- செல்வா -
நண்பர்களே,
உழைப்பவர்களுக்கே உலகம்!
தமிழர்களாகிய நாம் எப்பொழுதுதான் விழிப்படைவோமோ?!
உலகில் உள்ள சில ஆயிரம் மொழிகளில், 256 மொழிகளில் இன்று விக்கிப்பீடியா என்னும் இலவச அறிவுக்களஞ்சியம், அழகான படங்களுடன், உரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல், யாரும் பயன்படுத்துமாறு, கட்டற்ற கலைக்களஞ்சியமாக உள்ளது. நாளும் வளர்ந்து வருகின்றது.
http://ta.wikipedia.org/
தமிழர்கள் ஏன் இப்படி உறங்கிக்கொண்டுள்ளனர்?!
உலக மொழிகளின் வரிசையில் தமிழ் 68 ஆவது இடமாக மிகப் பின் தங்கி உள்ளது. இந்திய மொழிகளுள் முதன்மையானதாக நாம் இருந்தாலும் (200 எழுத்துகளுக்குக் கூட உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையிலும், மொத்த பைட் அளவிலும்,
மற்ற பல்வேறு தரக் கட்டுப்பாடுகளிலும் தமிழ் இந்திய மொழிகளுள் முன் நிற்பது உண்மை).
கீழ்க்காணும் மொழி வரிசையைப் பாருங்கள்:
http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1.2C000.2B_articles
தமிழ் எங்கே உள்ளது?! ஏன்?!
43 மில்லியன் மக்கள் பேசும் போலிஷ் மொழி 4 ஆவது இடத்தில் (499 189 கட்டுரைகளுடன்).
23-25 மில்லியன் மக்கள் பேசும் 'டச்சு மொழி 7 ஆவது இடத்தில். (437 512 கட்டுரைகளுடன்).
அட, வேண்டாம் ஐயா, 4 அல்லது 5 மில்லியன் மக்கள் பேசும் மொழிகள் பலவும் மிக முன்னணியில் உள்ளன.
75 மில்லியம் மக்கள் பேசும் செம்மொழியாகிய தமிழ் மொழி ஏன் 68 ஆவது இடத்தில் உள்ளது? இது வெட்கப்பட வேண்டிய நிலை!
பெரிய புரட்சி மண்ணாங்கட்டி எதுவும் செய்ய வேண்டாம். ஒரு 4-5 வரிகள் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது எழுதி பங்களிக்கக்
கூடாதா?
75 மில்லியன் மக்களில் ஒரு 100-200 பேர் கூடவா வந்து பங்களிக்கக் கூடாது?
தமிழ் விக்கிப்பீடியாவில் மே 3, 2008 அன்று வரை உருவாகியிருந்த மொத்தம் 13, 675 கட்டுரைகளில், ஏறத்தாழ 20 பேர் மட்டுமே பங்களித்து 11,150 கட்டுரைகள் தொடங்கி எழுதியுள்ளார்கள். இக்கட்டுரைகளில் உள்ள பிழைகளை நீக்கவும், மேலும் விரிவாக்கங்கள் செய்யவும், புதிய ஆக்கங்கள் செய்யவும், ஏன் தமிழர்கள் முன்வரவில்லை என்பது எனக்கு வியப்பாக உள்ளது. உண்மையில் இன்றளவில் சில ஆயிரம் தமிழர்களாவது ஊக்கமுடன் பங்களித்திருக்க வேண்டும்!
புதிய அறிவுக் கோயிலை கட்ட எல்லோரும் வந்து பங்களிக்க மீண்டும் வேண்டுகிறேன்! ஒரு 4-5 வரிகளாவது எழுதுங்கள்! ஒரு படம் தந்து உதவுங்கள்! ஒரு எழுத்துப் பிழையை நீக்கிப் பங்காற்றுங்கள்!
நாம் உலக மொழிகளின் வரிசையில், பேசுவோர் எண்ணிக்கையில், 15 முதல் 20 வரையிலான இடத்தில் உள்ளோம். கலைக் களஞ்சிய வரிசையில் நாம் முதல் 10 ஆக இருக்க வேண்டும் என்னும் உணர்வோடு, ஊக்கமுடன் வந்து உதவுங்கள் நண்பர்களே! நம் மொழிக்கு செய்யக்கூடிய உண்மையான ஒரு தொண்டு, பணி. இதனால் நாம் யாவருமே பயன்பெறுவோம்.
அன்புடன்
செல்வா
மே 13, 2008
தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்க:
http://ta.wikipedia.org/
தகவல் - சிறீதரன்
http://kanaga_sritharan.tripod.com/
Thursday, May 15, 2008
என்று நாம் முன்னேறுவோம்?
Tuesday, May 13, 2008
வன்னியிலே கவி படித்த வானம்பாடி
தீட்சண்யனின் இறுதி ஊர்வலத்தில் நாவண்ணன்
மறைந்த கவிஞர் தீட்சண்யனின் இறுதி ஊர்வலத்துக்காக நாட்டுப்பற்றாளர் நாவண்ணன் அவர்கள் புலிகளின் குரல் வானொலியில் தானே தனது குரலில் வழங்கிய அஞ்சலிப்பாவின் ஒரு பகுதி
கவிஞர் தீட்சண்யன் 13.5.2000 இல் காலமானார்.
58க் கலவரத்துக்குள்தான் அவன் பிறந்தவனாம். தொட்டில் எல்லாம் வாங்கி வைத்து விட்டு அம்மாவைப் பிரசவத்துக்காக வடக்கே விட்டு வந்து பார்த்த பொழுதுதான் தொட்டில் எரிந்து கொண்டிருந்ததை அப்பா கண்டாராம்.
உடைமைகள் எல்லாம் கருகிப் போனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மட்டுமல்ல. கொழும்புத் தமிழர் பலருக்கும்தான்.
அவன் பிறந்த பலன்தான் எல்லாம் அழிந்து போய் விட்டது என்று சில வாய்கள் முணுமுணுத்தாலும் அவன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் முத்தானான். மூத்த பிள்ளை. மூத்த பேரப்பிள்ளை. மூத்த மருமகன். மூத்த பெறாமகன்... இப்படியே எல்லாவற்றிலும் அவன் மூத்தவனாய், முத்தானவனாய் மிளிர்ந்தான்.
எனக்கும்தான் அவன் மூத்தவன். அவன் இருந்த கருப்பைக்குள்தான் அவனுக்கு அடுத்து நானும் இருந்தேன். அவன் சுவைத்த அம்மாவின் மார்பகங்களைத்தான் நானும் சுவைத்தேன். அவன் கிடந்த மடிகளில்தான் நானும் தவழ்ந்தேன். அவன் சாய்ந்த தோள்களில்தான் நானும் தூங்கினேன். அவன் ஓடிய எனது வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நானும் கால் பதித்தேன்.
அவன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ராஜா. பிறேமராஜன் எனப் பெயரிட்டிருந்தாலும் ராஜன் என்றே அம்மா அவனை வாஞ்சையுடன் அழைப்பாள். அன்போடு அணைப்பாள். எல்லோருக்கும் அவன் ராஜன்தான். சிரிப்பும், துடிப்பும், அறிவும், குறும்பும், அழகும் அவன் கூடவே பிறந்தவை.
நேற்றுத் தோசை சுடும் போதும் வழமை போலவே அவன் பற்றிய சில நினைவுகள். இலுப்பெண்ணெய் காரன் எப்போது வருவான் என்று பார்த்திருந்து அம்மா அவனுக்காக இலுப்பெண்ணெய் வாங்குவாள். இலுப்பெண்ணெய் தோலில் ஏற்படும் பொருக்கு போன்ற தன்மையைப் போக்கி விடுமாம். இந்த விடயங்களிலெல்லாம் அம்மா கவனம். ஒவ்வொரு சின்ன விடயங்களையும் கவனிப்பது போலவே அண்ணனின் கால்களும், தோலும் வழவழப்பாக இருக்க வேண்டும், பொருக்கு வந்து விடக் கூடாது என்பதிலும் அவளுக்கு அதீத கவனம்.
இலுப்பெண்ணெய்யை சும்மா சாப்பிடவோ குடிக்கவோ முடியாதுதானே. கசக்கும். அதுவும் ஊர் இலுப்பெண்ணெய் நேரடியாகக் கையால் பிழிந்தெடுக்கப் பட்ட எண்ணெய். தடிப்பாயும், அதீத கசப்பாயும் இருக்கும். அதனால் அம்மா கையாளும் உத்தி தோசைக்கு இலுப்பெண்ணெய் ஊற்றி மொருமொருக்கச் சுடுவது. அப்படிச் சுட்டால் அண்ணனும் விரும்பிச் சாப்பிடுவான்.
அடுப்புக்குள் சுள்ளி முறித்து முறித்துப் போட்டு எரித்து, மொருமொருத்த தோசை சுடும் போது எங்கள் வீடு முழுக்க உழுந்துத் தோசையின் வாசம் கமகமக்கும்.
எண்ணெய் ஊற்றிச் சாப்பிடும் போது சுடச்சுடச் சாப்பிட்டால்தான் சமிக்கும் என்பதால் அம்மா ஒவ்வொருவராகக் கூப்பிட்டு சுட்டுச் சுட்டுப் போட்டுக் கொண்டிருப்பாள்.
முதல் உபயம் அண்ணனுக்குத்தான். முதல் இரண்டு தோசை சும்மா தோசை. அடுத்த ஒரு தோசை நல்லெண்ணெய்த் தோசை. அடுத்து இரண்டோ, மூன்றோ அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப இலுப்பெண்ணெய்த் தோசை. கடைசியாக ஆசைக்கு ஒரு நெய்த்தோசை. அண்ணன் ஒரு பிடிபிடித்து விட்டு வருவான்.
இலுப்பெண்ணெய் தோசையை விட நெய்த்தோசைக்கு சுவை அதிகம். ஆனாலும் அம்மா இலுப்பெண்ணெய் தோசையைத்தான் அண்ணனை அதிகம் சாப்பிட வைப்பாள். அதுதான் உடலுக்கும், தோலுக்கும் நல்லது என்பாள்.
அண்ணனின் கால்களும், தோலும் எப்போதும் ஒரு பளபளப்புடன்தான் இருக்கும்.
அம்மா பார்த்துப் பார்த்து வளர்த்த அவனது அந்தக் கால்களில் ஒன்றைத்தான் எங்கள் நாட்டுப் போர் ஒரு நாள் பறித்து விட்டது. இன்னொரு நாள் அவனது உயிரையும் பறித்து விட்டது.
நானே ஏமாந்து போனேன். எனக்குள்ளே சிதைந்து போனேன். ஏன் ஏன்..? என்ற விடை கிடைக்காத கேள்வியோடு மாரடித்து மாரடித்துத் துடித்துப் போனேன். சமயங்களில் துவண்டு போயும் கிடந்தேன். எனக்கே அப்படியென்றால் அவனைப் பத்து மாதம் சுமந்து, தன் உதிரத்தையே பாலாக்கி அவனை மனிதனாக்கிய எனது அம்மா எப்படித் துடித்திருப்பாள்? இன்னும் அவள் மனம் என்ன பாடுபடும்?
அவள் மட்டுமா? இன்னும் எத்தனை அம்மாக்கள்!
சந்திரவதனா
13.5.2008
Sunday, May 11, 2008
மே மாத யுகமாயினி பார்த்து விட்டீர்களா?

மே மாத இதழ்
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து மாதம் ஒரு இதழாக, பல்சுவை அம்சங்களுடன் யுகமாயினி வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஈழத்துக்கலைஞர் எஸ்.பொ அவர்களை நிறுவக ஆசிரியராகவும், சித்தன் அவர்களைப் பொறுப்பாசிரியராகவும் கொண்ட இவ்விதழில் ஈழத்துக் கலைஞர்களும், இந்தியக் கலைஞர்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
Friday, May 09, 2008
ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"
[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 06:21 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
சிறிலங்கா ஆட்சியாளர்களால் 1981 ஆம் ஆண்டில் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றி "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறுவட்டில் (DVD) தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் 50 நிமிடங்கள் ஓடக்கூடியது.
யாழ். நூலகம் எரியூட்டப்பட்ட 27 ஆவது ஆண்டு நாளான 31.05.08 அன்று உலகம் எங்கும் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது.
ஈழத் தமிழர்களின் பெரும் சொத்தாகவும், கல்விப்புலமையின் குறியீடாகவும் விளங்கிய யாழ். நூலகத்தின் வரலாறு, ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தது.
1933 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலத்தில் அந்த நூலகத்தின் வலிமிகுந்த வரலாறு இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனை சோமீதரன் உருவாக்கியுள்ளார்.
சிதைவுற்ற யாழ். நூலகத்தின் காட்சிகள், அங்கு பணியாற்றியோரின் வாக்குமூலங்கள், பத்திரிகை நறுக்குகள், உரைகள், கறுப்பு வெள்ளையிலான காணொளி நேர்காணல்கள், வரைபடங்கள், எடுத்துரைப்புக்கள் ஆகியவற்றுடன் "எரியும் நினைவுகள்" தொகுக்கப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் யேர்மன் மொழிகளில் எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
"நிகரி" தயாரிப்புக் குழுவினர் 2006 ஆம் ஆண்டில் இருந்து இதனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எண்பதுகளில் வாழ்ந்த, உணர்ந்த ஒரு தலைமுறையின் எரியும் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Quelle - Puthinam
Saturday, April 05, 2008
மாமி போய் விட்டாள்
எழுது எழுது என்று மனம் உந்தினாலும் எதுவோ தடுக்கிறது. எதை எழுத நினைத்தாலும் சில சொற்களுக்கு மேல் முடியவில்லை. ஏதோ ஒரு வெறுமை.
பிறப்பவர் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதி என்றாலும் எந்தப் பொழுதிலும் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனங்களால் முடிவதில்லை. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா! முடியவில்லை. எந்த மின்னஞ்சலுக்கும் பதில் எழுதவோ, எந்தத் தொலைபேசி அழைப்பையும் சந்தோசத்தோடு அணுகவோ முடியவில்லை.
எனது தம்பிமார் மாவீரர் ஆன போதோ, எனது அப்பா மரணித்த போதோ, என் அண்ணன் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் சென்று விட்ட போதோ ஆற்றொணாத் துயரில் அழுது புலம்பியது போல் இன்று நான் அழுது புலம்பவில்லை. துயரம்தான். மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லைத்தான். தாங்க முடிகிறது. ஆனாலும் மனதில் சூழ்ந்துள்ள வெறுமையில் இருந்து வெளியேற முடியவில்லை. மரணத்தை வெல்ல முடியாது என்ற உண்மை நன்கு தெரிந்திருந்தாலும் வென்றிருக்க முடியாதோ என்று மனசு நப்பாசை கொள்கிறது. கண்கள் அடிக்கடி பனிக்கிறது. சமயங்களில் கன்னங்களிலும் வழிகிறது.
தூரத்து மரணம் எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு துயரச் செய்தி மட்டுமே. அது ஒரு துன்பியல் நாடகம் போல அவரவர் மனங்களுக்கு ஏற்ப அவரவர்களைத் தாக்கி கண்ணீர் சிந்தவோ, மனம் வருந்தவோ வைக்கும். சில மரணங்கள் மனங்களைப் பிழிந்தும் எடுக்கும். இதை எல்லோரும் அறிந்தும் உணர்ந்தும் இருப்பார்கள். ஆனால் மிக மிக நெருங்கிய உறவின் மரணம், அதாவது மிக மிகப் பிரியமான அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, குழந்தை… என்று எவராவது ஒருவரின் மரணமும், அது தரும் சோகமும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. அனுபவித்து மட்டுமே உணரக் கூடியது.
அப்படியானதொரு ஆற்றொணாத் துயரில் என் பிரியமானவன் அமிழ்ந்து தவிக்கிறான். அவனுக்கு அழக் கூடத் தெரியவில்லை. எப்படி அவனை ஆற்றுவது என்று தெரியிவில்லை. தேற்றுவதற்கும் என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவன் துயரமே என்னிடம் பெருந்துயராய் படர்ந்து என்னைப் படுத்துகிறது.
மாமி (என் கணவரின் தாயார்) 3.4.2008 அன்று மரணித்து விட்டாள். நாற்பது வயதிலேயே கணவனை இழந்து விட்டாலும், மனதைரியத்தோடு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவள். தற்போது வயது 89. ஆனாலும் படுக்கையில் வீழ்ந்து விடாமல் கடைசி வரை சமையலில் இருந்து பல வேலைகளிலும் வீட்டில் பங்கேற்று வாழ்ந்து கொண்டிருந்தவள். இறப்பதற்கு முதல்நாள் கூட தொலைபேசியில் எம்மோடு பேசி விட்டு, போய் விட்டாள். ஆயிரக் கணக்கான மைல்களை அவசரமாய் ஓடிக் கடக்க முடியவில்லை. நியூசிலாந்தில் உயிரற்று அவள் உடல் இருக்கிறது என்ற உண்மையை ஏற்க மறுக்கிறது மனம். மாமியார் கொடுமைகளைப் பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். வாசித்திருக்கிறேன். ஆனால் என்றைக்குமே நான் அனுபவித்ததில்லை. நல்லவள். எம்மை விட்டுப் போய் விட்டாள்.
இதற்கு மேல் எழுத முடியவில்லை.
4.4.2008
Wednesday, April 02, 2008
இலக்கியப் போட்டி
தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு
வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.
அன்புடன் நண்பர்களுக்கு!
வணக்கம்!
ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது. இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.
தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின் வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.
வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.
போட்டிகளின் விபரங்கள் வருமாறு:
இலக்கியப் போட்டிகள்
சிறுகதை
கவிதை
கட்டுரை
நகைச்சுவை துணுக்கு
ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும்.
ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம். ஒவ்வொரு ஆக்கமும் உங்கள் சொந்தக் கற்பனையில் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்;
வேறெந்த ஊடகங்களிலும் பிரசுரமாகாத படைப்புகளாக இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பு படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.
போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி 2008 ம் ஆண்டு மே 31ம் திகதி.
சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:
1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய
ரூபாயும் வழங்கப்படும்.
பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில் பிரசுரமாகும்.
சிறுகதை:
ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம்.
ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
நடுவர்களின் முடிவே இறுதியானது.
கட்டுரை:
ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம். ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும்.
கட்டுரைகளுக்கான தலைப்புகள் :
பெண்ணியம்.
உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை.
தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.
உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?
ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்.
அரசியலில் பொது மக்களின் பங்கு.
இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான பாதை நோக்கியா? அழிவுப்பாதையை நோக்கியா?
இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?'
மெல்லத் தமிழினி....வாழும்?வீழும்?
கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப் படுத்த வல்லது?
தியானம் என்பது....!
நகைச்சுவைத் துணுக்கு:
ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும்.
ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 500.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.
கவிதை:
கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.
மரபுக் கவிதை. புதுக்கவிதை ஒவ்வொரு பிரிவிலும் ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான, இயல்பான
ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது)
1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக் குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு சமர்பிக்கப்படும்.
எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் thamizmakal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.
இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
*படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
நன்றி !
வணக்கம்!!
