ஒரு கோடை விடுமுறைக்கு எனது பேத்திகள் பிரித்தானியாவில் இருந்து வந்திருந்தார்கள்.
அன்று நாங்கள் ஒரு சுற்றுலாவை மேற்கொண்டிருந்தோம். எங்களுடன் இன்னும் சில உறவினர்களும் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.
அன்றும் வழமை போல இடையில் இறங்கி கார்களுக்கு பெற்றோல் அடிக்க வேண்டிய தேவையிருந்தது. அதையும் விடப் பெரியதேவை Toilet. இது ஆண்களை விட பெண்களுக்கு அடிக்கடி தேவைப்படும் மிக அவசியமானதொன்று.
ஆரம்ப காலங்களில் நான் இப்படி எங்கு போனாலும் Toilet தேடுவதால் எனது கணவரின் முகச்சுளிப்புக்கு ஆளாகியிருக்கிறேன். „வெளிக்கிடும் போது வீட்டில் ஒரு தடவை போய் விட்டு வந்திருக்கலாம்தானே“ என்பார். அல்லது „தண்ணீரைக் குறைவாகக் குடித்து விட்டு வந்திருக்கலாம்“ என்பார். தொடர்ந்த காலங்களில் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வரும் அத்தனை பெண்களும் என்னை விட அதிகமாக Toilet தேடியதால் இப்போதெல்லாம் கணவர் எங்கு போனாலும் தானாகவே „அந்தா Toilet இருக்கிறது. போவதானால் போய் விட்டு வா“ என்பார்.
ஜெர்மனியில் அது ஒரு பெரும் வசதி. எங்கு போனாலும் கண்டிப்பாக ஒரு மலசலகூடம் இருக்கும். மலசலகூடங்கள் இல்லாத அறைகளோ, விளையாட்டு மைதானங்களோ, பூங்காக்களோ... எதுவுமே… ஜெர்மனியில் இல்லையென்றே சொல்லலாம். அது விடயத்தில் அவ்வளவு அக்கறையுடன் ஜெர்மனி செயற்படுகிறது.
ஆனாலும் என்ன! ஒரு பிரச்சனை. அதிவேக வீதிகளில் உள்ள பெற்றோல் நிலையங்களிலும், புகையிரதநிலையங்களிலும், இன்னும் சில பொது வெளிகளிலும் உள்ள மலசலகூடங்களின் உள்ளே செல்வதற்கு 50சதம், 80சதம், ஒரு யூரோ என்று அறவிடுவார்கள். அந்தக் காசைப் போட்டால்தான் உள்ளே போவதற்கான கதவு அல்லது தடுப்பு திறக்கும். அவர்கள் அப்படி அறவிடுவதற்கும் ஒரு காரணம். உண்டு. அந்தக் காசை அந்த மலசலகூடங்களைத் துப்பரவாக வைத்திருப்பதற்குப் பயன்படுத்துவார்கள்.
அன்று நாங்கள் போன இடத்தில் 80சதம் போட வேண்டும். நாங்கள் எல்லோரும் தாள்காசுகளைக் கொடுத்து, சில்லறைகளாக மாற்றி, நீண்ட வரிசையில் காத்து நின்று காசைப் போட்டு, உள்ளே போய்க் கொண்டிருந்தோம்.
எனது பேத்தி சிந்துவின் முறை வந்தது. அப்போது அவளுக்கு 12 வய தாக இருந்தது. அவளுக்குக் காசை மெசினுக்குள் போட மனம் வரவில்லை.
அங்கு பொறுப்பாக நின்ற பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்
„கட்டாயம் காசு போட வேண்டுமா ?“ என்று
அந்தப் பெண் சொன்னாள்
„போட்டால்தான் நீ உள்ளே போகலாம்“ என்று
சிந்து விடவில்லை.
„நான் பிரித்தானியாவில் இருந்து எனது விடுமுறையை அனுபவிக்க உங்கள் ஜெர்மனிக்கு வந்திருக்கிறேன். என்ன..! உங்கள் நாட்டில் Toilet க்குப் போவதற்கும் காசு வசூலிப்பீர்களோ?“ என்று கேட்டாள்.
அந்தப்பெண்ணுக்கு மிகுந்த சங்கடமாகி விட்டது.
உடனே தனது திறப்பால் சலூன் கதவு போல இருந்த அந்த ஆடும் சிறிய கதவை திறந்து „நீ காசு தரவேண்டாம். போ“ என்று விட்டு விட்டாள். சிந்து திரும்பி வரும் போது 'உனது விடுமுறையை மிகுந்த சந்தோசமாக அனுபவி" என்று மலர்ந்த முகத்துடன் வாழ்த்தியும் அனுப்பி விட்டாள்.
இதுதான் „வாய் இருந்தால் வங்காளம் போகலாம்“ என்பதோ?
சந்திரவதனா
20.06.2017
No comments:
Post a Comment