Monday, May 23, 2005

ஒடியல் கூழ்


நா.கண்ணன் அவர்கள் ஒடியல் மாவை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார். அவருக்காக ஒரு பதிவு.

தேவையான பொருட்கள்.
ஒடியல் மா - 1 கப்
மிளகு தூள் - சிறிதளவு
செத்தல் மிளகாய் - 10
மஞ்சள் - சிறிதளவு
சின்னச்சீரகம் - சிறிதளவு
உள்ளி - ஒரு பெரிய பூடு
உப்பு - ருசிக்கேற்ப
புளி - ஒரு அளவான உருண்டை (மோதகத்தை விடச் சிறியது)

மரவள்ளிக்கிழங்கு
பலாக்கொட்டை
பயத்தங்காய்(அல்லது போஞ்சி)
பூசணிக்காய்

மீன்
இறால்
நண்டு
நெத்தலி

செய்முறை
ஒடியல் மாவை குறைந்தது பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற விடவும்.
புளியை இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊறவிடவும்.

இந்த இடைவெளியில் மரக்கறிகளை சிறிதாக வெட்டி, மீன் வகைகளைத் துப்பரவாக்கி எடுத்துக் கொள்ளவும்.

மிளகு, மஞ்சள், செத்தல், உள்ளி, சின்னச்சீரகம் அனைத்தையும் பசுந்தாக அரைத்தெடுக்கவும். பெரிய பாத்திரமொன்றில் தண்ணீர் விட்டு, அதனுள் இந்த அரைத்த சரக்குக் கலவையை இட்டுக் கொதிக்க விடவும். கொதித்து வர மரக்கறிகளையும், மீன் வகைகளையும் அதற்குள் போட்டு அவிய விடவும். மரக்கறிகள் அவிந்து கொண்டு வர, ஊற வைத்த புளியை நன்கு கரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றவும். புளியும் நன்கு கொதித்த பின் ஊற வைத்த ஒடியல் மாவின் மேலுள்ள தண்ணீரை வடித்து ஊற்றி விட்டு, அந்த மாவையும் கொதிக்கும் கலவைக்குள் போட்டுக் கிளறவும். கூழ் இறுக்கமாக இருந்தால் அளவான பதத்துக்கு வருவதற்கேற்ப கொஞ்சம் கொதிநீர் விட்டுத் துளாவவும்.

சுவையான ஒடியல் கூழ் தயாராகிவிடும்.

2 comments:

  1. மிக்க னன்றி சந்திரவதனா! புளி இல்லாவிட்டால் என்ன செய்வது? தக்காளி போட்டுக் கொள்ளலாமா? [இந்தக் கொரியக் கிழவிகள் என் புளியைக் கடாசிய சோகக் கதை இங்கே வேண்டாம் :-(

    ReplyDelete
  2. கண்ணன்

    ஒடியல்கூழுக்கு புளி முக்கியமானதொன்று. அதன் சுவைக்கு ஈடாக தக்காளிப்பழம் அமையாது.
    தேசிப்புளி கூட பழப்புளியின் புளிப்புச்சுவைக்கு ஈடாகாது.
    மற்றும் ஒடியல்மாவின் கசப்புத்தன்மையை எடுப்பதில் புளிக்கும் பங்கிருக்கிறது.
    கொடுக்காப்புளி என்ற ஒன்று இருக்கிறதே! அது கூட கொரியாவில் இல்லையா?
    தக்காளிப்பழத்தை விட அது பரவாயில்லையென நினைக்கிறேன்.

    கொரியக் கிழவிகள் புளியைக் கடாசிய (சோகக்)கதையையும் எழுதுங்கள். தெரிந்து கொள்ள ஆவலாயுள்ளேன்.

    ReplyDelete