Friday, April 29, 2005

அவளும் பெண்தானே!


தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தாள். அது வெறுமையாகவே இருந்தது. இன்றோடு மூன்று மாதம். காந்தன் அவளை விட்டுச் சென்று மூன்று மாதங்கள் சென்று விட்டன. அவளால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை.

காந்தனைப் பிரிவதென்பது காந்தனும் அவளுமாக முதலே பேசித் தீர்மானித்துக் கொண்ட விடயம்தான். ஆனால் ஐந்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பின்னான அந்தப் பிரிவு நியத்தில் இவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை அவளால் அப்போது கணிப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. - மிகுதி

Tuesday, April 26, 2005

கொக்கான் வெட்டுதல்


பாடசாலையில் படிக்கும் காலங்களில் எமக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் கொக்கான் வெட்டுதல் முக்கிய விளையாட்டாக இருந்தது. இதைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். மாங்கொட்டை போடுதல், சிப்பி, ஏரோப்பிளேன், இது தவிர கிளித்தட்டு, கெந்திப் பிடித்தல், றவுண்டெஸ் இவைகளும் எமது பாடசாலைகளில் முக்கிய இடத்தை வகித்திருந்தன. இவையெல்லாமே உடலை அசைத்து விளையாடும் விளையாட்டுக்கள். ஆனால் கொக்கான் வெட்டுதல் அப்படியல்ல. அது இருந்து விளையாடும் விளையாட்டு. ஏதாவதொரு விறாந்தை நுனியில் இருந்துதான் இதை விளையாடுவோம். சீமெந்து விறாந்தை இவ்விளையாட்டுக்கு உகந்தது. விறாந்தை இல்லாவிட்டால் டோங்கு(மார்பிள்) மேலெழும்பாது. (bumpபண்ணாது).

கொக்கான் வெட்டுவதற்கு ஒரு டோங்கும்(மார்பிள்), இரு சிறிய கற்களும் அல்லது ஒரு டோங்கும், நான்கு சிறிய கற்களும் வேண்டும். அனேகமாக எங்கள் எல்லோரதும் பாடசாலை சூட்கேசில் ஒரு டோங்கு, ஒரு சிற்பி, ஒரு நன்கு சப்பையான காய்ந்த மாங்கொட்டை என்பன இருக்கும். சூட்கேஸ் இல்லாதவர்கள் கொம்பாஸ் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.

வீட்டிலும் எப்போதாவது நண்பிகள் ஒன்று கூடும் போது கொக்கான் வெட்டி விளையாடுவோம். ஆனால் இவ்விளையாட்டை வீடுகளுக்குள் யாரும் வரவேற்பதில்லை. கொக்கான் வெட்டினால் வீட்டுக்குத் தரித்திரம் பிடிக்கும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள். "ஏன் தரித்திரம் பிடிக்கும்?" என்ற எனது கேள்விக்கு யாருமே இதுவரை பதில் சொல்லவில்லை.

ஆனால் இவ்வளவு தூரம் எமக்குப் பிடித்தமான விளையாட்டு உலகளவில் பலருக்கும் தெரியாமல் இருப்பதுதான் ஏனென்று தெரியவில்லை. அமெரிக்காவைப் பார்த்தால் கண்ட கண்ட விளையாட்டுக்களை எல்லாம் உலக வெற்றிக் கிண்ண விளையாட்டு என்று அறிவித்துப் போட்டியாக வைத்து விடுவார்கள். எங்கள் விளையாட்டுக்களில் இந்த கொக்கான் போல் உலகளாவாத எத்தனை விளையாட்டுக்கள் இருக்கின்றன.

இந்தக் கொக்கானை மட்டும் உலக வெற்றிக் கிண்ணப் போட்டியாக்கியிருந்தால் எங்கள் பெண்களில் எத்தனை பேர் சம்பியன் ஆகியிருப்பார்கள்.

சந்திரவதனா
26.4.2005

Monday, April 25, 2005

வடலி ஐந்தாவது அகவையில்


ஏப்ரல் மாத வடலி வழமை போலவே நிறைந்த கட்டுரைகளுடன் எனைத் தேடி வந்துள்ளது. சின்னச் சின்னதாக நிறையத் துணுக்குச் செய்திகளும் சிறிய கட்டுரைகளும் பெரிய கட்டுரைகளும் என்று அறிந்து கொள்வதற்கு
தாராளமாகக் கிடைத்தன.

ஆரப்பல்லி போல அணைந்து வாழ்ந்தேனோ
இதைப் புறநானூற்றில் பலரும் படித்திருப்பீர்கள். ஆனாலும் செ.சிறீஸ்கந்தராஜா அவர்கள் நல்ல விளக்கத்தோடு எழுதியுள்ளார். புறநானூறில் வந்த ஒரு பாடலை வைத்தே அவர் இவ்விளக்கத்தைத் தந்துள்ளார். இதில் என்னைக் கவர்ந்தது பல்லி பற்றிய விடயம். தாய் நாட்டுக்கான போரிலே மாண்ட ஒரு வீரனின் மனைவி பாடுவது போலத்தான் இப்பாடல் அமைந்துள்ளது.

கலம் செய் கோவே கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே
(புறநானூறு 256)

இன்பத்திலும் துன்பத்திலும் தன்னோடு கூட இருந்தவனை, இறக்கும் போது விட்டுப் போக மனமின்றி தானும் அவன் கூடவே சென்று விடத் துணிந்த. பெண் காட்டிய சில்லில் அகப்பட்ட பல்லியின் உதாரணம் நன்றாக உள்ளது.
வண்டில் சில்லிலே தொற்றிக் கொண்ட பல்லியின் கதி எப்படி இருக்கும்? எருதினால் இழுக்கப் படுகின்ற வண்டிலின் சில், ஒரு பயணத்தின் போது எத்தனை முறை சுற்றும் என்பதையோ, அது எந்தச் சேறிலும் சுரியிலும் உருளும் என்பதையோ, எத்தகைய பள்ளங்களிலும் மேடுகளிலும் ஏறி இறங்கும் என்பதையோ கணக்கிட முடியாது. இந்த நிலையில் சில்லோடு பொருந்திய குற்றத்திற்காய், பல்லி நலுங்கியும் குலுங்கியும் வதை படுமே தவிர தனக்குத் தங்க இடம் தந்த சில்லை விட்டு ஓடி விடாது சில்லிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.

ஒருவர் தாழ்ந்து போனதும் அவரை விட்டு மெதுமெதுவாக நழுவி விடும் எமது மனித சமூகத்தோடு பார்க்கும் போது இந்தப் பல்லி...... வியப்பாயிருக்கிறது.

இவனெல்லாம் ஏன் படமெடுக்க வருகிறான் என்றோ இவனுக்கேன் கவிதை என்றோ எம்மில் பலர் அலுத்துக் கொள்கிறோம். பாலுமகேந்திராவும் அலுத்திருக்கிறார். இந்தக் வரிகளை அவர் படிக்கும் வரை
அழகான குரலெடுத்து
குயில்கள் மட்டுந்தான்
பாட வேண்டுமென்றால்
இந்தக் கானகம்
நிசப்தமாகி விடும்.
(றீடெர்ஸ் டையஸ்ரில் இருந்து இயக்குனர் பாலுமகேந்திரா
ஓவியர் புகழேந்தியின் "சிதைந்த கூடு" ஓவியக் கண்காட்சித் தொடக்க விழாவில்)

இதைப் படித்த பின்தான் பாலுமகேந்திரா ஒன்றைப் புரிந்து கொண்டார். காடு என்பது எல்லாப் பறவைகளுக்குமானது. இதில்கள் குயில்கள் மட்டுந்தான் பாடவேண்டும் என்றோ கிளிகள் மட்டுந்தான் பேச வேண்டுமென்றோ எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. எல்லாப் பறவைகளும் பாடினால்தான் அது கானகம். எப்போதாவது எங்கேயாவது குயிலின் பாடலைக் கேட்டால் ரசிப்போம். தலைக்கனம் மிக்க கலைஞர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம்.

இருமலைச் சொக்களேட் கட்டுப் படுத்துகிறது.
ஆச்சரியமாக இல்லை! உங்களுக்கு எப்படியோ..? எனக்கு ஆச்சரியம்தான்.
தொடர்ச்சியான இருமல் என்றால் இருமலைக் கட்டுப் படுத்த சொக்கிளேட் சாப்பிடும் படி சொல்கிறார்களாம் லண்டன் இம்பிரீயல் கல்லூரி மருத்துவர்கள். இருமலால் பாதிக்கப் பட்ட பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து இவர்கள் பரிசோதனை செய்தார்களாம். உடனடியாகவே எட்டுப் பேருக்கு இருமல் நின்று போனதாம்.

வழமையாகப் பாவிக்கும் கோடினே என்ற பொது மருந்தை விட சொக்கிளேட்டுக்கு இந்த இருமலை நிற்பாட்டும் சக்தி அதிகமாக இருக்கிறதாம். சொக்களேட்டில் சேர்க்கப் படும் கொக்கோவில் உள்ள தியோ புரோமைன் என்ற பொருள்தான் இருமலைக் குணப்படுத்துகிறதாம். வழக்கமான இருமல் மருந்தை விட இரு மடங்கு நிவாரண சக்தி சொக்ளேட்டுக்கு இருக்கிறதாம். எதற்கும் பரீட்சித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

இன்னும் பல தகவல்கள் ஏப்ரல் மாத வடலியில்.

சந்திரவதனா
25.4.2005

Saturday, April 23, 2005

அவர்கள் வரவில்லை


காற்றோடு கை கோர்த்து ஊர்க்கோலம் போகின்ற மகரந்தத் துகள்களுக்கு என் நாசித்துவாரமும் பாதையாகிப் போனதில் தொண்டைக்குழி வரை மசமசத்தது. விடுப்புப் பார்ப்பதே வேலையாக இருந்ததில் விழிகளும் சிவந்தன.

"அக்கா சித்திரைக்குப் பொங்கியாச்சே... "
பாதையில் ஒரு தமிழன் பாசமாய்க் கேட்டான்.

"...ம்ம்ம்..." காலைப் பரபரப்பில் பாணைக் கடிக்கவே மறந்தேன் என்றால் நம்புவானா...! பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுக்காய் அழுதேன் என்றால் நம்புவானா...! கற்தரையில் எம்மவர் நித்திரை கொள்வதை ஊர்க்கடிதம் சொன்னதில் தொடங்கி இந்திய வல்லூறுகள் எம்மவரை உயிர் வதம் செய்வதில் தொடர்ந்து... செம்மணிப் புதைகுழியில் எம் பெண்மணிகள் புதைந்தது வரை... சத்தியமாக நான் சித்திரைக்குப் பொங்கவில்லை என்றால் நம்புவானா...! - மிகுதி

Wednesday, April 20, 2005

அழகி


அழகி படத்தை அருமையான படம் என்று எல்லோரும் புகழ்ந்தீர்கள்.
ஒரு படம் அருமையாவதற்கு கரு மட்டும் காரணமல்ல என்றாலும், அதன் கருவை அனேகமான ஆண்கள் எல்லோருமே வரவேற்றீர்கள்.

இப்போது எனது கேள்விகள்
1) தேவயானி தனது பள்ளிப் பருவத்து நட்பையும் காதலையும் மையப் படுத்தி, ஒருவனை வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருந்தால் பார்த்திபனின் நிலைப்பாடு எந்த வகையில் வெளிப்படும்? நீங்கள் அதை எந்த வகையில் வரவேற்பீர்கள்?

2) பார்த்திபனின் நிலையில் நந்திதா இருந்து, பார்த்திபனைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்திருந்தால் நந்திதாவின் கணவர் என்ன செய்திருப்பார்? அல்லது நீங்கள்தான் என்ன சொல்லியிருப்பீர்கள்?

ஆட்டோகிராப்


ஆட்டோகிராப் படத்தில் சேரனது வாழ்வில் குறுக்கிட்ட மூன்று பெண்கள் பற்றிச் சொன்னார். அதே போல ஒரு பெண் தன் வாழ்வில் குறுக்கிட்ட மூன்று ஆண்கள் பற்றிச் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்கான உங்கள் எதிர்வினை எப்படியிருக்கும்?

Friday, April 15, 2005

ஒரு பேப்பர் - 20 (April1-14,2005)


கற்பகதரு பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அப்படித்தான் இப்போ ஒரு பேப்பரும். அது தன் உச்சப் பயன்பாடு வரை சென்றிருக்கிறது. பொரித்த மீனை வைக்கவும், மாவரிக்கவும் கூட அது உதவுகிறது. நீங்களும் தாராளமாகப் பயன் படுத்தலாம். அச்சடிக்கப் பட்ட மை பொரித்த மீனிலோ மாவிலோ ஒட்டிக் கொண்டு உங்களுக்குத் தெரியாமலே உங்கள் உடலுக்குள் நச்சுத் தன்மை காவப் பட்டால்.. அதற்கு நான் பொறுப்பல்ல.


சரி இனி விடயத்துக்குள் வருகிறேன்.
வழமையான விடயங்கள்தான். அவற்றுள் சிலவற்றைத் தொட்டுள்ளேன்.

மெல்லத் தமிழ் இனிச் சாகும்.
எல்லாளன் சபித்திருக்கிறாரா..! அல்லது சாபமிட்டிருக்கிறாரா...! புரியவில்லை.

நான் ஜேர்மனியில் ஒரு ரெனிஸ் ஆட்டத்தைப் பார்க்கிறேன் என்று வைப்போம். அங்கு ஒரு அமெரிக்கரும் ஒரு ஜேர்மனியரும் போட்டியிடுகிறார்கள் என்றால் நான் ஜேர்மனியர் வெல்ல வேண்டுமென்றுதான் நினைப்பேன். ஏனெனில் நான் ஜேர்மனியில் வாழ்கிறேன். அது எனக்குத் தஞ்சம் தந்த நாடு. என்னவானாலும் ஜேர்மனிக்கு அடுத்தபடிதான் அமெரிக்கா. அதனால் ஜேர்மனியர்தான் வெல்ல வேண்டும். மனசு ஜேர்மனியரையே சப்போர்ட் பண்ணிக் கொண்டு இருக்கும்.

இதே ஜேர்மனியருடன் ஒரு இந்தியர் விளையாடுகிறார் என்று வைப்போம். என்ன இருந்தாலும் இந்தியர் ஒரு ஆசியன் அல்லவா. நானும் ஆசியன்தானே. இத்தனை வசதி படைத்த ஜேர்மனிக்கு வந்து எனது ஆசிய இனத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர் தோற்பதா? ம்கும்.. ஒரு நாளும் கூடாது. இப்போ எனது மனம் முற்று முழுதாகச் சப்போர்ட் பண்ணுவது அந்த இந்தியருக்குத்தான்.

இதே இந்தியரும் ஒரு இலங்கையரும் விளையாடுகிறார்கள் என வைப்போம். இப்போ எனது மனம் கண்டிப்பாக இலங்கையருக்குத்தான். எனது நாட்டவரல்லவா...! சும்மா இருக்குமா மனம். அவர் வெல்ல வேண்டும் என்பதற்காக தன்னையறியாமலே பிரார்த்தனை கூடச் செய்யும்.

இதே இலங்கையர் கொழும்பைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு யாழ்ப்பாணத்தவரோடு விளையாடினால் எனது மனம் யாருக்கு என்பதை நான் சொல்லத் தேவையில்லை. கண்டிப்பாக யாழ்ப்பாணத்தவருக்குத்தான்.

அதே யாழ்ப்பாணத்தவர் எனது ஊரான பருத்தித்துறையோடு விளையாடினால்... அப்போது சிறிதேனும் சந்தேகமின்றி என் மனம் பருத்தித்துறையோடுதான்.

இதே பருத்தித்துறை ஆள் எனது வீட்டுக்குள் உள்ள எனது உறவு ஒன்றோடு விளையாடினால்... சொல்ல வேண்டுமா என் மனம் பற்றி.

இப்போது இதையேன் சொன்னேன் என்றால்...
இந்த மனம் இருக்கிறதே அதைப் போலச் சுதந்திரவாதி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அதே அளவுக்கு சுயநலவாதியும் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அது அப்படித்தான் நினைக்கும். தன் சார்ந்துதான் எதையும் சிந்திக்கும்.

அப்படியிருக்க கொஞ்சம் யோசியுங்க.. என்று சொல்லி எல்லாளன் எழுதியிருக்கும் "எமது பூநகரி மொட்டைக் கருப்பன் அரிசிக்கு ஒரு இந்திய நடிகையை வைத்துத்தான் விளம்பரம் செய்ய வேண்டுமா..?" என்ற கேள்வி சரிதான். அவரது அந்தக் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். அந்த விளம்பரத்தை பூநகரிப் பெண்ணையே வைத்தோ, அல்லது புலம் பெயர்ந்த இலங்கைப் பெண்ணையே வைத்தோ செய்திருக்கலாம்.

அதுக்காக "அமெரிக்க நடிகர் Tom Cruise ஐ அமெரிக்கர் என்பதால் தள்ளி வைத்து, சாருகான் இந்திய நடிகர் என்பதால் தலையில் தூக்கி வைப்பது ஏன்...?" என்று கேட்கிறார். இதில் எந்த சூட்சுமமும் இல்லை. மேலே குறிப்பிட்ட ரெனிஸ் தத்துவம்தான் இதற்கும் பதிலாய் அமையும்.

ஊடகங்கள் இந்தியப் படைப்புக்களுக்கும், இந்திய நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் திறமைகள் காட்டில் எறித்த நிலவாய் வீணாகிப் போவதை மறுப்பதற்கில்லை. TTNஇல் போகும் படலைக்குப் படலை போன்ற யதார்த்தமான நிகழ்ச்சிகளை எம்மவர்களால் தர முடியும். இருந்தும் ஊடகங்கள் பெண்களை அடிமைப் படுத்தும் விதமாகவும், பெண்களை கேவலப் படுத்தும் விதமாகவும் தயாரிக்கப் படும் இந்தியத் தொடர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவைகள் எம்மவருக்கான வாய்ப்புக்களை எந்தளவுக்குப் பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதையும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்.

அதற்காக எல்லாளன் கொடுத்த உதாரணங்களும் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற வாய்ப்பாடும் ஏற்புடையதாய் இல்லை.

இங்கு ஊடகங்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. எங்கள் புலம் பெயர்ந்த பெண்களும் இவைகளை விழுந்து விழுந்து பார்க்கிறார்களே... அவர்களை என்ன சொல்ல...!

ஆன்மீகம்
செல்வநாயகியின் எது ஆன்மீகம் என்றொரு கட்டுரை தொடராக வருகிறது. ஆன்மீகம் என்றால் மற்றப் பக்கமாய் ஓடுபவர்களை இழுத்து நிறுத்தி, இதுதான் ஆன்மீகம் என்று சொல்லும் விதம் அருமை. கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுபவன்தான் ஆன்மீகவாதி என்றில்லை... அன்பால்... என்ற கருத்துப் பட எழுதப் படும் அக்கட்டுரை உண்மையிலேயே என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஒளியின் பதிவுகள் பற்றிய கமரா பயனுள்ள கட்டுரையாகத் தொடரும் என்றே நம்புகிறேன்.

பெற்ற(து) சுமை.
நல்லதொரு கதை. கனடாவிலிருந்து தம்பிதாசன் எழுதியிருக்கிறார்.
புலம்பெயர்ந்த நாமல்ல. எம்மைப் பெற்று வளர்த்து, தாலாட்டிச் சீராட்டித் தலைநிமிர வைத்தவர்கள். அவர்கள் புலம்பெயர்ந்த மண்ணில் படும் அவலங்கள். எவனோ ஒருவனின் துப்பாக்கிக்கு இரையாகியிருந்தால் கூட அவர்களின் மனங்கள் இத்தனை துயரைச் சுமந்திருக்க மாட்டா. பெற்றவர்களிடமே சுமை போலான நிலையில்.. நல்ல கருவொன்றைக் கதையாக்கியிருக்கிறார் தம்பிதாசன்.

அறுவைப்பக்கத்தில்
யாருக்காவது தலையில் குட்டு வேண்ட ஆசையென்றால் தலையைச்சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாக அல்வாசிட்டி விஜய் இடம் போங்கள்.

கொதிகிழப்பல்
இலங்கை வானொலியின் பாரபட்சமனா தன்மையில் வன்னியன் கொதிப்படைந்திருக்கிறார்.

இன்னும் பல......

Thursday, April 14, 2005

அவளை மாதிரிச் சிரியன்


தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளப் பெண்மணி
சிரித்துச் சிரித்து நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருக்கிறார்.

அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தார்
"பாரடி அந்தப் பெண்ணை. என்னமாச் சிரிச்சுக் கொண்டிருக்கிறாள்.
பார்க்கவே சந்தோசத்திலை மனசு நிறையுது. நீயும் இருக்கிறியே..!
எப்ப பார்த்தாலும் மூஞ்சையை உம் மெண்டு வைச்சுக் கொண்டு.."

"ம்..கும் அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல."

"என்ன அப்பிடி.. அவ்வளவு திடமாய் சொல்லுறாய்...!"

"இப்பிடி உலகமே பார்க்கக் கூடியதாச் சிரிச்சுப் போட்டு வீட்டை போனால் அவளின்ரை புருசன் சும்மா இருப்பானே..?"

"குத்திக் காட்டிறாயாக்கும்."

"நான் குத்தவும் இல்லை. வெட்டவும் இல்லை. உண்மையைச் சொல்லுறன்."

"இஞ்சைபார். இந்தக் குத்தல் கதையளை மட்டும் விட்டிடு.
உன்னையென்ன ரீவீ ஸ்ரேசனுக்குப் போய் சிரிக்கச் சொல்லுறனே.
வீட்டிலையிருந்து அவளை மாதிரிச் சிரியன்."

அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்.

சந்திரவதனா
sep-2004

இது ஏற்கெனவே நான் வலைப்பூ நட்சத்திரமாக Sep-2004இல் இருந்த போது எழுதியதுதான். ஆனால் இது எனது பதிவில் இல்லை. அதனால் இங்கு பதிகிறேன்.

Monday, April 04, 2005

திசைகள் மார்ச் 2005 - ஒரு பார்வை


ஏப்ரல் மாதத் திசைகள் வெளி வந்து விட்டது.
அதில் இடம் பெற்ற
மார்ச் மாதத் திசைகள் பற்றிய எனது பார்வை.

பலகாலமாகப் பெண்கள் எழுதிக் கொண்டிருந்தாலும் இதுவரை காலமும் எழுத்துலகமே ஆண்களுக்கானது போன்ற ஒருவித பிரமை எம்மிடையே உலாவி வந்துள்ளது. பழமொழிகள் என்றால் என்ன! பாடல்கள் என்றால் என்ன! கட்டுரைகள் என்றால் என்ன! எதுவானாலும் பெரும்பாலும் ஆண்களாலேயே முன்மொழியப் பட்டு, அவை பெண்களை அடக்குவதாகவும், பெண்களுக்கு "அடங்கிப் போ!" என்று புத்தி கூறுவதாகவும், பெண்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்கள் எடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடிக்கும் நாம்தான்படி அமைத்துக் கொடுக்கிறோம் என்பது போலாகவும், எழுதப் பட்டுக் கொண்டிருந்தன.

காலங்காலமான அந்த எழுத்துக்களை உடைக்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிலரால் சஞ்சிகைள், பத்திரிகைகள் என்று உருவாக்கப் பட்டு முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களுடன் அவை பெண்களின் பிரச்சனைகளைப் பேசுவதாயும், பெண்களுக்குத் தைரியமூட்டுவதாயும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதற்கான எதிர்ப்புக் குரல்கள் ஒவ்வொரு வெளியீட்டின் போதும் வெளியில் கேட்கவும் தவறுவதில்லைத்தான். இருப்பினும் இதை எப்படி வெளியில் சொல்வது? என்று தயங்கும் எத்தனையோ பெண்களுக்கு இப்படியான சஞ்சிகைகள்தான் தைரியத்தைக் கொடுத்து அவர்களின் மௌனத்தைக் கலைத்திருக்கின்றன..

இந்த நிலையில் மாலன் அவர்கள் இணையத்திலே பெண்களுக்கான ஒரு இணையச் சிறப்பிதழை, பெண்களின் ஆக்கங்களைக் கொண்டு தயாரித்தது மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. 27பெண்கள் தமது படைப்புக்களைக் கொடுத்திருக்கிறார்கள். சிந்தனைகள், உணர்வுகள், பார்வைகள், கருத்துக்கள்... என்று அவை வெவ்வேறு கோணங்களிலிருந்து வந்துள்ளன. எழுதியவர்களில் அனேகமானோர் ஓரளவுக்கேனும் தமது கருத்துக்களைத் துணிந்து வெளியில் சொல்பவர்களேயானாலும், அவர்களுக்கு மீண்டும் திசைகள் மூலம் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்த மாலன் அவர்களுக்கு நன்றி கூறிக் கொண்டு இதழினுள் நுழைகிறேன்.

அவ்வ்வ்வவ்வவ்வவ்வவ்வளவும் பெண்கள் என்ற தலைப்போடு அழகிய முகப்பு. பவித்ரா சிறீனிவாசனின் கருத்தாழமிக்க சுயம் என்ற வர்ணஓவியம் திசைகளின் முகப்புக்கு அழகோடு மெருகூட்டுகிறது.

உள்ளே படைப்பாளிகள் பற்றிய சிறு அறிமுகம் பெயரளவிலும் படைப்புகள் வாயிலாகவும் மட்டும் தெரிந்த 27பேரை ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஒவ்வொருவரையும் பற்றி வாசித்துவிட்டு இன்னும் உள்ளே போனால் எதை முதலில் வாசிப்பது என்று மனசு தடுமாறுகிறது. அனேகமான எல்லோருமே ஏதோ ஒரு வகையில் எழுத்துக்களால் எம்மைக் கவர்ந்த, எழுத்துலகினூடு எமக்கு அறிமுகமானவர்களே.

நான் முதலில் தேர்ந்தெடுத்தது அனிற்றா நாயர் எழுதிய "ஒரு தேடல் ஒரு பயணம் ஒரு அனுபவம்" - Ladies Coupe - நூலுக்கான ஜெயந்தியின் விமர்சனம். தினமும் எத்தனையோ எழுத்துக்களை வாசிக்கிறோம். அவற்றில் சில எழுத்துக்கள் எம்மனதில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில எழுத்துக்கள் அமைதியையும் வாசித்தோம் என்ற ஒரு ஆழ்ந்த திருப்தியையும் ஏற்படுத்துகின்றன. சிலது கோபத்தையும் எரிச்சலையும் கூட ஏற்படுத்துகின்றன. ஆனால் எந்த ஒரு விடயத்தையும் அழகாகவும் வாசித்த திருப்தி ஏற்படும் விதமாகவும் எழுத முடிவது எழுத்தாளனின் திறமையே. அந்த வகையில் ஜெயந்தியின் ஒரு தேடல் ஒரு பயணம் ஒரு அனுபவம் - Ladies Coupe - நூல் விமர்சனத்தை வாசித்து முடிந்ததும் மிகுந்ததொரு திருப்பதி ஏற்பட்டது. ஜெயந்தி தான் அந்த கதையை மிகவும் ரசித்து வாசித்ததோடு நின்று விடாமல் தனது உணர்வுகளை ரசனை கலந்து எங்களுக்கும் தந்துள்ளார். கதாநாயகி அகிலாவின் பிரச்சனைகளையே மையமாகக் கொண்டு கதை விரிந்திருந்தாலும்.. கதையை வாசித்த பின் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு நிறைவு மனசுக்குக் கிடைத்தது. சில நாட்களாக அக்கதையைச் சுற்றி மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜெயந்தியின் எழுத்துக்களும் சொற்பிரயோகங்களும் கூட மிகுந்த தரமாக அமைந்திருந்தது அதற்கொரு காரணமாயிருக்கலாம்.

சிறுகதைகளில் - வாசித்ததும் நிலாவின் "தகப்பன் சாமி" பிடித்துப் போனது. தமது மனைவியரை தமது உடைமைகளாக நினைக்கும் கணவன்மார்கள், தமது மகளை கணவனுடன் அனுப்பி விட்டு ஒரு அப்பாவாக நிற்கும் போதுதான் சில விடயங்களை உணர்ந்து கொள்கிறார்கள். இதில் நிலா தானே மகளாக நின்று கதையைக் கொண்டு செல்கிறார். அம்மாவை அடக்கி வைக்கும் அப்பா... அம்மாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பவே விரும்பாத அப்பா.. அதாவது கண்ணுக்குத் தெரியாத விலங்கை அம்மாவுக்கு மாட்டி, அம்மாவோடு குடித்தனம் நடத்தும் அப்பா.. அதைக் கண்டு மனசு பொறுக்காத மகளாக நின்று தனது கணவனோடு சேர்ந்து பாடம் புகட்டி வாழ்வையும் அம்மாவின் உணர்வுகளையும் கதையினூடாகப் புரிய வைக்கும் விதம் அருமை.

லதாவின் "நாளை ஒரு விடுதலை" சிங்கப்பூரில் வீட்டில் வேலை செய்பவளாக அவஸ்தைப்படும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. அந்நிய தேசத்தில் அந்நியளாய் நின்று கூசிப் போவது ஒரு புறமிருக்க, வீட்டில் முதலாளி அம்மாவிடம் வேலைக்காரியாகப் படும் அவஸ்தை மறுபுறம். இவைகளோடு பெண் என்பதால் முதலாளி ஐயாவின் சபலத்துக்கும் தப்பாத... பணத்துக்காகப் புலம் பெயர்ந்து அரேபிய நாடுகளிலும் சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் வாழ்வைத் தொலைத்த பல பெண்களின் கதைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

ஷைலஜாவின் "படிப்பு" சிறுகதையில் - பிஎஸ்ஸி படித்த ஒரு பெண் சீதனம் கொடுத்தால்தான் காதலன் கைபிடிப்பான் என்பதற்காக தனது அண்ணனின் மனதைப் பற்றிச் சிறிதேனும் சிந்திக்காமல் கொடுக்கத் தயாராகிறாள். அதே நேரம் ஒரு படிப்பறிவில்லாத பெண் அண்ணனின் நிலத்தைக் கொடுத்துத்தான் கல்யாணம் என்றால் அப்படி அண்ணனின் நிலத்துக்கு ஆசைப்படும் மாப்பிள்ளை தனக்கு வேண்டாமென மறுக்கிறாள். படிப்பினையூட்டும் ஒரு கதை. படிப்பறிவில்லாத இந்தப் பெண்ணின் தைரியமும் திடமும் எல்லாப் பெண்களுக்கும் வரவேண்டும். சீதனம் என்று வரும் போது சீதனம் கேட்பவனை மணமுடிக்க மாட்டோ ம் என்று ஒட்டு மொத்தப் பெண்களுமே ஒத்து நின்றால் இந்தச் சீதனம் இன்று வரை நிலை கொண்டு நிற்குமா..?

தொடர்ந்த மற்றைய சிறுகதைகளும் நல்ல கருப்பொருட்களையே கொண்டுள்ளன. பெற்றோர்கள் பிரிவதால் பிள்ளைகள் மனசால் தனித்துப் போவதை ரமா சங்கரனின் "புகையும் தனிமை" சொல்கிறது.

புலம் பெயர்ந்து நமக்கு நாமே என்று இருக்கும் நிலையில், பலர் அக்கரைப் பச்சை தேடி இருந்த குடும்ப உறவையும் தொலைத்து நிற்கும் சோகம் புலத்தில் அவ்வப்போ நிகழத் தவறுவதில்லை. றஞ்சியின் "அக்கரைப்பச்சை" அப்படியொரு சோகத்தைத்தான் சொல்கிறது. நல்ல எதிர்காலத்தை கனடாவில்தான் தேட முடியும் என்ற நினைப்பில் மனைவியையும் குழந்தையையும் கனடாவுக்கு அனுப்பி மனைவியையும் தனிமைப் படுத்தி சுவிஸில் தனது நிகழ்காலத்தையும் தொலைத்த ஒருவரின் கதை இது.

ஜனகாவின் "உதிரிப்பூக்கள்" மலர்க்கடையில் எஞ்சிப் போன உதிரிப்பூக்கள் போல, சொந்த பந்தமின்றிப் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளை, தான் வளர்க்க நினைக்கும் ஒரு நல்மனதின் கதை.

இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் "மேதகு வேலுப்போடி" பூசாரிகளின் தில்லுமுல்லுகளைச் சொல்கிறது.

கவிதைகள் ஏழு இடம் பிடித்துள்ளன. ஏதோ ஒரு லயமும், மெலிதான சோகமும் கவிதைகளில் படர்ந்திருக்கின்றன. கருப்பொருளில் ஜெஸிலா ரியாஸின் வேலைப்பளு என்னைக் கவர்ந்தது.

கட்டுரைகளில் அறிவியல், பொருளாதாரம், பிரச்சனை, உரிமை என்று வெவ்வேறு கோணங்களிலான நான்கு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கற்பகம் இளங்கோவின் அறிவியல் கட்டுரையோடு, பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டதுதானே என்று பேசப்படும் உலகில் உள்ள ஊனமுற்ற பெண்களின் பிரச்சனைகளை பத்மா அரவிந்தும், பணியிடத்தில் பெண்கள்
எதிர்கொள்ளும் பிரச்சனைகளை செல்வநாயகியும்
தந்துள்ளார்கள். பெண்விடுதலையின் முதற்படிகளில் கல்வியும் சுயதொழிலும் முன் நிலையில் நிற்கின்றன. இந்தச் சுயதொழில் என்பது மூலை முடுக்குகளிலுள்ள எத்தனையோ பெண்களை தலை நிமிர வைத்துள்ளது. அச் சுயதொழிலுக்கான மூலதனமான நுண்கடனால், பெண்கள் எப்படி நன்மை பெற்றார்கள் என்பதையும், அது எப்படி எங்கே ஆரம்பித்தது என்பது பற்றியும் அருணா ஸ்ரீநிவாசன் தந்துள்ளார்.

குட்டி ரேவதியின் முலைகள் கவிதைத் தொகுப்பு சம்பந்தமான விவாதம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. புதியமாதவி, வைகைச்செல்வி, உஷா ராமச்சந்திரன், திலகபாமா ஆகியோர் இவ்விவாதத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். நால்வரும் சொன்ன பெரும்பாலான கருத்துக்களோடு என்னால் உடன் பட முடிகிறது. உஷா ராமச்சந்திரன் குறிப்பிட்டது போல இப்படிதான் எழுத வேண்டும் என்று யாருக்கும் சட்டதிட்டங்கள் சொல்ல முடியாது. ஆனால் படைப்பின் நோக்கம் முற்றிலும் திசைமாறிப் போவதில் அர்த்தம் இல்லை. குட்டி ரேவதியின் நோக்கம் திசைமாறியதா...? அது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் குட்டிரேவதியின் அக்கவிதைத் தொகுப்பை நான் வாசிக்கவேயில்லை. அதனால் அவர் எந்த நோக்குடன் அக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் என்றோ, என்ன நிலையில் அதனுள்ளான கவிதைகளை எழுதினார் என்றோ எதற்காக அந்தப் பெயரை வைத்தார் என்றோ என்னால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. இந்த நிலையில் அத்தொகுப்புப் பற்றிய எனது எந்தக் கருத்தையும் முன் வைக்கவும் முடியவில்லை.

ஆனால் எதையும் நாம் எழுதுவோம் யார் கேட்பது என்பது போன்றதான வீம்பும் அழகானதல்ல. ஏனெனில் பெண்விடுதலை என்பது ஆண்களோடு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கும் ஒரு விடயமே அல்ல. காலங்காலமான நடைமுறைகளில் ஆண்கள் ஆளுமைக்குரியவர்கள் என்பது போலவும் பெண்கள் அடங்கிப் போக வேண்டியவர்கள் என்பது போலவும் பிரமைப் படுத்தப்பட்டு அதனூடும் அதற்குச் சார்பாகவுமே எல்லா விடயங்களும் இசைவு பெற்று விட்டன. அந்த இசைவாக்கத்திலிருந்து ஆண்கள் விடுபடவும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து பெண்களும் மனித ஜென்மங்கள்தான் என்பதை உணர்ந்து செயற்படவும் ஏற்ற வகையில் அவர்களுக்குப் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நாங்கள் இதற்குத்தான் லாயக்கானவர்கள் எனத் தம்மைத் தாமே தாழ்த்தி நினைக்கும் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுத்து, உன்னால் முடியாதது எதுவுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். இவைகள்தான் பெண்விடுதலையின் அத்திவாரங்களாக அடியெடுக்கின்றன. அதைப் பெண்கள் மறந்து போய் விடக் கூடாது.

சந்திரவதனா
யேர்மனி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite