Saturday, June 18, 2016

எது வெட்கம்?

வெட்கம் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். எது வெட்கம் என்பதோ அல்லது எதற்காக வெட்கப்பட வேண்டும் என்பதோ கேள்வியாக இருக்கலாம். அல்லது வேறு விதமாகவும் இருக்கலாம்.

நான் நான் நேற்றுக் காலை ஐபிசி வானொலியைக் கேட்கத் தொடங்கிய போது நிகழ்ச்சி தொடங்கிச் சிறிது நேரமாகியிருந்தது. அதனால் தலைப்பு எது என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லை.

எது எது எல்லாம் தமக்கு வெட்கமான விடயங்கள் என பல நேயர்கள் ஆமோதிக்கத் தகுந்த பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கோகுலன் நேயர்களின் தேவையில்லாத கதைகளை லாவகமாக வெட்டி, கருத்துக்களைச் செவிமடுத்து, பதிலளித்து நேர்த்தியாக நிகழ்ச்சியை நடாத்திக் கொண்டிருந்தார்.

கடைசியாக ஒரு நேயர் வந்தார். அவரது கருத்துத்தான் இதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்தது.

அந்த நேயர் சொன்னார்
"திருமணமான பெண்கள், தாம் திருமணமானவர்கள் என்பதைக் காட்டக் கூடிய விதமாக உடைகளை அணிந்து குங்குமப் பொட்டு வைத்து வரவேண்டும். ஊரில் எல்லாம் நெற்றியில் உச்சியில் என்று குங்குமம் வைத்திருப்பார்கள் அப்படி வராததால் தான் இங்கு கனக்கப் பிரச்சனைகள் நடக்கின்றன..…" என்ற கருத்துப்பட.

அப்படிச் சொல்லிய அந்த நேயர், தான் திருமணமானவர் என்று காட்டக் கூடிய வகையில் என்ன அணிந்திருப்பார் என நான் யோசித்துக் கொண்டு சமைத்துக் கொண்டிருக்கும் போது அடுத்த கருத்தைச் சொன்னார்.

"ஒவ்வொரு இடத்துக்கு என்று ஒவ்வொரு உடை இருக்கிறது. பெண்கள் கோயிலுக்கு வரும் போது ஏதோ .... போல தலையை விரித்துக் கொண்டு வருகிறார்கள்............... நேற்றும் கோவிலில் எனக்கு முன்னால் நின்ற பெண் ஈரம் சொட்டச் சொட்ட நின்றா. எனது ஜீன்ஸ் நனைந்து விட்டது" என்றார்.

(ஜீன்ஸ் அணிந்து கோவிலுக்குச் சென்ற அந்த நேயர் கதைத்ததின் சாராம்சம் மட்டுமே இது)

No comments:

Post a Comment