Wednesday, September 24, 2008

கடந்து வந்த நமது சினிமா - 1

- மூனா -

இலங்கைத் திரைப்படத்துறை தனது ஐம்பதாவது ஆண்டு விழாவை 1997இல் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது. ஆனாலும் சிங்களத் திரைப்படத்துறை வளர்ந்த அந்த ஆரோக்கியமான தன்மையை இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை கொண்டிருக்கவில்லை. சிங்களத் திரைப்படைப்புக்கள் சர்வதேசத்துக்கும் தனது படைப்புக்களைக் காட்டி நின்ற போது தமிழ்த் திரைப்படத்துறை உள்ளூருக்குள்ளேயே காணாமல் போயிருக்கின்றது. ஆனாலும் இன்றுள்ள நிலையில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறையை வளர்த்தெடுக்கும் ஆர்வம் பலரிடம் தோன்றியுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

இலங்கையின் திரைப்படத் துறையின் ஆரம்பகாலம் முற்று முழுதாக இந்தியாவையே சார்ந்திருந்தது. அதிலும் சுதந்திரம் கிடைத்து நீண்ட ஆண்டுகளாக இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறையினைப் பற்றி யாரும் அதிகளவு சிந்தித்ததாகத் தெரியவில்லை. கணிசமான தமிழ்த் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் உருவானதால் அதில் எங்களவர்கள் திருப்திப்பட்டுப் போயிருக்கலாம். அல்லது இலங்கையில் தமிழ் சினிமா தயாரிப்பதிலும் பார்க்க தென்னிந்திய திரைப்படங்களைத் தருவிப்பது மலிவாகப் பட்டிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் எங்களது இந்த நிலை சிங்களத் திரைப்படத்துறையில் இருக்கவில்லை.

இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்து இருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன.

சிறீசேனா விமலவீரா 1951இல் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்தை உருவாக்கினார். சிறீசேனா விமலவீராவின் தயாரிப்பில் 25.11.1955இல் வெளியான பொடிபுத்தா (இளையமகன்) என்ற சிங்களத் திரைப்படம் அவரால் உருவாக்கப்பட்ட நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்திலேயே வைத்து தயாரிக்கப் பட்டது. இலங்கையில் வெளியான 32வது சிங்களத் திரைப்படமான பொடிபுத்தா என்ற இந்தத் திரைப்படமே பின்னாளில் இலங்கையின் பராம்பரியங்களைக் கூறவல்ல திரைப்படங்கள் உருவாக ஆதாரமாக இருந்திருக்கிறது.

சிறீசேனா விமலவீரா கலையகத்தை உருவாக்கி சுயமான சிங்களத் திரைப்படங்களை உருவாக வழி சமைத்துத் தர, இன்னும் ஒரு படி மேலே போய் வெளிப்புறங்களில் படம்பிடித்து இயற்கையான காட்சிகள், ஒளிகளுடன் யதார்த்தமான சிங்களப் படங்கள் உருவாக காரணமாக இருந்தவர் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள். இவ்வாறு வெளிப்புறப் படப்பிடிப்புக்களுடன் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள் உருவாக்கிய ரேகாவா (விதியின் கோடு) 28.12. 1956இல் வெளியானது.

தங்களது சுற்றாடல்களையும் பாரம்பரியம் பண்பாடுகளையும் திரையில் பார்க்க முடிந்ததால் இந்தத் திரைப்படம் சிங்களவர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் உலகலாவிய அளவில் பலரது பாராட்டுக்களைப் பெற்றதுடன் சிங்களத் திரைப்படத்துறைக்கு சினிமா உலகில் ஒரு நல்ல இடத்தையும் பெற்றுத் தந்தது. இவையெல்லாம் சேர்ந்து இலங்கையில் சிங்களத் திரைப்படத் துறை வளர பெரிதும் காரணங்களாகின.

முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் 21.01.1947இல் திரையிடப் பட்டிருக்கிறது. கடவுணு பொரன்டுவ (உடைந்த வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் மேற் குறிப்பிட்டதன்படி தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இங்கு முத்துக்குமாரசாமி என்ற இந்த இசைமேதையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர் பின்னாளில் இலங்கையில் இசைத்துறையில் பெரும் கடமையாற்றியிருக்கின்றார். இசைத்துறை வட்டத்தில் முத்துக்குமாரசாமி மாஸ்ரர் என்றே இவர் அழைக்கப்பட்டார். திரைப்படத்துறை மட்டுமல்லாது இலங்கை வானொலியிலும் இவரது பணி நிறைந்திருக்கிறது.

கடவுணு பொரன்டுவ திரைப்படத்தை சித்திர கலா மூவிரோன் என்ற நிறுவனத்தின் பெயரில் தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்திருந்தார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் பின்னாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தை சிங்களவரான ஹென்றி சந்திரவன்ச தயாரித்திருந்தார். ஆக சிங்களத்தில் வெளியான முதல் திரைப்படத்தை ஒரு தமிழரும் தமிழில் வெளியான முதற் திரைப்படமான சமுதாயத்தை சிங்களவரும் தயாரித்து மொழிகள் மதங்கள் கடந்து கலைத்துறைக்கு பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.

இலங்கையின் முதல் திரைப்படத்தில் நடித்த ருக்மணி தேவி, பின்னாளில் சிங்களத் திரையுலகில் பிரவேசித்த பல நடிகைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். நடிகை ருக்மணிதேவியைப் பின்பற்றி 1950களிலும் 1960 ஆரம்ப காலங்களிலும் பல நடிகைகள் சிங்களத் திரையுலகில் பிரவேசித்தார்கள். அவர்களில் முக்கியமானவர்களாக சந்யாகுமாரி, விஜிதா மாலிகா, புளொரிடா ஜயலத், கிளாரிஸ் டீ சில்வா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

15.01.1923 பிறந்த ருக்மணி தேவி சிங்களத் திரையுலகில் தனது பதிவை ஆழமாகவும் மிகத் தெளிவாகவும் பதித்திருக்கின்றார். தனது ஏழு வயதில் நத்தார் பாடல்களை இசைக்கத் தொடங்கிய ருக்மணிதேவி பின்னாளில் பல மேடை நாடகங்களிலும், நாட்டிய நாடகங்களிலும், இசை மேடைகளிலும், சிங்களத் திரைவானிலும் மிகப் பிரகாசமாகப் பரிணமித்திருக்கின்றார். இவர் நடித்த பிரபலமான கடவுணு பொரண்டுவ என்ற மேடை நாடகமே பி.ஏ.ஜயமனே அவாகளால் சிங்ளத் திரையுலகின் முதல் திரைப்படமாக நெறியாளப் பட்டிருந்தது. தனது முப்பது வருட திரையுலக வாழ்க்கையில் ருக்மணி தேவி அவர்கள் ஏறக்குறைய 90 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் ருக்மணிதேவி பொப் இசைக்குழுவிலும் பாடி தனது திறமையை அங்கும் பதிந்திருக்கின்றார்.

25.09.1978 இலங்கையின் மாத்தறைப் பகுதியில் உள்ள உயன்வத்தை என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி விட்டு வரும் வழியில் நடந்த வாகன விபத்தில் இலங்கையின் இராப்பாடி என்று அழைக்கப்பட்ட ருக்மணி தேவி அவர்கள் காலமானார்.

28.09.1978 இல் நீர்கொழும்பு மயானத்தில் நடைபெற்ற அவரது இறுதிக் கிரியைகளில் பங்கு பற்றிய பெரும் திரளான அவரது ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பட உலக பிரமுகர்கள், அரசியல் வாதிகள், நாடக உலகக் கலைஞர்கள் அவரது கலையுலக வாழ்க்கையின் சிறப்புக்கு அத்தாட்சியாக இருந்தார்கள். அவரது மறைவுக்கு அன்றைய இலங்கையின் ஜனாதிபதி ரணதுங்க பிரேமதாசா வழங்கிய இரங்கல் உரை ருக்மணி தேவி அவர்கள் கலைக்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய பணியைக் காட்டி நிற்கின்றது. இலங்கையின் இராப்பாடி என்று ருக்மணிதேவி இலங்கையில் அழைக்கப்பட்டார். அதுபோல் தென்னகத்தில் சிங்களத்துக் குயில் என்று யாழ்ப்பாணத்து நடிகையான தவமணி தேவி இருந்திருக்கின்றார்.

(தொடரும்)

Monday, September 01, 2008

அவள் வருகிறாள்

அலுமாரிக்குள் இருந்த அழகிய சிலைகளை பல தடவைகள் மாற்றி மாற்றி வைத்து விட்டேன். யன்னல் சேலைகள் சரியாகச் சுருக்கு மாறாது இருக்கின்றனவா எனவும் பல தடவைகள் பார்த்து விட்டேன். பூச்செடிகள், புத்தக அலுமாரி, மேசை விரிப்பு, சோபாவின் தலையணைகள்.. என்று ஒவ்வொன்றையும் பலதடவைகள் சரி பார்த்து விட்டேன்.

குசினியிலிருந்து வீட்டின் எந்த மூலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மீண்டுமாய் அலுமாரிச் சிலைகளை ஒரு சென்ரிமீற்றர் அரக்கி வைத்தால் நன்றாக இருக்கும் போலவும், யன்னல் சேலையின் சுருக்குகள் சற்று ஒழுங்கற்று இருப்பது போலவும், புத்தக அலுமாரியில் புத்தகங்களை இன்னும் நேராக்கி விடலாம் போலவும்.. தோன்றிக் கொண்டே இருந்தன.

அவள் வரப்போகிறாள் என்பதில் எனக்குள் மிகுந்த பரபரப்பாகவே இருந்தது. 23வருடங்களின் பின் சந்திக்கப் போகிறேன். என்னைப் போல எடை போட்டிருப்பாளா? அல்லது அப்போது போலவே அழகாக இருப்பாளா? மனசு கற்பனை பாதியும், கேள்விகள் பாதியுமாக அவளின் வரவுக்காகக் காத்திருந்தது.

எத்தனை தடவைகள் புகைப்படங்கள் அனுப்பும் படி கேட்டிருப்பேன். "ம்.. கூம். நான் வருகிறேன் பார்" என்று சொல்லிச் சொல்லியே இத்தனை வருடங்களை இழுத்து விட்டாள்.

ஒரே வகுப்பில் ஒன்றாகத்தான் படிக்கத் தொடங்கினோம். ஒரே வகுப்பு என்பதையும் விட ஒரே ஊர் என்பது எங்களுக்குள் இன்னும் ஒட்டுதலை ஏற்படுத்தியிருந்தது. என் வீட்டில் போல அவள் வீட்டில் அதீதமான கட்டுப்பாடுகள் இல்லை. எனக்கு மாலைவேளைகளில் யார் வீட்டுக்கும் போய் விளையாடுவதற்கு அனுமதி கிடைப்பதில்லை. அவள்தான் என் வீட்டுக்கு வருவாள். ஓடிப்பிடித்து, ஒளித்துப்பிடித்து, கெந்திப்பிடித்து, கல்லுச்சுண்டி, கொக்கான்வெட்டி, கரம் விளையாடி.... எங்கள் பொழுதுகள் சிரிப்பும், கும்மாளமாகவுமே கரையும். என் தம்பி, தங்கைமாரும் எமது விளையாட்டுக்களில் வந்து இணைவார்கள். சில சமயங்களில் சூரியகுமாரியும் எங்களுடன் இணைந்து கொள்வாள். யாருக்கும் தெரியாத இரகசியங்களும் எங்களுக்குள் இருக்கும்.

எட்டாம் வகுப்பில் பாடசாலையில் பிரிக்கும் போது அவள் ஆர்ட்ஸ்க்கும், நான் சயன்ஸ்க்கும் என்று பிரிந்து விட்டோம். இடைவேளையில் ஓடிவந்து என்னுடன் கதைத்து விட்டுப் போவாள். இடையிடையே கிளித்தட்டு விளையாடும் போது அவள் வகுப்பும் எமது வகுப்பும் இணைந்து விளையாடுவோம். நெற்போல் (கூடைப்பந்து) என்றால் சொல்லவே தேவையில்லை. நேரம் போவதே எமக்குத் தெரிவதில்லை. மாலைவேளைகளில் தொடர்ந்தும் எமது வீட்டுக்கு வருவாள்.

நான் அவசரத் திருமணம் செய்து கொண்ட போதும், எனக்குக் குழந்தை பிறந்த போதும் ஓடி வந்து வியந்து வியந்து பார்த்தாள். நான் ஜேர்மனிக்குப் புறப்படும் வரை அவள் கல்யாணம் செய்து கொள்ளவே இல்லை.

சில வருடங்களில் அவள் திருமணமாகி கனடா சென்று விட்டதாக அம்மா எழுதியிருந்தாள். அங்கிருந்து எப்படியோ எனது தொலைபேசி இலக்கத்தைத் தேடிப்பிடித்து அழைத்துக் கதைத்தாள். அவளுக்குக் குழந்தைகள் பிறக்கும் வரை அடிக்கடி தொலைபேசியில் உரையாடினோம். குழந்தைகள் வளர வளர நாங்கள் பேசும் இடைவெளியும் வளர்ந்தது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் "நான் உன்னிடம் வருகிறேன்" என்பாள். இன்றிரவு கணவர் குழந்தைகளுடன் வரப் போகிறாள். மனசு இன்னும் பரபரத்துக் கொண்டே இருந்தது.

மீண்டும் மீண்டுமாய் வீடு அழகாக இருக்கிறதா எனச் சரி பார்த்துக் கொண்டேன். அவளுக்குத் தோசை பிடிக்கும் என்பதால், அடுத்தநாள் தோசை சுடலாம் என்ற நினைப்பில் உழுந்தை ஊறப் போட்டேன். சில கிலோமீற்றர்கள் தள்ளியிருக்கும் ஆசியாக் கடைக்கு முதல்நாளே சென்று, வாங்கி வந்த தேங்காயை சுத்தியலால் அடித்து, உடைத்து சம்பலுக்காகத் துருவி எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன். தோசைக்கு கத்தரிக்காய் வதக்கல் நல்லாயிருக்கும் என்று இன்னொரு கடைக்குச் சென்று வாங்கிய கத்தரிக்காயையும் வெட்டிப் பொரித்து எடுத்தேன். இரவுச் சாப்பாட்டுக்கு இடியப்பம் அவித்து, கோழி நெஞ்சுஇறைச்சியில் பிரட்டல் கறி, பொரியல், வெந்தயச் சொதி..., என்று செய்து முடித்தேன்.

உள்ளியும், வெங்காயமும், பொரிந்த எண்ணெயும்... என்று கலந்த சமையல் மணம் வெளியில் போய் விடும் படியாக யன்னல்களையும், பல்கணிக் கதவையும் திறந்து வைத்தேன்.

எங்கள் படுக்கையறையைத்தான் ஒரு வாரத்துக்கும் அவர்களுக்குக் கொடுக்க இருப்பதால் படுக்கை விரிப்புகளை மாற்றினேன். அந்த ஒரு வாரத்துக்கும் எமக்குத் தேவையான எமது உடுப்புகளையும், மற்றைய அத்தியாவசியப் பொருட்களையும் மற்றைய சிறிய அறைக்குள் கொண்டு போய் வைத்தேன்.

இப்படியே தொட்டுத் தொட்டு வேலைகள் நீண்டு கொண்டே போயின. கால்கள் ஆறுதல் தேடின. மனம் எதையாவது கண்டு பிடித்துப் பிடித்து வேலை தந்து கொண்டே இருந்தது.

மாலையில் கொறிப்பதற்கென முதல்வாரமே கணவரின் உதவியோடு தட்டை வடை செய்து வைத்திருந்தேன். அத்தோடு இன்னும் ஏதாவது பலகாரங்கள் செய்து வைத்தால் ஒரு கிழமையும் சுவையாகப் போகும் என்ற எண்ணம். அவளது பிள்ளைகளுக்கென சிப்ஸ், சொக்கிளேற்ஸ், பிஸ்கிட்ஸ் எல்லாம் வாங்கி அடுக்கி வைத்தேன்.

சூரியகுமாரியும் கனடாவில்தான் இருக்கிறாளாம். அவளைப் பற்றியும் நிறையக் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இன்னும் என்னோடு அரிவரியிலிருந்து கபொத உயர்தரம் வரை படித்த பல மாணவிகள் கனடாவில்தானாம். ´வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் சந்திப்பு´ என்று சொல்லிச் சந்திப்பார்களாம். நெற்போல் விளையாடுவார்களாம்.

நெற்போல் என்றதுமே எனக்குள் சட்டென்று ஒரு ஆசை அலை மோதியது. ஜேர்மனியில் அனேகமாக எல்லாத் தமிழர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தள்ளித தள்ளித்தான் இருக்கிறோம். சேர்ந்து வருபவர்களில் ஒருவரேனும் என்னோடு படித்தவர்களாயோ, அல்லது எனது ஊரவர்களாயோ இருப்பதில்லை. இந்த நிலையில் ´வடமராட்சி மாணவர்கள் சந்திப்பு´ என்பதைக் கனவில் கூட இங்கு நினைத்துப் பார்க்க முடிவதில்லை. எங்காவது சிறுவர் விளையாட்டு மைதானங்களில் நெற்போலுக்கான கூடையையும், பந்தையும் சேர்த்துக் கண்டால் போதும். பாடசாலை நினைவுகள் மனதில் நர்த்தனமிட நானும் ஒரு சிறுபிள்ளை போல ஓடிச் சென்று பந்தை கூடைக்குள் திரும்பத் திரும்பவாகப் போடுவேன். படிக்கும் காலங்களில் நெற்போல் என்றால் எவ்வளவு பைத்தியமாக இருந்திருக்கிறேன். ஏதாவதொரு பாடத்துக்கு ஆசிரியர் வரவில்லை என்றால் போதும். நான் பந்துடன் மைதானத்துக்குச் சென்று விடுவேன்.

அவள் வந்த பின கண்டிப்பாக எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் சிறுவர் விளையாட்டு மைதானத்துக்குப் போய் அவளோடு நெற்போல் விளையாட வேண்டும் எனவும் நினைத்துக் கொண்டேன்.

இப்படியே மனம் நினைவுகளுடனும், கைகள் வேலைகளுடனும் என்று 90சதுர மீற்றர் வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டே இருந்தேன். எல்லாவற்றையும் முடித்து விட்டேன் என்றால் அவள் வந்து நிற்கும் ஒரு வாரமும் அவளுடன் கதைத்து, அவளோடு வெளியில் போய்.. என்று கூடிய நேரங்களை அவளுடனேயே களித்துக் கழிக்கலாம் என்ற பேராசை எனக்கு. அதற்காகவே ஒரு வாரம் வேலைக்கு விடுப்பும் எடுத்திருந்தேன்.

இரவும் வந்தது. அவளும் வந்தாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா..?இனம்புரியாத மகிழ்வலைகளில் திக்கு முக்காடினோம். காலங்களும், குடும்ப பாரங்களும் அவளிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. என்னை விட அதிக குண்டாக இருந்தாள். என் கற்பனைக்குத் துளியும் எட்டாத தூரத்தில் அவள் கணவன். கனேடிய ஸ்ரைலும், தமிழர் என்ற அடையாளங்களும் கலந்து அனேகமான எல்லா வெளிநாட்டுத் தமிழ்க் குழந்தைகள் போலவும் அவளது குழந்தைகள்.

கனடாவில் இருந்து வெளிக்கிட்டு இலண்டனில் இரண்டு வாரம், ஸ்பெயினில் ஒரு வாரம்... என்று நின்று நின்று வந்ததில் கொஞ்சம் களைத்தும் இருந்தார்கள். ஆனாலும் கலகலத்தார்கள். சாப்பிட்டு, நிறையக் கதைத்து நித்திரைக்குச் செல்ல சாமமாகி விட்டது.

அடுத்த நாள் ஆறுதலாகவே அவர்களுக்கு விடிந்தது. கதையும், சிரிப்புமாய் இருந்து விட்டு மதிய உணவை தயார் செய்யத் தொடங்கினேன்.

அவள் தனது சூடகேஸைத் திறந்து பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்பட்ட இரு பெரிய பார்சல்களை வெளியில் எடுத்தாள். ஏதோ அன்பளிப்புக் கொண்டு வந்திருக்கிறாள் என்ற நினைப்பில் மெலிதான ஆவல் என்னுள் தோன்றப் பார்த்துக் கொண்டு நின்றேன். பைகளைப் பிரித்து இருபதுக்கும் மேலான வீடியோ கசட்டுகளை வெளியில் எடுத்து வைத்தாள்.

"என்னது?" ஆவல் ததும்பக் கேட்டேன்.

"இது இவ்வளவும் ´சித்தி´, இதுகள் ´அரசி´, இதுகள் ´கோலம்´, இதுகள் ´செல்லமடி நீ எனக்கு´, இது ... இது ..." என்று சொல்லிச் சொல்லி கசட்டுகளைப் பிரித்துப் பிரித்து வைத்தாள்.

"என்ன படமா?"

"என்ன நீ, யூரோப்பிலை இருந்து கொண்டு இது கூட உனக்குத் தெரியாதே?" என்றாள்.

பின்னர்தான் விளங்கியது அத்தனையும் தொலைக்காட்சித் தொடர்கள் என்பது. பயண அலுவல்களால் கனடாவில் நின்ற கடைசி சில வாரங்கள் அவளால் தொடர்களைப் பார்க்க முடியாது போய் விட்டதாம். எல்லாவற்றையும் ரெக்கோர்ட் பண்ணிக் கொண்டு வந்து விட்டாளாம். இலண்டனில் கொஞ்சத்தைப் பார்த்து முடித்தாளாம். மிகுதியை இங்கு தொடரப் போகிறாளாம்.

நான் சமைத்து முடித்து மேசையில் சாப்பாடுகளை வைத்த போதும் சரி, தொடர்ந்த நாட்களிலும் சரி அவள் கண்களைத் துடைத்தும், மூக்கை உறிஞ்சியும் தொடர்களோடு கலங்குவதும், களிப்பதுமாய் இருந்தாள். கிடைக்கும் இடைவெளிகளிலும், சாப்பிடும் போதும் தொடர்களில் வரும் கதைகளையும், கதாபாத்திரங்களையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் முடிந்து அவளும் அவள் குடும்பமும் போன பின் சூரியகுமாரியும், கூடைப்பந்தும் இன்னும் பலவும் வழக்கம் போலவே நினைவுகளாயும், நிராசைகளாயும் எனக்குள்ளே மிதந்து கொண்டிருந்தன.

சந்திரவதனா
18.7.2008

பிரசுரம்: ஓகஸ்ட் யுகமாயினி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite