Wednesday, November 26, 2003

பிறப்புக்கு அர்த்தம் சொன்ன........


பிறப்புக்கு அர்த்தம் சொன்ன
தூய தாயகன் பிரபாகரன்


தலைவர்கள் எல்லோருமே
மக்கள் மனதில்
நிலை கொள்வதில்லை
இவன் நிலை கொண்டவன்

அண்ணனாய்
ஆசானாய்
தம்பியாய்
தந்தையாய்
மைந்தனாய்....
மக்களோடு மக்களாய் நின்று
தலைமைக்கு அர்த்தம் சொன்னவன்

தமிழனின்
அடிமைத் தளையறுக்க என்றே
அவதரித்தவன்

பாட்டுக்களும் கவிதைகளும்
பெண்ணடிமை பற்றிப் பேச
செயலால்
பெண்ணடிமை விலங்கொடித்தவன்.

இவன் வெறுமனே
தலைவனல்ல
தமிழன்
தலை நிமிர்ந்து நிற்க
காலம் எமக்களித்த
வரலாற்று நாயகன்
பிறப்புக்கு அர்த்தம் சொன்ன
தூய தாயகன்.

இவனை வாழ்த்துவதில்
பெருமை யடைகிறேன்!
பேருவகை கொள்கிறேன்!

செல்வராஜ் இத்தனை அக்கறையுடன் செயற் படுவாரென.....

நான் எதிர் பார்க்கவில்லை.

16.11.2003 அன்று மனஓசை பகுதியில் நான் எழுதிய விடயமொன்று
ம�..... விடிந�த� விட�டதா..?
நேற�ற� ம�ன� தினம� அஸ�ஸெம�பிலி மீற�றிங�. வீட� வந�த� சேர நேரமாகி விட�டத�. வழமையில� வர�டத�தில� ஒர� நாள�தான� இப�படி அட�டகாசமாக.................

இப்படிச் சிதைந்து விட்டது.

யாருமே அதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றுதான் நினைத்தேன்.
ஆனால் செல்வராஜ் கவனித்தது மட்டுமல்லாமல் அதை சரிசெய்து எனக்கு அனுப்பியும் உள்ளார்.
புலம்பெயர்வாழ்வின் இறுக்கத்தில் முகம் தெரியாத உறவுகள் இப்படி உதவி செய்ய முன் வரும் போது உண்மையிலேயே மனசு மிகவும் இலேசாகி சந்தோசத்தில் பறக்கத் தொடங்கி விடுகிறது. அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

கீழே நான் எழுதிச் சிதைந்த விடயத்தை செல்வராயுக்கு நன்றி கூறிக் கொண்டு மீண்டும் தருகிறேன்.

16 November 2003

விடிந்து விட்டதா..?
நேற்று முன் தினம் அஸ்ஸெம்பிலி மீற்றிங். வீடு வந்து சேர நேரமாகி விட்டது. வழமையில் வருடத்தில் ஒரு நாள்தான் இப்படி அட்டகாசமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் எமது பழைய தலைமையதிகாரி ஓய்வில் சென்று விட புதிய தலைமையதிகாரி வந்து ஒரே அட்டகாசம்தான். இது இவ்வருடத்தின் மூன்றாவது அட்டகாசமான அஸ்ஸெம்பிலி மீற்றிங்.

காரியதரிசியைத் தொடர்ந்து தலைமையதிகாரியே கிறிஸ்மஸ் போனஸ், சம்பள உயர்வு, விடுப்பு விதிகள்.... என்று எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டார். வயதில் குறைந்தவர். அதுதான் ஒவ்வொருவராகப் பேச விட்டு எமக்குக் கொட்டாவியை வரப் பண்ணாது தானே முடித்து விட்டார். பிறகென்ன சாப்பாடுதான். உறைப்புத் தவிர்ந்த மற்றைய எல்லாச் சுவைகளையும் கொண்ட Buffet.

எல்லாமாக 368பேர் சமூகமளித்திருந்தோம். இவ்வளவு பேரும் Buffet இல் சாப்பாடு எடுப்பதென்றால் சும்மாவா...? மிக நீண்ட வரிசை. எமது தலைமையதிகாரியும்தான் அந்த வரிசையில் ஒருவராக நின்றார்.

வான்கோழி இறைச்சியும், பன்றி இறைச்சியும் யேகர் ஷோசுடனும், Zwiebel ஷோசுடனும்(வெங்காய ஷோஸ்) ஒரு புறம் இருந்தாலும் நான் சைவப் பகுதிக்கே சென்றேன். அங்கு நிறைய items இருந்தன.

எனக்கு யேர்மனியர்களின் சாப்பாடுகளில் மிகவும் பிடித்தவைகளில் ஒன்று அவர்களது kartoffelsalat. (உருளைக்கிழங்கு சலாட்). நாங்கள் சோறு சாப்பிடுவது போல அவர்கள் உருளைக்கிழங்கை பல விதமாகவும் சமைத்து முக்கிய உணவாகச் சாப்பிடுவார்கள். அந்த வகைகளில்

இந்த உருளைக்கிழங்கு சலாட் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

மெல்லிய புளிப்புக் கலந்த சுவை அதற்கு. அதனோடு வேறும் பலவிதமான சலாட்கள் இருந்தன. பொதுவாக கோவாவை நாம் சுண்டிச் சாப்பிடுவோம். அல்லது பால்கறி வைப்போம். ஆனால் யேர்மனியர்கள் சலாட் செய்வார்கள். மெல்லிய புளிப்புக் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த சலாட்டை கிறீக் ரெஸ்ரோறண்டுகளிலும் சாப்பிடலாம்.
ஒரு பிடிபிடித்தேன்.

பிறகு Dessert. அதிலும் பல items. தோடம்பழ கிறீம், மாம்பழ-தயிர் கிறீம், வறுத்த அப்பிள், fruit salat........ என்று பழங்களிலேயே பலசுவை. இவற்றில் தனித்துவமாகத் தெரிந்தது மாம்பழத் துண்டுகளுடன் தித்தித்த Mango -Joghurt Creme.

மாம்பழத் துண்டுகளுடன் தித்தித்த Mango -Joghurt Creme

திருவிழாவில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படும் படியாக 368 பேரும் ஓடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் திரிந்தார்கள். சந்தோசமான பொழுது.

விரைவில் நத்தார் தினத்தை ஒட்டி இன்னொர் சந்திப்பு இதே அட்டகாசத்துடன் நடக்கும்.

Monday, November 24, 2003

சுமை தாளாத சோகங்கள்!

(பருத்தித்துறைப் பிரதேசப்பொறுப்பாளர் கப்டன்மொறிஸின் நினைவாக)

வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய் தகப்பன்மாரும் நிற்கினம்.

இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐந்து மணியாகியும் காணேல்லை.

யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறன். வருகிற பாடாவே தெரியேல்லை. - நல்லா வேலை கொடுத்திட்டாங்களோ? -
பிள்ளையளும் ரியூசனுக்குப் போயிட்டினம்.

மே மாதம் என்ற படியால் பனி போய் வெய்யிலும் வந்திட்டுது. இந்த யேர்மன் சனம் வெய்யிலைக் கண்டால் வீட்டுக்குள்ளேயே இருக்காதுகள். எப்பவும் வெளியிலைதான் நிக்குங்கள்.

எனக்கென்னவோ யேர்மனிக்கு வந்து மூன்று வருசமாகியும் ஒண்டிலேயும் மனசு ஒட்டமாட்டனெண்டுது.
நான் 10.5.1986 இலை யேர்மனிக்கு வந்தனான். இண்டைக்கு கலண்டர் 2.5.1989 எண்டு காட்டுது. இந்த மூன்று வருசத்திலையும் இந்த மனசு எப்பிடி எப்பிடியெல்லாம் கிடந்து தவிக்குது. என்ரை மூன்று பிள்ளையளையும் என்ரை கணவரையும் விட்டால் வேறை ஒண்டையுமே எனக்கிங்கை பிடிக்கேல்லை.

எப்பவும் ஊரிலை விட்டிட்டு வந்த தம்பிமாரையும், தங்கச்சிமாரையும், அண்ணனையும், அப்பா அம்மாவையும்தான் மனசு நினைச்சுக் கொண்டு இருக்குது.

எப்பிடிச் சொன்னாலும் நான் ஒரு சுயநலக்காரிதான். எனக்கு மனசு வந்ததுதானே! அதுகளை அங்கை விட்டிட்டு இங்கை மட்டும் ஓடிவர. இப்ப இருந்து புலம்பிறன்.
என்ன பிரயோசனம்..!

எனக்கு அங்கை போகோணும். அம்மான்ரை முகத்தைப் பார்க்கோணும். தங்கைச்சிமாரோடை சினிமாப்பாட்டிலை இருந்து அரசியல் வரை எல்லாத்தைப் பற்றியும் அரட்டை அடிக்கோணும். முக்கியமாக தம்பியைப் பிடிச்சு, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சோணும்.

அவனை இந்தியன் ஆமியள் தேடுறாங்களாம். அவன் எங்கே..? என்று கேட்டுக் கேட்டு என்ரை சகோதரங்களை மட்டுமில்லை. ஊர்ச்சனங்களையெல்லாம் சித்திரவதைப் படுத்திறாங்களாம். தங்கைச்சிதான் இதெல்லாம் எனக்கு எழுதிறவள்.

நேற்றும் சாமத்திலை கனவிலை தம்பிதான். அவன் சாப்பிடுறதுக்கெண்டு மேசையிலை இருக்க அம்மா சோறு போட்டுக் கொண்டிருக்க ஆமி வந்திட்டான் போலையும் தம்பி சாப்பிடாமலே ஓடுற மாதிரியும் கனவு. நான் முழிச்சிட்டன். எனக்கு ஒரே அழுகையா வந்திட்டுது.

எத்தினை நாளைக்கெண்டுதான் என்ர தம்பிமார் சாப்பிடாமல, குடியாமல், நித்திரை கொள்ளாமல் ஓடித் திரியப் போறாங்கள். கடவுளே..! எல்லாத்தையும் நிற்பாட்டு. என்ரை தம்பிமார் மட்டுமில்லை. எல்லாப் பிள்ளையளும் வீட்டுக்குப் போயிடோணும்.

தலைக்கு மட்டும் தலேணி (தலையணி) இருந்தால் போதாதெண்டு காலுக்கொரு தலேணி, கையுக்கொரு தலேணி எண்டு வைச்சுப் படுக்கிறவங்கள் என்ரை தம்பிமார். இப்ப எங்கை...! எந்தக் கல்லிலையும் முள்ளிலையும் படுக்கிறாங்களோ..?!

நான் போகோணும். அவங்களோடை வாழோணும். எனக்கு அடக்கேலாமல் அழுகை வந்திட்டுது. விக்கி விக்கி அழத் தொடங்கீட்டன். சத்தத்துக்கு இவர் எழும்பீட்டார்.

- என்ன இப்ப நடந்திட்டுதெண்டு இப்பிடி அழுறாய்..? - ஆதரவாய்த்தான் கேட்டார்.

- நான் போப்போறன் ஊருக்கு. எனக்கு அம்மாவைப் பார்க்கோணும். பரதனைப் பிடிச்சுக் கொஞ்சோணும் போலை இருக்கு. -

- என்ன இப்பிடிப் பைத்தியக் கதை கதைக்கிறாய். இப்ப அங்கை போயென்ன சாகப் போறியே? நீயாவது இங்கை இருக்கிறாயெண்டு கொம்மாவும் கொப்பரும் எவ்வளவு நிம்மதியா இருப்பினம். -- ................... -

- இன்னும் ஒரு வருசத்திலை பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடும். அதுக்குப் பிறகு நாங்களேன் இங்கை இருக்கப் போறம். அஞ்சு பேருமாப் போவம்.
இப்பப் படு. நாளைக்கு நேரத்துக்கு எழும்போணும் எல்லோ!


ஓம் - எண்டு சொல்லிப் படுத்திட்டன். ஆனால் நித்திரையே வரேல்லை. கண்ணை மட்டும் மூடிக் கொண்டு படுத்திருந்தன். மனசு மட்டும் அப்பிடியே கொட்டக் கொட்ட விழிச்சுக் கொண்டு இருந்திச்சு.

என்ரை தம்பிமாரைக் காப்பாற்று. அம்மா அப்பா தங்கைச்சிமாருக்கு ஒண்டும் நடந்திடக் கூடாது. எல்லாரையும் காப்பாற்று. எண்டு மனசு எல்லாத் தெய்வங்களையும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு எப்படியோ நித்திரையாகீட்டன்.

காலை எழும்பி இவரையும் வேலைக்கு அனுப்பி, பிள்ளையளையும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிப் போட்டன். எனக்கு வேலை செய்ய அனுமதி இல்லை. இந்த நகரத்தையும் விட்டு ஒரு இடமும் போகக் கூடாது.
எனக்கு அதிலையெல்லாம் கவலை இல்லை. கவலையெல்லாம் ஊரிலை இருக்கிற என்ரை உறவுகளைப் பற்றித்தான். எண்டாலும் களவா ஒரு ஸ்ரூடியோ(Studio)விலை இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வேலை செய்யிறன். Workpermit இல்லாமல் வேலை தர அந்த லேடி பஞ்சிப் பட்டவதான். பிறகு ஏதோ ஓமெண்டு தந்திட்டா. நல்லவ.
பிள்ளையள் பள்ளிக்கூடத்தாலை வரமுன்னம் வேலையை முடிச்சிட்டு ஓடி வந்து சமைச்சுப் போடுவன்.

என்னையறியாமலே என்ரை கண்கள் அவர் வாறாரோ எண்டு யன்னலுக்காலை பார்த்துக் கொண்டுதான் இருந்தன.

பார்த்துக் கொண்டிருக்கவே அவர் வாறார்.
என்ன...! ஒரு மாதிரி தளர்ந்து போய் வாறார். பாவம், நல்லா வேலை வாங்கிப் போட்டாங்களோ! ஊரிலை எத்தினை பேரைத் தனக்குக் கீழை வைச்சு வேலை வாங்கினவர். இங்கை வந்து இவங்களுக்குக் கீழை......!

ஏன் இப்பிடியெல்லாம் நடந்தது? ஏன் இந்த யேர்மனிக்குக் தனியாக வந்து சேர்ந்தோம். எல்லாம் ஏதோ பிரமையாய்.... நம்ப முடியாததாய்.....
எனக்கு ஓடிப் போய் அம்மான்ரை மடியிலை முகத்தை வைச்சு அழோணும் போலை இருக்கு. அம்மா முதுகைத் தடவி தலையைக் கோதி விடுவா.
அப்பான்ரை கையைப் பிடிச்ச படி கதைச்சுக் கொண்டு ஊரெல்லாம் சுத்தோணும் போலை ஆசை ஆசையா வருது.

