Thursday, March 18, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி -2

(பூட்டப்பா - பரமு)

அடுத்து மஞ்சள் நிற நூல் சேலையுடன் எனது பூட்டாச்சி என் நினைவில் அடிக்கடி வலம் வருவா. அவவின் இறப்பு ஏனோ என் ஞாபகத்தில் இல்லை. ஆனால் பூட்டப்பா அவரது நினைவு சாவு எல்லாமே பளிச்சென்று இன்னும் நினைவாக இருக்கின்றன.

எனக்கு அப்போ 4 வயது இருக்கலாமென நினைக்கிறேன். பூட்டப்பா ஒரு பரியாரி. அவரிடம் எப்போதும் நோயாளிகள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அவரது மருந்துப் பொருட்கள் வைப்பதற்கென்றே ஒரு பெரிய பெட்டகமும் சிறு சிறு மருந்துப் பெட்டிகளும், ராக்கைகளும் அடங்கிய படி தனியாக இரு அறைகள். அவர் வாசம் மருந்துகளின் வாசம் நிறைந்த அந்த அறைகள்தான்.

தும்புகள் நீக்கப்பட்டு வழுவழுப்பாக்கப்பட்ட சிரட்டைக்குள் அவர் மருந்துக்குளிகைகளை உரைத்துக் நோயாளிகளுக்குக் கொடுக்கும் போது எழும் அந்த வாசம் அல்லது மணம் இன்னும் என் மூக்கினுள் இருக்கிறது. அவரை நினைத்தாலே அந்த மணம் ஓடி வந்து என் மூக்கினுள் குந்திக் கொள்ளும். அனேகமான நோயாளிகளுக்கு தாய்ப்பாலில் உரைத்துச் சாப்பிடும் படி சிறிய வட்டக் குளிகைகளைக் கொடுத்து விடுவார். சிலருக்குப் பூவரசம் இலையில் வைத்து தேனில் குழைத்துச் சாப்பிடும் படியும் சொல்லி விடுவார். சிலருக்கு ஒழுங்காக மருந்தைச் சாப்பிடவில்லை என்று நல்ல பேச்சும் கொடுப்பார். பரமுப் பரியாரி என்றால் அந்த நேரம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

அவர் வருத்தமாகப் படுக்கையில் வீழ்ந்த போது கார்த்திகேசுப் பரியாரி வந்து பார்த்துப் போனார். ஆனாலும் அவர் இறந்து விட்டார். பரியாரி வேலையைப் பரம்பரையாகத் தொடரும் படியாக ஆண்வாரிசுகள் யாரும் அவருக்கு இல்லை. மூன்று பெண்பிள்ளைகளும் பெற்றுக் கொடுத்தவர்களில் எனது அப்பாதான் மூத்த பேரன்.

பூட்டப் பிள்ளைகள் நாங்கள் தடியில் துணி கட்டி தேங்காய் எண்ணெய்யில் தோய்த்தெடுத்த நெருப்புப் பந்தங்களை அவருக்குப் பிடித்தோம். நான் சின்னப்பிள்ளை என்றும், விழுத்தி விடுவேன் என்றும் சொல்லி ஒரு பெரிய மாமா எனது கையோடு சேர்த்து எனது பந்தத்தைப் பிடித்திருந்தார்.

பூட்டப்பாவின் இறப்பு எனக்கு சோகத்தை விட பயத்தைத்தான் தந்தது. எல்லாத்துக்கும் காரணம் அப்பாவின் கடைசித் தம்பியான எனது சித்தப்பாதான். அவர் எந்த நேரமும் பேய்க்கதைகள் சொல்லுவார். அவர் இறந்தவர்கள் பேயாக அந்த வீட்டில் அலைவார்கள் என முழுவதுமாக நம்பினார் போலும். நானும் அந்த நேரத்தில் நம்பினேன். சித்தப்பா அண்ணன் நான் மூவருமே பூட்டப்பா செத்ததன் பின் பூட்டப்பாவின் அந்த இரு அறைகளுக்குள்ளும் போவதே இல்லை. ஏதாவது தேவைக்கு அதனருகில் போக வேண்டி வந்தாலும் நெஞ்சு பயத்தில் கிடு கிடுக்க ஓடி வந்து விடுவேன். பார்க்காதே பார்க்காதே என மனம் தடுத்தாலும் இரவில் அப்பாச்சியின் அறை யன்னலால் கண்கள் அந்த இரு அறைகளையும் பார்க்கும். பார்க்கும் போது எனக்குப் பயமும் நடுக்கமும் வரும்.

எட்டு முடியுமட்டும் நாங்கள் அப்பாச்சி வீட்டில்தான் தங்கினோம். இரவுகளில் கனவுகள் என்னைத் தொல்லை பண்ணும். பூட்டப்பாவின் உடலெல்லாம் ஒரு நெருப்புப் பிழம்பு போல இருக்க அவர் அறைக்குள் இருந்து மருந்தை உரைப்பது போலக் கண்ட கனவை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

எட்டு நடந்த அன்று பேய்க்குக் கழிக்க என்று குங்குமம் போட்டு நீத்துப்பூசணிக்காய் தேசிக்காய் எல்லாம் பாதியாக வெட்டப் பட்டுச் சந்தியில் இருந்தன. அதில் என் காலைப் பட விட்டு விட்டேன். அதனால் என் கால் அழுகி விடும் என்று சித்தப்பா சொன்னதால் பல மாதங்களாக காலில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா எனப் பயத்துடன் அவதானித்துக் கொண்டே இருந்தேன்.

எட்டின் அன்று சோறு கறி பலகாரங்கள் என்று படைத்து விட்டு பூட்டப்பா வந்து சாப்பிடுவார் என அவரது மூன்று பெண்பிள்ளைகளுமான எனது அப்பாச்சிமார் சொன்னார்கள்.
நான் அவர் எப்போ வருவாரென படையலையே அவதானித்துக் கொண்டிருந்தேன். படையல் அன்று முழுக்க அப்படியே திறந்த படியேதான் இருந்தது. யாரும் வந்து சாப்பிட்டதைத்தான் நான் காணவில்லை.

எட்டு முடிய பூட்டப்பாவின் உடைகளோடு சேர்ந்து அவரது மருந்துகளும் சில பெட்டிகளும் தீயில் கருக்கப் பட்ட போது ஏதோ ஒரு கவலை தெரிந்தது.

(தொடரும்)

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite