மனநிலை சரியில்லாதிருந்தது. வேலையில் இருந்து விரைவாக வீட்டுக்குப் போய் விட வேண்டும் போல ஒரு அந்தரம் இருந்தது.
"என்ன, இண்டைக்கு ஆழ்ந்த அமைதியில் இருக்கிறாய்? பேச்சையே காணோமே...” என்று எனது வேலைத்தோழிகள் ஒவ்வொருவராகக் கேட்டு வைத்தார்கள். "தலையிடிக்குது" என்று பொய் சொல்லி விட்டு வேலையைச் செய்து கொண்டிருந்தேன். என்னதான் அவசரமாக இருந்தாலும், வேலை முடிந்து விட்டது என்றாலும், சரியான காரணம் காட்டி பிரத்தியேக அனுமதி எடுக்காத பட்சத்தில் குறிப்பிட்ட நேரம் வரை அங்கு இருந்துதான் ஆக வேண்டும். கடனே என்று இருந்து முடித்தேன்.
அடுத்து, பகுதி நேர வேலை. அதை நான் எவ்வளவு வேகமாகச் செய்கிறேனோ, அந்தளவு கெதியில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்.
விரைவாக வேலையை முடித்து விரைவாக வீட்டுக்கு ஓடி விட வேண்டுமென்ற எண்ணத்தில் மிகவும் அவசரமாகச் செய்து கொண்டிருந்தேன். இடையிடையே மேலதிக வேலைகள் வந்து சேர்ந்ததால் வேலைகளை முடித்து நேரத்தைப் பார்த்த போது நேரம் 8.39ஆகி இருந்தது. 8.40க்குப் பேரூந்து. இனி ஓடினாலும் பேரூந்தைப் பிடிக்க முடியாது என்பதில் மனம் சோர்ந்து விட்டது. இத்தனை அவசரமும், வேகமும் காட்டியும் நினைத்ததைச் சாதிக்க முடியாது போய் விட்டதே, என்பதில் கவலையாகி விட்டது.
இரவு நேரம் என்பதால் அடுத்த பேரூந்து 40நிமிடங்கள் கழித்து 9.20க்குத்தான் வரும். வழமையில் 30நிமிடங்கள் நடந்தாவது வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடுவேன். இன்றைய மனநிலையில் நடப்பதற்கான எந்தவித ஆர்வமும் இருக்கவில்லை. அத்தோடு கோடைகாலத்துக்கு ஒவ்வாத குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. இன்னொரு பிரச்சனை, நான் வழமையாகச் செல்லும் பாதையில் "இந்தப் பாதையில் உள்ள மரங்களில் மயிர்க்கொட்டி இருக்கிறது. அதன் மயிர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவை உங்கள் உடலிலும், தோலிலும் பாரதூரமான அலர்ஜியை உண்டு பண்ணும். இதை மீறி நீங்கள் இந்தப் பாதையால் சென்று உங்களுக்கு ஏதாவது ஆகினால் அது உங்கள் பொறுப்பே" என்ற வார்த்தைகளுடன் பெரிய பதாதை கொழுவியிருந்தது.
அனேகமான பொழுதுகளில் இந்த நேரத்தில் எனது வேலையிடத்தில் இருக்கும் Treadmiller இல் அரைமணி நேரம் ஓடுவேன். இன்று அதற்கான மனநிலையும் துளியும் இருக்கவில்லை.
சோர்ந்த மனதுடன் வெளிக்கிட்டுப் படிகளில் இறங்கிய போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தேன். என்னைப் போலவே லிப்றைப் பாவிக்காமல் அவள் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். முதலே அவளை அந்த அலுவலகத்தின் வேறொரு பகுதியில் நான் கண்டேன்தான். ஆனாலும் அவள் அவ்வளவாக என் கவனத்தைக் கவரவில்லை.
இப்போது என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போனாள். அவளை விட வேகமாக நான் நடந்ததில் அவளருகில் போன போது மெலிதாகச் சிரித்தாள்.
ஏதாவது கதைக்க வேண்டுமென்று தோன்றியது. "ஹலோ" என்றேன்.
அவளும் "ஹலோ" என்றாள்.
சேர்ந்து நடந்து கொண்டிருந்தோம். சும்மா கதைத்தோம்.
வேளைக்குப் போகவேண்டும் என்ற முனைப்போடு அவசரமாக வேலை செய்தும் எனது பேரூந்தை விட்டு விட்டேன் என்ற ஆதங்கத்தை அவளிடம் சொன்னேன்.
"ஓ.." என்று எனக்காகக் கவலைப் பட்டாள்.
"எங்கே இருக்கிறாய்?" என்றாள்
இடத்தைச் சொன்னதும் நான் உனது வீட்டைத் தாண்டித்தான் போக வேண்டும் என்று சொல்லி தனது இடத்தைச் சொன்னாள். தன்னோடு என்னை வரும்படி இன்முகத்துடன் அழைத்தாள்.
காரினுள் ஏறும் போதுதான், "உனது முகம் என்னுள் எதையோ ஞாபகப் படுத்துகிறது. நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்?" என்றாள்.
"சிறீலங்கா" என்றேன்.
"அப்ப உனக்கு திலீ யைத் தெரியுமா?" என்றாள்.
எனது மகன் திலீபனைத்தான் கேட்கிறாள் என்பது புரிந்தது.
"ம், எனது மகன்தான் என்றேன்."
மிகுந்த சந்தோசமாகி விட்டாள்.
கிட்டத்தட்ட 10வருடங்களின் முன், தான் எனது மகனின் 12ம், 13ம் வகுப்பு பிரெஞ் பாஷைக்குரிய ஆசிரியராக இருந்ததிலிருந்து தொடங்கி எனது மகனின் கெட்டித்தனம் பற்றி.. நட்புடன் பழகும் தன்மை பற்றி என்று மிகுந்த சந்தோசமாக என்னோடு பேசிக் கொண்டு வந்தாள்.எனது மகனுக்கு மறக்காமல் தனது வாழ்தைச் சொல்லும் படி வேண்டினாள்.
வீட்டடியில் இறங்கும் போது "பார்த்தியா, சந்திப்புகள் எப்படி எப்படி வருமென்றே தெரியாது. உன்னை இன்று சந்தித்தது ஒரு அதிசயமே. எனக்கு மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. மீண்டும் சந்திப்போம்" என்றாள்.
நான் பேரூந்தில் வருவதையும் விட வேகமாக வீட்டுக்கு வந்து விட்டேன். அந்த சந்திப்பு ´எதற்காகவும் சோரத் தேவையில்லை. எங்கோ ஒரு கதவு எமக்காகத் திறந்திருக்கும்´ என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது. என் மனதும் ஓரளவு லேசாகியிருந்தது.
சந்திரவதனா
9.7.2007
சந்திரா, வாழ்க்கை எல்லாரும் ஏற்படும் சாதாரண நிகழ்வு, ஆனால் எழுத்தில் கொண்டு வந்தது படிக்க படிக்க நிறைவாய் இருந்தது. மிகுந்த நாள் ஆகிவிட்டது இப்படி உங்கள் எழுத்தை படித்து :-)
ReplyDeleteதிலீபன் நலம் தானே?
மிகவும் நன்றி உஷா.
ReplyDeleteதிலீபன் நலமாக இருக்கிறார்.
இது ஒரு சாதாரணமான விடயந்தான். பேரூந்தைத் தவற விடுவது கூடச் சாதரணந்தான்.
ஆனாலும் நேற்றைய மனநிலையில், (இரண்டு மணி நேர வேலையை 40நிமிடங்களில் முடித்தும்) அந்த பேரூந்தைத் தவற விட்டு விட்டேனே என்ற நினைப்பு என்னுள் சடாரென்று ஒரு கவலையையும் தோல்வி மனப்பான்மையையும் கொண்டு வந்தது. அதுவே சில நிமிடங்களில் அந்தப் பெண்ணால் நிவர்த்தி செய்யப் பட்டதில் இனம்புரியாத நிறைவு என்னுள் ஏற்பட்டது.
மிக அழகான கட்டுரை.
ReplyDeleteநீங்கள் சொல்வது மிகச்சரி. சில சமயங்களில் சகப்பிரயாணிகளின் பேச்சில் பயணம் மிக இனிதாக அமைந்துவிடும். அதுவும் உங்கள் பதிவில் வருவது போல் தொடர்புடையவராக இருந்துவிட்டால் எத்துனை சந்தோஷம் என்பதை நானும் சில சமயங்களில் அனுபவித்து இருக்கிறேன்.
மிக அழகான கட்டுரை சந்திரா.. படிக்க தொடங்கிய போது எனக்கும் கூட தோன்றிய ஒரு சலிப்பை முடிக்கையில் காணாமல் போக்கிவிட்டது.. :)
ReplyDeleteஅவ்வவ்போது அலுப்பாய் நகரும் வாழ்வில், இப்படியான சின்னச்சின்ன சிலிர்ப்புகள் வாழ்தலுக்கான அர்த்தங்களை/அழகைக் கொண்டுவந்துவிடுகின்றன.
ReplyDeleteபிரேம்குமார், பொன்ஸ்(பூர்ணா), டிசே
ReplyDeleteஉங்கள் வரவுகளுக்கும், கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி