப் போல் மௌனம் காக்காமல், ஒரு பேப்பர் வாசகர் பேசத் துணிந்தது நல்ல விடயமே.

இன்னும் அழகுக் குறிப்பு, நூல்வெளியீடு, பாராட்டுவிழா... என்று பல விடயங்கள் பத்திரிகையினுள். ஏற்கெனவே ஈஸ்ரர் விடுமுறையோடு நாட்களைக் கடத்தி விட்டு தாமதமாக வந்திருக்கிறேன். இனி அவைகளைப் பற்றி விலாவாரியாக எழுதுவது, ஆறிய கஞ்சிக்குச் சமனானது என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்.

ஒரு பேப்பர் தயாகம் வரை செல்கிறது என அறிகிறேன்.

சந்திரவதனா
31.3.2005

2 comments:

  1. அக்கா, நம்ம புகழ் ஐரோப்பா எல்லாம் பரவி கிடக்கு போல. எனக்கு கொடுத்த இடம் பார்த்தீர்களா? "அறுவை பக்கம்". இப்படியே போன அகில உலக அறுவைகள் சங்க தலைவன் (கொள்ளை கூட்ட தலைவன் மாதிரி) ஆகிவிடுவேன் போல.

    போடுறதும் போடுறாங்க என்னோட அறுவை கட்டுரைகளை சில இதுல என் பெயரே போடுறதில்லை.. ஒரு கட்டுரையில என் பெயர் 'காமுகி' ஆகி விட்டது (??:-))கேட்காதவங்க குறைந்தது என் பெயரை போட்டாலாவது என் வயிற்றில் பாலாறும் தேனாறும் பாயுமல்லவா?

    அல்வாசிட்டி என்னைக்குமே ஓப்பன் சோர்ஸ் (Open source) தான்.

    ReplyDelete
  2. விஜய்
    ஏதோ ஒரு தலைவனானால் சரிதானே.
    இம்முறையும் உங்கள் தலைசுற்றி.. இடம் பிடித்துள்ளது.
    இப்போதான் பேப்பர் வந்தது. வாசித்து விட்டுச் சொல்கிறேன்.

    ReplyDelete