Thursday, May 28, 2020

`மே´ மாதம்

ஆங்கில ஆசிரியர், கவிஞர், த.ஈ.வி.பு. புலனாய்வுத்துறை
இப்போது வந்து போகும் `மே´ மாதங்களிலெல்லாம் மனதை ஒருவித சோக அலை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும். சமயங்களில் வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்பது போல் தோன்றும். அவ்வப்போது குற்ற உணர்வுகள் மனசைப் பிடுங்கி எடுக்கும். ஏகாந்தப் பொழுதுகளில் என்னையறியாமலே மனம் கண்ணீர் உகுக்கும்.

எல்லோருக்கும் இப்படித்தானா? அல்லது நான் மட்டுந்தான் இப்படி மனதுழன்று தவிக்கிறேனா?

என் தம்பி மொறிஸ் இப்படியொரு `மே´ மாதத்தில்தான் (01.05.1989) மரணத்தை விட மேலானதோர் பெருந்துயர் இவ்வுலகில் இல்லை என்பதை எனக்கு உணர்த்தி விட்டுச் சென்றான். அதுவும் பிரிய உறவொன்றின் மரணம். அது தரும் துயர். அதை முழுமையாக எழுதித் தீர்த்து விடவோ, சொல்லித் தீர்த்து விடவோ எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. Whatsapp, Viber, Facebook, Messenger, Mobil எதுவுமே இல்லாத, ஊருக்கு நினைத்த மாத்திரத்தில் தொலைபேசக்கூட முடியாத ஒரு பொழுதில்தான் அந்தத் துயரம் நடந்தேறியது. இப்போதும் கூட அந்த நாட்களின் துயர் பெரும் அலையென எழுந்து என் மனதை உலைக்கிறது.

என்னதான் வேறு விடயங்களில் மனதை ஈடுபடுத்திக் கொண்டாலும் மற்றவர்களோடு கதைத்தாலும் சிரித்தாலும், உள்ளுறங்கும் இத்துயர் மீண்டும் மீண்டுமாய் விழித்தெழுந்து மனதை அலைக்கிறது.

என்னையே நான் ஆற்றுவது போல என் பிரிய சகோதரர்கள் பற்றிய மற்றையவர்களின் பதிவுகளையெல்லாம் தேடித் தேடிப் படித்து, மனம் கலங்கி, விழி கசிந்து, இப்படியெல்லாம் இருந்தார்களா என எனக்குள் நானே பெருமை கொண்டு, அவைகளை எனது கணினியிலும் பத்திரப்படுத்தி, எனது இணையத்தளத்திலும் பதிவேற்றி, இங்கு Facebookஇலும் பதிந்து விட்டு மீண்டும் சோர்ந்து போய் விடுகிறேன். அவர்கள் உயிரோடு வாழ்ந்த போது எனக்குத் தெரியாத இந்த விடயங்களை இப்போது நானறிந்துள்ளேன் என்பதை அறிந்து கொள்ளக் கூட இந்த உலகின் எந்த மூலையிலும் அவர்கள் இல்லாத போது நான் அறிந்தென்ன விட்டென்ன?

என் அண்ணனும் இதே `மே´ மாதத்தில்தான் (13.05.2000) ஆற்றொணாத் துயரைத் தந்து விட்டுச் சென்றார். அப்போது அம்மாவும் ஜெர்மனிக்கு வந்து விட்டிருந்தா. நானே ஆற்றாமையில் வீழ்ந்து கிடந்து போது அம்மாவை எப்படித் தேற்றுவது என்று தெரியாது தவித்திருந்த பொழுது அது. அண்ணன் 1990 இல் `ஷெல்´ தாக்குதலில் உடலால் ஊனமுற்றதோடு மனதாலும் பெரிதும் ஒடிந்து போனார். அவர் இறக்கும் வரையான அந்தப் பத்து வருட காலத்தில் கடிதங்களில்தான் நானும் அண்ணனும் பேசினோம். பக்கம் பக்கமாக இருவருமே மாறி மாறி எழுதினோம். அந்த நேரத்தில் தொலை பேசுவது அந்தளவு சாத்தியமானதாக இருக்கவில்லை. ஓரிரு தடவைகள் சொல்லி வைத்து அண்ணனை யாராவது வற்றாப்பளையிலிருந்து மல்லாவி வரை கூட்டி வந்து, லைன் கிடைக்காமல் காத்து நின்று சில நிமிடங்கள் பேசினோம். அந்தப் பேசலுக்காக பின்னர் நூற்றுக்கணக்கில் ரெலிபோன் கட்டணம் கட்டியது வேறு விடயம். அப்படிப் பேசிய பொழுதுகளில் இயக்க சம்பந்தமான விடயங்களையோ, இரகசியங்களையோ பாதுகாப்புக் கருதி பேசாது தவிர்த்துக் கொண்டோம். எழுதிய கடிதங்களில்தான், தான் தீட்சண்யன் என்ற பெயரில் பொட்டம்மானிடம் வேலை செய்வதாகவும், மிகுதியான விபரங்கள் எதையும் எழுத முடியாதிருக்கிறதென்றும் குறிப்பிட்டிருந்தார். எப்போதாவது ஆற அமர இருந்து எல்லாவற்றையும் பேசுவோம் என்ற எனது கனவும் இந்த `மே´ மாதத்தில்தான் கனவாகியே போனது. அதன் பின்தான் தேசியத்தலைவரைச் சந்தித்த போதும், மற்றைய தளபதிகள், போராளிகளிடமிருந்தும், அண்ணனின் நண்பர் கவிஞர் நாவண்ணனிடமிருந்தும் அண்ணனின் செயற்பாடுகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொண்டேன்.

2002 இல் வன்னிக்குச் சென்ற போது வற்றாப்பளையில் இருந்த, அண்ணன் இல்லாத என் அண்ணனின் வீட்டுக்கும் சென்றேன். அதுவும் இதே `மே´ மாதம். இதே 27ம் நாள். (27.05.2002)

அது ஒரு பெருந்துயரம். வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரம். மனமெல்லாம் முட்டியிருந்தது அந்தத் துயரம். அண்ணனின் பிள்ளைகள் „இது அப்பா இருந்து கதைக்கும் இடம், இது அப்பா இருந்து எழுதும் இடம், இது அப்பா எப்போதும் இருக்கும் இடம், இது அப்பாவின் கதிரை...“ என்று ஒவ்வொன்றாக எனக்குக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அண்ணனின் வீட்டில் எல்லாமே இருந்தன. என் பிரிய அண்ணனை மட்டும் காணவில்லை. தாங்கொணாத் துயரது.

(திரும்பும் போது அண்ணன் சேர்த்து வைத்திருந்த போராட்டம் சம்பந்தமான புத்தகங்களையும், அண்ணனின் கவிதைகளையும் என்னோடு எடுத்துக் கொண்டேன். அந்தப் புத்தகங்கள் எனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எல்லோருமே எச்சரித்தார்கள். ஆனாலும் ஒரு வித அசட்டுத் துணிச்சலுடன் தடைகளையும் தாண்டி அவைகளை நான் ஜெர்மனி வரை கொண்டு வந்து சேர்த்தேன்)

அண்ணனுக்கு முன்னமே எனது மற்றைய தம்பி மயூரனும் பூநகிரியில் காவியமாகி விட்டான். அவன் ஒரு முறை „Frontline (Magazine) இல் என்னைப் பார்த்தீர்களா மூத்தக்கா?“ என்று கேட்டு எழுதியிருந்தான். அப்போது நான் Frontlineக்கு எங்கு போவேன்? இப்போது மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் அவன் நிற்கும் அந்தப் (Frontline முன்னட்டைப்படம்) படம் இணையத்தில் ஆங்காங்கு பதியப் பட்டுள்ளது. „பார்த்தேனடா அந்தப் படத்தை“ என்று எப்படி நான் அவனிடம் சொல்வேன்?

2009 பெப்ரவரியில் அண்ணனின் மகன் பரதனும் போய் விட்டான். அவனும் போன பின் வந்த அந்த முள்ளிவாய்க்கால் `மே´ அது ஏமாற்றத்தின் உச்சம்.

சந்திரவதனா
27.05.2020

Monday, May 25, 2020

CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை


நான் என்னும் பெருங்கனாக் கொண்ட உமையாழின் எழுத்துக்கள், சில வருடங்களின் முன், Facebookஇன் மூலந்தான் எனக்கு அறிமுகமாயின. வழமையாக எனக்குக் கிடைத்த எழுத்துக்களிலிருந்து மாறுபட்ட, சுவாரஸ்யமான அந்த எழுத்துக்களைதேடித் தேடி வாசித்தேன். பிரித்தானியாவில் குடியேற முன்னர் ஆறாண்டு காலம் சவுதியில் வாழ்ந்த உமையாழ் தான் வாழ்ந்த அந்த சவுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும் அப்போது தொடராக எழுதினார்.  அதை மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்து காத்திருந்து வாசித்தேன். 

இதேநேரம் இந்த `உமையாழ்´ என்ற பெயரும் பெண்கள் பற்றிய உமையாழின் பதிவுகளும் இவரொரு பெண்ணா ஆணா என்ற குழப்பத்தையும் அவ்வப்போது என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன.  

எதுவாயினும் எவராயினும் என்ன? உமையாழின் எழுத்துக்கள் எனக்குப் பிடித்தன. ஒன்று விடாமல் படித்துத் தீர்த்தேன்.

அந்த வகையில் சில ஆண்டுகள் கழித்து என் கரம் கிட்டிய உமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை` நூலை பெரும் எதிர்பார்ப்புடனேயே கையில் எடுத்தேன்.

அட்டைப்படம் ஆர்ப்பட்டமில்லாத, அமைதியானதொரு நீரோவியம். அதை வரைந்தவர் பற்றியோ, வடிவமைத்தவர் பற்றியோ எந்த ஒரு குறிப்பையும் புத்தகத்தில் காணவில்லை. ஒருவேளை றஷ்மியாக இருக்கலாம்.

பின்னட்டையில் உமையாழின் படத்துடன்
எங்களூரின் மொழியும், இந்தத் தமிழை நாங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்கு எப்போதும் உவப்பானது. கொஞ்ச நாட்களாக என்னுடைய தனிப்பட்ட பாவனையில் இருந்து நழுவிக்கொண்டிருக்கும் அந்தத் தமிழை, எழுதிக் கடக்கிற போது நான் அடைகிற ஆனந்தம் அளவிட முடியாதது. அவற்றின் எச்சங்களை நான் பதிவுசெய்ய வேண்டாமா! போலவே அரேபிய பாலைவனங்களில் அலைந்த திரிந்த ஆறாண்டுகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஆச்சரியங்களையும் நான் எங்கே போய் வெளிப்படுத்துவேன்! இப்போது, நீலக்குளிர் பிரதேசம் எனக்குள் பொழிகிற, உறைய வைக்கும் இந்தக் குளுமை எனக்கானதுதானா! அல்லது நான் வேரோடிஎனது கரையை போய்ச் சேர்ந்து விட வேண்டுமா?
கடந்து வந்த நிலமெல்லாம் பெரும் ஆச்சரியங்கள்தான். ஆகவே நிலங்களை எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தக் கதைகளுக்குள் உலவுகின்ற மனிதர்கள் எங்கிருந்து வந்து சேர்ந்தவர்கள்!  அவர்களுக்கும் எனக்குமான பந்தம் என்ன என்கிற கேள்விகள்தான் என்னை அலைக்கழிக்கின்றன.
என்ற உமையாழின் மனவரிகள் பதியப் பட்டிருக்கின்றன.

உள்ளே  அர்த்தங்களிலிருந்தான விடுதலை என்ற தலைப்பில் உமையாழின் நூல் பற்றிய முகவுரையோ அணிந்துரையோ நன்றியுரையோ ஏதோ ஒன்று உமையாழினால் எழுதப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் நான் முகவுரை, அணிந்துரை, பதிப்புரை... போன்றவைகளை கடைசியாகவே படிப்பேன். அதனால் அதைக் கடந்து நூலைப் படிக்கத் தொடங்கினேன். உள்ளே சிறிதும் பெரிதுமாக ஒன்பது கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன.

கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட உமையாழ் அந்தக் கிழக்கிலங்கையின் ஒரு ஊரையும், அங்கு வாழ் மக்களின் இயல்புகளையும், பழக்கவழக்கங்களையும் தொகுப்பின் முதற்கதையான ´ஊர்க்கத` யினூடு எம்முன் விரிக்கிறார். 

முந்தைய காலத்தில், அனேகமான எங்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் `ஒரு ஊரில் ஒரு இராஜா/அரசன் இருந்தான்´ என்றோ அல்லது `ஒரு ஊரில்  ஒரு இராணி இருந்தாள்´ என்றோ தான் தொடங்கியிருக்கின்றன. இங்கே இந்தக் கதை அப்படித் தொடங்கவில்லை. `மூன்றாவதாகவும் பிறந்த பெண்குழந்தையை ஏற்கெனவே தோண்டியிருக்கும் குழியில் போட வேண்டிய சடங்கை தந்தையே செய்ய வேண்டும்...´ இப்படித்தான் தொடங்குகிறது. கி.மு நான்காம் நூற்றாண்டுக் கதையை மடியில் படுத்திருக்கும் 13-14 வயது நிரம்பிய உமையாழுக்கு சாலியாப் பெரியம்மா சொல்லத் தொடங்குகிறா. (கதையை தன்னிலையில் இருந்து உமையாழ் எழுதியதால்  அந்தச் சிறுவன் உமையாழ்தான் என மனம் எண்ணிக் கொண்டது) கதை சொல்லும் சாலியாப் பெரியம்மாவைப் பற்றிய விவரணங்களோடு,  இஸ்லாமிய மதத்தவர்கள் வாழும் ஒரு ஊரின் கதை, அதன் பேச்சு வழக்கு, அங்கு வாழ் மக்களின் வாழ்க்கைமுறை... என்று பலவிடயங்களையும் கதை சொல்லி விடுகிறது.

Tuesday, August 21, 2018

Interview - Thumilan Selvakumaran

Journalist aus Schwäbisch Hall
Buchvorstellung: "Ende der Aufklärung - die offene Wunde NSU"
von Wolfgang Köhler

Der Nationalsozialistische Untergrund (NSU) wird für zehn Morde verantwortlich gemacht, unter anderem in Heilbronn. Bisher ungeklärt ist, weclhe Verbindungen ein Ableger des rassistischen Ku-Klux-Klan in Schwäbisch Hall mit dem NSU hatte. Darüber hat SWR4 Moderator Wolfgang Köhler mit dem Journalisten Thumilan Selvakumaran vom Haller Tagblatt gesprochen, der sich mit dem NSU in der Region befasst und ein Buch herausgebracht hat.

Tuesday, August 29, 2017

விமல் குழந்தைவேலின் வெள்ளாவி



ஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்...

இவையெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா?

இவையெல்லாம் விமல் குழந்தைவேல் எழுதிய ´வெள்ளாவி` நாவலில் இறைந்து கிடக்கும் சொற்கள்.

பார்த்தவுடனோ, படித்தவுடனோ எல்லோருக்கும் இவைகளின் பொருட்கள் புரியாவிட்டாலும் கதையின் ஓட்டத்தில் எல்லாவற்றிற்கும் பொருள் புரிந்து விடும். அதுவும் இந்திய வட்டார வழக்குகளையே வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடிய ஈழத்து வாசகர்களுக்கு இதுவொன்றும் பெரும் பிரச்சனையே அல்ல.

முழுக்க முழுக்க பேச்சுத் தமிழில் எழுதப்பட்ட நாவல் வெள்ளாவி. இது மட்டக்களப்பு வட்டார வழக்குத்தமிழா அல்லது தீவுக்காலை, கோளாவில், பனங்காடு போன்ற கிராமங்களில் பேசப்படும் வட்டாரவழக்கா என்பது தெரியவில்லை.

சாதாரணமாக நாவல்களிலோ அன்றில் சிறுகதைகளிலோ ஒருவர் கதைப்பது மட்டுமே அந்தந்த வட்டாரவழக்குகளில் வரும். இங்கு கதை நெடுகிலும் வட்டாரத்தமிழே. அது கதைக்குப் பலமா, பலவீனமா என்பது கூடக் கேள்விக்குறியே. ஒரு வேளை நல்லதமிழில் கதையை எழுதி, பேசும் விடயங்களை மட்டும் பேச்சுத்தமிழில் எழுதியிருந்தால் நாவலின் தரம் பன்மடங்கு அதிகரித்து, ஒரு நல்ல இலக்கியமாகப் பரிணமித்திருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதே நேரம் முழுக்கமுழுக்க பேச்சுத்தமிழில் ஒரு நாவலைப் படிப்பது வும் சுவாரஷ்யமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நேர்த்தியாக எழுதப்பட்ட நாவலென்று அடித்து வைத்துச் சொல்ல முடியவில்லை. கூடவே ஏராளம் எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகள், வசனப்பிழைகள்.

 **********

கதையின் நாயகி பரஞ்சோதி, எட்டுப் பத்து வயதுப் பெண்களோடு எட்டுக் கோடு விளையாடும் பதினெட்டு வயதுப் பெண்ணாக அறிமுகமாகிறாள்.

பரஞ்சோதியின் அம்மா மாதவி. பேய்வண்ணானின் மகள். சின்ன வயதிலேயே தாயை இழந்தவள். 22வயதில் மச்சான் முறையான செம்பவனோடு பழகியதில் திருமணமாகாமலே கர்ப்பமாகி விட்டாள். இந்த விடயம் பேய்வண்ணானுக்குத் தெரிந்த அடுத்த காலையிலேயே மச்சான் முறையான செம்பவனை முதலை விழுங்கி விட்டது. இந்தக் கவலையில் பேய்வண்ணான் இறந்து போக கர்ப்பம் தரித்திருந்த பரஞ்சோதியின் அம்மா மாதவி தனித்துப் போனாள்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட பஞ்சமர்களில் ஒருவரான சலவைத்தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த மாதவிக்கு வறுமைதான் பெரும் சொத்தாகியது. சலவைத்தொழில் மட்டும் செய்து அவளால் வாழ முடியவில்லை. அல்லது வாழ விடவில்லை. அவள் வறுமையில் வாடி தனிமையில் நின்ற போது கொழுகொம்பாக அவளைத் தாங்க எந்த ஆண்களும் முன்வரவில்லை. ஆனால் புறக்கணிக்கப் பட்ட சாதியில் பிறந்த அவளின் உடலை மட்டும் புறக்கணிக்க மறுத்தார்கள் அந்த (உயர்சாதி) ஆண்கள். வறுமை, தனிமை இரண்டுமே அவளைக் கையாலாகாதவளாய் ஆக்கி விட்டிருந்தன.

அம்மா மாதவியின் இந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் பருவம் பரஞ்சோதிக்கு வந்த போது வீட்டிலே ஒரு போரே தொடங்கி விட்டது. பரஞ்சோதி, தாய் மாதவியோடு சண்டை பிடித்தாள், எரிந்து விழுந்தாள். ஒரு பரம எதிரி போலவே தாயை எதிர் கொண்டாள். தான் தன் தாய் போல வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த வைராக்கியம் கொண்டிருந்தாள். அதனால் பருவமடைந்ததிலிருந்து பதினெட்டு வயது வரை வீட்டுப் படலையைக் கூடத் தாண்டாது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தாள். தாய் மாதவி எவ்வளவு கேட்டும் வீடுகளுக்குச் சென்று சலவைக்கான உடுப்புக்களை எடுத்து வரவோ, போடியார் வீட்டுக்குப் போய் வீட்டுவேலைகளுக்கு உதவவோ மறுத்தாள்.

அவளது இந்த வைராக்கியம் வென்றதா அல்லது அவளைச் சுற்றியிருந்த சமூகம், அவள் ஆசைகள், கனவுகள், வைராக்கியம் எல்லாவற்றையும் கொன்று போட்டதா என்பதுதான் கதை.
**********

அந்தக் கதையைத்தான் தீவுக்காலை, கோளாவில், பனங்காடு... போன்ற இடங்களுக்கே வாசகர்களை அழைத்துச் சென்று விமல் குழந்தைவேல் சொல்கிறார். பல இடங்களில் நெகழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார்.

கண்ணகி மதுரையை எரித்து விட்டு இலங்கையை நோக்கி வந்து குந்திய இடங்கள்தான் இலங்கையில் உள்ள கண்ணகை அம்மன் கோயில்கள் என்றும் எழுதியிருக்கிறார். வாசிக்கச் சுவாரஸ்யம்தான். இது அவரின் கற்பனையா அல்லது எங்கேயும் பதியப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

கதை நகர்த்தலில் சிற்சில குறைகளும் உள்ளன. தான் தாயைப் போல வந்து விடக் கூடாது என்ற மிகுந்த வைராக்கியத்துடன் வாழும் ஒரு பெண், யாரென்றெ தெரியாத ஒருவன் தன்னைப் புணரும் போது, அதுவும் இருட்டில் அவன் முகம் கூடத் தெரியாத போது தன்னை அவனிடம் அர்ப்பணித்து விடுவது என்பது ஏற்புடையதே அல்ல. அதை ஒரு வன்புணர்வு. அவள் விரும்பாமலே நடந்தது என்று சித்தரித்திருந்தால் அது ஒரு நிதர்சனமான சம்பவமாகத் தோன்றலாம். அவள் அதைக் கனவாக நினைப்பது என்பது நிட்சயமாக நடைமுறையுடன் ஒட்டாத ஒன்று.

மற்றும் மாதவி கர்ப்பமாயுள்ளது பேய்வண்ணானுக்குத் தெரியவந்த காலையில் அவள் கர்ப்பத்துக்குக் காரணமான செம்பவனை முதலை விழுங்கி விட்டது என்பதுவும் நாடகம் போலவே உள்ளது. ஊருக்குத் தெரிந்து விட்டதே என்று அவன் ஊரை விட்டு ஓடிவிட்டான் என்றிருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.

இருந்தாலும் காதல், சோகம், கோபம், பாசம், நெகிழ்ச்சி, சில பல பழக்கவழக்கங்கள், நடைமுறைகள்... என்று மிகுந்த சுவாரஸ்யமான விடயங்கள் கதை நெடுகிலும் இறைந்து கிடக்கின்றன.

எல்லா சுவாரஸ்யமும் முதல் அத்தியாயம் வரைதான். இரண்டாவது அத்தியாயத்தில் விமல் குழந்தைவேல் வாசகர்களை ஏமாற்றி விட்டாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில் இயக்கங்கள் முளைத்து விட்டன. ஈழப்போர் தொடங்கி விட்டது. பரஞ்சோதியின் மகன் அரவிந்தனுக்கும் பதினைந்து வயதாகி விட்டது. அதோடு விமல் குழந்தைவேல் கதையையே புரட்டிப் போட்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. போர் எமது வாழ்வைப் புரட்டிப் போட்டதுதான். அதற்காக சும்மா எதையாவது எழுதிவிட்டுப் போய் விட முடியாது. விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மாபெரும் விடயம். அதை எழுந்தமானத்தில் அல்லது நுனிப்புல் மேய்வது போல் தொட்டு விட்டுச் செல்வது எந்தவகையில் சரியாகும்.

இந்நாவலை இன்னும் பலவருடங்கள் கழித்து வாசிக்கும் ஒருவர், `வீட்டிலே சைக்கிளோ அன்றில் வேறு பிரியமான பொருளோ வாங்கிக் கொடுத்திருந்தால் ஒருவர் விடுதலைப் போராட்டத்துக்குப் போயிருக்க மாட்டார்´ என்று எண்ணக் கூடும். `பரஞ்சோதியின் மகன் சைக்கிளை விற்று காசைக் கொடுத்து விட்டு விடுதலைப் போராட்டத்துக்குப் போய் விட்டான்.´

விமல் குழந்தைவேல் இப்படி எழுதி எத்தனையோ போராளிகளின் தியாகங்களையும், செயற்பாடுகளையும், அவர்களின் உத்வேகங்களையும் நெருப்பில் போட்டுக் கருக்கி விட்டார். அவர்கள் எந்த இயக்கத்தவர்களாய் இருந்தால் என்ன... அவர்களை அர்த்தமற்றவர்களாகவே ஆக்கி விட்டார்.

நாவலை முதல் அத்தியாயத்துடன் நிறுத்தியிருந்தால் நாவல் பேசப்பட்டிருக்கும். ஒரு பதிவாக இருந்திருக்கும். இப்போது...

- சந்திரவதனா
29.08.2017

Friday, July 21, 2017

ஊர்ச்சனம் என்ன சொல்லும்

அவள் முடிவு அவளதாக இல்லாமல் அவர்களானதாக இருந்ததில் அவளுக்கு வலி அதிகமானதாகவே இருந்தது. பெண்விடுதலைக்காய் மேடையில் பேசும் அவளது அம்மாவும் அவள் விடயத்தில் ஊர்ச்சனம் என்ன சொல்லும் என்றுதான் பார்த்தாள். அவள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப் படப் போகிறாள் என்பதைப் பற்றி அக்கறைப் படவேயில்லை. ஊரெல்லாம் சொல்லிச் செய்த கல்யாணம் அவர்கள் பார்த்துச் சிரிக்கும் படியாக ஆகி விடக் கூடாதே எனபதில்தான் மிகுந்த கவனமாக இருந்தாள்.

சந்திரவதனா
21.07.2017

உரையாடல்

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு உரையாடலில் கலந்து கொண்டேன். நான் பேசவேயில்லை. கேட்டுக் கொண்டிருந்தேன். அத்தனை சுவாரஷ்யமாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைத்தொழில் சம்பந்தமான விடயங்களையும், நாங்கள் மறந்து போய்விட்டவைகளையும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

அதிலே ஒருவர் விமல் குழந்தைவேலுவின் வெள்ளாவியில் வரும் சலவைமுறை பற்றியும் குறிப்பிட்டு, பாராட்டினார்.

சில இடையூறுகளினால் தொடராமல் விடப்பட்ட பலவற்றில் வெள்ளாவியும் ஒன்றாய் நின்று விட்டது. சின்னச்சின்னதாக அவ்வப்போது எதையாவது வாசித்தாலும் பெரிய வாசிப்புகளில் சிலமாதங்களாகவே ஈடுபட முடியாதிருந்தது. இப்போது மீண்டும் வெள்ளாவியுடன் ஐக்கியமாகிறேன்.

சந்திரவதனா
20.07.2017

கவிதையும் வாழ்வும்

மழை அழகாய் இருந்தது. சுடும் வெயிலும் கூட அழகாய்தான் இருந்தது. மலர்களும் அழகழகாய் இருந்தன. விழும் இலைகளும் கூட அழகாய்தான் இருந்தன.

கவிதைகள் அழகாய் இருந்தன. வாழ்க்கை மட்டும் கவிதை போல அழகாய் இருக்கவில்லை.

அவள் எழுதிய

நான்
யார் யாருடன் பேசலாம்
யார் யாருடன் பேசக் கூடாது
என்பதையெல்லாம்
அவனேதான் தீர்மானிக்கிறான்

தான்
யார் யாருடனெல்லாம்
உறவு வைத்திருக்கிறேன் என்ற விடயத்தில்
நான் தலையிடவே கூடாது என்ற
நிபந்தனைகளைச் சற்றும் தளர்த்தாமல்...


என்ற கவிதை அழகென்றும், அருமை என்றும் நூற்றுக் கணக்கான பின்னூட்டங்களும், விருப்பக் குறிகளும்.

நிலத்தில் சிதறியிருந்த சோற்றுப் பருக்கைகளையும், சுவரில் ஒட்டியிருந்த மீன்குழம்பின் கறைகளையும் - சமைப்பதற்கு எடுத்த நேரத்தையும் விட, அதிகம் நேரம் எடுத்து துடைத்த அவளது மனதின் வலி பற்றி கவிதை படித்த யாருக்கும் தெரிந்திருக்காது.

எல்லாம் அந்தத் தொலைபேசி அழைப்பால் வந்தது. பார்த்துப் பார்த்து அவனும் இவன் சாப்பிடும் நேரந்தான் அழைக்க வேண்டுமா? அழைத்தவன் அவளது தம்பி வீட்டில் இல்லை என்று அவள் சொன்னதும் பேசாமல் அழைப்பைத் துண்டித்திருக்கலாம்.

„சுகமா இருக்கிறீங்களோ அக்கா?“ என்று சும்மா கேட்டு வைத்தான். „ஓம்“ என்று சொல்லி விட்டு இவளும் இணைப்பைத் துண்டித்திருக்கலாம். சனி எங்கெல்லாம் குந்தியிருக்கும் என்று பல சந்தர்ப்பங்களில் அவளுக்குத் தெரிவதில்லை. „நீங்களும் சுகமா இருக்கிறீங்கள்தானே..?“ அவள் கேட்டு முடித்தாளோ, இல்லையோ அவளுக்கே இன்னும் தெரியவில்லை. `ணொங்´ என்ற சத்தமும், தொடர்ந்து படாரென்று உடையும் சத்தமும். நெஞ்சு ஒரு தரம் திடுக்கிட்டது. திரும்பினாள்.

நிலமெல்லாம் சோறு. சுவரில் மீன்குழம்பு வழிந்து கொண்டிருந்தது. மீன் துண்டுகள் பிய்ந்து சிதைந்து ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. கூடவே கீரை, கத்தரிக்காய் வெள்ளைக்கறி... என்று பார்க்கச் சகிக்கவில்லை. அவளால் உடனடியாக பதறலில் இருந்து மீளமுடியவில்லை.

தம்பியின் நண்பனைச் சுகம் விசாரித்ததால் அவனது வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த வார்த்தைகளில் அவள் ஒரு விலைமாதுவையும் விடக் கேவலமாக உருண்டாள், பிரண்டாள். தாங்க முடியாமல் கூசினாள். கூனிக் குறுகினாள்.

அன்று அவள் சாப்பிடவில்லை. அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை. மினைக்கெட்டுச் சமைச்சதை கூட்டி அள்ளிக் கொட்டும் போதுதான் மனசுதாங்காமல் ஒரு தடவை அழுது தீர்த்தாள்.

சந்திரவதனா
10.08.2016

இது ரோஜாக்கள் தேசம்


வழி நெடுகிலும் பல பல வர்ணங்களில், பலவகையான ரோஜாக்கள். நான் தினமும் போகும் பாதையில் இச்செடி.

இதைப் பராமரிப்பாரும் இல்லை. பத்தியம் பார்ப்பாரும் இல்லை. மழை, வெயில், பனி, குளிர், காற்று... என்று இயற்கையோடு சங்கமித்திருக்கும் இச்செடியை சும்மா என்னால் தாண்டி விட முடிவதில்லை.

சிவப்பு நிறம் எனக்கு மிகவும் பிடிக்கும். பார்த்துக் கொண்டிருந்தாலே மனதுள் உவகை ஊறும். இந்த சிவப்பு ரோஜாக்களின் அழகை நின்று நிதானித்து பருகிச் செல்கையில் மனம் பட்டாம்பூச்சியாய் மிதக்கும்.

வாய் இருந்தால் வங்காளம் போகலாம்

ஒரு கோடை விடுமுறைக்கு எனது பேத்திகள் பிரித்தானியாவில் இருந்து வந்திருந்தார்கள்.

அன்று நாங்கள் ஒரு சுற்றுலாவை மேற்கொண்டிருந்தோம். எங்களுடன் இன்னும் சில உறவினர்களும் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.

அன்றும் வழமை போல இடையில் இறங்கி கார்களுக்கு பெற்றோல் அடிக்க வேண்டிய தேவையிருந்தது. அதையும் விடப் பெரியதேவை Toilet. இது ஆண்களை விட பெண்களுக்கு அடிக்கடி தேவைப்படும் மிக அவசியமானதொன்று.

ஆரம்ப காலங்களில் நான் இப்படி எங்கு போனாலும் Toilet தேடுவதால் எனது கணவரின் முகச்சுளிப்புக்கு ஆளாகியிருக்கிறேன். „வெளிக்கிடும் போது வீட்டில் ஒரு தடவை போய் விட்டு வந்திருக்கலாம்தானே“ என்பார். அல்லது „தண்ணீரைக் குறைவாகக் குடித்து விட்டு வந்திருக்கலாம்“ என்பார். தொடர்ந்த காலங்களில் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வரும் அத்தனை பெண்களும் என்னை விட அதிகமாக Toilet தேடியதால் இப்போதெல்லாம் கணவர் எங்கு போனாலும் தானாகவே „அந்தா Toilet இருக்கிறது. போவதானால் போய் விட்டு வா“ என்பார்.

ஜெர்மனியில் அது ஒரு பெரும் வசதி. எங்கு போனாலும் கண்டிப்பாக ஒரு மலசலகூடம் இருக்கும். மலசலகூடங்கள் இல்லாத அறைகளோ, விளையாட்டு மைதானங்களோ, பூங்காக்களோ... எதுவுமே… ஜெர்மனியில் இல்லையென்றே சொல்லலாம். அது விடயத்தில் அவ்வளவு அக்கறையுடன் ஜெர்மனி செயற்படுகிறது.

ஆனாலும் என்ன! ஒரு பிரச்சனை. அதிவேக வீதிகளில் உள்ள பெற்றோல் நிலையங்களிலும், புகையிரதநிலையங்களிலும், இன்னும் சில பொது வெளிகளிலும் உள்ள மலசலகூடங்களின் உள்ளே செல்வதற்கு 50சதம், 80சதம், ஒரு யூரோ என்று அறவிடுவார்கள். அந்தக் காசைப் போட்டால்தான் உள்ளே போவதற்கான கதவு அல்லது தடுப்பு திறக்கும். அவர்கள் அப்படி அறவிடுவதற்கும் ஒரு காரணம். உண்டு. அந்தக் காசை அந்த மலசலகூடங்களைத் துப்பரவாக வைத்திருப்பதற்குப் பயன்படுத்துவார்கள்.

அன்று நாங்கள் போன இடத்தில் 80சதம் போட வேண்டும். நாங்கள் எல்லோரும் தாள்காசுகளைக் கொடுத்து, சில்லறைகளாக மாற்றி, நீண்ட வரிசையில் காத்து நின்று காசைப் போட்டு, உள்ளே போய்க் கொண்டிருந்தோம்.

எனது பேத்தி சிந்துவின் முறை வந்தது. அப்போது அவளுக்கு 12 வய தாக இருந்தது. அவளுக்குக் காசை மெசினுக்குள் போட மனம் வரவில்லை.

அங்கு பொறுப்பாக நின்ற பெண்ணைப் பார்த்துக் கேட்டாள் „கட்டாயம் காசு போட வேண்டுமா ?“ என்று

அந்தப் பெண் சொன்னாள் „போட்டால்தான் நீ உள்ளே போகலாம்“ என்று

சிந்து விடவில்லை. „நான் பிரித்தானியாவில் இருந்து எனது விடுமுறையை அனுபவிக்க உங்கள் ஜெர்மனிக்கு வந்திருக்கிறேன். என்ன..! உங்கள் நாட்டில் Toilet க்குப் போவதற்கும் காசு வசூலிப்பீர்களோ?“ என்று கேட்டாள்.

அந்தப்பெண்ணுக்கு மிகுந்த சங்கடமாகி விட்டது. உடனே தனது திறப்பால் சலூன் கதவு போல இருந்த அந்த ஆடும் சிறிய கதவை திறந்து „நீ காசு தரவேண்டாம். போ“ என்று விட்டு விட்டாள். சிந்து திரும்பி வரும் போது 'உனது விடுமுறையை மிகுந்த சந்தோசமாக அனுபவி" என்று மலர்ந்த முகத்துடன் வாழ்த்தியும் அனுப்பி விட்டாள்.

இதுதான் „வாய் இருந்தால் வங்காளம் போகலாம்“ என்பதோ?

சந்திரவதனா
20.06.2017

Friday, April 28, 2017

வெள்ளாவி - விமல் குழந்தைவேல்

வெள்ளாவி நூலை நூலகத்திலிருந்து தரவிறக்கி வைத்து விட்டு மறந்து விட்டேன். ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் ஞாபகம் வந்து எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். தொடக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது. விமல் குழந்தைவேலுவின் முகப்புத்தகப் பதிவுகளைத்தான் இதுவரை வாசித்திருக்கிறேன். இதுதான் அவரது நான் வாசிக்கும் முதல் நாவல்.

பரஞ்சோதி என்பது ஒரு சிறுமியின் பெயர். எனக்கு அதை ஆண் பெயராகத்தான் தெரியும். ஆனாலும் அச்சிறுமியும், புளியம்மரமும் மனதுள் ஒருவித குறுகுறுப்பையும் ஊர் நினைவுகளையும் கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக அந்தப் பேச்சுத் தமிழ் அருமை.

எங்கு சென்றாலும் நூலைத் தொடரவேண்டும் என்ற ஆவல் மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. மிகவும் நன்றாகத் தொடரும் என்றே நம்புகிறேன்.

சந்திரவதனா
28.04.2017

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite