Monday, October 17, 2016

குட்டைப் பாவாடைப் பெண்

ஒரு நியதி போல நாம் ஒரு சிலரை அடிக்கடி எதேச்சையாகச் சந்தித்துக் கொள்வோம். அப்படித்தான் இவளையும்.

அனேகமான ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் நானும், கணவருமாக சுப்பர்மார்க்கெட்டுக்குப் போவோம். அங்கிருக்கும் 12 கவுண்டர்களில் ஏதாவதொன்றில் அவள் இருப்பாள். அதில் இல்லாத பொழுதுகளில் சுப்பர்மார்க்கெட் தகவல்நடுவத்திலோ, பேக்கரியிலோ, இன்னும் எங்காவது ஓரிடத்திலோ தென்படுவாள். ஒரு சிரிப்புடனோ, கையசைப்புடனோ அல்லது ஒரு ´ஹலோ` வுடனோ கடந்து கொள்வோம்.

இன்று அவள் நாங்கள் போன கவுண்டரிலேயே இருந்தாள். முகத்துக்கு நன்றாக அரிதாரம் பூசி, புருவங்களை வில்லாக வளைத்துக் கீறி, உதட்டுக்குச் செக்கச்செவேலெனச் சாயம் பூசி... பளிச்சென்று சிரித்தாள். கார்ட்டை இயந்திரத்தினுள் போட்டு வேண்டிய பொருட்களுக்கான கணக்கைச் சரிசெய்த கையோடு, கார்ட்டை இழுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு பின் நிற்கும் வரிசையைக் கூடப் பொருட்படுத்தாது நாலு வார்த்தை பேசிச் சிரித்தாள்.

இவளைப் பற்றி இற்றைக்குப் பத்து வருடங்களின் முன் நான் எழுதிய ஒரு பதிவு


பலத்த காற்றும், சிணுங்கும் மழையும், மரங்கள் சொரிந்த இலைகளை தெரு முழுவதும் இழுத்துக் கொண்டு திரிந்த அந்தக் குளிர்ந்த இரவில் அவள் அந்தத் தரிப்பிடத்தில் காத்திருந்தாள். பேருந்து நிற்க முன்னரே குட்டைப் பாவாடையுடன் பளிச்சென்று தெரிந்த அவளைக் கண்டு சில கண்கள் அகல விரிந்தன. பேருந்தினுள் அவள் ஏறியதும் ஒட்டு மொத்தப் பேரூந்துப் பயணிகளின் பார்வைகளும் அவள் பக்கம் ஒருதரம் திரும்பின. அவள் என்னைத் தாண்டும் போது "ஹலோ" என்ற படி அழகாகச் சிரித்துக் கொண்டாள். தாண்டிய பின்னும் தாண்டாமல் நின்ற, அவள் விட்டுச் சென்ற கமகமக்கும் உயர்தர வாசனைத் திரவியம் என்னுள் ஒருவித சந்தோச உணர்வைத் தோற்றுவித்தது.

சந்திரவதனா
15.10.2016

No comments:

Post a Comment