Tuesday, March 14, 2006
ஆண்கள்...?
வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீடு திரும்புகையில் வீதியில் பனி உறைந்திருந்தது. பாதை வழுக்கியது. காரை ஓட்டும் போது சற்றுப் பயமாக இருந்தது. பக்கத்திலிருந்த ஜேர்மனிய நண்பியிடம் "கனநாள் காரை ஓட்டவில்லை. இன்றைக்கு இந்த வழுக்கலில், அதுவும் இந்த இரவின் இருளில், எதிர் வரும் வாகனங்களின் ஒளிபாய்ச்சல்களுக்கு ஈடு கொடுத்து ஓட்டப் பயமாயிருக்கிறது" என்றேன்.
அவள் "உனக்கென்ன பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். அவர்களை கூட்டிக்கொண்டு போகவும், வரவும் என்று அடிக்கடி இரவில் வாகனத்தை ஓட்ட வேண்டிய தேவை வராது. நானோ தினமும் ஓட்டுகிறேன்." என்றாள்.
"ம்.. தொடங்கி விட்டாயா நீயும்! எனது பிள்ளைகள் என்ன இந்த வயதுக்குப் பாய்ந்து வந்தார்களா? அவர்களும் உனது பிள்ளைகளின் வயதுகளையும் கடந்துதானே வந்தார்கள். அந்த நேரத்தில் நானும் உன்னைப் போலத்தான் இரவு, பகல் என்று பாராது விளையாட்டு, பாடசாலை, சங்கீதவகுப்பு... என்று அவர்களோடு அலைந்தேன். சரி அதை விடு. பிள்ளைகள் வளர்ந்து விட்டால் எமக்கென ஒரு தேவையும் இல்லையா? இரவில் போக வேண்டிய தேவைகள் எனக்கும் வந்ததுதான். ஆனால் எனது கணவரும் கூடவே வந்ததால் அவரையே ஓட விட்டேன்." என்றேன்.
அவள் சிரித்து விட்டு "நானும் அப்படித்தான். எனது கணவன் என்னோடு கூட வந்தால் அவனையே ஓட விட்டு விடுவேன். இங்கை பார்... அவனோடு கார் ஓட்ட முடியாது. பக்கத்தில் இருந்து கொண்டு ஸ்ரியரிங்கைத் திருப்பு, ஹியரைப் போடு.. மெதுவா ஓடு, வேகமா ஓடு.. என்று பிய்ச்சு வாங்கிப் போடுவான். அதுதான் அவன் கூட வந்தான் என்றால், அவனையே ஓட விட்டிடுவேன். என்னால் அவன் தரும் அந்தத் தலையிடியைத் தாங்க முடியாது" என்றாள்.
"ம்.. எலிசபெத்துக்கு(எங்களோடு வேலை செய்பவள்) நடந்தது தெரியுந்தானே. அவள் லைசென்ஸ்சை எடுத்திட்டு புருசனோடை ஓடிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறாள். அவன் கொடுத்த கரைச்சலாலை கார் ஓடறதையே விட்டிட்டாளாம். இப்ப இருபது வருசமாச்சாம். லைசென்ஸ் சும்மா இருக்குதாம். இந்தப் பிரச்சனை உனது கணவனால் உனக்கும், எனது கணவனால் எனக்கும் மட்டுமென்றில்லை. இது ஆண்களோடு கூடப் பிறந்தகுணம்(instinct) என்றேன். அவள் சிரித்துக் கொண்டே அவள் வீடு வர இறங்கிப் போய் விட்டாள்.
அடுத்தநாள் சனிக்கிழமை நானும் எனது கணவரும் கடைக்கு போக ஆயத்தமானோம். வழமைக்கு மாறாக எனது கணவர் "நீயே இண்டைக்கு டிரைவிங்கைச் செய்." என்றார்.
சரி என்று நான் தொடங்கினேன். பனிமழை தூறிக் கொண்டிருந்தது.
இடைவிட்டு வேலை செய்யும் விதமாக வைப்பரைப் போட்டேன். இரண்டு நிமிடங்கள் கூடப் போயிராது. கணவர் சொன்னார் "வைப்பரை நிற்பாட்டு. சிலோவா ஓடு...." எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. நேற்று கோர்ணியுடன் நடந்த சம்பாஷணையைச் சொன்னேன். எனது கணவருக்கு வந்ததே கோபம்.
"இந்த மூக்குநுனிக் கோபம் கூட ஆண்களோடு கூடப்பிறந்த குணமோ?" என்று கேட்பது அந்த நேரத்தில் புத்திசாலித்தனமான கேள்வியாகப் படவில்லை. அதனால் அவர் பொரிந்து தள்ள முன்னம், ஸ்ரியரிங்கோடு சேர்த்துக் கதையையும் வேறு பக்கத்துக்குத் திருப்பினேன்.
சந்திரவதனா
14.3.2006
உண்மையாகவா சந்திரவதனா.....சமையல்கூடத்தில் ஆண்கள் செயலாற்றினால் பெண்கள்...இதைப் போடுங்கள்..அப்படிக் கிண்டுங்கள் என்றும் சொல்வார்கள். அதுவும் உண்டு. இதுவும் உண்டு. இதில் பிரச்சனை என்னவென்றால்...விஷயம் தெரிந்தவர்களால் கையை வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. அதுதான் பிரச்சனையே. கார் ஓட்டத் தெரியாதவர் கூட வந்தால் வாயை மூடிக் கொண்டு சும்மா வருவார். :-)
ReplyDeleteஅட நீங்கள் கதையையே மாற்றி சொல்கிறீர்கள் போல். நான் காரை ஓட்டும் போது என்னுடைய அம்மாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஓட்டுவதில்லை. காரணம் அவரும் பாத்து பாத்து மெல்லமா ஓடு , அந்த வளைவில பாத்து வெட்டு , பின்னுக்கு வருகிற கார் ரொம்ப நெருக்கமாக வருகிறது அதனால் திடிரென பிரேக் போடாதே என்று ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்.
ReplyDelete:-) :-)
ReplyDeleteஇதில் ஆண் பெண் வித்தியாசமே இல்லை. வண்டி ஓட்டத்தெரிந்தவர்களை வைத்துக்கொண்டு ஓட்டுவது எப்பவுமே இந்த மாதிரி 'யோசனைகளில்' தான் போய் முடியும்.
ReplyDeleteபெண்களிடமும், அவர்களுக்குத் தெரிந்த விஷயத்தில் (உ.தா. சமையல்?) ஆண்கள் யோசனை சொன்னால், கோபம் வராதா? வராத பெண் என்றால், அப்பெண்ணுக்கு பாராட்டுக்கள்.
நீங்க வேற.. உங்க கணவருக்காவது டிரைவிங் தெரியும். ஆகவே இப்படி செய், அப்படி செய் என்கிறார்.
ReplyDeleteஎன் மனைவி கீயர் எது, பிரேக் எது என்று கூட தெரியாது. ஆனாலும் முன் சீட்டில் அமர்ந்துக்கொண்டு.. என்ன நீங்க அந்த வண்டியில முட்டுறா மாதிரி போறீங்க? பத்தடிக்கு முன்னாலயே ப்ரேக் போட வேணாம், சிக்னல் போட்டா போறுமா, கையை காட்டிடுட்டு திரும்புங்க.. இன்னும் நிறையவே இருக்கு..
இதில் ஆணென்ன பெண்ணென்ன?
வண்டி ஓட்டத்தெரிந்தவர்களை வைத்துக்கொண்டு ஓட்டுவது எப்பவுமே இந்த மாதிரி 'யோசனைகளில்' தான் போய் முடியும்.//
துபாய்வாசி சொல்றது பாருங்க..
ஒட்டத்தெரிந்தவர்கள் ஏன்.. தெரியாதவர்களும் இப்படித்தான் என்பதற்கு என் மனைவி ஒரு உதாரணம்..