எங்கையாலும் போட்டு வந்தால் - அக்கா களைச்சுப் போட்டியள். இந்தாங்கோ இதைக் குடியுங்கோ. - என்று தங்கைச்சிமார் ஏதாவது குடிக்கத் தருவினம். அந்த அன்பு வேணும் எனக்கு. அதிலை நான் குளிக்கோணும்.

மனசு சொல்லுக் கேளாமல் அடம் பிடிச்சுக் கொண்டு ஊரையும் உடன் பிறப்புக்களையும் சுற்றிச் சுற்றிக் கொண்டே நிற்குது.

இப்பிடியே நான் மனசை அலைய விட்டுக் கொண்டிருக்க இவர் வீட்டுக்குள்ளை வந்திட்டார். நான் என்ரை கவலையொண்டையும் இவருக்குக் காட்டக் கூடாதெண்டு - டக்கெண்டு - சிரிச்சுக் கொண்டு - என்ன வேலை கூடவே! லேற்றா வாறிங்கள்!- எண்டு கேட்டுக் கொண்டே குசினிக்குள்ளை போய் - ரீ - (தேநீர்) யைப் போட்டன்.

ரீ யோடை வெளியிலை வந்து பார்த்தாலும் இவர் ஒரு மாதிரித்தான் இருக்கிறார். வழக்கம் போலை முஸ்பாத்தியும் விடேல்லை. சிரிக்கவும் இல்லை.
இவர் இப்பிடி இருக்க மாட்டார். முஸ்பாத்தி விடுவார். இல்லாட்டி கோபப் படுவார். கவலைப் படுற மாதிரி எல்லாம் காட்ட மாட்டார். இண்டைக்கென்ன நடந்திட்டு? ஏன் இப்பிடி இருக்கிறார். சரியாக் கதைக்கவும் மாட்டாராம்.
நான் இவற்றை மூட் (Mood) ஐ நல்லதாக்க பிள்ளையளின்ரை பகிடியளைச் சொல்லிப் பார்த்தன். கிண்டர் கார்டன் ரீச்சர் சொன்ன கதையளையும் சொல்லிப் பார்த்தன். ஒண்டுக்கும் மாற மாட்டாராம். அப்பிடியே இருக்கிறார்.

இப்ப ஏதோ சொல்ல வாறார் போலை இருக்கு. நான் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தன்.

பரதன் போயிட்டான். - என்றார்.
எனக்கொண்டுமே புரியேல்லை.

பரதன் எங்களையெல்லாம் விட்டிட்டுப் போயிட்டான். - என்றார் மீண்டும்.
இப்ப எனக்கு எதுவோ உறைத்தது. சடாரென்று ஆரோ என்ரை நெஞ்சிலை சுத்தியலாலை ஓங்கி அடிச்சது போலை இருந்தது.

அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு நான் இருந்திட்டன்.
என்ரை தம்பி.....! பரதா.....!
போயிட்டியோ.....!

இப்ப அழத் தொடங்கீட்டன்.
இருக்காது. அவன் செத்திருக்க மாட்டான். அவனை நான் பார்க்கோணும்.

ஏதோ ஒரு நப்பாசையோடை இவரைப் பார்த்தன். என்ன செய்யிறதெண்டு தெரியாமல் அப்பிடியே இருக்கிறார்.
உண்மையான நியூஸ்தானோ அது? - இவரைக் கேட்டேன்.
இல்லையெண்டு சொல்ல மாட்டாரோ என்ற பயமும் எதிர் பார்ப்பும் ஏக்கமும் நிறைந்த அவா எனக்குள்.

தகவல் நடுவச் செய்திகளிலை அப்பிடித்தான் சொல்லுறாங்கள். பிழையான செய்தியாயும் இருக்கலாம். - இவர் இப்ப என்னை ஆறுதல் படுத்தச் சும்மா சொன்னார்.

எனக்கு அவன் செத்திட்டான் எண்டு நம்பவே ஏலாதாம். நானும் தகவல் நடுவங்களுக்கு அடிச்சுப் பார்த்தன். புனைபெயர், அப்பான்ரை பெயர், வயது எல்லாம் சரியாகச் சொல்லுறாங்கள்.
- மே முதலாந்திகதி பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் மொறிஸ் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதி வீரமரணமடைந்து விட்டார். - எண்டு சொல்லுறாங்கள். பருத்தித்துறையெல்லாம் கர்த்தாலாம். கதவடைப்பாம். கறுப்புக் கொடியாம்.

கடவுளே..! இந்தச் செய்தியெல்லாம் பொய்யா இருக்கோணும்.

நான் பள்ளிக்கூடத்தாலை வீட்டை மத்தியானம் சாப்பிடப் போற பொழுது அப்பிடியே தவண்டு வந்து மூமூ......த்தக்கா என்று கொண்டு அஞ்சு விரலையும் என்ரை வெள்ளைச் சட்டையிலை பதிச்சிடுவான். நான் அவனைத் தூக்கி கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவன். அம்மாதான் வெள்ளைச்சட்டை ஊத்தையாகுது. என்று கத்துவா.

எனக்குப் பத்து வயசாயிருக்கிற பொழுதுதான் பிறந்தவன். அவன் பிறந்த உடனை அப்பாவோடை மந்திகை ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்தனான். பஞ்சு மாதிரி இருந்தவன். என்ரை விரலைக் குடுக்க அப்பிடியே இறுக்கிப் பொத்தி வைச்சிருந்தவன்.
அப்பா- அம்மாவோடை கதைச்சுக் கொண்டிருக்க நான் அவனைத்தான் பார்த்துக் கொண்டும், தொட்டுக் கொண்டும் இருந்தனான். எனக்கு அவனை விட்டிட்டுப் போக மனம் வரேல்லை.

வோச்சர் வந்து - ஆறு மணியாச்சு. எல்லாரும் போங்கோ - எண்டிட்டான்.
அப்பா அவன்ரை கையுக்குள்ளை இரண்டு ரூபாவைத் திணிச்சு விட்டார். இன்னும் கொஞ்ச நேரம் நிற்க விட்டான்.

எனக்கு அப்பாவோடை வீட்டை திரும்பிப் போற பொழுதும் அவன்ரை மெத்தென்ற பாதம்தான் நினைவுக்குள்ளை இருந்தது. சுருட்டை மயிரோடை எவ்வளவு வடிவாயிருந்தவன்.

இப்ப அவன் இந்த உலகத்திலையே இல்லையோ......! நெஞ்சு கரைஞ்சு கண்ணீராய் ஓடிக் கொண்டே இருந்திச்சு.

முதன் முதலா அவன் நடக்கத் தொடங்கின பொழுது எவ்வளவு சந்தோசமாய் இருந்திச்சு. கொஞ்சம் வளர்ந்தாப் போலை, இரவு படுக்க வைக்கிற நேரத்திலை
மூத்தக்கா கதை சொல்லுங்கோ - எண்டு அடம் பிடிப்பான். ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி எனக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் முடிஞ்சிடும்.
மூத்தக்கா கதை சொல்லுங்கோ. இல்லாட்டிப் படுக்க மாட்டன். - என்பான்.

பிறகு நானே இயற்றி இயற்றிக் கதையெல்லாம் சொல்லுவன். அப்பிடியே என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நித்திரையாப் போடுவான்.

இப்ப எனக்கு அவனைக் கட்டிப் பிடிக்கோணும் போலை ஒரே அந்தரமா இருக்குது. நெஞ்செல்லாம் ஏக்கமா இருக்கு. அவனைப் பார்க்கோணும். நிறையக் கதைக்கோணும். மூத்தக்கா என்று கூப்பிடுறதைக் கேக்கோணும். அப்பிடியே பல்லெல்லாம் காட்டிக் குழந்தையா சிரிப்பானே. அதைப் பார்க்கோணும்.

கடவுளே.....! இனி இதெல்லாம் ஏலாதே!

உலகத்துச் சோகமெல்லாம் எனை அழுத்த எனக்கு அழுகை அழுகையாக வந்து கொண்டே இருக்குது.

இன்னும் வளர்ந்தாப் போலை எப்பிடியெல்லாம் முஸ்பாத்தி விடுவான். நான் அவனுக்குச் சொன்ன கதையெல்லாம், அவன் என்ரை பிள்ளையளுக்குச் சொல்லுவான். அவசரத்துக்கு என்னை சைக்கிளிலை கூட ஏத்திக் கொண்டு போவான். என்ரை பிள்ளையளோடை எப்பிடியெல்லாம் செல்லங் கொஞ்சுவான்.

தம்பி....! அவன் செத்திருக்க மாட்டான். நான் எத்தினை கடவுள்களையெல்லாம் மன்றாடினனான். அப்பிடி நடந்திருக்காது.

அவனையே நினைச்சு நினைச்சு அழுது அழுது கண்ணீர் ஆற்று நீரின்ரை கணக்கிலை ஓடிக் கொண்டே இருக்குது. வத்தவேயில்லை.

எனக்கு இப்ப அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரையும் கட்டிப் பிடிச்சு அழோணும் போலை இருக்கு. ரெலிபோன் கூட பருத்தித்துறைக்கு அடிக்கேலாது.

தம்பியின்ரை மறைவிலை அம்மா, அப்பா, எல்லாரும் எப்பிடி அழுவினை எண்டு நினைக்க எனக்கு இன்னும் அழுகை கூடவாய் வருது. எனக்கு ஒண்டையும் தாங்கேலாதாம்.
பரதா....! என்னட்டை ஒருக்கால் வாடா! மனசுக்குள் அவனைக் கூவி
அழைச்சேன்.

படுக்கையறைக்குள் ஏதோ சரசரத்துக் கேட்டிச்சு. ஆவியோ....! மனசு பரபரக்க ஓடிப்போய் படுக்கையறையைப் பார்த்தன். நேற்று முன்தினம் சின்னவன் கிண்டர்கார்டனிலிருந்து ஈயப் பேப்பரிலை வெட்டின ஒரு படம் கொண்டு வந்து தந்தவன். அதை லைற்றிலை கொழுவி விட்டனான். அதுதான் யன்னலாலை வந்த காத்துக்கு ஆடிக் கொண்டிருந்திச்சு. எனக்கு ஒரே ஏமாற்றமாய் போட்டுது.

அடுத்த நாள் இவர் வேலைக்குப் போகாமல் நிண்டு மத்தியானம் சமைச்சுப் போட்டு சாப்பிடச் சொல்லி கோப்பையிலை போட்டும் தந்தார். எனக்கு ஒரு வாய் வைக்கவே தம்பி இந்த உலகத்திலேயே இல்லை எண்ட நினைவிலை அழுகை வந்திட்டுது. உப்புக் கரிச்சது.

- இங்கை பார். அவன் மாவீரனாப் போயிருக்கிறான். நீ அழக் கூடாது. நீ இப்பிடியே அழுது கொண்டிருந்தால் நானும் வேலைக்குப் போக, பிள்ளையளை ஆர் பார்க்கிறது? . இவர் என்னைப் பேசினார்.

அவர் சொல்லுறது சரிதான். அதுக்காண்டி அழுகை நிண்டிடுமோ! இல்லை என்ரை சோகம்தான் வடிஞ்சிடுமோ!

சும்மா சும்மா சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் எத்தினை தரம் கவலைப் பட்டிருப்பன். அழுதிருப்பன். இப்பதான் தெரியுது அதெல்லாம் ஒண்டுமே இல்லையெண்டு.
சாவைப் போல சோகம் வேறையொண்டும் இல்லை. யாராவது தெரியாதவர்கள் செத்தாலே கவலைப் படுறம். இளம் போராளிப் பிள்ளையள் செத்ததைக் கேட்டாலே வயிறு கொதிக்குது. மனசு பதைக்குது. இந்தக் கவலையளும் சோகங்களும் எல்லாருக்கும் தெரியும். ஏன் எல்லாரும் அனுபவிச்சுமிருப்பினம். நானும் அனுபவிச்சிருக்கிறன்.

மில்லர் போலை ஒவ்வொரு கரும்புலியும் மரணத்தைக் குண்டுகளாய் உடம்பிலை கட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு கை காட்டிப் போட்டுப் போறதை, அவையள் வெடிச்ச பிறகு வீடியோ (Video) விலை பார்க்கிற பொழுது அப்பிடியே மனசைப் பிய்ச்சுக் கொண்டு சோகம் கண்ணீராய்க் கொட்டும். இந்த அனுபவமெல்லாம் எனக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் இருக்கும்.

ஆனால் இந்த சோகத்தையெல்லாம் அப்பிடியே முழுங்கி விடுற அளவு சோகமும் உலகத்திலை இருக்குதெண்டு எல்லாருக்கும் தெரியாது. அதை அனுபவிச்சவைக்கு மட்டுந்தான் தெரியும்.
உங்களுக்குப் பிரியமானவை யாராவது செத்தவையோ?
பிரியமானவை எண்டு மிகமிகப் பிரியமான யாராவது.......!
அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை.......!
இப்பிடி யாராவது.....?

அப்பிடியென்றால் உங்களுக்கும் புரியும். என்ரை அந்த சோகத்திலை ஒரு இத்தனூண்டு சோகத்தைத்தான் நான் சொல்லியிருக்கிறன் எண்டு. மிச்சம் சொல்லேலாது. உணரத்தான் முடியும்.

மரணத்தின் முன்னால் மற்றதெல்லாம் பூச்சியம்தான். அதை நான் என்ரை தம்பி என்னை விட்டுப் போன பொழுதுதான் முழுமையாக உணர்ந்தன்.

இத்தனை தூரம் மனசு அழுது அழுது அவலப் பட்டுக் கொண்டிருக்கிற பொழுதும் நூலிழையிலை ஒரு நம்பிக்கை தொங்கிக் கொண்டிருந்திச்சு. - தம்பி சாகேல்லையெண்டு தங்கச்சி எழுதின கடிதமொண்டு ஊரிலை இருந்து வருமெண்டு! -

அந்த நம்பிக்கை நூலைப் பிடிச்சுக் கொண்டு நடக்கையில், இருக்கையில், படுக்கையில், பயணிக்கையில்..... என்று எந்த நேரமும் நினைவுகளுக்குள்ளேயே மூழ்கி, அழுத விழிகளைத் துடைக்க மறந்து, ஏதோ ஒரு உலகத்திலை நான் வாழ்ந்து கொண்டு இருக்கிற பொழுதுதான் - சரியா 21 ம் நாள்

கூட வந்த தோழர்களிற்கு
ஓட வழி செய்து விட்டு
தனித்திரண்டு புலிகளுடன்
களத்தினிலே போராடி
பாரதத்துப் பேய்களது
பாவரத்தம் களம் சிதற
கோரமுடன் படை சரித்து
எம் தம்பி
வீரமுடன் மண் சாய்ந்து விட்டான்
- என்று எனது தங்கைச்சி எழுதிய கடிதம் என்னை வந்தடைந்தது.

அது இன்னுமொரு சுமை தாளாத சோகம் நிறைந்த நாள்.

சந்திரவதனா செல்வகுமாரன் - யேர்மனி

Thursday, November 20, 2003

அந்த மௌன நிமிடங்களில்........!

நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.

தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப் பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லமும், அதைச்சுற்றி வைக்கப் பட்டிருந்த மலர்களும், ஒலித்துக் கொண்டிருந்த மாவீரர் கானமும்... யேர்மனியின் வர்த்தகநகரான டோட்மூண்ட் (Dortmund) நகரின் மத்தியில் அமைந்துள்ள அந்த மண்டபத்தின் உள்ளே நுழைந்த போதே எனக்குள்ளே ஒரு பயபக்தியை ஏற்படுத்தி விட்டது.
நான் வேறொரு உலகத்தினுள் வந்து நிற்பது போலவே உணர்ந்தேன். யேர்மனியின் நெரிசல் நிறைந்த சாலைகளும் அழுத்தம் நிறைந்த வாழ்வும் எனக்கு மறந்து விட்டது.

பண்போடும் மரியாதையோடும் எம்மை வரவேற்ற சகோதர அன்பர்கள் தமது வேலைகளை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் கவனிப்பது மட்டுமல்லாது அவ்வப்போது வந்து எமக்கு ரோஜாப் பூக்களையும் தந்து சென்றார்கள்.
புனிதமான உலகத்தினுள் இருப்பது போன்ற உணர்வில் என் மனது நெகிழ்ந்து போயிருந்தது.

திடீரென்று "தாயகத்தை உயிரிலும் மேலாக நேசித்து, அந்த உன்னத இலட்சியத்துக்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் சுதந்திர வீரர்களை நெஞ்சங்களிலே சுமந்து, அந்த உத்தமர்களுக்கு வணக்கம் செலுத்த நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.

அன்பார்ந்த தமிழீழ நெஞ்சங்களே! விலைமதிக்க முடியாத தம் இன்னுயிரை ஈகம் செய்து, தமிழீழ தேசத்தின் அத்திவாரக் கற்களாக கல்லறைகளில் துயில் கொள்ளும் மாவீரர்களுக்கும், அந்நியர்களால் அநியாயமாக உயிர் பறிக்கப்பட்டு அநியாயமாக மண்ணோடு கலந்து விட்ட பொது மக்களுக்கும் எழுந்து நின்று அகவணக்கம் செய்வோம். "
ஒலிபெருக்கி முழங்கியது.

பேரிரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்த கிசுகிசுச் சத்தம் அப்படியே அடங்கிப் போக மண்டபத்தினுள் அமர்ந்திருந்த அத்தனை தமிழீழ நெஞ்சங்களும் அந்த ஒரு நிமிட அஞ்சலிக்காய் எழுந்து, மனதுக்குள் பேசிய படி மௌனம் காத்தன.

இரண்டு நிமிடங்களில் மௌனத்தைக் கலைத்த படி மீண்டும் ஒலிபெருக்கி, "அன்பார்ந்த தமிழீழ நெஞசங்களே அகவணக்கத்தை அடுத்து தொடர்வது தேசியக் கொடிவணக்கம்.

எமது தமிழீழத் தேசியக் கொடியினை 19.10.1997 இல் புல்மோட்டைக் கடற்பரப்பில் நடந்த தாக்குதலின் போது வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட மாவீரன் கடற்கரும்புலி மேயர் சிறீ திருமாறன் கணேசபிள்ளை ரவிச்சந்திரன் அவர்களின் தாயார் திருமதி கணேசபிள்ளை அவர்கள் ஏற்றி வைப்பார்கள்." முழங்கியது.

தாய்நாட்டைக் காக்க தன் இன்னுயிரை ஈந்த மாவீரனின் தாய் நான் என்ற நினைவில் ஈன்ற பொழுதையும் விட நெஞ்சு பெருமை கொள்ள அந்தத் தாய்
கொடியை ஏற்றினார்.

தமிழ் ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி ஏறுகையில் நெஞ்செல்லாம் புல்லரித்தது.

செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே சீற, நான்கு நிமிடங்களில் கொடி ஏறிப் பறக்க மனசு பரபரத்தது.

எத்தனை எத்தனை வேங்கைகள் இரத்தத்தில் ஏறிய கொடியிது புதுவைரத்தின துரையின் வரிகளின் யதார்த்தத்தில் கண்கள் பனித்தன.

மீண்டும் ஒலிபெருக்கி,
"தொடரும் மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வுகளில், அடுத்து, 1.5.89 அன்று இந்திய இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் வீரமரணமடைந்த மாவீரன் கப்டன் மொறிஸ்-பரதராஜன்.தியாகராஜா அவர்களின் தாயாரும், 11.11.93 அன்று தவளைப் பாய்ச்சல் தாக்குதலின் போது வீரமரணமடைந்த மேஜர் மயூரன் - பாலசபாபதி.தியாகராஜா அவர்களின் தாயாருமான திருமதி.தியாகராஜா அவர்கள் முதலில் ஈகைச்சுடரை ஏற்றி வைப்பார்கள் என்று முழங்கியது.

தாய் நாட்டில் ஒளி வீசுவதற்காய் தம்மை அணைத்துக் கொண்ட அந்த வீரர்களின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றினார். திரையிலே ஈழத்தில் நடைபெற்ற உணர்வு பொங்கும் ஈகைச் சுடரேற்றல் ஓடிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் என்னை நிலைகுலைய வைத்த அந்தப் பாடல்
ஒலிக்கத் தொடங்கியது.

தாயகக் கனவுடன்
சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே
இங்கு கூவிடும் எங்கள்

குரல்மொழி கேட்குதா
ஒளியினில் வாழ்பவரே...
என்மனதும் பாடலுடன் சேர்ந்து கூவத் தொடங்கியது.

...உங்களைப் பெற்றவர்
உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே

உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம.
எங்கே எங்கே

ஒரு தரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின்

திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்...

மனசுஓலமிட, கண்களில் நீர் திரையிட்டது. மண்டபத்தினுள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. மனத்திரை விசாலமாக விரிய அங்கு எத்தனை முகங்கள். மண்ணுக்கு வித்தான பல முகங்கள். "அக்கா அக்கா..." என்று என் முன்னே சிரித்து விட்டு, அடுத்த கணமே களத்தில் காவியமாகி கல்லறையில் துயில் கொள்ளும் உயிர்ப்பூக்கள். அங்கு அவனும் வந்தான்.

அன்று தம்பி வந்து நின்றதில் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாய் இருந்தது. நானும் தங்கைமாருமாக அவனுடன் கதை கதையென்று கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் சந்தோஷத்தைப் பார்த்து அம்மாவும் சந்தோஷத்தோடு, தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தா.

தம்பி அப்போது அனேகமான பொழுதுகளில் ´சென்றி´க்கு நின்று ஆமியை உள்ளே வராமல் பார்க்கும் பணியில் இருந்தான். அத்தோடு புலிகளின் நியாய விலைக் கடையையும் பொறுப்பாக நின்று நடாத்திக் கொண்டிருந்தான். அவன் வீட்டில் இருக்கும் போது படுக்க ஒரு தலையணி காணாதென்று சண்டை பிடித்து, காலுக்கு, கையுக்கு, தலைக்கு என்றெல்லாம் தலையணி வைத்துப் படுப்பான். கிணற்றில் தண்ணீர் அள்ளும் வேலையைத் தவிர வேறொரு வேலையும் செய்ய மாட்டான். பெரிய ஸ்ரைல் பார்ப்பான். கண்ணாடிக்கு முன்னால் மணிக்கணக்காய் நின்று தலைமயிரை அழகு படுத்துவான். நல்ல உடுப்புகள் மட்டுந்தான் போடுவான்.

இப்போ அவன் சைக்கிளில் பின்னுக்குக் கரியர் பூட்டி, கரியரில் ஒரு பக்கீஸ் பெட்டி கட்டி, அதனுள் நியாய விலைக்கடைச் சாமான்களைக் கொண்டு போவதைப் பார்த்து எங்களுக்கு ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் கவலையும் வரும்.

இப்போதும் அதையெல்லாம் சொல்லி அவனைப் பகிடிபண்ணிக் கொண்டிருந்தோம். அவன் அதற்கு மேலால் வேறு பகிடிகள் சொல்லி எங்களைச் சீண்டிக் கொண்டிருந்தான்.

எங்கள் கதைகள் திசைமாறித் திசைமாறி எங்கெங்கோ சென்று திரும்பின.
"டேய்... நீ... உந்தக் கிரனைட் பாக்கை (bag) யெல்லாம் கொண்டு போய் காம்பிலை குடுத்திட்டு வந்து போசாமல் படி." நான் சொன்னேன்.
தங்கையும் என் ஆலோசனை நல்லதென்பது போலப் பக்கப் பாட்டுப் பாடினாள்.

"பேசாமல் வாறதோ! என்ன சொல்லுறிங்கள்?" சற்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

"ஓமடா, எத்தினை பெடியள் போராட இருக்கிறாங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு வந்து முதல்லை படிச்சு முடி. அம்மா உன்னை நினைச்சு எவ்வளவு அழுறவ தெரியுமே!"

இப்போ அவன் சற்று ஆக்ரோசத்துடன் "அக்கா...! நீங்கள் படிச்சனிங்கள் தானே. நீங்களே இப்பிடிச் சொன்னால்...! உங்கடை தம்பி மட்டும் படிக்கோணும். மற்றவங்கள் படிக்கத் தேவையில்லையோ?
அவங்களுக்கும் அக்காமாரும் அம்மாமாரும் இருக்கினம் தானே!
ஒவ்வொரு அம்மாமாரும் அழுது தடுத்தால் போராட ஆர் வருவினம்?"


"..................."

"அக்கா, நீங்கள் என்னை மனசோடை துணிவோடை அனுப்போணும்." என்றான்.

அதுக்கு மேல் என்னால் பேச முடியவில்லை. மீண்டும் எங்கள் பேச்சு இயல்புக்கு மாறி நாங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போது "அக்கா என்ரை கறுத்த ரவுசரை அயர்ண் பண்ணி வையுங்கோ. நாளைக்கு போட்டோ (Photo) எடுக்கிறதாம்." என்றான்.

"ஏன் போட்டோ?" நானும் தங்கைமாரும் கோரஸாகக் கேட்டோம்.

"நான் செத்தால் நோட்டீசிலை போடுறதுக்கு." அவன் மிகவும் சாதாரணமாகச் சொன்னான். அப்படியே எங்கள் சிரிப்பு அடங்க நாம் மௌனமாகி விட்டோம். மனசு மட்டும் திக்கிட்டது. ஏதோ ஒரு பயப் பந்து நெஞ்சுக்குள் உருள்வது போலிருந்தது.

அன்று அவன் அப்போது போய்விட்டான். இரவு வந்து நியாய விலைக் கடைக் காசை எண்ணி என்னிடம் தந்தான். "ஏன் எண்ணித் தாறாய்? என்னிலை உனக்கு நம்பிக்கையில்லையோ?" செல்லமாகக் கேட்டேன்.

"அக்கா எனக்கும் உங்களுக்குமிடையிலை அன்பைத் தவிர வேறையொண்டுமே இல்லை. அது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் காசிருக்கே. இது என்ரையில்லை. இது எங்கடை நாட்டின்ரை காசு. அதை நான் உங்களிட்டைத் தரக்கிளையும் சரி, வாங்கக்கிளையும் சரி எண்ணிறதுதான் நல்லது." மூச்சு விடாமல் சொன்னான்.

என்னை விடப் பத்து வயது குறைந்தவனின் பொறுப்பான பேச்சில் ஆச்சரியமும் பெருமையும் என்னை ஆட்கொள்ள, எண்ணிய காசைப் பையில் போட்டு எனது அறையினுள் வைத்து விட்டு சாப்பிடன் என்றேன்.

"குளிச்சிட்டு வாறன்" என்றான்.

குசினிக்குள் போனேன். அடுப்பில் தணல் இருந்தது. குழம்புச் சட்டியை அடுப்பில் வைத்து விட்டு, பிரட்டலை குக்கரில் வைத்து குக்கரைப் பத்த வைத்தேன். மண்(ணெண்)ணெய் மணம் பக் கென்று வந்து போனது.

"அக்கா...!" கூப்பிட்டான்.

"என்னடா? "

"என்ரை முதுகைத் தேய்ச்சு விடுங்கோ."

"சாமம் பன்ரெண்டு மணிக்கு கிணத்தடியிலை நிண்டு, உனக்கு முதுகு தேய்க்கோணுமோ?!"

"என்ரை அக்கா இல்லே..!"


லக்ஸ் சோப்பைப் போட்டுத் தேய்த்து விட்டேன். கிணற்றில் அள்ளி அள்ளி ஊற்றி ஊற்றிக் குளித்தான்.

"இஞ்சபார்! கெதிலை குளிச்சு முடி. ´ஷெல்´ வந்து கிணத்தடியிலை விழுந்தால் எல்லாம் சரியாப்போடும்."

பருத்தித்துறைக் கடலில் இருந்து ஓயாது பறந்து கொண்டிருந்த ´ஷெல்´ தந்த பயத்தில் நான் அவனை அவசரப் படுத்தினேன். சாப்பாட்டைக் கொடுக்க அவன் ஆசை ஆசையாக அள்ளிச் சாப்பிட்ட போது எனது கண்கள் பனித்தன.
போகும் போது "படுத்து நல்ல நித்திரை கொள்ளோணும் போலை இருக்குதக்கா" என்றான்.

"அப்ப கொஞ்சம் படன்."

"இல்லை நான் போய் சென்றிக்கு நிண்டு கொண்டு வெள்ளையை விடோணும்."

"நித்திரை தூங்கிப் போடுவாய்."

"படுத்தாத்தானே நித்திரை கொள்ளுறது."


"இண்டைக்கு எந்தப் பக்கம்?"


"ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு அங்காலை இருக்கிற பனங்காணிக்குள்ளை, பனைக்குப் பின்னாலை நிற்பன்." அதை மட்டும் மிகவும் குசுகுசுப்பாக என் காதுக்குள் சொன்னான்.

தொடர்ந்து "நித்திரை வராது. பகலெண்டால் ஆராவது தேத்தண்ணி கொண்டு வந்து தருவினம்." என்றான்.

"கால் நோகாதே?" அக்கறையோடு கேட்டேன்.

"கால் நோகுமெண்டு சொல்லி நாங்கள் நிக்காட்டி ஆமி உள்ளை பூந்திடுவான் இல்லே. உங்களைப் போல எத்தினை அக்காமார் எங்களை நம்பி வீடுகள்ளை இருக்கினம்." என்றான். உடனே, சில மாதங்களின் முன் ஆலடி வீடுகளுக்குள் புகுந்த ஆமி ஒரே நாளில் எழுபது பெண்களை மானபங்கப் படுத்திய வெறித்தனம் என் நினைவில் வந்து என் உடல் ஒரு தரம் நடுங்கியது.

"அக்கா என்ன யோசிக்கிறீங்கள்? நான் வெளிக்கிடப் போறன். நாளைக்கு வருவன். அந்தக் கறுத்த ரவுசரை எடுத்து ரெடியா வையுங்கோ. நல்ல சேர்ட்டும் வையுங்கோ. நோட்டீசிலை படம் வடிவா வரோணும்." என் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்த்தபடி சொன்னான்.

பிறகு என்னைக் கனிவாகப் பார்த்தபடி "அக்கா நான் ஏன் இப்பிடிச் சொல்லுறன் தெரியுமே! ஒண்டும் சொல்லாமல் நான் செத்துப் போட்டன் எண்டால் உங்களாலை தாங்கேலாது. சாவு என்னை எந்தக் கணத்திலும் தழுவலாம். அதைத் தாங்க நீங்கள் இப்ப இருந்தே உங்களைத் தயார் படுத்தி வைச்சிருக்கோணும். அம்மாவையும் நீங்கள்தான் தயார் படுத்தி வைச்சிருக்கோணும். என் சாவு உங்களை வருத்தக் கூடாது. அக்கா! உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக்கூடாது. அதுதான் என்ரை ஆசை." சொல்லிக் கொண்டே சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.

அடுத்த நாள் காலை வந்து அழகாக வெளிக்கிட்டுக் கொண்டு, நியாயவிலைக் கடைக் காசுடன் புறப்பட்டான். போகும் போது "ரவியையும் இண்டைக்கு போட்டோ எடுக்கினம். போட்டோ எடுத்து முடிய அவனோடை வருவன். ரவிக்கு வடை விருப்பம். ஏலுமெண்டால் சுட்டு வையுங்கோ." என்று சொல்லிக் கொண்டே போனான்.

அவன் போய் சில மணி நேரங்களில் கிரனைட்டுகளும், ஷெல்களும் துப்பாக்கி வேட்டுக்களுமாய் ஒரே சத்தம்.

"அந்தக் குறுக்கால போவார் வெளிக்கிட்டிட்டாங்கள் போலை கிடக்கு." அப்பாச்சி தன் ஆத்திரத்தையும் எரிச்சலையும் வார்த்தையில் காட்டினா.
பருத்தித்துறையே அல்லோலகல்லோலப் பட்டது. ´சென்றி´க்கு நிற்கும் பிள்ளைகளின் வீடுகளிலெல்லாம் அன்று உலை கொதிக்கவில்லை. மனம் பதைக்க பெற்றவரும், உற்றவரும் பிள்ளைகளின் வரவுக்காய் வாசலில் காத்திருந்தார்கள்.

நீண்ட காத்திருப்பின் பின் எம் நெஞ்சம் குளிர தம்பி வந்தான். மீண்டும் உயிர் வந்தது போல் நாம் பெருமூச்சு விட்டோம். ஆனால் அவன் சோர்ந்து போயிருந்தான். எதையோ பறி கொடுத்தவன் போல் வெறித்துப் பார்த்தான்.

"என்னடா...?" தங்கைதான் கேட்டாள்.

"ரவி பேயிட்டான்." வார்த்தைகளோடு உணர்வும் வெடித்துச் சிதற குலுங்கியழுதான். களத்தில் புலியாகப் பாய்பவனின் இளகிய மனம் கண்டு நாமும் அழுதோம்.

..........

"அக்கா உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக் கூடாது." என் பிரிய தம்பியின் வார்த்தையை மீறி என் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் ஓடியது.

தீடீரென்று ஒளிப்பிரவாகம். ஒலி பெருக்கி முழங்கியது. "தொடர்ந்து, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஈகைச்சுடரேற்றி மாவீரருக்கு அஞ்சலி செய்வார்கள்."

நான் 1985 இலிருந்து 2000 இற்கு மீண்டு ஈகைச்சுடரேற்றும் வரிசையில் ரோஜா மலருடன் நகர்ந்தேன்.

மாவீரர்களின் மத்தியில் என் தம்பியும் அழகாய்...! அவன் கண்கள் என்னையே ஊடுருவிப் பார்த்து "அழாதையுங்கோ அக்கா" என்று சொல்வது போல்...!

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி

Sunday, November 16, 2003

எழுத்து மாறி விட்டது

என்ன நடந்ததெனத் தெரியவில்லை.
Bamini யில் எழுதி சுரதாவின் கொன்வேட்டரில் Unicode க்கு மாற்றி இங்கு இணைத்தேன்.
எழுத்து மாறி விட்டது

இந்தப் பக்கம் வரும் யாருக்காவது இதை எப்படி மாற்றலாமென விபரம் தெரிந்தால்
எனக்குத் தெரியப் படுத்துங்கள். என்னிடம் வேறு பிரதியும் இல்லை.
ம�..... விடிந�த� விட�டதா..?
நேற�ற� ம�ன� தினம� அஸ�ஸெம�பிலி மீற�றிங�. வீட� வந�த� சேர நேரமாகி விட�டத�. வழமையில� வர�டத�தில� ஒர� நாள�தான� இப�படி அட�டகாசமாக இர�க�க�ம�. ஆனால� இவ�வர�டம� எமத� பழைய தலைமையதிகாரி ஓய�வில� சென�ற� விட ப�திய தலைமையதிகாரி வந�த� ஒரே அட�டகாசம�தான�. இத� இவ�வர�டத�தின� மூன�றாவத� அட�டகாசமான அஸ�ஸெம�பிலி மீற�றிங�.
காரியதரிசியைத� தொடர�ந�த� தலைமையதிகாரியே கிறிஸ�மஸ� போனஸ�, சம�பள உயர�வ�, விட�ப�ப� விதிகள�.... என�ற� எல�லாவற�றைய�ம� பேசி ம�டித�த� விட�டார�. வயதில� க�றைந�தவர�. அத�தான� ஒவ�வொர�வராகப� பேச விட�ட� எமக�க�க� கொட�டாவியை வரப� பண�ணாத� தானே ம�டித�த� விட�டார�. பிறகென�ன சாப�பாட�தான�. உறைப�ப�த� தவிர�ந�த மற�றைய எல�லாச� ச�வைகளைய�ம� கொண�ட Buffet.
எல�லாமாக 368பேர� சமூகமளித�திர�ந�தோம�. இவ�வளவ� பேர�ம� Buffet இல� சாப�பாட� எட�ப�பதென�றால� ச�ம�மாவா...? மிக நீண�ட வரிசை. எமத� தலைமையதிகாரிய�ம�தான� அந�த வரிசையில� ஒர�வராக நின�றார�.

வான�கோழி இறைச�சிய�ம�, பன�றி இறைச�சிய�ம� யேகர� ஸோச�டன� ஒர� ப�றம� இர�ந�தால�ம� நான� சைவப� பக�திக�கே சென�றேன�. அங�க� நிறைய items இர�ந�தன- எனக�க� யேர�மனியர�களின� சாப�பாட�களில� மிகவ�ம� பிடித�தத� அவர�களத� kartoffelsalat.(உர�ளைக�கிழங�க� சலாட�). நாங�கள� சோற� சாப�பிட�வத� போல அவர�கள� உர�ளைக�கிழங�கில� �தாவத� செய�த� கொள�வார�கள�. அந�த வகைளில� இந�த உர�ளைக�கிழங�க� சலாட� ம�க�கிய இடத�தைப� பெற�கிறத�. மெல�லிய ப�ளிப�ப�க� கலந�த ச�வை அதற�க�. அதனோட� வேற�ம� பலவிதமான சலாட�கள� இர�ந�தன. பொத�வாக கோவாவை நாம� ச�ண�டிச� சாப�பிட�வோம�. அல�லத� பால�கறி வைப�போம�. ஆனால� யேர�மனியர�கள� சலாட� செய�வார�கள�. மெல�லிய ப�ளிப�ப�க� கலந�த� மிகவ�ம� ச�வையாக இர�க�க�ம�. இந�த சலாட�டை கிறீக� ரெஸ�ரோறண�ட�களில�ம� சாப�பிடலாம�.
ஒர� பிடிபிடித�தேன�.

பிறக� Dessert. அதில�ம� பல items. தோடம�பழ கிறீம�, மாம�பழ-தயிர� கிறீம�, வற�த�த அப�பிள�, fruit salat........ என�ற� பழங�களிலேயே பலச�வை. இவற�றில� தனித�த�வமாகத� தெரிந�தத� மாம�பழத� த�ண�ட�கள�டன� தித�தித�த Mango -Joghurt Creme.

திர�விழாவில� நிற�பத� போன�ற உணர�வ� �ற�பட�ம� படியாக 368 பேர�ம� ஓடிக� கொண�ட�ம� ஆடிக� கொண�ட�ம� பாடிக� கொண�ட�ம� திரிந�தர�ர�கள�. சந�தோசமான பொழ�த�.

விரைவில� கிறிஸ�மஸ�சை ஒட�டி இன�னொர� சந�திப�ப� இதே அட�டகாசத�த�டன� நடக�க�ம�.

Friday, November 14, 2003

யாருக்காவது பசிக்கிறதா..?

கண்ணன் கொரியாவில் சோறு வடிக்கிறார்.
வைகைக்கரைக் காற்றே.. யிலும் அம்மா வைத்த பருப்பு உருண்டைக் குழம்போடு.. சமையலறைப் பக்கமாய் நிற்கிறார்.

ஆடிக்குப் பின் மீண்டும் இப்போதான் பரணி இந்தப் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார்.
அவரின் பூமனசு இனித் தொடரும் என்றுதான் நம்புகிறேன்.

Thursday, November 13, 2003

ஏன் இந்தச் சிக்கல்கள்......???

எதிர்பார்த்தது போலவே வெங்கட்ரமணியின் வலைப்பின்னல் பிரமாதமாகவே இருந்தது.
Tamil Bloggers' Journal இல் மற்றைய வலைப்பூக்களில் சிந்தியிருக்கும் மற்றையவர்களின் எண்ணங்கள் மட்டும் என்றில்லாது வேறும் பல விடயங்கள் பரிமாறப்படுகின்றன. சுலபமாகப் பலதை அறிய முடிகிறது.
க்ருபா நன்றாகத்தான் பின்னியிருந்தார்.. ஏதோ.. சுவாரஸ்யமான கதை படிப்பது போன்ற உணர்வு அவர் எழுத்துக்களை வாசிக்கும் போது.... தற்போது வினோபா கார்த்திக். எடுத்த எடுப்பிலேயே நிறைய எழுதி விட்டார் போலுள்ளது.

சரி... இந்தளவு கணினியோடு இணைந்து விட்டோம். சுரதாவின் எழுத்துருமாற்றி பல வகைகளிலும் கை கொடுக்க யூனிக்கோட் அது இது என்று அசத்துகிறோம். ஆனாலும் மலேசியா பற்றிய தகவல்களை நாம் மிகவும் சுலபமான முறையில் அறிந்து கொள்ளும் படியாக சுபா தமிழில் ஒரு இல்லம் அமைக்க அதைக் கண்டு மகிழ்நத நான் அதற்கு வாழ்த்துத் தெரிவிக்க.. சுபாவுக்கு அந்த எழுத்தை வாசிக்க முடியவில்லையாம்.

மாலனின் பக்கத்துக்குச் சென்றால் ----ஷியச ஷ'டியஷ'ந3ஷ'டி8 ஷ'யடிஷ'ய8ஷ'உ1ஷ'டிநஷ'ய2இ ஷ'ய6ஷ'உ0ஷ'ய1ஷ'ன5ஷ'உ7ஷ'ய1ஷ'டிநஷ'ய1ஷ'உ3 ஷ'ன3ஷ'கனஷ'ய7ஷ'உ9ஷ'கஉஷ'உ8ஷ'க5இ ஷ'உ1ஷ'டிநஷ'நநஷ'டியஷ'ய1ஷ'க7ஷ'உ0ஷ'ய2ஷ'கனஷ'ய8ஷ'உ1 ஷ'கநஷ'உ5ஷ'கஉஷ'ய8ஷ'உ8 ஷ'உ5ஷ'ய2ஷ'டிஉஷ'உ5ஷ'ய1 ஷ'டி4ஷ'ன5 ஷ'ய7ஷ'டி8ஷ'ய1ஷ'உ2ஷ'ய2ஷ'க8 ஷ'ன3ஷ'நஉஷ'டி8ஷ'ய2ஷ'உ2ஷ'க5?.---- இப்படித்தான் தெரிகின்றன.

சுரதாவின் எழுத்துருமாற்றி கூட இதை வாசிக்கும் படியாக மாற்ற மறுக்கிறது.

ஏன் இந்தச் சிக்கல்கள்......???

இதன் நடுவே முகுந்தராஜ் கடலை மிட்டாய் என்றொரு எழுத்துரு மென்பொருளை கணினியில் போட்டுள்ளாராம்.

Wednesday, November 12, 2003

வாக்குறுதியை மறந்து விட்டேன்

பேரக்குழந்தையின் வரவு, மகனின் திருமணம் என நேரத்தோடு நாட்களும் அசுர வேகத்தில் பறக்கின்றன.
இன்று யாழ்கருத்துக்களத்தில் கவிஞர் நாவண்ணனின் கரும்புலி காவியம் பற்றி சீலன் எழுதியருப்பதைப் பார்த்த போதுதான்
கரும்புலி காவியம் பற்றிய எனது கருத்தை தருவதாக கவிஞர் நாவண்ணனுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டேன் என்பதே ஞாபகத்தில் வந்திருக்கிறது.

லண்டன் பயண அனுபவம் பற்றி நிறைய எழுத நினைத்தேன்.
அவைகள் கூட எனக்குள்ளே மட்டுமாகச் சிறகடித்து ஓய்ந்து போயிருக்கின்றன.

இப்படி எத்தனையோ விடயங்கள்..

Monday, November 10, 2003

சிறுமியின் உயிர்காக்க நிதிஉதவி செய்யுங்கள்

11-07-2003 - உதயன்


வண்ணார்பண்ணையைச் சேர்ந்த, கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவியான தனபாலசிங்கம் பிரியந்தி (வயது-6) சிறுநீரகம் பாதிக்கப்பட்டதனால் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவருக்கு அவசரமாகச் சந்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குப் பெரும் தொகைப் பணம் தேவையாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள இந்தச் சிறுமியின் தாயார், இரக்க சிந்தையுள்ளவர்களிடம் இருந்து நிதி உதவிகளை எதிர்பார்த்திருக்கின்றார். அவருக்கு உதவ மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் முன்வந்துள்ளது.

சிறுமியின் வைத்தியச் செலவுக்கான நிதியைச் சேகரிப்பதற்கென மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் மானிப்பாய் தேசிய சேமிப்பு வங்கியில் கணக்கொன்றைத் திறந்துள்ளது. உதவ விரும்புவோர் 1-0107-01-1075-2 என்ற கணக்கு இலக்கத்துக்கு நேரடியாக வைப்புச்செய்யலாம். சிறுமியின் உயிரைக் காப்பதற்கு அனைவரும் முன்வந்து நிதி உதவிகளை வழங்கவேண்டும் என்று மானிப்பாய் றோட்டறக்ட் கழக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நன்றி: உதயன்

Monday, October 27, 2003

வலைப்பூ

சில வாரங்களாக வலைப்பூக்களோடு முழுமையாகச் சங்கமிக்க முடியாதிருந்தது.
ஆனாலும் ஒரு வசதி. முக்கியமான, சுவாரஸ்யமான விடயங்களை Tamil Bloggers' Journal பகுதிக்கு வந்தே பார்வையிட்டுக் கொண்டு போக முடிந்தது.

மதி கேட்டுக் கொண்டதற்கமைய 21.9.03-27.9.03 காலப் பகுதிக்குள் நான் ஏதோ தட்டுத் தடுமாறிய பின்---
மீனாக்சி, பரிமேழகர், சுபா, காசி என்று வந்து சுவாரஸ்யமான முறையில் வலைப்பூக்களின் அழகைத் தொகுத்துத் தந்தார்கள்.

இவ்வாரம் வெங்கட்ரமணி. அசத்துவார் என்றே நம்பிக்கை.

அத்தோடு, காசி எங்கள் வீட்டுச் சிந்துவின் வருகைக்கு வலைப்பூக்களினூடே வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அவருக்கு மிகவும் நன்றி.

Friday, October 24, 2003

எங்கள் வீட்டில் ஒரு புதிய பூ


எங்கள் வீட்டில் ஒரு புதிய பூ பூத்திருக்கிறது.
Sinthu born on 20.10.2003 at 7.23PM in London.


நானும் எனது கணவரும் எமது பேரக் குழந்தை சிந்துவுடன்.

புதிய வரவோடு நாம்....

Monday, October 13, 2003

Buckingham Palace


London, Buckingham Palace

லண்டனில் நிறையப் பார்க்கிறேன்.

Edmonton என்ற போர்வீரன் யேர்மனியருடனான போரிலே மடிந்து போன இடமாகிய Edmonton இலிருந்து கொண்டு நேற்று முன்தினம் Blue Water க்குப் போய் வந்தோம். போகும்போதும் வரும்போதும் தேம்ஸ்நதிக்கு மேலால் கட்டப் பட்டிருக்கும் பாலத்தைக் கடக்கும் போது 1£ கொடுக்க வேண்டும'


The Big Ben, London, United Kingdom.

Tower bridge, London, United Kingdom.

இது பற்றியும் நேற்றுப் போன Big Ben, Tower Bridge, London Bridge, உண்ணாமல் கிரெயினில் தொங்கிக் கொண்டிருக்கும் டேவிட்... இவைகள் பற்றியும் நிறைய எழுத வேண்டும்.

பிரச்சனை என்னவென்றால் லண்டன் கீபோர்ட்டில் எழுத்துக்கள் இடம் மாறியுள்ளன். யேர்மனியக் கீபோர்ட்டுடன் பரிச்சயப் பட்ட எனது விரல்கள் அடிக்கடி ண வை ல வென்றும் ல வை ண வெனறும் மட்டுமல்லாமல் இன்னும் பல எழுத்துக்களோடு மாரடிக்கின்றன. அதனால் யேர்மனிக்குத் திரும்பிய பின் இவை பற்றி எழுதலாமென நினைக்கிறேன்.

Friday, October 10, 2003

7.10.2003


Frankfurt Hahn - Germany

இணையத்தளஙகளில் தேடியதில லண்டனுககுப் பறப்பதற்கான விமானச்சீட்டு Frankfurt Hahn Airport இலிருநது London Stansted Airport க்கு 9.99 Euroக்கும்,
லண்டனிலிருந்து திரும்புவதற்கான விமானச்சீடடு 1.99 Euroக்கும் கிடைத்ததால் இம்முறை Stuttgart Airport ஐத தவிர்க்க வேண்டியதாயிற்று.
எமது Schwaebisch Hall இலிருந்து Frankfurt Hahn 270 கிலோமீற்றர் தூரத்தில். திட்டமிட்டபடி Frankfurt Hahn Airport இல் போயிறங்கிய போது மழையும் காற்றும் எம்மை குளிரோடு வரவேற்றன. car் தரிப்பிடத்துக்கும் விமானநிலையத்துக்குமிடையிலான தூரம் சற்று அதிகமானது போல இருந்தது.
விமானததில் ஏறும் போது மழையில் நன்றாகவே தோய்நதிருந்தோம்.


Rynair விமானம்

Frankfurt Hahn இலிருந்து புறப்படும் Rynair விமானத்துள் எமக்கென இருக்கைகள் பதிவு செய்யப் பட்டு இருக்க மாட்டாதென்பதை விமானத்துள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டோம். பேடூந்தினுள் இடம் பிடிப்பது போல இருக்கைகளைத் தேர்ந்து கொண்டோம்.
பயண நேரம் ஒன்றிலிருந்து ஒன்றரை மணித்தியாலங்கள்தான் என்பதால் சிரமம் எதுவும் இருக்கவில்லை. மற்றைய விமானங்களில் போல இதனுள் உணவு உபசரிப்பும் இருக்கவில்லை. அது அவசியப் படவும் இல்லை.


Plans involve new runways at Stansted Airport

Stansted விமான நிலையம் எனக்குப் புதிது.
யேர்மனியிலிருந்து லண்டனுக்கான விமானக் கட்டணம் மிகவும் சொற்பம் தான்.
ஆனால் லண்டன் Stansted இலிருந்து Edmonton க்குப் பயணிப்பதற்கான train கட்டணம் எனக்கும எனது கணவருக்குமாக 46£


Stansted Express, London Liverpool Street Station

Monday, October 06, 2003

பயணம்

எழுத நினைத்து எழுதாமல் போனவைதான் பல.
என்றைக்கோ நடந்தவைகள் நினைவுகளில் மீட்டப் பட்டு
மீண்டும் பதிவாவது போல
இன்று எழுதாமல் விடுபட்டவை என்றைக்காவது ஒருநாள் பதிவாகும்.


இன்னும் சில மணிநேரங்களில் லண்டன் நோக்கிப் பயணிக்கப் போகிறேன்.
மீண்டும் இங்கு வரும் போது லண்டன் பற்றிய ஏதாவது புதிய செய்திகள் இருந்தால்
கொண்டு வருகிறேன்.

Saturday, October 04, 2003

மீண்டும் கோகிலா படத்தில் இடம் பெற்ற
சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி........

இப்பாடல் என்னைக் கவர்ந்ததற்கான முக்கியமான காரணம்
அருமையான பாடற் காட்சி.

கமலஹாசனும் சிறீதேவியும் இணைந்தாலே அவர்களது அபாரமான இயல்பான நடிப்பில் படம் தனித் தன்மை பெற்று விடும்.

மீண்டும் கோகிலா படத்தில் இந்த ஜோடிகள் இணைந்தது மட்டுமல்லாமல் பெண் பார்க்கும் படலமும் சற்று வித்தியாசமாக சந்தோசமான முறையில் சித்தரிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் பெண் பார்க்கும் படலம் ஒரு நாடகம் போலவே அமைந்திருக்கும்.
உண்மையில் எப்படியோ.....? இந்தியத் திரைப் படங்களில் அப்படித்தான் காட்டுகிறார்கள்.

பெண் வீட்டார் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, முறுக்கு, பலகாரம் என்று செய்து வைத்துக் காத்திருக்க மாப்பிள்ளை ஒரு பொம்மை போல வருவார். அவரை இயக்கி வைப்பது அவரது பெற்றோராகத்தான் இருக்கும்.
வந்து இருந்து கொண்டு பெண் வீட்டார் செய்து வைத்த பலகாரங்களைச் சுவைத்துக் கொண்டு
பெண் கூனா, குருடா, செவிடா...... என்று ஆராய, அவளை ஆடு.. பாடு.. என்று ஆட்டுவித்துவிட்டு வீட்டுக்குப் போய் முடிவு சொல்வதாகச் சொல்லிச் செல்வது அபத்தமாகப் பெண்ணை அவமதிப்பது போலாக இருக்கும்.

இப் படத்திலும் பஜ்ஜி, சொஜ்ஜியிலிருந்து பாடுவது வரை எல்லாம் நடக்கிறது.
ஆனால் கமல் தன் சம்மதத்தைத் தெரிவிக்கும் விதம் அருமையாக உள்ளது. அழகாக உள்ளது.

மணப்பெண்ணான சிறீதேவி பெண் பார்க்கும் படலத்தின் போது
இந்தச் - சின்னஞ் சிறு வயதினிலே....... என்ற பாடலைத்தான் பாடுகிறார்.
பாடல் தொடங்கும் போதே ஜானகியின் இனிய குரல் அற்புதமாக எம்மைத் தழுவுகிறது. அந்த இனிமையை நாம் ரசிக்க, படத்தில் மாப்பிள்ளையாக வந்த கமலும் அதை ரசிக்கத் தொடங்கி விடுவது ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது. செயற்கைத் தன்மை இல்லாமல் பெற்றோருக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி இராமல் பெண்ணை மதிப்பதாகக் காட்டி பார்ப்பவர்களின் மனதில் மகிழ்வை ஏற்படுத்துகிறது.

பாடிக் கொண்டு போகும் போது சிறீதேவிக்கு - இடையில் - பாடல் மறந்து விடுகிறது. வழமையான பாடல்களில் என்றால் இதுவே கெட்ட சகுனமாக்கப் பட்டு கல்யாணம் நிறுத்தப் பட்டு விடும். ஆனால் இங்கே கமல் தொடர்ந்து பாடுவதாய் காட்சி அமைகிறது.

கமல் பாடத் தொடங்கியதும் சிறீதேவி தனக்குள் தோன்றிய ஆச்சரியத்தையும் பரவசத்தையும் காட்டும் விதம் - அந்த முகபாவம் - அற்புதமாய் அமைந்துள்ளது. சிறீதேவியின் நடிப்புத்திறன் அழகாய் வெளி வருகிறது.

தொடரும் பாடலில்
பாட்டி வெற்றிலை பாக்கு இடிக்கும் ஓசை - இடித்த வெற்றிலை பாக்கை துளாவியெடுக்கும் ஓசை - தாத்தா வெற்றிலை பாக்கை வாய்க்குள் போட்டுக் குதப்பும் ஓசை... இன்னும் வெள்ளிக் கிண்ணத்தைத் தட்டில் வைக்கும் ஓசை... என்று நாளாந்தம் நாம் கேட்கும் ஓசைகள் பாட்டுடன் இணைக்கப் பட்டு அந்த ஓசைகள் கூட இசைகள்தான் எனக் காட்டப் பட்டது இனிமையான ஆச்சரியத்தைத் தருகிறது.

காதல் நெருப்பினிலே என் கண்களை விட்டு விட்டேன்....
மோதும் விரகத்திலே..... என்ற கட்டத்தில் குழந்தையொன்று கமலின் மடியை நனைத்து விடும். அது கூட சுவாரஸ்யமாக உள்ளது.

மொத்தத்தில் சாதரணமாக நடக்கக் கூடிய விடயங்கள் பாடலுடன் இணைக்கப் பட்டு, கமலும் சிறீதேவியும் அருமையாக நடித்து, அருமையான இசையுடன் யேசுதாஸ் ஜானகியின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் கேட்கும் போதெல்லாம் மனதில் இனிமையைத் தோற்றுவிக்கக் கூடிய ஒரு இனிய பாடலாக அமைந்துள்ளது.

சந்திரவதனா - யேர்மனி - 24.1.01

Monday, September 29, 2003

பழைய பாடல்களா..? புதிய பாடல்களா..?

திரைப் படப் பாடல்களில் பழைய பாடல்களா..? புதிய பாடல்களா..? கருத்தாழம் மிக்கவை...? என்ற சர்ச்சை யின் போது.............
அனேகமானவர்கள் பழைய பாடல்களே சிறந்தது. கருத்தாழம் மிக்கது.
இலக்கியம் நிறைந்தது. என்று கூறும் போது எனக்கு சற்று எரிச்சலே வருகிறது.

நான்-
பழையபாடல்கள்
இடைக்காலப்பாடல்கள்
புதியபாடல்கள்
மிகப் புதியபாடல்கள்
எல்லாவற்றையும் விரும்பிக்கேட்டு ரசிக்கிறேன்.

நான் பார்த்த வரையில் இன்றைய பாடல்களில்
கவித்திறன், சுவை, அழகு, இசை------என்று எல்லாமே மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன.
அதையேன் பலர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
தற்போதைய பாடல்களில் விரசம் நிறைந்துள்ளன என்று சிலர் முணுமுணுக்கிறார்கள். ஓம்-சில பாடல்கள் விரசம் நிறைந்துதான் உள்ளன. நான் இல்லையென்று சொல்லவில்லை.

அதேநேரம் முந்தைய பாடல்களிலும் இரட்டை அர்த்தம் தொனிக்க விரசம் நிறைந்த பல பாடல்கள் இருப்பதை நான் கவனித்துள்ளேன். இது மற்றவர்கள் கண்களுக்குப் படவில்லையோ என்னவோ!

இன்றைய பாடல்களில் எத்தனையோ பாடல்கள் மிகவும் அழகாகவும் இலக்கிய நயத்துடனும் எழுதப்பட்டுள்ளன. இதை யாரும் மறுக்க முடியாது.

ஓன்று - இளமைக்காலத்தில் நாம் கேட்ட பாடல்கள் எம்மனதில் மிக ஆழமாகப் பதிந்து விடுகின்றன. அவைகளை நாம் எந்த வயதிலும் மறந்து விடமாட்டோம்.
எத்தனை வருடங்களின் பின் அப்பாடல்களைக் கேட்டாலும் எம்முள் ஒரு இனம் புரியாத இன்பக்கிளர்ச்சி ஏற்படுகிறது. அதை வைத்துக் கொண்டு இன்றையபாடல்கள் சரியில்லை என்பதும் அன்றைய பாடல்கள்தான் அருமை என்பதும் தவறானது.

சந்திரவதனா செல்வகுமாரன்.

Wednesday, September 24, 2003

பொட்டு

பொட்டு வைப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும்? அதனால் என்ன பயன்?
என்பவை பற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல், அம்மா வைத்துப் பழக்கிய பொட்டை நானும் தொடர்ந்து வைத்து வந்தேன்.

சின்ன வயசில் சின்னச்சீரகம் உட்பட மூலிகைகள் கொண்டு காச்சி வடித்து, சிரட்டையில் ஊற்றிக் காயவைத்த கறுத்தப் பொட்டை தண்ணீர் தொட்டு உரைத்து நெற்றியில் அம்மா வைத்து விடுவா. சின்னதாக கன்னத்திலும் ஒரு பொட்டுப் போட்டு விடுவா. அதனால் நெற்றிப் பொட்டின் நரம்புகள் குளிர்மையும் நன்மையும் பெறுமாம். அம்மாதான் சொல்லுவா.

வளர்ந்த பின் சிவந்த சாந்துப் பொட்டு. அது கூட மூலிகைகள் கலந்து செய்ததுதானாம். பயன் இருந்திருக்கும். அப்பா சொல்லுவார் பொட்டு வைத்திருக்கும் ஒரு பெண்ணை ஹிப்னோட்டிசவாதியால் ஒன்றுமே செய்ய முடியாதாம். சில ஆண்கள் தமது பார்வையின் வசீகரத்தால் தனியாகச் செல்லும் பெண்களை தமக்கு அடிமையாக்கி விடுவார்களாம். அப்படியான ஏமாற்று வேலை எல்லாம் பொட்டு வைத்த பெண்களிடம் கை கூடாதாம்.

திருமணத்தின் பின் குங்குமப் பொட்டு. அதுவும் மூலிகைகள் கொண்டு செய்த நல்ல பயன் தரு அரும் பொருளாம்.

ஆனால் வெளிநாட்டில் ஸ்ரிக்கர் பொட்டு. இதனால் என்ன பயன்? பல தடவைகள் யோசித்துப் பார்த்து ஸ்ரிக்கர் பொட்டு வைப்பதில் பயன் எதுவும் இல்லையென்பதால் பொட்டு வைப்பதை விட்டு விட்டேன்.

இன்று மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது 7 வயதுகள் நிரம்பிய மேல் மாடித் துருக்கியப் பெண்குழந்தை கீழே இறங்கி வந்து கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் பல நாட்கள் கேட்க நினைத்து கேட்காமல் விட்டதை இப்போ கேட்பது போன்ற பாவனையில் "ஏன் நீ இப்போ பொட்டு வைப்பதில்லை" என்று கேட்டது. சிரித்து விட்டு இப்போ எனக்கு அதில் ஆர்வம் இல்லை என்றேன்.

"ம்... நீ பொட்டோடு எவ்வளவு வடிவாக இருப்பாய். நெற்றியில் சிவப்பாக ஒரு பொட்டு. அது அழகு..." உதடுகளை நெளித்து, நட்போடு சிரித்து அழகாகச் சொல்லிக் கொண்டு என்னைத் தாண்டி இறங்கிக் கொண்டு போனது.

ம்... ஸ்ரிக்கர் பொட்டினால் என்ன பயன்..? இதுவோ...!

சந்திரவதனா - யேர்மனி - 23.9.03

Monday, September 22, 2003

இவனின் வாழ்வு ஏன் இவ்வழி திரும்பியது?

வேலை நேரம் ஏதோ அலுவலாக வெளியில் வந்த போது அவன் பணம் எடுக்க என்று வந்திருந்தான். கார்ட்டைப் போட்டு இரகசிய இலக்கங்களை அழுத்தி விட்டுத் திரும்பிக் குழந்தைத் தனமாய் சிரித்தான். சந்தோசமாக இருந்தது. தமிழன்.

சில நாட்களுக்கு முன் அவனை பேருந்தினுள் சந்தித்த ஞாபகம். அன்று அவன் வேலை முடிந்து சென்று கொண்டிருந்ததால் தலை கலைந்து உடைகள் கசங்கி
களைப்பாகத் தெரிந்தான். இன்று குளித்து... குளிர்ச்சியாகத் தெரிந்தான். எமது நகரத்துக்குப் புதியவன்.

சின்னதான குசல விசாரிப்பின் பின் சற்று ஆழமாக அவன் பற்றி விசாரித்தேன்.
குழந்தைத் தனமாகச் சிரிக்கும் அவனுக்கு விரைவில் குழந்தை கிடைக்கப் போகிறதாம். ஆனாலும் விழியில் மெலிதான சோகம். பதினாறு வயதிலேயே யேர்மனிக்கு வந்து விட்டானாம். படித்திருக்கலாம். அம்மா அப்பாவுடன் வரவில்லை. அதனால் படிப்பை விட அம்மா அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய பணம் முக்கியமாகத் தெரிய வேலை செய்யத் தொடங்கி விட்டான். இப்போது 23 வயதில் இயந்திரங்கள் நடுவே இயந்திரமாகி விட்டான்.

விசாவுக்காக.. பேசிக் கதைத்து யேர்மனியில் வதிவிட அனுமதி கிடைத்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளான். மனசை விட விசாதான் இந்தத் திருமணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதனால் மனைவியும் அருகில் இல்லை. வேறு நகரிலாம்...

அவன் போய் வெகு நேரமாகி விட்டது.

இவனின் வாழ்வு ஏன் இவ்வழி திரும்பியது? மனசு கேட்கிறது.

சந்திரவதனா - யேர்மனி - 22.9.2003

Tuesday, September 16, 2003

அவன்

 அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் Organic Chemistry தொடங்கியது. பதினோராம் வகுப்புக்கான மாஸ்டர் வரவில்லையென்பதால் அந்த வகுப்பு மாணவர்களையும் எமது 12ம் வகுப்புக்குள் விட்டார்கள்.

பெப்பே தான் அவசரமாக வாங்கில் மேசைகளை ஒழுங்கு படுத்தி விட்டது. அது யார் பெப்பே...! என்ற யோசனை உங்களுக்கு வரலாம். அது பாவம். நாங்கள் பெண்கள் எல்லோருமாகச் சேர்ந்து அதுக்கு வைத்த பெயர்தான் பெப்பெ. அதென்ன அஃறிணையில்... என்று நெற்றியைச் சுருக்குகிறீர்களா? அவனெண்டு சொல்ல முடியவில்லை. வயதில் மூத்தது. அவர் என்று சொல்ல முடியாத படி பெப்பே. நாங்கள் ரியூற்றறிக்குள் நுழையும் போது கதவைத் திறந்து விடுவதிலிருந்து கரும்பலகையைச் சுத்தமாக்கி... என்று எல்லாவற்றையும் செய்து வைப்பதுதான் பெப்பேயின் வேலை.

யாரோ நாங்கள் பெப்பே என்று சொல்வதை அதுக்குச் சொல்லி, ஒரு நாள் இடைவேளை நேரம் அது வந்து அதன் அர்த்தம் என்ன? ஏன் தனக்கு அப்பிடிப் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்க எங்களுக்குப் பாவமாகி விட்டது. பெயர் வைப்பதில் மும்முரமாக நின்ற சந்திரப்பிறேமா மட்டும் நைஸாக நழுவி விட்டாள்.
மனசுக்குள் கனவுகளை வளர்த்துக் கொண்டு மன்மத நினைப்பில் பெண்களுக்கு நடுவில் வேலை செய்து கொண்டிருந்த பெப்பே இப்போதெல்லாம் எங்களைக் கண்டால் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

சில 11ம் வகுப்பு மாணவர்கள் உதவி செய்ய, பெப்பே முகத்தைத் தொங்கப் போட்ட படி வாங்கில்களை அடுக்கிக் கொண்டிருக்கவே ஆண்மாணவர்கள் சிலர் தடால் புடால் என்று ஓடிவந்து அமரத் தொடங்கினார்கள். இடங் காணததால் பக்கப் பாடாகவும் வாங்கில்கள் போடப் பட்டன.

வகுப்பு தொடங்கி விட்டது. பெப்பே அவசரமாய்ப் புதுச் சோக்குகளை கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு வெளியேறி விட்டது.

மணியம் மாஸ்டர் வழக்கம் போல Organic Chemistry யை இரட்டை அர்த்தம் தொனிக்க விளக்கிக் கொண்டிருந்தார். சிரிப்பலைகளின் நடுவே அவசரமாய் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று என் காலில் ஏதோ தட்டுப் பட்டது. திடுக்கிட்டுக் குனிந்து பார்த்தேன். ஒரு கால் நீண்டிருந்தது. அது பக்கப் பாடாக எனக்கு வலது பக்கமாக வைக்கப் பட்டிருந்த வாங்கிலில் இருந்த அவனின் கால். நிமிர்ந்து பார்த்தேன். அவன் குனிந்த தலை நிமிராமல் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.

என்னை விட இளையவன். 11ம் வகுப்பு மாணவன். எனக்குப் பிரயோககணிதம் படிப்பிக்கும் மாஸ்டரின் மகன். அந்த மாஸ்டர் கடமையே கண்ணானவர். அவர் வகுப்புக்குள் நுழைந்து விட்டால் ஆர்முடுகல், அமர்முடுகல், வேகம், நேரம், கரும்பலகை, சோக், டஸ்ரர்,... இவைகள் தவிர வேறெதுவும் எம் சிந்தனையில் செல்லாது. Chemistry யில் மாதிரி பிரயோககணித வகுப்பில் நிறையப் பெண்களும் இருக்க மாட்டார்கள். ஏதோ பெண்கள் கணிதம் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்பது போல டொக்டர், ரீச்சர் கனவுகளோடு உயிரியலும், தாவரவியலும் படிக்கச் சென்று விடுவார்கள். நானும் கீதாவும் இன்பியும்தான் கணிதம் படிப்போம். மிச்ச எல்லாம் பெடியன்கள்தான். எங்களுக்குத்தான் சின்னதாகக் கூடப் பெண்களின் பக்கமாகச் சிரிக்காமல் சீரியஸாகப் படிப்பிக்கும் அந்த மாஸ்டரின் ஆசிரியத் தன்மையும், திறமையும் தெரியும். அதனால் நாங்கள் மூவரும் அவர் மகனான அவனை மற்றைய மாணவர்கள் போல சாதாரணமாக எண்ணாது சற்று எட்டவே வைத்திருந்தோம்.

இதென்னடா...? வாங்கிலுக்குக் கீழே தவறுதலாக ஒரு கால் பட்டதுக்கு இத்தனை ஆரவாரமா என உங்களுக்கு ஒரு சிரிப்பான யோசனை வரலாம். அந்தக் காலம் என்ன உதட்டோடு உதடுரசிக் ´ஹலோ´ சொல்லும் இன்றைய காலமா.? ஒன்றாகப் படிக்கும் மாணவனுடன் கூட ஒரு வார்த்தை பேசாது, ஆண் பெண் என்று பிறித்து, பிரித்து வைத்து.. கண்கள் சந்தித்துக் கொண்டாலே பாவம் என்பது போல தலைகுனிந்து திரியும் இற்றைக்கு 28 வருடங்கள் முந்திய காலமல்லவா அது..!

பார்வையே தொடக் கூடாது. புன்னகை.. அது தெரியாமல் கூட ஆண் மாணவர்கள் முன் பெண் மாணவர்களுக்குப் பூக்கக் கூடாது. இந்த நிலையில் ஒரு ஆண் மாணவனின் கால் பெண் மாணவியின் காலில் படுவதென்பது சும்மாவா..?

அவன்  தலை கவிண்ட படியே எழுதிக் கொண்டிருந்தான். யாராவது அவதானித்திருப்பார்களா என்று அறிந்து கொள்ள மெதுவாகப் பார்வையைச் சுழற்றினேன். எல்லோரும் நோட்ஸ் எடுப்பதிலேயே கவனமாக இருந்தார்கள். யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதில் எனக்குப் பெரும்நிம்மதி. இருந்தாலும் ஏதோ அவமானப் பட்டுப் போன மாதிரியான ஒரு உணர்வு. முன் வாங்கிலில்தான் நான் இருந்தேன். எனக்கு நேரெதிரே கரும்பலகைக்கு முன் நின்று படிப்பித்துக் கொண்டிருக்கும் மணியம் மாஸ்டர் கண்டிருப்பாரோ என்று மனசுக்குள் ஒரு சின்ன உறுத்தல்.

அவன்  தலையை நிமிர்த்தியதை நான் காணவில்லை. அவன் நோட்ஸ் எடுக்கும் விதத்தைப் பார்த்தால் அவன் என் காலில் தட்டுப் பட்டதையே உணராதவன் போலத் தெரிந்தான். தெரியாமல்தான் நடந்திருக்கும். அவன் நல்ல பெடியன். என் மனசுக்கு நான் கூறிக் கொண்டேன்.

வகுப்பு முடிந்து வெளியில் வந்த போதும் யாரும் இது பற்றி எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. எனக்கு இப்போ துணிச்சலான நிம்மதி. யாரும் காணவில்லை.

அடுத்த வாரம் பாடசாலைக்குச் சென்ற போது எனது நிம்மதி பாடசாலை மதில்களில் கரிக்கட்டியால் குலைக்கப் பட்டிருந்தது. அவனது பெயரை  எழுதி பக்கத்தில் கூட்டல் அடையாளம் போட்டு எனது பெயரும் எழுதப் பட்டிருந்தது. என்னையும் அவனையும் இணைத்தும், நான் அவனின் காலைத் தட்டினேன் என்றும் அரசல் புரசலான கதைகள் பாடசாலைச் சுவர்களில் எதிரொலித்தன.

எனது கால் மாஸ்டரை நோக்கித்தான் நீள முடியுமே தவிர எனக்கு வலது பக்கமாக இருந்த அவனின் பக்கமாக நீள முடியாது. அவனாக வேண்டுமென்று என் பக்கம் நீட்டினானா..? அல்லது தவறுதலாக நடந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதை ஒரு தவறான கதையாக ஊருக்குள் உலாவ விட்டு விட்டான்.

´ஏன்ரா இப்படி ஒரு கதையை உருவாக்கினாய்` என்று அன்று அவனிடம் சென்று கேட்க ஆண் பெண்ணுக்கிடையில் அன்றிருந்த இடைவெளி இடம் தரவில்லை. அதனால் இன்றுவரை அவன்  ஏன் அப்படி நடந்து கொண்டான்..? என்ற கேள்விவிக்கு எனக்குப் பதில் கிடைக்கவும் இல்லை.

சந்திரவதனா - யேர்மனி - 15.9.03

Monday, September 15, 2003

புயலடித்துச் சாய்ந்த மரம்

காற்றே!
உனக்கும் இரண்டு முகமா..?

தென்றல் என்றுதானே
என்னைத் தந்தேன்
இளமையின மதாளிப்புடன் நான்
பசுமையாய் செழித்திருக்கையில்
அல்லும் பகலும்
தழுவலும் வருடலுமாய்
அருகிருந்து
என் இளமையைச் சுகித்து விட்டு
எனதிந்த தள்ளாத வயதில்
உன் சுயத்தைக் காட்டி விட்டாயே!

கனிதரும் காலம் போய்விட்டாலும்
நீ களைப்பாக வரும்போதெல்லாம்
இளைப்பாற இடம் தந்திருப்பேனே!
வேரோடு சாய்த்து விட்டாயே!

வீழ்ந்ததில் வேதனை இல்லை
உன் நியமான
புயல்முகம் கண்டதில்தான்
பலமான அதிர்ச்சி.
வேரறுந்ததில் சோகமில்லை
நீயறுத்தாயே
அதைத்தான் ஏற்காமல்
மனதுக்குள் வெகுட்சி.

சந்திரவதனா - 21.4.2002

Sunday, September 14, 2003

சந்தோசிக்க வைத்தார்கள்

சுபாவைக் கண்டு பிடித்தேனோ இல்லையோ, சுபாவைத் தேடும் போது சில அன்பு உள்ளங்களின் அக்கறையான செயற்பாட்டைக் கண்டு கொள்ள முடிந்தது. அவர்கள் தாமாகவே தமக்குத் தெரிந்த சுபா பற்றிய தகவல்களை எனக்கு அனுப்பி வைத்து என்னை சந்தோசிக்க வைத்தார்கள்.

இத்தனை அவசரமான உலகில் இது போன்ற உறவுகளின் தொடர்பாடல்கள் இருப்பதால்தானோ என்னவோ நாம் இன்னும் வாழ்தலை நேசிக்கிறோம்.

Friday, September 05, 2003

இவர் அவராக இருப்பாரோ...?

இந்த சுபா யாராக இருக்கும் என்று நான் பல தடவைகள் ஆராய்ச்சி செய்து விட்டேன். பலரையும் கேட்டுப் பார்த்து விட்டேன். பலன் என்னவோ பூச்சியம்தான். சுபாவைத் தெரிந்த யாரையுமே நான் இன்னும் சந்திக்கவில்லை.

சுபா ஆணா பெண்ணா என்ற ஆராய்ச்சியில் கூட நான் தோற்றுத்தான் போனேன். சுபா பெண்தான் என நான் எனக்குள்ளே தீர்மானித்து கண்டு பிடித்து விட்டேன் என்று இறுமாப்புடன் இருந்தால் சுபா அடுத்த வாரம் தனது சிறுகதையை ஒரு ஆணாக இருந்து எழுதியிருப்பார்.

ஈழமுரசில் வரும் சிறுகதைகளுக்குள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறு சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சமூகப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாகவும் அமைந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பது இவரின் கதைகள். கதையை நகர்த்தும் விதம் மிக நன்றாக இருக்கும்.

இவரைப் போல இன்னும் எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இருக்கும் போது நான் ஏன் இவரைக் குறிப்பாகத் தேடினேன் என நீங்கள் யோசிக்கலாம். இவர் கதையிலே ஸ்ருட்கார்ட்டில் இருக்கும் பிருந்தா சில்க் கவுஸ் சொப்பிங் பாக் பற்றி வந்தது. அதுதான் என்னை அளவுக்கதிகமாக ஆர்வத்துடன் அவரைத் தேட வைத்தது. எனக்கு அண்மையில் இப்படி ஒரு எழுத்தாளர். சத்தமில்லாமல் தனது முழுப்பெயரைக் கூடக் குறிப்பிடாமல் சுபா என்று எழுதிக் கொண்டிருக்கிறார். இடையிடையே இவர் கதைகளில் ஸ்ருட்கார்ட்டில் வசிக்கும் தமிழ் குடும்ப அங்கத்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அவரது படைப்புக்களின் பரம ரசிகை நான்.

ஆணா பெண்ணா என்று கூட அனுமானிக்க முடியாமல்...
என் மனத் தராசு பெண்தான் என்று ஊகம் கொண்டு அந்தப் பக்கம் தாழும் போது அவரது கதையை வாசித்த இன்னொருத்தி சொல்லுவாள் சீ.. அது ஆண். என்று. ஈழமுரசுக்குக் கூட எழுதிக் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் மூச்சுக் காட்டவில்லை.

இப்படியே சில வருடங்களாக மனதுக்குள் கேள்விக் குறியாக சுபாவைக் கொண்டு திரிகையில்தான் எனக்கு இந்த Blog இன் அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது நேரம் கிடைக்கும் நேரங்களில் ஒவ்வொருவரினதும் Blog ஆக திறந்து வாசித்துப் பார்த்த போதுதான் ஒரு Blog இனூடே சுபாஒன்லைன் அறிமுகமானது. அவரது பக்கங்களை வாசித்துக் கொண்டு போகும் போது அவர் யேர்மனியில் எஸ்லிங்கன் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. உடனேயே எனக்குள் ஒரு சந்தோசம்.

இவர் அவராக இருப்பாரோ...? சந்தேகத்தை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதனால் உடனடியாக அவர் தளத்துக்குள் அவர் மின்னஞ்சல் முகவரியைத் தேடி எடுத்து, எனது தேடல் பற்றி மிகச் சுருக்கமாக எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்ன..? அனுப்பிய வேகத்தில் மின்னஞ்சல் என்னிடமே திரும்பி விட்டது.
இன்னும் தெரியவில்லை. யார் அந்த சுபா என்று..!

Wednesday, September 03, 2003

தாய்மனமும் சேய்மனமும்

சிறகிருக்கிறது
என்னைப் பறக்க விடு
என்பது பிள்ளை மனம்.

சிறு பிள்ளை நீ
என் இறகுக்குள் ஒளிந்து கொள்
என்பது பெற்ற மனம்.

புரியாமல் பறந்தோடும்
பிள்ளை மனம்
புரியும் போது
அதுவும் பெற்ற மனம்.

சந்திரவதனா - யேர்மனி - 11.6.1999

Sunday, August 24, 2003

மேடைப்பேச்சு

அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன்.. வாய் குளறி... தடுமாறியிருக்கிறேன். அப்படியான சமயங்களில் எழுத்தின் ஆங்காரம், பேச்சில் ஓங்கவில்லையே எனப் பலர் என்னிடம் ஆச்சரியப் பட்டுள்ளார்கள். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒத்திகை பார்ப்பு என்பது எனக்குள்ளே அரங்கேறி அசை மீட்கும்.

அவர் மீது எனக்கு நல்ல மதிப்பு. அதனால்தான் இன்று இத்தனை தரமாய் ஒத்திகை பார்ப்பு. மேடைகளிலும், வானொலிகளிலும் வாய் திறந்தாலே அருவியாகக் கொட்டும் அவர் தமிழில் நான் மெய் மறந்து போயிருக்கிறேன். வார்த்தைகளில் அழகு மட்டுமா? வயதான அவரிடமிருந்து வெளிப்படும் முற்போக்குச் சிந்தனையுடனான, புதுமை நிறைந்த, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் என்ன ஒரு தெளிவு. அடித்து வைத்துச் சொல்லும் கருத்துக்களிலுள்ள நியாயம். உண்மையிலேயே நான் வியந்து போவேன்.

கடந்த வாரமும் ஐரோப்பிய வானொலி ஒன்றில் கிட்டத்தட்ட 40 நிமிட நேரங்கள் அவரது வீச்சான உரை ஒலிபரப்பானது. எடுத்துக் கொண்ட விடயம் ஐரோப்பியாவில் நடைபெறும் ஆடம்பரமான சாமத்தியச்சடங்குகள் அவசியமானதுதானா..? என்றதாக இருந்தது. இன்றைய எமது கணினி உலகப் பெண்களே சாமத்தியச்சடங்கு அவசியந்தான் என்று எண்ணி தமது பெண் குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையில் அவர் அது அவசியமே இல்லை.. என்று வாதிட்டு, வானொலி அறிவிப்பாளருக்கு இடையிடையே எழுந்த அது சம்பந்தமான சந்தேகங்களுக்கும்; தங்கு தடையின்றிப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஐம்பதைத் தொட்ட ஒருவர் இப்படி முற்போக்கு நிறைந்த ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்ததில் எனக்கு மெய்சிலிர்த்தது. அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

அந்த எனது நினைப்பை இன்று எப்படியாவது செயலாக்க வேண்டும் என்ற முனைப்பில், மீண்டும் ஒரு முறை மனசுக்குள் எப்படி அவருடன் பேசுவது என ஒத்திகை பார்த்து விட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.

வழமைக்கு மாறாக எனக்கும் இன்று தங்கு தடையின்றிப் பேச வந்தது. பாராட்டினேன். அவரை நியமாகவே மனசாரப் பாராட்டினேன். அவரின் தமிழ்ப்புலமையை, பேசுந்திறனை, பொருள் கொண்ட கருத்துக்களை, அதைச் சபையோர்க்குத் தரும் விதத்தை ... என்று பாராட்டினேன். பேச்சு அலுக்கவில்லை. இருந்தாலும் பின்பொருமுறை பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பைத் துண்டிக்க முனைந்தேன்.

அவர் பல தடவைகள் நன்றி சொன்னார்.
இண்டைக்கெண்ட படியால் என்னைப் பிடிச்சிங்கள். இனி இரண்டு கிழமைக்கு எனக்கு ஒண்டுக்கும் நேரமிராது. என்றார்.

ஏன் நாட்டுக்குப் போறிங்களோ..?
இன்றைய இப்போதைய நிலையில் புலத்தில் இதுதானே சகயம் என்பதால் உடனேயே எந்த சிந்தனையுமின்றிக் கேட்டு விட்டேன்.

இல்லையில்லை... மகள் பெரியபிள்ளையாகி ஒரு மாசமாச்சு. வாற சனிக்குத்தான் ஹோல் கிடைச்சுது. அதுதான் அந்த வேலையளோடை ஓடித் திரியிறன். எல்லாருக்கும் கார்ட் குடுத்திட்டன்... அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நான் தொலைபேசியை வைத்து விட்டேன்.

சந்திரவதனா - 21.8.2003
பிரசுரம் - வடலி-லண்டன்(செப்டெம்பர்-2003)

Wednesday, August 20, 2003

இதற்கு என்ன பெயர்..???

ஈமெயில் பார்த்து
இதயச் சுவர்கள் வேர்த்து
முகம் தெரியா உனக்காய்
முழுமதியாய் சிரித்து..!

இதற்கு என்ன பெயர்..!
இதுவும் காதலா..?

சந்திரவதனா - 1999

Monday, August 18, 2003

எம்மவர் மட்டும் எங்கே...?

பனியின்றி குளிரின்றி
இந்த வருடத்தின் முதல் சிரிப்பு

இயற்கையின் சிரிப்பில்
துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..!
மலர்வது மலர் மட்டுந்தானா..!
மனிதர்களுந்தான்..!

நகரமே சிரித்தது
யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது
சிரித்துக் களித்தது
இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க
மலராய்த் தெரிந்தது

குட்டைப் பாவாடைகளும்
கட்டை ரீசேர்ட்டுகளும்
தலை காட்டா விட்டாலும்
சிட்டுக் குருவிகளாய் இளசுகள்
உதட்டோடு உதடுரசி
மூக்கோடு மூக்குரசி
கெஞ்சலும் கொஞ்சலுமாய்.....

வட்ட மேசைகளைச் சுற்றி
வட்ட மிட்ட கதிரைகளில்
பெரிசுகளும் சிறிசுகளும்
கண் பார்த்துக் கதை பேசி
மெல்லுதட்டில் தமை மறந்து
ஐஸ் சுவைத்து......
கை கோர்த்து நடக்கையிலும்
காதலுடன் இடை தழுவி
உடல் உரசி
மனம் சிலிர்க்க மலர் பரிமாறி....

இயற்கையோடு இயற்கையாக
சிரித்து... சிலிர்த்து...
ஊரே களித்திருக்கையில்
இந்நகரில் வாழும் இருபது தமிழரில்
ஒருவரையும் காணோமே...!

வன்னியும் வாகரையும்
மனத் திரையில் ஓட
எங்கேயும்
பிற்சேரியாவிலும் ரெஸ்ரோறண்டிலும்
கனவுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார்களோ.....???

சந்திரவதனா செல்வகுமாரன்
3.4.1999

Thursday, August 14, 2003

நட்பென்றுதானே நம்பினேன்.....!

போரிலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனிமை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது.

நட்பென்றுதானே நம்பினேன்
கை கோர்க்க எண்ணி
விரல் நீட்டினேன்

என் விரலை
சிறை வைத்து
பின் முறித்தெறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் கூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்......?

சந்திரவதனா 12.12.2001

Monday, August 04, 2003

மனசு சூனிய வெளிக்குள்..........

மனசு சூனிய வெளிக்குள்
சிக்கித் தவிக்கிறது.

உன்னவள்
உன் அஸ்தியை
ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள்.
அவள் புண்ணியவாட்டி.
உன் அருகிருந்து
தன் கடன் முடித்து விட்டாள்.

நான்
எதுவுமே செய்யாதிருந்து விட்டு
இப்போ..........
சூனிய வெளிக்குள் நின்று
சுற்றிச் சுழல்கிறேன்.

உயிர் போன பின்னும்
நீ அருகிருக்கிறாய் என்பதில்
வலி தெரியாதிருந்தது.
சிதையேறிய போதுதான்
நீ இனியில்லை என்ற நினைப்பில்
மனசு பதை பதைக்கிறது.

நாடொன்றுதானே
நன்றாக உறவாடியிருப்பேன் என்று
ஊரவர்கள் நினைப்பார்கள்.
யாருக்கும் நான் ஏதும் சொல்லவில்லை.
போரென்று வந்து புலம் பெயர்ந்த பின்
வேர்களும் விழுதுகளும் வெகு தூரமாகி.......
போனதை நினைத்துப்
புலம்புவதுதானே வாழ்வாகிப் போச்சு

நாமெல்லோரும்
- நேரமில்லை - யென்றும்
- தூரமாப் போச்சு - என்றும்
இயலாமைகளுக்கு
போர்வை போர்த்திப் பழகி விட்டோம்.

இத்தனை வருடங்களில்
எத்தனை தரம் சந்தித்திருப்போம்.
மின்னஞ்சலும்
தொலைபேசியும் இல்லையென்றால்
தொடர்பாடல்
என்றைக்கோ அறுந்து போயிருக்கும்
எமது ஓரிரு சந்திப்பின் போதான
உறவு முறை சொல்லி அழைக்கும்
உன் இதமான சிரிப்பு மட்டுந்தான்
என்னோடு நின்றிருக்கும்.

நான் அழவில்லை.
மனசுதான் அலைகின்றது
இல்லாத உன்னோடு கை கோர்த்து
உல்லாச உலா வருகின்றது
நீ இல்லை என்பது
உறைக்கும் சமயங்களில்
மல்லாக்காய் வீழ்கின்றது.

சந்திரவதனா - 3.8.2003

Sunday, August 03, 2003

நீயே ஒரு அழகிய கவிதைதானே.!

நீயே..!
அதிசயமாய்
அழகிய ஓவியமாய்
நகர்ந்து கொண்டே இருக்கும் நதியாய்
தழுவுகின்ற காற்றலையாய்.....
எத்தனை பேருக்கு வசந்தமானாயோ..?

உன்னை எண்ணி...!
பூக்களின் நறுமணங்களை
எத்தனை பேர் நுகர்ந்தார்களோ..!

உனது விழிமொழிதலால்
எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ..!

உனது குடிபுகுதலினால்
எத்தனை மனமுகடுகளில்
இனிய கானங்கள் ஒலித்தனவோ..?

இன்று உன் பிரிதலினால்
எத்தனை மனங்கள் ஏக்கப் புள்ளிகளுடன்
காதல் கோலங்களுக்காய் காத்திருக்கின்றனவோ..?

புரியாமல்.... புலம்பாதே...!
நீயே ஒரு அழகிய கவிதைதானே.!
பிறகேன் தேடுகிறாய் கவி - தை யை..?

சந்திரவதனா - 4.8.02
******************************************************************************

Thursday, July 31, 2003

நினைவு நதியிலிருந்து..... (1985 ம் ஆண்டு)

"என்ரை தலேணியை ஆர் எடுத்தது? அம்மா என்ரை தலேணியைக் காணேல்லை. என்னெண்டு நான் படுக்கிறது."

தம்பி பரதனின் குரல் கேட்டு அவனது அறையை எட்டிப் பார்த்தேன்.

தலைக்கு ஒரு தலையணி, காலுக்கு ஒரு தலையணி, வலதுபக்கத்துக்கு ஒரு தலையணி என்று மூன்று தலையணிகள் தெரிந்தன. இடது பக்கத் தலையணியைக் காணவில்லை. இன்னும் நன்றாக அறையை எட்டிப் பார்த்தேன். அறையின் மற்றப் பக்கத்தில் சபா நாலு தலையணிக்குப் பதிலாக ஐந்து தலையணியுடன் ஆழ்ந்து தூங்கியிருந்தான்.

"அம்மா...! தலேணி...! "
பரதனின் குரல் எனக்கு எரிச்சலைத் தந்தது.

"டேய்..! என்ன நேரமெண்டு தெரியுதில்லே. பிறகேன் இப்பிடிச் சத்தம் போடுறாய்?"
கோபித்த படி அறையினுள் போய் சின்னவன் சபாவின் கட்டிலில் இருந்து ஒன்றை எடுத்துப் பரதனிடம் கொடுத்தேன்.

"அக்கா என்றால் அக்காதான்."
முன் இரண்டு பெரிய பற்களையும் காட்டிச் சிரித்தான்.

"சும்மா பல்லைக் காட்டாதை. கிழட்டு வயசாகுது. கொஞ்சங் கூட விவஸ்தையில்லாமல்..... தலேணிக்காண்டி இந்தக் கத்துக் கத்திறாய்..!"

டக்கென்று சுண்டிப் போன அவனது முகத்தைப் பார்க்க எனக்குக் கவலையாகி விட்டது.
"என்னடா.. நீ..........! பதினாலு வயசாச்சு.. இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி.. "என்ற படி
அவனின் பக்கத்தில் கட்டில் நுனியில் அமர்ந்தேன். அவன் பெரிதாகச் சிரித்தான்.

"ஏமாந்துட்டா...! ஏமாந்துட்டா...!" என்று கத்தினான். கவலை போல் நடித்து என்னை ஏமாற்றிய சந்தோசம் அவனுக்கு.

"சும்மா படு. எனக்கு வேலையிருக்கு."
என்ற படி லைற்றை அணைத்து விட்டு வெளியில் வந்தேன்.

திடீரென இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு முழங்கிய பீரங்கியின் முழக்கத்தில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கியிருந்த என் நெஞ்சு திக்கிட்டது. எட்டிப் பார்த்தேன். தம்பி பரதனின் கட்டில் வெறுமையாக இருந்தது. நான்கு தலையணைகள் மட்டும் அப்படியே இருந்தன.

இப்படிக் காலுக்கும் கையுக்குமாக தலையணைகளை வைத்துப் படுத்தவன் இப்போ எந்தக் கல்லிலும் முள்ளிலும் படுக்கிறானோ.! நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் சோகத்தின் கனம் தாங்காது கண்ணுக்குள் நீர் நிறைந்து கன்னங்களில் வழிந்தது. வழிந்த கண்ணீரைத் துடைக்க வேண்டுமென்று கூடத் தோன்றாததால், அப்படியே வந்து கதிரையில் அமர்ந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து விட்ட எனது கணவருக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தைத் தொடர முனைந்தேன்.

மீண்டும் பீரங்கி. இப்போ சங்கிலிக் கோர்வை போல 9 பீரங்கிகள். பேனா தொடர்ந்து எழுத மறுத்தது. எனது மனசைப் போலப் பேனா மையும் உறைந்து விட்டதோ.. என்னவோ..!

எனக்குத் தனியாக இருப்பது போலப் பிரமை ஏற்பட்டதால் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அம்மா பரதனின் அறை வாசலின் ஒரு ஓரமாக பாயைப் போட்டுப் படுத்திருந்தா. அவ தனது கட்டிலில் படுத்து மூன்று மாதங்களாகின்றன. எப்போ தம்பி பரதன் வீட்டை விட்டுப் புறப்பட்டானோ..! அன்றிலிருந்து அவனது கட்டிலைப் போலவே அம்மாவின் கட்டிலும் வெறுமையாகத்தான் இருக்கிறது.

பலமாதங்களுக்கு முன் பாடசாலை நேரம் யாரோ அவனை ரோட்டிலே கண்டதாகச் சொன்ன போது நாங்கள் யாருமே அலட்டிக் கொள்ள வில்லை.
பிறகுதான் அவன் நோட்டீஸ் ஒட்ட பாடசாலைச் சுவரைத் தாண்டிச் சென்று வருகிறான் என்று அறிந்து அதிர்ந்தோம். ஆனாலும் இவ்வளவு து}ரம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. அன்று பின்னேரம் அவன் வீட்டுக்கு வந்த போது நானும் தங்கையுமாக
"பரதன்..! நீயென்ன ஸ்கூலிலை இருந்து எங்கையாவது போறனியே..?"
என்று கேட்டோம்.

உடனே அவன் தடுமாறி "இல்லை...இல்லை... ஆர் சொன்னது..?" என்றான்.

பின்னர் ஒரு நாள் "அம்மாக்கு இப்பச் சொல்லாதைங்கோ. நான் போனாப் போலை சொல்லுங்கோ." என்று சொல்லி இரண்டு சோடி உடுப்புகளுடன் அவன் போய் விட்டான்.

எங்கள் வீட்டில் எல்லாம் மாறி விட்டது. அம்மா சிரித்து நாளாகி விட்டது. சாப்பிடும் போதும் சேர்ந்து கூடிக் கதைக்கும் போதும் முன்னர் போலச் சிரிப்பலைகள் எம்மிடமிருந்து எழுவதில்லை. கண்ணீர்தான் வழிகின்றது.

(1985ம் ஆண்டின் ஒரு அழியாத நினைவு)

Monday, July 28, 2003

மௌனமே.......

இதுவரை
என் மௌனத்தையே
பலருக்குப் பதிலாக்கியுள்ளேன்.
இப்போதெல்லாம்
உன் மௌனமே
எனக்குள் கேள்வியாகின்றது.

சந்திரவதனா
18.1.2003

Sunday, July 27, 2003

நாகரிகம்

"என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..?"

"ஓம் நான் போடுறேல்லை."

"என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்..! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே..!"

அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக் கொண்டாள்.

நான் உடுத்திய ஜோர்ஜெட் சேலை கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னைப் போல சருகைக் கரை போட்ட சேலையுடன்தான் அங்கு எல்லாப் பெண்களும் வருவார்களாம். கழுத்தோடு ஒட்டியபடி கல்லுப் பதித்த அட்டியலும் அணிந்திருந்தாள்.

நான் மேகவண்ண நீல ஜோர்ஜெட் சேலை உடுத்தி ஒரு தும்புச் சங்கிலியைக் கழுத்தில் தொங்க விட்டிருந்தேன்.

இது அவளுக்குப் பெரிய அவமானமாம். என்னைத் தனது சொந்தம் என்று சொல்லவே வெட்கமாம். அதுதான் இந்தத் தொணதொணப்பு. பிறந்தநாள் கொண்டாடும் வீட்டுக்குள் நுழையும் வரை அவளின் தொணதொணப்பு ஓயவில்லை. ஏன்தான் இவளைச் சந்திக்க என்று யேர்மனியிலிருந்து லண்டன் வந்தேனோ..! என்றிருந்தது.

பிறந்தநாள் கொண்டாடும் வீட்டில் எல்லோரும் கலகலப்பாக இருந்தார்கள். தாலி சேலைக்குள் சாடையாக மறைந்தாலும் எடுத்தெடுத்து வெளியே விடுவதும் தாலிச் சரட்டைப் பிசைவதுமாய் சில பெண்களும், பஞ்சாபிகளுடன் இன்னும் சில பெண்களும் ஒரு புறம் இருக்க, ஆண்கள் அடிக்கடி பல்கணியில் போய்ப் புகைப்பதுவும் பெரிய பெரிய போத்தல்களிலிருந்து வார்த்து வார்த்துக் குடிப்பதுமாய் இருந்தார்கள்.

அவள் சற்று சங்கடத்துடன் "இவ யேர்மனியிலையிருந்து வந்திருக்கிறா" என என்னை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள். அங்குள்ள மற்றவர்களும் நகைகளையும் சேலையையும் வைத்துத்தான் என்னை அளந்தார்களோ தெரியாது. எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அவள்தான் இதை மறந்து போகாதவளாய் "பஞ்சப் பிரதேசத்திலையிருந்து வந்த ஆள் மாதிரி வந்திருக்கிறீர்" என்று எனது காதுக்குள் முணுமுணுத்தாள்.

பிறந்தநாள் பிள்ளையை மட்டும் காணவில்லை. உள்ளை எங்கையோ விளையாடுதாம். வந்திடுமாம். இதனிடையே கோழிக்கால்கள், கட்லட்டுகள் என்று பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு பெண் ஒரு தட்டில் ஏதோ குடிக்கக் கொண்டு வந்தாள்.

"ம்.... வைன் போலை இருக்கு" என்னை அறியாமலேயே முகத்தைச் சுளித்து விட்டேன்.

"ஓம் வைன்தான். இது பொம்பிளையளுக்கு." சொன்ன படி அந்தப் பெண் என்னிடம் வைன் கிளாஸை நீட்டினாள்.

"சீ.. எனக்கு வேண்டாம். நான் உதுகள் குடிக்கிறேல்லை"

அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம் அவமானப் பட்டது போன்றதான பின் வாங்கல்.

நிலைமை புரிந்தது. அவளைப் சங்கடப் படுத்தி விட்டேனோ..!

"சொறி. குறை நினைக்காதைங்கோ. எனக்கு ஒறேஞ்யூஸ் இருந்தால் தாங்கோ. நான் அற்ககோல் குடிக்கிறேல்லை" சமாளித்தேன்.

"இஞ்சை லண்டனிலை இது கட்டாயம் குடிக்கோணும். இல்லாட்டி மரியாதையில்லை. உம்மைச் சரியான பட்டிக்காடு எண்டுதான் எல்லாரும் நினைப்பினம்." அவள் நியமான எரிச்சலுடன் என்னைக் கடிந்து கொண்டாள்.

´ஓ.. வைன் குடிக்காத பெண்கள் பட்டிக்காடுகளோ..? இது லண்டன் நாகரீகமோ..?` நினைத்தபடி நான் யூஸைக் குடிக்கத் தொடங்கினேன்.

சந்திரவதனா - 12.3.2003

விடை கிடைக்காத கேள்விகள்

அந்தத் தாம்பாளம் இன்னும் உறுத்தலாய் முள்ளாய் என் கண்களுக்குள் நிற்கிறது. காரணம் அந்தத் தாம்பாளத்திலிருந்த 6 இலட்சம் ரூபாய்கள்.

வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டு கல்யாண வீடு அன்று காலை கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு மண்டபத்தில் கோலாகலமாக முடிந்து விட்டது.

மாலை றிசெப்ஷனுக்குத்தான் என்னால் போக முடிந்தது.
றிசெப்ஷன் அவர்கள் வீட்டில் - லண்டன் பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் அவளுடைய அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் மாப்பிள்ளை வந்தார். பாரிஸ் மாப்பிள்ளை. முன்பக்கம் வழுக்கைத் தலையுடன் மாநிறம் கொண்ட அவரைப் பார்த்த போது அடக்கமாகத் தெரிந்தார்.

சிரிப்புகள் வரவேற்புகள் முடிந்து சட்டப்படி கல்யாணம் எழுத மேசையில் அமர்ந்த போதுதான் அழகான தங்கப் பதுமை போன்ற மணப்பெண் அந்தத் தட்டை ஏந்தி வந்தாள். அதில் கட்டுக் கட்டாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது பணம்.

எனக்கு அதைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. உடனே மணப்பெண்ணின் தாயிடம் சென்று
மாமி..! என்ன காசு.. அது? ஏன்...? என்று கேட்டேன்.

அதற்கு மாமி
என்ன பிள்ளை இப்பிடிக் கேட்கிறாய். சீதனம்தான். என்றா

ஏன் மாமி சீதனம் குடுக்கிறியள்?

அவரைத் தாயவை கஷ்டப் பட்டுப் படிக்க வைச்சவையாம். - மாமி இயல்பாய் சாதாரணமாய்ப் பேசினாள்.

ஏன் மாமி உங்கள் பெண்ணை மட்டும் நீங்கள் கஷ்டப் படாமல் சுகமா வளர்த்தனிங்களோ..? காசு செலவழிக்காமல் படிப்பிச்சனிங்களோ..? என்று கேட்க வந்த வார்த்தைகளை எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு பெற்றோல் ஸ்டேசன் அண்ணனைப் பார்த்தேன்.

அவன் அப்பாவியாக மணமகன் அருகில் நின்றான்.
அந்தப் பணம் அவன் வியர்வை.
எத்தனை இரவுகள் அந்தப் பணத்துக்காக அவன் நித்திரையைத் தொலைத்திருப்பான்.
எத்தனை தடவைகள் பனியில் கால்கள் புதைய குளிரில் உடல் நடுங்க ஓடி ஓடிப் போய் வேலை செய்து பணத்தைச் சேர்த்திருப்பான்.
இன்னும் எத்தனை கஸ்டங்களை அனுபவித்திருப்பான்.

அதை வாங்க பாரிஸிலிருந்து வந்த இன்னொருவனுக்கு எப்படி மனசு வந்தது?
விடை கிடைக்காத கேள்வி எனக்குள்ளே..!


- சந்திரவதனா
   1997

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite