Thursday, September 27, 2007

மனம்



9)
தனிமையில்
உன் நினைவுகளோடு
சல்லாபிப்பதும்
பலர் நடுவே
தனிமை உணர்வுகளோடு
மல்லாடுவதுமாய்...
எப்போதும்
இருப்பதை விடுத்து
இல்லாதவைகளோடு உறவாடும்
இந்தப் பொல்லாத மனம்.

Wednesday, September 26, 2007

உணர்வுகள்


8)
சிந்தக் கூடாதென நினைத்தாலும்
முந்தி விடுகின்றன
இந்தக் கண்ணீர்த்துளிகள்

கொட்டி விட முனைந்தாலும்
விடாமல்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில நினைவுகள்

Tuesday, September 25, 2007

உணர்வுகள்


6)
பறக்க நினைக்கும் போதெல்லாம்
வாழ்க்கைக் கோட்பாடுகள்
வலிந்திறுக்கும் விலங்குகளாய்
கட்டிப் போட்டு விடுகின்றன

7)
நடை உடைகளைக் கூட
மற்றொருவர் தீர்மானிக்கும்
இந்த சமுதாயத்தின் மத்தியில்
எப்படி சிறகசைப்பது

Monday, September 24, 2007

நெஞ்சம் மறக்குமா..?



நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?

வல்வெட்டித்துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?

குமரப்பா புலேந்தி அப்துல்லா
ரகு நளன் பழனி
மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார்
அன்பழகன் கரன் ஆனந்தகுமார்
-(2)

எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள்
இவர்களல்லவா"?
கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட
கதையைச் சொல்லவா?
தங்கத் தமிழீழ விடுதலை காண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள இந்திய அரசுகள் சதியால்
நஞ்சு குடித்தாரே

ஈழத்தமிழன் தமிழீழக் கடலில்
போனால் பிடிப்பாராம்
இந்திய உதவி கொண்டே தமிழனின்
வாழ்வை முடிப்பாராம்
ஆழக்கடலில் போனபுலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

ஆழக்கடலில் போன புலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

05.10.1987 அன்று இந்திய அரசால் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சுண்டு வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகள் நினைவாக

பாடல் வெளிவந்த ஒலிப்பேழை - புயற்கால இராகங்கள்
குரல் - தேனிசை செல்லப்பா

Sunday, September 23, 2007

உணர்வுகள்

1)
வாழ்க்கை
அது மிக வேகமாக விரைகிறது
எந்த அவசரத்திலும்
உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் செல்லாமல்

2)
அன்பு காதல் நன்றி...
போன்ற சொற்களுக்குள்
அடக்க முடியாத உணர்வுகள்
சமயத்தில் என்னை
திக்கு முக்காட வைக்கின்றன

3)
நடுநிசியில்
உன் நினைவுகள்
என்னைத் தட்டி எழுப்புகின்றன

4)
பகல் பொழுதுகளில்
ஆழ்ந்த மௌனத்தில் இருப்பதாய் நினைக்கிறார்கள்
நான் உன்னோடு பேசிக் கொண்டிருப்பது தெரியாத
அயலவர்கள்

5)
சிலதை வாய் திறந்து
யாரோடாவது பேச வேண்டும் போல
மனசு அந்தரிக்கும்
அப்படித்தான் இப்போது
உன்னைப் பற்றியும்

உணர்வுகள்

1)
வாழ்க்கை
அது மிக வேகமாக விரைகிறது
எந்த அவசரத்திலும்
உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் செல்லாமல்

2)
அன்பு காதல் நன்றி...
போன்ற சொற்களுக்குள்
அடக்க முடியாத உணர்வுகள்
சமயத்தில் என்னை
திக்கு முக்காட வைக்கின்றன

3)
நடுநிசியில்
உன் நினைவுகள்
என்னைத் தட்டி எழுப்புகின்றன

4)
பகல் பொழுதுகளில்
ஆழ்ந்த மௌனத்தில் இருப்பதாய் நினைக்கிறார்கள்
நான் உன்னோடு பேசிக் கொண்டிருப்பது தெரியாத
அயலவர்கள்

5)
பறக்க நினைக்கும் போதெல்லாம்
வாழ்க்கைக் கோட்பாடுகள்
வலிந்திறுக்கும் விலங்குகளாய்
என்னைக் கட்டிப் போட்டு விடுகின்றன

6)
நடை உடைகளைக் கூட
மற்றொருவர் தீர்மானிக்கும்
இந்த சமுதாயத்தின் மத்தியில்
எப்படி சிறகசைப்பேன்

7)
சிலதை வாய் திறந்து
யாரோடாவது பேச வேண்டும் போல
மனசு அந்தரிக்கும்
அப்படித்தான் இப்போது
உன்னைப் பற்றியும்

Wednesday, September 12, 2007

வசதிகளும் வசதியீனங்களும்

வீட்டுக்குள் நுழைந்ததும் வழமை போல வானொலியை அழுத்தினேன். பாடவில்லை. பேசவில்லை. மௌனம் காத்தது.

அதிகாலையிலேயே எழுந்து வேலைக்குப் போய் விட்டதால் யன்னல்களுக்குரிய சட்டர்கள் இன்னும் இழுக்கப் படாமலே இருந்தன. வெளி வெளிச்சம் இடைவெளிகளினூடு வீட்டுக்குள் நுழைய முயற்சித்தாலும் மெல்லிய இருள் கவிந்திருந்தது. ´ஏன் பாடவில்லை´ என்ற யோசனைக்கு முன்னரே வழமையான அவசரத்துடன் அடுத்த கட்ட வேலையாக யன்னலை நெருங்கி சட்டரை மேல் உயர்த்துவதற்கான பட்டனை அழுத்தினேன். ம்... கும். அதுவும் அசமந்த தனமாக அப்படியே நின்றது.

அப்போதுதான் உறைத்தது. மின்சாரம் இல்லை. ஜேர்மனியில் அப்படி நடப்பது அபூர்வம். மின்சாரத்தை ஏதாவது காரணத்துக்காக நிறுத்துவதாக இருந்தாலும் முற்கூட்டியே அறிவிப்பது மட்டுமல்லாமல் அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டு வாசற்கதவிலும் ´இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை மின்சாரம் நிறுத்தப் படும்´ என்பதை எழுதி ஒட்டி விடுவார்கள்.

வெளியில் விரைந்து கதவைப் பார்த்தேன். ஒன்றும் ஒட்டவில்லை.

அப்படியானால் எனது வீட்டில்தான் ஏதும் பிரச்சனையோ என்று நிலக்கீழ் அறைக்குப் போய் பார்க்க முயற்சித்தால் அங்கு கும்மிருட்டு. வெளி வெளிச்சம் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்த அந்த அறையில் தட்டித் தடவி, பின்னர் ரோச் நினைவு வர அதை எடுத்துப் பார்த்தால் எனது வீட்டில் பிழை இல்லை.

மின்சார இலாகாவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள எண்ணி தொலைபேசியைத் தட்டினால் அதுவும் உயிரிழந்தது போல இருந்தது.

ம்... வசதிகள் அதிகமானாலும் பிரச்சனைதான். இலக்கங்களைச் சுழற்றித் தொலைபேசிய காலம் போய் அழுத்தித் தொலைபேசும் காலம் வந்தது. அது கூடப் பரவாயில்லை. இப்போது தொலைபேசிகள் கூட மின்சாரத்தில். இந்த நிலையில் மின்சாரம் போனதும் வீட்டில்
எல்லாமே ஸ்தம்பிதம் அடைந்தது போல என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தது.

அந்த நேரத்தில் அடுத்த ஆபத்பாந்தவன் கைத்தொலைபேசிதான். வசதிகளின் அதிஉச்ச பாவனைகளில் ஒன்றான கைத்தொலைபேசி கை கொடுக்க மினசார இலாகாவுடன் தொடர்பு கொண்ட போது "வீதி திருத்த வேலையின் போது ஒரு வயர் அறுந்து விட்டது. இரண்டு மணித்தியாலங்களில் சரி செய்து விடுவோம்" என்றார்கள்.

இரண்டு மணித்தியாலங்களும் என்ன செய்வது? கணினிக்கும் மின்சாரம் வேண்டுமே. மனம் அலுத்துக் கொண்டது.

சரி எதற்கும் முதலில் தேநீரை அருந்துவோம் என நினைத்து குசினிக்குள் சென்று தண்ணீர் சூடாக்கும் குவளையை எடுத்து தண்ணீர் விட்டு சுவிச்சை அழுத்தினேன். ம்... கரண்ட் இல்லை.

சுள்ளித் தடிகளும், விறகும் மூன்றுகால் அடுப்பும் இல்லையே என்ற ஒரு ஆதங்கம் சட்டென்று மனதில் வந்தது.

இரண்டு மணித்தியாலங்களும் இருண்ட வீட்டுக்குள், இயங்காத பொருட்களுடன் என்ன செய்வது?
வெளியில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். மெல்லிய குளிர்ந்த காற்றும், சூரியனின் ஒளியும் என்னை இதமாகத் தழுவின.

இயற்கை அழகானது.

Friday, September 07, 2007

கலை, இலக்கியப் போட்டி அறிவிப்பு

17 ஆவது ஆண்டில் புலிகளின் குரல்: "வானோசை - 17" கலை, இலக்கியப் போட்டி அறிவிப்பு
[வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 17:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டிக் கலை இலக்கியப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

இது குறித்த விபரம்:

தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி,

புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி,

தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி என மூன்றாக
வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு வானொலி நாடகம், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

ஆக்கங்கள் யாவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கக் கூடியதாகவும், தமிழின மேம்பாடு கருதியதாகவும் அமைய வேண்டும்.

ஆக்கங்கள் எழுதுதாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.

ஆக்கத்தை எழுது தாளில் கையெழுத்துச் சுவடியாகவோ, தட்டச்சுச் சுவடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

ஆக்கங்களைச் சுவடியாக்கும் போது பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது சிறப்புக்குரியதாகும்.

போட்டிக்கான ஆக்கங்களை எழுதுபவர்கள் தங்கள் பெயர், முகவரி ஆகியவற்றைத் தனியான தாளில் எழுதிச் சுவடியோடு இணைக்க வேண்டும்.

எந்தப் போட்டிக்கான ஆக்கம் என்பதை மடல் உறையின் மேல் இடப்பக்க மூலையில் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

வானொலி நாடகம்:

20 நிமிடங்களுக்கு அமைவாக எழுதப்பட வேண்டும்.

எழுதுதாளில் பத்துப் பக்கங்களுக்குக் (10) குறையாமலும்

பன்னிரண்டு (12) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

சிறுகதை:

நான்கு (04) பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து (05) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதை:

மூன்று (03) பக்கங்களுக்குக் குறையாமலும், நான்கு (04) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ, புதுக்கவிதைகளாகவோ அமையலாம்.

ஆக்கங்களை 31.10.2007-க்கு முன் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.

போட்டிகளில் கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்குபற்றலாம்.

ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரிகள்:

01) புலிகளின்குரல் நிறுவனம்
நடுவப்பணியகம்
முதன்மைச்சாலை
கிளிநொச்சி
தமிழீழம்.

02) மின்னஞ்சல் முகவரி: info@pulikalinkural.com