Monday, April 25, 2005
வடலி ஐந்தாவது அகவையில்
ஏப்ரல் மாத வடலி வழமை போலவே நிறைந்த கட்டுரைகளுடன் எனைத் தேடி வந்துள்ளது. சின்னச் சின்னதாக நிறையத் துணுக்குச் செய்திகளும் சிறிய கட்டுரைகளும் பெரிய கட்டுரைகளும் என்று அறிந்து கொள்வதற்கு
தாராளமாகக் கிடைத்தன.
ஆரப்பல்லி போல அணைந்து வாழ்ந்தேனோ
இதைப் புறநானூற்றில் பலரும் படித்திருப்பீர்கள். ஆனாலும் செ.சிறீஸ்கந்தராஜா அவர்கள் நல்ல விளக்கத்தோடு எழுதியுள்ளார். புறநானூறில் வந்த ஒரு பாடலை வைத்தே அவர் இவ்விளக்கத்தைத் தந்துள்ளார். இதில் என்னைக் கவர்ந்தது பல்லி பற்றிய விடயம். தாய் நாட்டுக்கான போரிலே மாண்ட ஒரு வீரனின் மனைவி பாடுவது போலத்தான் இப்பாடல் அமைந்துள்ளது.
கலம் செய் கோவே கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே
(புறநானூறு 256)
இன்பத்திலும் துன்பத்திலும் தன்னோடு கூட இருந்தவனை, இறக்கும் போது விட்டுப் போக மனமின்றி தானும் அவன் கூடவே சென்று விடத் துணிந்த. பெண் காட்டிய சில்லில் அகப்பட்ட பல்லியின் உதாரணம் நன்றாக உள்ளது.
வண்டில் சில்லிலே தொற்றிக் கொண்ட பல்லியின் கதி எப்படி இருக்கும்? எருதினால் இழுக்கப் படுகின்ற வண்டிலின் சில், ஒரு பயணத்தின் போது எத்தனை முறை சுற்றும் என்பதையோ, அது எந்தச் சேறிலும் சுரியிலும் உருளும் என்பதையோ, எத்தகைய பள்ளங்களிலும் மேடுகளிலும் ஏறி இறங்கும் என்பதையோ கணக்கிட முடியாது. இந்த நிலையில் சில்லோடு பொருந்திய குற்றத்திற்காய், பல்லி நலுங்கியும் குலுங்கியும் வதை படுமே தவிர தனக்குத் தங்க இடம் தந்த சில்லை விட்டு ஓடி விடாது சில்லிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.
ஒருவர் தாழ்ந்து போனதும் அவரை விட்டு மெதுமெதுவாக நழுவி விடும் எமது மனித சமூகத்தோடு பார்க்கும் போது இந்தப் பல்லி...... வியப்பாயிருக்கிறது.
இவனெல்லாம் ஏன் படமெடுக்க வருகிறான் என்றோ இவனுக்கேன் கவிதை என்றோ எம்மில் பலர் அலுத்துக் கொள்கிறோம். பாலுமகேந்திராவும் அலுத்திருக்கிறார். இந்தக் வரிகளை அவர் படிக்கும் வரை
அழகான குரலெடுத்து
குயில்கள் மட்டுந்தான்
பாட வேண்டுமென்றால்
இந்தக் கானகம்
நிசப்தமாகி விடும்.
(றீடெர்ஸ் டையஸ்ரில் இருந்து இயக்குனர் பாலுமகேந்திரா
ஓவியர் புகழேந்தியின் "சிதைந்த கூடு" ஓவியக் கண்காட்சித் தொடக்க விழாவில்)
இதைப் படித்த பின்தான் பாலுமகேந்திரா ஒன்றைப் புரிந்து கொண்டார். காடு என்பது எல்லாப் பறவைகளுக்குமானது. இதில்கள் குயில்கள் மட்டுந்தான் பாடவேண்டும் என்றோ கிளிகள் மட்டுந்தான் பேச வேண்டுமென்றோ எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. எல்லாப் பறவைகளும் பாடினால்தான் அது கானகம். எப்போதாவது எங்கேயாவது குயிலின் பாடலைக் கேட்டால் ரசிப்போம். தலைக்கனம் மிக்க கலைஞர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம்.
இருமலைச் சொக்களேட் கட்டுப் படுத்துகிறது.
ஆச்சரியமாக இல்லை! உங்களுக்கு எப்படியோ..? எனக்கு ஆச்சரியம்தான்.
தொடர்ச்சியான இருமல் என்றால் இருமலைக் கட்டுப் படுத்த சொக்கிளேட் சாப்பிடும் படி சொல்கிறார்களாம் லண்டன் இம்பிரீயல் கல்லூரி மருத்துவர்கள். இருமலால் பாதிக்கப் பட்ட பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து இவர்கள் பரிசோதனை செய்தார்களாம். உடனடியாகவே எட்டுப் பேருக்கு இருமல் நின்று போனதாம்.
வழமையாகப் பாவிக்கும் கோடினே என்ற பொது மருந்தை விட சொக்கிளேட்டுக்கு இந்த இருமலை நிற்பாட்டும் சக்தி அதிகமாக இருக்கிறதாம். சொக்களேட்டில் சேர்க்கப் படும் கொக்கோவில் உள்ள தியோ புரோமைன் என்ற பொருள்தான் இருமலைக் குணப்படுத்துகிறதாம். வழக்கமான இருமல் மருந்தை விட இரு மடங்கு நிவாரண சக்தி சொக்ளேட்டுக்கு இருக்கிறதாம். எதற்கும் பரீட்சித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
இன்னும் பல தகவல்கள் ஏப்ரல் மாத வடலியில்.
சந்திரவதனா
25.4.2005
No comments:
Post a Comment