Sunday, January 15, 2017

பிட்டு

சனி எங்கெங்கெல்லாம் குந்தியிருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அவருக்கு அன்று அவரது இரவுச்சாப்பாட்டில் குந்தியிருந்ததோ?

அவர் எங்கள் குடும்ப நண்பர். கடந்த சனிக்கிழமை, கனடாவிலிருந்து எனது கணவருடன் தொலைபேசிக் கொண்டிருந்தார். திடீரென எனது கணவர் என்னைக் கூப்பிட்டு „நீயும் ஒரு ஹலோ சொல்லி விடு“ என்று சொல்லி தொலைபேசியை என்னிடம் தந்தார்.

இரண்டு கதை கதைத்ததும் அந்நபர் கேட்டார். „அந்தப் புட்டு எப்பிடி அவிக்கிறனிங்கள்? என்ரை மனிசியின்ரை புட்டு இங்கை நல்ல பேமஸ். எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால்... உங்கட புட்டு... நல்ல சின்னச் சின்னதா, மெதுமையா...“ அவர் 3 வருடங்களின் முன் விடுமுறைக்கு வந்து எம்மோடு நின்று போனவர்.

எனக்குச் சங்கடமாக இருந்தது. அவர் குறிப்பிட்டது எனது கோதுமைப் பிட்டைத்தான். நான் ஒன்றும் பெரிய வேலைகள் பார்ப்பதில்லை. அரை மணித்தியாலத்துக்கு மாவை அவிய விட்டு அரித்து வைத்து விட்டேன் என்றால் நினைத்த உடன் பிட்டை அவித்து விடுவேன். அவசரசமான நேரங்களிலெல்லாம் பிட்டையே அவித்து விடுவதால் எனது கணவர் எனக்கு செம்மனச்செல்வி என்று பெயர் வைத்திருப்பது தெரியாதவர்கள் என் பிட்டைச் சாப்பிட்டு விட்டு பாராட்டாமல் சென்றதில்லை.

தேங்காய்ப்பூவையும் எனது கணவரே துருவித்தர குளிர்சாதனப் பெட்டியில் பக்குவமாக வைத்தெடுத்து, கொதிதண்ணியில் மாவைக்குழைத்து, அந்தத் தேங்காய்ப்பூவைப் போட்டு பிட்டு அவிப்பேன்.

„சும்மா சாதாரணமாக எல்லோரையும் போலத்தான் அவிக்கிறேன்“ என்று சொன்ன பின், சரி இவவோடையும் கதையுங்கோ என்று சொல்லி தொலைபேசியை அவவிடம் கொடுத்... வாங்கினாவா, இல்லையா தெரியவில்லை.

„ணொங்“ என்ற சத்தம். தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

எனது கவலையெல்லாம், அன்று அவருக்கு அவரது மனுசியின் அந்த அருமந்த பிட்டு கிடைக்காமல் போயிருக்கும்

சந்திரவதனா
10.01.2017


https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10154387893812869

I Want Wish You A Merry Christmas (Jose Feliciano - Feliz Navidad)

நத்தார் வருகிறது என்று சொல்லி செப்டெம்பரிலேயே கடைகளில் இனிப்புப் பண்டங்களும், பரிசுப் பொருட்களும் என்று விற்பனைகள் தொடங்கின. நத்தார்தினம் நெருங்க நெருங்க அதே பேச்சு. அதே மூச்சு… என்று ஏக அமர்க்களம்.

எல்லாம் நத்தார் தினத்தோடு அப்படியே வடிந்தோடி விட்டன. அது பற்றிப் பேசுவாரில்லை. அவரவர் தம்பாட்டில் தத்தமது வேலைகளில் மூழ்கி விட்டார்கள்.

ஆனாலும் எனது நண்பியொருத்தி நத்தார் தினத்தன்று எனக்கு அனுப்பி வைத்த இந்த வீடியோவைப் பார்க்கும் போதும், கேட்கும் போதும் மனதுள் ஒரு மகழ்வுத் தூறல்.

.

சந்திரவதனா
02.01.2017

Tuesday, January 10, 2017

Happy New Year



Happy New Year
Happy 2017


சந்திரவதனா
31.12.2016

Ethanai Manitharkal Ulagathile



எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே...

ஏழையின் உறக்கங்கள் பாதையிலே - அந்த
மாளிகை மயக்கங்கள் போதையிலே

யாரோ ஒருவன் தோட்டமிட்டான் - அதில்
யாரோ பலனை அநுபவித்தார்

வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கெல்லாம் நன்றி

ஒரே திக்குமுக்காட்டமாய் இருக்கிறது.

வந்து குவிந்திருக்கும் அன்பு வாழ்த்துகளுக்கெல்லாம் எப்போ லைக் போட்டு, எப்போ நன்றி சொல்லி...

உண்மையிலேயே ஒரு குழந்தையைப் போல மிக மகிழ்ந்தேன். இத்தனை நட்புகளா என்று மனங் குளிர்ந்தேன். எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல நேரம் வாய்க்கும் என்று நம்புகிறேன்.

அதுவரைக்கும் என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கெல்லாம் என் நெஞ்சார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திரவதனா
14.12.2016

எட்டுமாதக் குழந்தையாகப் பிறந்தேன்!



அப்போது எனது அப்பா மருதானை புகையிரத நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கென ஒதுக்கப் பட்ட ரெயில்வேக்குச் சொந்தமான வீடு வத்தளையில் இருந்தது. கர்ப்பப்பையில் என்னைச் சுமந்திருந்த அம்மா தவறுதலாக வீழ்ந்ததில் மேல் மாடியிலிருந்து இருந்து கீழ்மாடிக்குரிய படியில் உருளத் தொடங்கி விட்டா. கடைசிப்படியில் உருண்ட போது நினைவை இழந்து விட்டா. அதன் பலனாக அவசரமாக மருத்துவமனை. அதே வேகத்துடன் பருத்தித்துறை வந்து சேர்ந்து மந்திகையில்தான் அவசரமாக எட்டுமாதக் குழந்தையாகப் பிறந்தேன். சரியாக ஒரு மாதம் மூச்சைத் தவிர வேறெந்த சத்தமும் இன்றி கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்திருக்கிறேன். உயிரோடு வாழ்வேனா, என்று அம்மாவும், அப்பாவும் மற்றைய உறவுகளும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். 57வயதுகள் வரை வாழ்ந்து விட்டேன்.

சந்திரவதனா
11.12.2016


https://www.facebook.com/photo.php?fbid=10154296292837869&set=a.427273142868.208326.610002868&type=3&theater

ஜெயலலிதா


ஆற்றாமையில் மனம் துடிக்கவில்லை. அழுது வடிக்கவில்லை. வருத்தம் என்றறிந்த போது கூட மனம் பெரிதாக எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் அந்தத் துடிப்பான பெண்ணின் துடிப்படங்கி விட்டது என்ற செய்தியில் மனம் துயர் கொள்ளத் தவறவில்லை.

என் பதின்மங்களில் எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜா, மாடிவீட்டு மாப்பிள்ளை, ராமன் தேடிய சீதை... என்று பல படங்கள் மூலம் என்னைக் கவர்ந்த, நான் எனக்குள் பதிந்து வைத்திருந்த அம்முக்குட்டியை, இந்திய முதல் அமைச்சராக தொலைக்காட்சிகளிலும், செய்திகளிலும் பார்த்த போதிலெல்லாம் அந்த அம்முக்குட்டிதான் இந்த ஜெயலலிதா என்று என்மனம் ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை.

மரணம் இயல்பானது தான். இயற்கையானது தான். தவிர்க்க முடியாததுதான். ஆனாலும் அத்தனை சுலபமாக அதைக் கடந்து விட முடிவதில்லை.

ஒவ்வொரு மரணமும் மனதில் துயரை அப்பி விட்டு, தம்பாட்டில் சென்று கொண்டிருக்கின்றன.


சந்திரவதனா
06.12.2016

Tuesday, January 03, 2017

அப்பால் ஒரு நிலம்

வாசிப்பின் அலாதியான சுகத்தை சுகித்தவாறே குணா கவியழகனின் ´அப்பால் ஒரு நிலத்தை` வாசித்துக் கொண்டிருக்கிறேன். 

மற்றவர்களைப் போல என்னால் ஒரு புத்தகத்தை மிக வேகமாக வாசித்து விட முடியாது. நான் வாசிக்கும் போது சில பக்கங்களையும், சில பந்திகளையும், சில வசனங்களையும் திரும்பத் திரும்ப வாசித்து, சுகித்துக் கொள்வேன். அதனால் ஒவ்வொரு புத்தகத்தையும் வாசித்து முடிக்க எனக்கு நிறைய நேரங்கள் தேவைப்படும்.


குணா கவியழகனின் கதை சொல்லும் உத்தி சற்று வேறானது. மிகுந்த சுவாரஸ்யமானது. கதைக்களம் போர்க்களமாக இருப்பதால் அது தரும் உணர்வுகளும் வேறானவை.


„நாறல் மீனைப் பூனை பார்த்த மாதிரி...“ என செல்வம் அருளானந்தம் எழுதித் தீராப் பக்கங்களில் எழுதியதை வாசித்து வயிறு குலுங்கச் சிரித்தேன். பிறகும் நினைத்து நினைத்துச் சிரித்தேன். இதே „நாறல் மீனைப் பூனை பார்த்த மாதிரி...“ என்று குணா கவியழகன் எழுதியதைப் படித்துச் சிரிக்க முடியவில்லை. இங்கு பூனையாக இலங்கை இராணுவமும், நாறல் மீனாக இராணுவத்திடம் பிடிபட்ட வீரன் என்ற கதையின் நாயகனும்... அடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


கூடவே கவிதாவின் `யுகங்கள் கணக்கல்ல´ வையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் நான் வாசித்த கதைகள் பற்றிய சிந்தனைகள் எழும் போதெல்லாம் கவிதாவுக்கு அந்த நேரத்தில் எப்படி இப்படியான சிந்தனைகள் எழுந்தன என்ற கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன. கதையின் நாயகர்களும், கருக்களும் எங்கிருந்து கவிதாவுக்குக் கிடைத்தார்கள் என்பதை ஆறுதலாகக் கவிதாவிடமே கேட்க வேண்டும். புத்தகத்தை முழுதாக வாசித்து விட்டுக் கேட்கலாமென்றிருக்கிறேன்.


ந்திரவதனா
29.11.2016
   


https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10154255566952869?pnref=story

அந்த மௌன நிமிடங்களில்..!


அன்று தம்பி வந்து நின்றதில் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாய் இருந்தது. நானும் தங்கைமாருமாக அவனுடன் கதை கதையென்று கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் சந்தோஷத்தைப் பார்த்து அம்மாவும் சந்தோஷத்தோடு, தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தா. தம்பி அப்போது அனேகமான பொழுதுகளில் சென்றிக்கு நின்று ஆமியை உள்ளே வராமல் பார்த்துக் கொள்ளும் பணியில் இருந்தான். அத்தோடு விடுதலைப்புலிகளின் நியாயவிலைக் கடையையும் பொறுப்பாக நின்று நடாத்திக் கொண்டிருந்தான்.

அவன் வீட்டில் இருக்கும் போது படுக்க ஒரு தலையணி காணாதென்று சண்டை பிடித்து, காலுக்கு, கையுக்கு, தலைக்கு என்றெல்லாம் தலையணி வைத்துப் படுப்பான். கிணற்றில் தண்ணீர் அள்ளும் வேலையைத் தவிர வேறொரு வேலையும் செய்ய மாட்டான். பெரிய ஸ்ரைல் பார்ப்பான். கண்ணாடிக்கு முன்னால் மணிக்கணக்காய் நின்று தலைமயிரை அழகு படுத்துவான். நல்ல உடுப்புகள் மட்டுந்தான் போடுவான். இப்போ அவன் சைக்கிளில் பின்னுக்குக் கரியர் பூட்டி, கரியரில் ஒரு பக்கீஸ் பெட்டி கட்டி, அதனுள் நியாயவிலைக்கடைச் சாமான்களைக் கொண்டு போவதைப் பார்த்து எங்களுக்கு ஒரு புறம் சிரிப்பும், மறுபுறம் கவலையும் வரும். இப்போதும் அதையெல்லாம் சொல்லி அவனைப் பகிடி பண்ணிக் கொண்டிருந்தோம்.
அந்த மௌன நிமிடங்களில்..!

சந்திரவதனா
27.11.2016
 

இவர்கள் எல்லாம் யார் ?

ஒரு பெண்ணை வே... என்றழைக்கும் ஆண்களைப் பார்த்தால் எனக்கு அடித்து நொருக்க வேண்டும் போலிருக்கும். எந்தவிதக் கூச்சமுமின்றி கண்ட நிண்ட பெண்களுக்கெல்லாம் வலை விரிக்கும் ஆண்களில் சிலர், வாய் கூசாமல் அவள் ஒரு .... என்று சொல்லும் போது, எனக்கே எனக்கான பெரும் பொறுமையை நான் இழந்து விடுவேனோ என்று அச்சம் கொள்வேன். அவ்வளவு கோபம் வரும் எனக்கு. இவர்கள் எல்லாம் யார் ஒரு பெண்ணுக்கு அப்படியொரு பெயரைச் சூட்டிவிட? 

சந்திரவதனா 
22.11.2016

எழுதித் தீராப் பக்கங்கள்


மனம் விட்டுச் சிரிப்பதனால் மனமும் உடலும் மிகவும் இலேசாகின்றன. மனிதன் மிகவும் உற்சாகமடைகின்றான். இன்றைய இறுக்கமான உலகில் நாம் எத்தனை தடவைகள் அப்படி மனம் விட்டுச் சிரிக்கிறோம்?

எங்காவது யாராவது சிரித்துக் கொண்டாடும் போது கூட, சிலர் கேட்பார்கள் „இருக்கிற பிரச்சனைக்குள்ளை இந்தக் கூத்தும் கும்மாளமும் அவசியமோ?“ என்று. அவர்களெல்லோரும் என்ன நினைக்கிறார்கள், மனிதர்கள் துன்பங்களையே நினைந்து நினைந்து அழுது புலம்பிக் கொண்டிருக்க வேண்டுமென்றா? இன்பங்களை விடத் துன்பங்களே அதிகமாகத் துரத்தியடித்த எங்கள் வாழ்வில் மனதை இலேசாக்கும் நகைச்சுவைகளும், சிரிப்புகளும் அவசியமானவையே.


இந்த நிலையில் செல்வம் அருளானந்தத்தின் „எழுதித் தீராப் பக்கங்கள்“ குறிப்படத்தக்கதொரு நூலாக, வரப்பிரசாதமாக எமக்குக் கிடைத்துள்ளது. இதை வாசிப்பவர்கள் தொடர் நெடுகிலும் மனம்விட்டுச் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எந்தக் கஷ்டத்தையும், அழுது வடிக்காமல் நகைச்சுவையுடன் சொல்லி விடும் பாங்கு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அது செல்வம் அருளானந்தத்துக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது.


இந்த நூலின் சிறப்பு என்னவென்றால் வெறுமே புனையப்பட்டதாகவோ அன்றில் வேண்டுமென்றே வலிந்தெழுதப் பட்டதாகவோ இல்லாமல் தன்பாட்டில் அது ஒரு பெரும் கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டு செல்கிறது. ஆனாலும் அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது. அல்லல்களையும், அவதிகளையும் கூட இத்தனை சுவாரஸ்யமாக வயிறுகுலுங்கச் சிரிக்கும் படியாக எழுதி விடலாம் என்பதை செல்வம் அருளானந்தம் நிரூபித்துள்ளார்.


2016 இல் வெளிவந்த ஈழத்துப்படைப்பாளிகளின் நூல்களில் ஒரு குறிப்பிடத்தக்க நூலாகவும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் ஆரம்பகால வாழ்க்கையையும், அவர்கள் அநுபவித்த அல்லல்களையும் மிக யதார்த்தமாகவும், நகைச்சுவை ததும்பவும் கூறிய நூல்களில் மிகமுக்கியமானதொரு பதிவாகவும், தொகுப்பாகவும் `எழுதித் தீராப் பக்கங்கள்` பரிணமிக்கிறது.
பெல்ஜியத்தினூடு பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து அங்கிருந்து கனடாவுக்கு இடம்பெயரும் வரையான காலத்தின் பதிவுகளை ஊர் நினைவுகளும் கலந்து எள்ளலும், நொள்ளலுமாய் செல்வம் அருளானந்தம் சொல்லும் விதம் அருமை. ஒன்றொன்றாய் அடுக்கி, அடுக்கி மிக நேர்த்தியாகப் பல விடயங்களைக் கோர்த்து விடுகிறார். 240 பக்கங்களைக் கொண்ட இந்நூலை ஒரு சாதாரண நினைவுக்குறிப்பு என்று சொல்லி விட்டு நகர்ந்து விட முடியாது. இது கலாச்சாரம், பண்பாடு, மொழி, காலநிலை... என்று எல்லாமே மாறுபட்ட ஒரு நாட்டுக்குள் அகதியாக நுழைந்து எந்தவித முன்னனுபவமுமின்றி வாழ்வைத் தொடங்கிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றியதொரு ஆவணப்பதிவு.


நீண்டு கொண்டிருக்கும் புலப்பெயர்வில் ஒவ்வொரு காலத்துக்குமான புலம்பெயர்ந்தோரின் வெளிநாட்டு அனுபவங்கள் மாற்றம் கண்டு கொண்டே போகின்றன. இன்று புலம்பெயர்பவர்களுக்கு ஆரம்பகாலப் புலம்பெயர்ந்தோரின் அவலங்களோ, அவர்கள் பட்டபாடுகளோ தெரியாது. அது ஒரு பதிவாகியது மிகமிக வரவேற்கத் தக்கது.
ஊர், உறவுகள், அம்மா, அப்பா, சுற்றம் என்ற கட்டுக்கோப்புக்குள் வாழ்ந்து விட்டு திடீரென்று இந்த ஒருவரது கட்டுப்பாடும் இல்லாத ஒரு இடத்தில் கட்டுடைத்து மதுப்போத்தல்களுடன் ஆராவாரித்ததையும், ஆடிப்பாடியதையும், மங்கையரைக் கண்டு மனம் பேதலித்தையும் கூட செல்வம் அருளானந்தம் பதியத் தவறவில்லை.


இதில் அவர் தன்னை ஒரு ஹீரோவாகவோ, தீரனாகவோ பதியவில்லை. தானும் ஒரு சாதாரண எல்லோரையும் போன்றவன் என்பதாகவே பதிந்துள்ளார். அதுவே இந்த நினைவுப்பகிர்வுக்கு பெரும் பலமாக அமைந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.
கதை நெடுகிலும் சொரிந்து கிடக்கிறது சிரிப்பு. ஆழ்ந்து நோக்கின் சிரிப்பினுள்ளே உறைந்து கிடக்கிறது துயர்.


செயின் ஆற்றை விட்டுச் செல்வம் அருளானந்தம் கனடா நோக்கிப் பறக்கும் போது மனம் கனத்துப் போகின்றது.


சந்திரவதனா
21.11.2016


(எழுதித் தீராப் பக்கங்கள் பற்றி சிறியதாகவும், பெரியதாகவும் என்று 3 தடவைகள் எழுதி விட்டேன். அத்தனை தூரம் எனக்கு இந்தப் புத்தகம் பிடித்திருக்கிறது. நகைச்சுவைகளை நான் எப்போதும் ரசிப்பேன். அழுகுணிப் படங்களை விட சிரிக்க வைக்கும் படங்களையே நான் பெரிதும் விரும்புவேன். அழுவதற்காக, மனம்வருந்துவதற்காக என் பொழுதைச் செலவழிப்பதை விட சிரித்து மகிழப் பொழுது கிடைத்தால் அது பெரும் வரமல்லவோ. அப்படியொரு வரமாக எனக்கு எழுதித் தீராப் பக்கங்கள் கிடைத்தது.)

ஒரே நேரத்தில் ஐந்தாறு நூல்கள்

ஒரே நேரத்தில் ஐந்தாறு நூல்களைப் படிப்பது நல்லதோ கெட்டதோ தெரியவில்லை. என் வரையில் அது எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போதுதான் செல்வம் அருளானந்தத்தின் `எழுதித் தீராப் பக்கங்கள்´ வாசித்து முடித்தேன். எழுதித் தீராப் பக்கங்கள் சில வாரங்களாக நான் போகுமிடமெல்லாம் என்னோடு பயணித்தது. சிரிக்காமல் அந்தப் புத்தகத்தைக் கடக்கவே முடியாது. ஒரு தரம் மருத்துவரிடம் காத்திருந்த போது 98ம் பக்கத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். 


///அவன் எங்களை மேலும் கீழும் வினோதமாய்ச் செவ்வாய்க்கிரக உயிரினங்களைப் பார்ப்பதைப் போல் பார்த்து விட்டு „நீங்கள் வேறுநாட்டிலை இருந்து வந்த ரூறிஸ்டோ?“ எனக் கேட்டான். 

 
„இல்லை கொஞ்ச நாளைக்கு முதல் வந்த இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள்“
இப்போ எங்களை நாறல் மீனைப் பூனை பார்ப்பது போலப் பார்த்தான்.///


கேட்டதும் ஒரு இலங்கைத் தமிழன்தான். என்னையறியாமல் `களுக்´ கென்று சிரித்து விட்டேன். அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவர்கள், புத்தகங்கள் கொண்டு வந்து வாசித்துக் கொண்டிருந்தவர்கள், அங்குள்ள பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தவர்கள் என்று எல்லோரும் சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்தார்கள். அசடு வழிய வேண்டியதாயிற்று.


சற்று நேரங்கழித்து ஒரு பெரியவர் கேட்டார். „ஏதாவது Comedy வாசிக்கிறியோ?“ என்று. „இல்லை, ஒரு பெரும் அவலத்தை ஒருவன் இப்படிச் சிரிக்கும் படியாக எழுதியுள்ளான்“ என்றேன். „அப்படியென்ன எழுதியிருக்கிறான்?“ என்று மீண்டும் கேட்டார். „இது தனியொருவன் கதையல்ல. சொந்த நாட்டை விட்டு இங்கு வந்து நாய் படாப் பாடுபட்ட ஆரம்ப கால இலங்கைத் தமிழரின் கதை“ என்றேன். „ஜெர்மனிய மொழியில் கிடைக்குமா?“ எனக் கேட்டார்.


*************


எழுதித் தீராப் பக்கங்களை வாசித்து முடித்து விட்டேன்தானே என்று தள்ளி வைக்க முடியவில்லை. மீண்டும் ஒருதரம் வாசித்தால் என்ன என்று தோன்றுகிறது. அதனால் அதை வாசிக்க வேண்டிய புத்தகங்களோடு வைத்து விட்டு குணா கவியழகனின் ´அப்பால் ஒரு நிலம்` நூலைத் தொடர்கிறேன். அதோடு முடியும் தறுவாயில் இருக்கும் தமிழினியின் `ஒரு கூர்வாளின் நிழலில்´ மைக்கேல் பரிந்துரைத்த குமார் மூர்த்தியின் `முகம் தேடும் மனிதன்´ (மின்னூல்), Sim Hanifa அறிமுகம் செய்த (ஏற்கெனவே 2004 இல் பத்மாநாபஐயர் அறிமுகம் செய்திருந்தும் நான் கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட) கவிதாவின் `யுகங்கள் கணக்கல்ல´ (மின்னூல்) என்று எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
இவைகளோடு மைக்கேல் பரிந்துரைத்த Im Western nichts Neues (அகதி, All quiet on the Western Front, by Erich Maria Remarque) ஐயும் ஒலிப்புத்தகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


இன்னும் உமையாழ் குறிப்பிட்ட கண்டிவீரன், பொன் குலேந்திரனின் அறிவியற்கதை, நேற்று மின்னஞ்சலில் வந்த சொல்வனம் 161, வானவில் போன்றவற்றிலும் சிலதைத் தேர்ந்தெடுத்து வாசித்தேன். 


கற்றுத் தந்த ஆசிரியர்களைப் போல நல்ல நூல்களை அறிமுகப்படுத்தும் நண்பர்களையும் நான் மதிக்கிறேன். நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.


சந்திரவதனா
17.11.2016