ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கும் போது பெரும்பாலும் சற்று இழுநிலை இருக்கும். சற்றுத்தூரம் போய்விட்டால் நிறுத்த மனம் வராது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் வாசிக்கத் தொடங்கிய போதும் அப்படியானதொரு நிலை இருந்தது. அதனோடு ஒன்றி விட்ட பின் வாசிக்க நேரம் தேடி மனம் அலைந்த பொழுதுகளும் இருந்தன.
இப்போது வாசித்து முடித்து நாட்களாகி விட்டன. அதன் பின் எத்தனையோ சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று வாசித்து விட்டேன். ஆனாலும் இன்னும் அந்தக் கதை மாந்தர்களான பொன்னாவும், காளியும் என்னருகிலேயே வாழ்வது போன்றதொரு பிரமையிலிருந்து மீளமுடியவில்லை.
தொண்டுப்பட்டியும், குடைவிரித்து விருச்சமாக விரிந்திருக்கும் பூவரசுவும், திருச்செங்கோடும்... என்று மனசுக்குள் கனவும், நினைவுமான கற்பனை தோய்ந்த ஒரு நிலை. கதை நடந்த அந்தப் பூமிக்கே போய் வந்தது போன்றதொரு உணர்வு.
எத்தனையோ புதியசொற்கள். பொருளே புரியாமல் முதலில் தடுமாறி பின் புரிந்து கொண்ட இடங்கள். யாரிடம் போய் கேட்பது என்று தெரியாத பல கேள்விகள்.
அடுத்தொரு நாவலைத் தொடும் வரை மனசு இதிலிருந்து விடுபடுமா எனத் தெரியவில்லை.