Tuesday, January 03, 2017

ஒரே நேரத்தில் ஐந்தாறு நூல்கள்

ஒரே நேரத்தில் ஐந்தாறு நூல்களைப் படிப்பது நல்லதோ கெட்டதோ தெரியவில்லை. என் வரையில் அது எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போதுதான் செல்வம் அருளானந்தத்தின் `எழுதித் தீராப் பக்கங்கள்´ வாசித்து முடித்தேன். எழுதித் தீராப் பக்கங்கள் சில வாரங்களாக நான் போகுமிடமெல்லாம் என்னோடு பயணித்தது. சிரிக்காமல் அந்தப் புத்தகத்தைக் கடக்கவே முடியாது. ஒரு தரம் மருத்துவரிடம் காத்திருந்த போது 98ம் பக்கத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். 


///அவன் எங்களை மேலும் கீழும் வினோதமாய்ச் செவ்வாய்க்கிரக உயிரினங்களைப் பார்ப்பதைப் போல் பார்த்து விட்டு „நீங்கள் வேறுநாட்டிலை இருந்து வந்த ரூறிஸ்டோ?“ எனக் கேட்டான். 

 
„இல்லை கொஞ்ச நாளைக்கு முதல் வந்த இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள்“
இப்போ எங்களை நாறல் மீனைப் பூனை பார்ப்பது போலப் பார்த்தான்.///


கேட்டதும் ஒரு இலங்கைத் தமிழன்தான். என்னையறியாமல் `களுக்´ கென்று சிரித்து விட்டேன். அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவர்கள், புத்தகங்கள் கொண்டு வந்து வாசித்துக் கொண்டிருந்தவர்கள், அங்குள்ள பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தவர்கள் என்று எல்லோரும் சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்தார்கள். அசடு வழிய வேண்டியதாயிற்று.


சற்று நேரங்கழித்து ஒரு பெரியவர் கேட்டார். „ஏதாவது Comedy வாசிக்கிறியோ?“ என்று. „இல்லை, ஒரு பெரும் அவலத்தை ஒருவன் இப்படிச் சிரிக்கும் படியாக எழுதியுள்ளான்“ என்றேன். „அப்படியென்ன எழுதியிருக்கிறான்?“ என்று மீண்டும் கேட்டார். „இது தனியொருவன் கதையல்ல. சொந்த நாட்டை விட்டு இங்கு வந்து நாய் படாப் பாடுபட்ட ஆரம்ப கால இலங்கைத் தமிழரின் கதை“ என்றேன். „ஜெர்மனிய மொழியில் கிடைக்குமா?“ எனக் கேட்டார்.


*************


எழுதித் தீராப் பக்கங்களை வாசித்து முடித்து விட்டேன்தானே என்று தள்ளி வைக்க முடியவில்லை. மீண்டும் ஒருதரம் வாசித்தால் என்ன என்று தோன்றுகிறது. அதனால் அதை வாசிக்க வேண்டிய புத்தகங்களோடு வைத்து விட்டு குணா கவியழகனின் ´அப்பால் ஒரு நிலம்` நூலைத் தொடர்கிறேன். அதோடு முடியும் தறுவாயில் இருக்கும் தமிழினியின் `ஒரு கூர்வாளின் நிழலில்´ மைக்கேல் பரிந்துரைத்த குமார் மூர்த்தியின் `முகம் தேடும் மனிதன்´ (மின்னூல்), Sim Hanifa அறிமுகம் செய்த (ஏற்கெனவே 2004 இல் பத்மாநாபஐயர் அறிமுகம் செய்திருந்தும் நான் கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட) கவிதாவின் `யுகங்கள் கணக்கல்ல´ (மின்னூல்) என்று எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
இவைகளோடு மைக்கேல் பரிந்துரைத்த Im Western nichts Neues (அகதி, All quiet on the Western Front, by Erich Maria Remarque) ஐயும் ஒலிப்புத்தகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


இன்னும் உமையாழ் குறிப்பிட்ட கண்டிவீரன், பொன் குலேந்திரனின் அறிவியற்கதை, நேற்று மின்னஞ்சலில் வந்த சொல்வனம் 161, வானவில் போன்றவற்றிலும் சிலதைத் தேர்ந்தெடுத்து வாசித்தேன். 


கற்றுத் தந்த ஆசிரியர்களைப் போல நல்ல நூல்களை அறிமுகப்படுத்தும் நண்பர்களையும் நான் மதிக்கிறேன். நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.


சந்திரவதனா
17.11.2016

No comments:

Post a Comment