Tuesday, January 03, 2017

எழுதித் தீராப் பக்கங்கள்


மனம் விட்டுச் சிரிப்பதனால் மனமும் உடலும் மிகவும் இலேசாகின்றன. மனிதன் மிகவும் உற்சாகமடைகின்றான். இன்றைய இறுக்கமான உலகில் நாம் எத்தனை தடவைகள் அப்படி மனம் விட்டுச் சிரிக்கிறோம்?

எங்காவது யாராவது சிரித்துக் கொண்டாடும் போது கூட, சிலர் கேட்பார்கள் „இருக்கிற பிரச்சனைக்குள்ளை இந்தக் கூத்தும் கும்மாளமும் அவசியமோ?“ என்று. அவர்களெல்லோரும் என்ன நினைக்கிறார்கள், மனிதர்கள் துன்பங்களையே நினைந்து நினைந்து அழுது புலம்பிக் கொண்டிருக்க வேண்டுமென்றா? இன்பங்களை விடத் துன்பங்களே அதிகமாகத் துரத்தியடித்த எங்கள் வாழ்வில் மனதை இலேசாக்கும் நகைச்சுவைகளும், சிரிப்புகளும் அவசியமானவையே.


இந்த நிலையில் செல்வம் அருளானந்தத்தின் „எழுதித் தீராப் பக்கங்கள்“ குறிப்படத்தக்கதொரு நூலாக, வரப்பிரசாதமாக எமக்குக் கிடைத்துள்ளது. இதை வாசிப்பவர்கள் தொடர் நெடுகிலும் மனம்விட்டுச் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எந்தக் கஷ்டத்தையும், அழுது வடிக்காமல் நகைச்சுவையுடன் சொல்லி விடும் பாங்கு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அது செல்வம் அருளானந்தத்துக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது.


இந்த நூலின் சிறப்பு என்னவென்றால் வெறுமே புனையப்பட்டதாகவோ அன்றில் வேண்டுமென்றே வலிந்தெழுதப் பட்டதாகவோ இல்லாமல் தன்பாட்டில் அது ஒரு பெரும் கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டு செல்கிறது. ஆனாலும் அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது. அல்லல்களையும், அவதிகளையும் கூட இத்தனை சுவாரஸ்யமாக வயிறுகுலுங்கச் சிரிக்கும் படியாக எழுதி விடலாம் என்பதை செல்வம் அருளானந்தம் நிரூபித்துள்ளார்.


2016 இல் வெளிவந்த ஈழத்துப்படைப்பாளிகளின் நூல்களில் ஒரு குறிப்பிடத்தக்க நூலாகவும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் ஆரம்பகால வாழ்க்கையையும், அவர்கள் அநுபவித்த அல்லல்களையும் மிக யதார்த்தமாகவும், நகைச்சுவை ததும்பவும் கூறிய நூல்களில் மிகமுக்கியமானதொரு பதிவாகவும், தொகுப்பாகவும் `எழுதித் தீராப் பக்கங்கள்` பரிணமிக்கிறது.
பெல்ஜியத்தினூடு பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து அங்கிருந்து கனடாவுக்கு இடம்பெயரும் வரையான காலத்தின் பதிவுகளை ஊர் நினைவுகளும் கலந்து எள்ளலும், நொள்ளலுமாய் செல்வம் அருளானந்தம் சொல்லும் விதம் அருமை. ஒன்றொன்றாய் அடுக்கி, அடுக்கி மிக நேர்த்தியாகப் பல விடயங்களைக் கோர்த்து விடுகிறார். 240 பக்கங்களைக் கொண்ட இந்நூலை ஒரு சாதாரண நினைவுக்குறிப்பு என்று சொல்லி விட்டு நகர்ந்து விட முடியாது. இது கலாச்சாரம், பண்பாடு, மொழி, காலநிலை... என்று எல்லாமே மாறுபட்ட ஒரு நாட்டுக்குள் அகதியாக நுழைந்து எந்தவித முன்னனுபவமுமின்றி வாழ்வைத் தொடங்கிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றியதொரு ஆவணப்பதிவு.


நீண்டு கொண்டிருக்கும் புலப்பெயர்வில் ஒவ்வொரு காலத்துக்குமான புலம்பெயர்ந்தோரின் வெளிநாட்டு அனுபவங்கள் மாற்றம் கண்டு கொண்டே போகின்றன. இன்று புலம்பெயர்பவர்களுக்கு ஆரம்பகாலப் புலம்பெயர்ந்தோரின் அவலங்களோ, அவர்கள் பட்டபாடுகளோ தெரியாது. அது ஒரு பதிவாகியது மிகமிக வரவேற்கத் தக்கது.
ஊர், உறவுகள், அம்மா, அப்பா, சுற்றம் என்ற கட்டுக்கோப்புக்குள் வாழ்ந்து விட்டு திடீரென்று இந்த ஒருவரது கட்டுப்பாடும் இல்லாத ஒரு இடத்தில் கட்டுடைத்து மதுப்போத்தல்களுடன் ஆராவாரித்ததையும், ஆடிப்பாடியதையும், மங்கையரைக் கண்டு மனம் பேதலித்தையும் கூட செல்வம் அருளானந்தம் பதியத் தவறவில்லை.


இதில் அவர் தன்னை ஒரு ஹீரோவாகவோ, தீரனாகவோ பதியவில்லை. தானும் ஒரு சாதாரண எல்லோரையும் போன்றவன் என்பதாகவே பதிந்துள்ளார். அதுவே இந்த நினைவுப்பகிர்வுக்கு பெரும் பலமாக அமைந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.
கதை நெடுகிலும் சொரிந்து கிடக்கிறது சிரிப்பு. ஆழ்ந்து நோக்கின் சிரிப்பினுள்ளே உறைந்து கிடக்கிறது துயர்.


செயின் ஆற்றை விட்டுச் செல்வம் அருளானந்தம் கனடா நோக்கிப் பறக்கும் போது மனம் கனத்துப் போகின்றது.


சந்திரவதனா
21.11.2016


(எழுதித் தீராப் பக்கங்கள் பற்றி சிறியதாகவும், பெரியதாகவும் என்று 3 தடவைகள் எழுதி விட்டேன். அத்தனை தூரம் எனக்கு இந்தப் புத்தகம் பிடித்திருக்கிறது. நகைச்சுவைகளை நான் எப்போதும் ரசிப்பேன். அழுகுணிப் படங்களை விட சிரிக்க வைக்கும் படங்களையே நான் பெரிதும் விரும்புவேன். அழுவதற்காக, மனம்வருந்துவதற்காக என் பொழுதைச் செலவழிப்பதை விட சிரித்து மகிழப் பொழுது கிடைத்தால் அது பெரும் வரமல்லவோ. அப்படியொரு வரமாக எனக்கு எழுதித் தீராப் பக்கங்கள் கிடைத்தது.)

No comments:

Post a Comment