Tuesday, March 07, 2006
பெண்களும் தற்கொலைகளும்
தற்கொலை, மனஅழுத்தம் இவைகளுக்கிடையில் நிறைந்த தொடர்புகள் இருப்பதால், வெளிநாடுகளில் தமிழர்களிடையே நடைபெறும் அனேகமான தற்கொலைகளுக்கு மனஅழுத்தம் என்ற ஒன்று காரணமாக்கப் பட்டு மற்றவைகள் எல்லாம் மறைக்கப் பட்டு விடுகின்றன.
தற்போது கனடாவில் நடந்த சம்பவம் பலரது மனதையும் உலுக்குவதாய் உள்ளது. ஒரு இளம்பெண் தனது இரு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் அமுக்கிக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.
குழந்தை பெற்றவுடன் சில தாய்மாருக்கு வரும் postpartum depression தான் அவரது அந்த முடிவுக்குக் காரணம் என அனேகமான எல்லோரும் நம்பி விட்டார்கள். உண்மை அதுவாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அந்தப் பெண் அப்படியொரு கொடுமையான முடிவை ஏன் எடுத்தார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றே. வீட்டில் என்ன பிரச்சனை நடந்ததோ? என்ன இம்சைப் பட்டாளோ? இதெல்லாம் postpartum depression க்குள் மறைக்கப் பட்டு விட்டன.
இது இந்த மரணத்தில் மட்டுந்தான் என்றில்லை. புலத்தில் நடக்கும் அனேகமான தற்கொலை மரணங்களுக்கு மிகச் சாதாரணமாக இப்படியான ஏதாவது காரணங்கள் கூறப்பட்டு, அதனால் வந்த மனஅழுத்தம் என்று நிரூபிக்கப் பட்டு உண்மை மறைக்கப் பட்டு விடுகிறது.
இங்கு ஜேர்மனியில் சில வருடங்களுக்கு முன் ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் இரண்டாவது மாடியின் ஜன்னலில் துணியைக் கட்டித் தொங்கி தற்கொலை செய்து கொண்டாள். தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதைத் தாங்க மாட்டாமலே அவள் அதைச் செய்தாள். ஆற்றாமையில் பல தடவைகள் அந்த வீட்டில் கீழே இருந்த தமிழ்க் குடும்பத்திடம் கணவனின் செய்கை பற்றிக் கூறி அழுதிருக்கிறாள். அவர்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவளது தாய் தந்தையர் சகோதரரும் ஊரில். தாங்க முடியாத ஒரு பொழுதில் அந்த முடிவை எடுத்து விட்டாள்.
அதன் பின் அந்தக் கணவன் தேவதாஸ் வேடம் போட்டுக் கொண்டு எல்லோருக்கும் சொன்னது "அவ பாருங்கோ சரியான நல்லவ. ஆனால் வெளிநாடுகளிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்..... "
எல்லோரும் நம்பி விட்டார்கள்.
சந்திரவதனா
7.3.2006
இன்னும் சிலர் மனைவிக்கு பைத்தியமாக இருந்தது, நான் எவ்வளவோ பொறுமையாய் இருந்தேன், மருத்துவத்தீற்கு தண்ணீராக செலவு செய்தேன் என்ற தியாக பட்டமும் போட்டுக்கொள்வது இன்னமும் கொடுமை.
ReplyDeleteஉண்மைதான் பத்மா. நானும் இப்படியாவர்களையும் சந்தித்திருக்கிறேன்.
ReplyDelete