Tuesday, March 22, 2005

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...


காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு. அது போலத்தான் அவரவர்க்கு அவரவர் மொழி தேன் வந்து பாய்வது போல இருக்கும்.

சில வருடங்களுக்கு முன் - அப்போது நான் ஒரு சுப்பர்மார்க்கெட்டிலும் பகுதி நேர வேலை செய்து கொண்டிருந்தேன். - திடீரென தமிழ்க்குரல். எனக்குள் உண்மையிலேயே மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்ச்சி கலந்த இன்பம். தலைக்குள் சந்தோசக் கிறுகிறுப்பு. அப்படியே எனது வேலையை விட்டு விட்டு குரல் வந்த திசையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரு தமிழர்கள் படிகளால் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். திகைப்பும் சந்தோசமும். காரணம் அவர்கள் பேசியது எனது மொழி. பத்து வருடங்களாக யேர்மனியர்களுடன் மட்டுமே ஊடாடிக் கொண்டிருந்த எனது காதுக்கு திடீரென்று எனது மொழி கேட்ட போது அது இன்பத் தேனாகத்தான் இருந்தது.

இதையே நான் வேலையிடத்தில் இருந்து எனது வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசி விட்டு வைத்தால்.. எனது சகவேலையாட்கள் கட முடா.. கட முடா.. என்று சொல்லிச் சிரிப்பார்கள். அவர்களுக்கு எனது மொழி தேனாகப் பாயாது. கட முடா என்றுதான் கேட்கும். இதே போலத்தான் ஒவ்வொருவருக்கும்.

No comments:

Post a Comment