Monday, May 31, 2004

வலைவலம் - 31.5.2004

வாராவாரம் மின்னஞ்சலில் வந்து சேரும் வெங்கடேஷின் இவ்வார மின்னிதழில் வந்த அவரது என் எழுத்து: சில எண்ணங்கள் சுவையாக இருக்கிறது.
அதில் வரும் கதை எழுதுவதை விட, அதை யோசிப்பது ஒருவிதப் பரவசம் தரும் அநுபவம். சொல்லப்போனால், இதைத்தான் நான் அதிகம் செய்துகொண்டிருக்கிறேன். காலாற நடந்து போகும் எல்லா சமயங்களிலும் ஏதேனும் ஒரு கதை என்னுள் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. இந்த பரவசம் அவருக்கு மட்டுமல்ல. பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

தன் சொந்த அனுபவம் போன்ற பிரமைப்பாட்டுடன்
சுவையான கதைகளை ரசனை கலந்து தரும் சத்யராஜ்குமாரின்
என்னை எழுதியவர்கள் தொடர் ஒன்று தமிழ்ஓவியத்தில் ஆரம்பித்திருக்கிறது.
அவரது சுயஅனுபவம் என்றாலும் அவருக்கேயுரிய பாணியில் சுவையோடு ஆரம்பித்திருக்கிறார். நிட்சயம் அது எமக்கு நல்ல விருந்தாகும் என்ற நம்பிக்கை எனக்கு.

168 பின்னூட்டங்கள் வந்த சுந்தரவடிவேலின் வலைப்பதிவைப் பார்த்தேன். இவ்வார வலைப்பூ ஆசிரியர் ராஜா அறிமுகப் படுத்தியிருந்தார். ரமணீதரன், மெய்யப்பன், கார்த்திரமாஸ், ஈழநாதன், செல்வராஜ் எல்லோரும் பின்னூட்டங்களிலேயே ஒரு கவியரங்கம் நடத்தியிருக்கிறார்கள்.

Sunday, May 30, 2004

Der Grosse Russische Staatscircus


துமிலனின் கமாராவுக்குள் சிக்கிய Circus Photos இல் சில


கோளத்துள் மேற் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களும்,
கீழ்ப்பகுதியில் 1 மோட்டார் சைக்கிளும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
படத்தைப் பெரிதாகப் பார்க்க


ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல்ய விகடர் Oleg Popov
படத்தைப் பெரிதாகப் பார்க்க


படத்தைப் பெரிதாகப் பார்க்க

Friday, May 28, 2004

Circus


நேற்று எமது நகரில் ரஷ்யக் குழுவினரது Circus நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. ஆர்வம் அதிகம் இல்லாவிடினும் இலவச அனுமதிச்சீட்டு கிடைத்திருந்ததால் நானும் எனது கணவரும் சென்றிருந்தோம். காரை நிறுத்துவதற்கு சரியான இடம் கிடைப்பதே பெரும்பாடாக எம்மை அலைக்கழிக்க.. நேரத்தைத் தொலைத்து, தூரத்தில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு நடந்தோம். நடப்பது பிடித்தமான விடயம் என்றாலும் அப்படி நடக்கும் போது.. இடையிடையே தேவைதானா..? என்ற கேள்வி எழுந்தது.

வீட்டில் தொலைக்காட்சியில் எத்தனை விதமான Circus நிகழ்சிகளைக் காணக் கிடைக்கும். அப்போதெல்லாம் எனது கணவரும், குழந்தைகளும் அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க நான் மெதுவாக அவ்விடத்திலிருந்து நழுவி வேறேதாவது எனக்குப் பிடித்தமானதைச் செய்து கொள்வேன். இருந்தாலும் நேரில் பார்ப்பது வித்தியாசமான உணர்வைத் தரலாம் என்ற நம்பிக்கையோடு உள் நுழைந்தேன்.

எனது மகன்தான் இந் நகரத்துக்குரிய பத்திரிகை நிரூபராக வந்திருந்தான். தோளில் பாரமான ஒரு பெரிய கமராவைக் கொழுவிக் கொண்டு இன்னொரு சிறிய டிஜிற்றல் கமராவால் கிளிக் செய்து கொண்டு திரிந்த அவனை எனக்குத் தெரிந்தது. அவனால் எம்மைக் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு ,இன்று ஒரு வேலைநாள் என்பதையும் பொருட்படுத்தாது எமது ஸ்வெபிஸ்ஹால் நகரமே கூடியது போல சனம் நிறைந்து வழிந்தது.

Circus நன்றாகத்தான் இருந்தது. வீட்டிலே தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், மண்டபத்தினுள்ளே இருந்து நிகழ்ச்சியை நேரே பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம்தான். வீட்டில் போல காலைத் தூக்கி மேசை மேலே போட்டுக் கொண்டு ஒய்யாரமாகச் சோபாவில் சாய்ந்திருந்து பார்க்கும் வசதி மண்டபத்தினுள் இல்லையாயினும், சில - நேரடி - என்பதற்கான சுவாரஸ்யங்கள் இல்லாமல் இல்லை.

அனேகமான எல்லாமே வழமையான Circus காட்சிகளில் வரும் நிகழ்வுகள்தான். Charlie Chaplin, Heinz Ruehmann போன்றவர்களை எடுத்துக் காட்டாகக் கொண்டு அவர்கள் பாணியில் கோமாளித்தனம் செய்யும் ரஷ்சியரான பிரசித்தி பெற்ற Oleg Popov வின் கோமாளிச் சேஷ்டைகள் அங்கு வந்திருந்த குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களைக் கூட வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தது.

ஒரு கோளத்தினுள் 3 மோட்டார் சைக்கிள்கள் தலைகீழாக என்று ஓடிக்கொண்டிருக்க அதற்குள் ஒரு பெண் நிற்பதும் அதே கோளத்தினுள் 4 மோட்டார்சைக்கிள்கள் ஓடிக் கொண்டிருக்க கோளம் மேலும் கீழும் துண்டுகளாகப் பிளவு படுவதும், தொடர்ந்தும் மோட்டார் சைக்கிள்கள் ஓடிக் கொண்டே இருப்பதும் எல்லோரையும் நன்கு கவர்ந்தது.

இருந்தாலும் சின்ன வயதில் கொழும்பு வீதிகளில் அம்மா அப்பாவுடன் கைகோர்த்து நடந்து சென்று, ஒவ்வொரு Circus கொட்டகையினுள்ளும் புகுந்து Circus பார்க்கும் போதிருந்த அதீத பரவசம் நேற்றைய பொழுதில் எனக்கு வரவில்லை. பறக்கும்பாவை படத்தில் வந்த Circus காட்சிகள் கூட என்னை அப்போது மிகவும் சந்தோசப் படுத்தியிருக்கின்றன.

Thursday, May 27, 2004

வலைவலம் - 27.5.2004

சுந்தரவடிவேலின் அறிவியல் கூட்டு வலைப்பதிவு மிகவும் பயனானது. அழகாக அந்தப் பக்கத்தைத் தயாரித்திருக்கிறார்.
இன்று அவரது பதிவில் அரோராவை முடக்கினால் புற்று நோய் குறைகிறது
என்றொரு கட்டுரை போட்டிருக்கிறார்.

கண்ணன் நாணயங்கள், தபால்தலைகள்,
நளபாகம்.. என்று பல்வேறுபட்ட விடயங்ளைத் தொட்டிருக்கிறார்.
நாணயங்கள், தபால்தலைகள் சேர்ப்பதிலும் அவை பற்றி அறிவதிலும் எனக்கும் ஆர்வம் இருப்பதால் அவர் பக்கம் எனக்குப் பிடிக்கிறது.

அப்பாவின் அன்பு பேசப் படுவதில்லை என்பது பற்றி நான் சில வாரங்களுக்கு முன் பேசினேன். அதே போன்ற கருத்துப் பட என்மூக்கு பசுபதி சுந்தரும் அப்பா என்ற தலைப்பில் ஒரு விடயத்தைக் குறித்துள்ளார். பாலாவும் அப்பாவுக்கு என்ன தெரியும் என்ற தலைப்பில் தான் படித்த ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். முன்னரே ஒர தடவை உதயா உருக்கமாக ஒரு கவிதை தோழியர் பகுதியில் எழுதியிருந்தார். அப்பாவின் அருமை உணர்ந்து கொள்ளப் படுவதில் சந்தோசமான திருப்தி.

Tuesday, May 25, 2004

வலைவலம் - 25.5.2004


விமர்சனம், பாராட்டு என்பன எத்தனை தூரம் மற்றவர்களை அசைக்கின்றன என்பதை சில நாட்களாக சில வலைப்பதிவுகளை வாசிக்கும் போது உணர்ந்தேன். அதனால் இனி நேரம் ஒத்துழைக்கும் பட்சத்தில் நான் தரிசிக்கும் வலைப்பதிவுகளில் என்னைக் கவர்ந்த சிலவற்றைப் பற்றி ஓரிரு வார்த்தையாவது எழுதலாமென நினைக்கிறேன்.

முன்னரைப் போலல்ல. தற்போது நூற்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகள். அதனால் தினமும் அனைத்தையும் வலம் வர முடிவதில்லை. ஒரு கணக்கு வைத்தும் போக முடிவதில்லை. அன்றன்றைக்கு எனக்கிருக்கும் நேரத்தைப் பொறுத்து சிலதைத்தான் வலம் வர முடிகிறது. முடிந்ததை எழுத முயற்சிக்கிறேன்.

இந்த வருடம் பங்குனி, சித்திரை காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பபட்டு ஈழத்து இலக்கியத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் ஈழநாதனின் http://www.kavithai.yarl.net/ ம் http://www.eelanatham.yarl.net/ ம் மிகவும் பயனுள்ள ஆவணப் படுத்தி வைக்க வேண்டிய பதிவுகள்.

கொஞ்சம் நிஜம், கொஞ்சம் கதை என்று நிஜம் கலந்து நீட்டி முழக்காமல், சின்னதாக சத்தியராஜ்குமார் தரும் துகள்கள், மிகவும் சுவாரஸ்யமானவை.

யேர்மனி, மலேசியா என்று நிறைய விடயங்களைத் தந்து கொண்டிருந்த சுபாவை தை மாதத்துக்குப் பிறகு காணவில்லை.

Monday, May 24, 2004

நினைவுநதியில் மனதின் ஜதி -6


வருசம் பிறந்த அந்த நாளில் இரவு கோயிலுக்குப் போவது மிகவும் சந்தோசமான விடயம். எங்களது பக்கத்துக் கோயிலான ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலுக்குத்தான் நாங்கள் முதலில் போவோம்.

ஆலும் அரசும் தெற்கு வீதியை நிறைத்து நிற்க அலரிகளால் எல்லை போட்டு அளவாகவும் அழகாகவும் வீற்றிருக்கிறது ஆத்தியடிப் பிள்ளையார் கோயில். அத்தி மரத்தில் பிள்ளையார் தோன்றி, கல்லிலே கற்பூரம் கொழுத்தி வழிபடப் பட்ட அந்த இடந்தான் இப்போ ஊர் கூடி உணர்வோடு வழிபடுமிடமாகியதாகவும், அத்திமரப் பிள்ளையாரினால் அந்த இடம் அத்தியடியாகி கால ஓட்டத்தில் திரிபு பட்டு ஆத்தியடி என்ற ஊரானதாகவும் அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.

கோயில் கிணற்றில் கால் கழுவித்தான் உள்ளே நுழைவோம். கற்பூரம் சாம்பிராணி என்று வாசனை கமகமக்கும். சனங்கள் நிரம்பி வழிவார்கள். காவடி ஆடுபவர்களுக்கெல்லாம் செடில், அலகு... என்று குத்தப்பட்டுக் கொண்டிருக்கும். பால் செம்பு எடுக்கும் பெண்களும் அதற்கேற்ப ஆயத்தங்களுடன் யாருடனும் அவ்வளவாகப் பேசாமல் அமைதியாகத் தியானித்துக் கொண்டிருப்பார்கள். சுவாமி இருக்கும் இடம் திரைச்சீலையால் மறைக்கப் பட்டிருக்கும்.

நான் பட்டுப் பாவடை கசங்கி விடுமே என்று அந்தரப் பட்டு, யோசித்து... ஒரு மாதிரி அமர்ந்து கொள்வேன். ஏதோ ஒரு சந்தோசமான உணர்வு மனதை நிறைத்திருக்கும். எனது வயதையொத்த பெண் பிள்ளைகளும் என்னோடு வந்து அமர்ந்து கொள்வார்கள். அம்மா, அப்பா.. தொடங்கி எல்லோரும் மிகுந்த பக்தியுடன் தரிசனம் செய்து கொண்டிருப்பார்கள்.

ஐந்து மணியானதும் பூசை தொடங்கும். அதற்கிடையில் காண்டாமணி மூன்று தரமாக அடிக்கப் பட்டு.... கோயில் ஒளியும் ஓசையுமாய் மங்களகரமாய் கலகலக்கும். விழுந்து கும்பிட்டு சுவாமியுடன் கோயில் உள்வீதியைச் சுற்றிக் கும்பிடுவோம்.

வெளிவீதி சுற்றுவது மிகவும் ஆர்வமானதாக இருக்கும். ஆல், அரசு, சீனிப்புளி;, வேம்பு, செவ்வரளி, பொன்னலரி,........ என்று அடுக்கியிருக்கும் தெற்கு வீதியில் நடப்பதே ஒரு சுகம். மெல்லிய தென்றல் தழுவ, நீண்டு, புரண்டு பின்னிப் பிணைந்து கிடக்கும் அரசின் வேர்களில் பட்டுப் பாவாடை காலில் தடக்கி விடாது பிடித்துக் கொண்டு ஏறி ஓடுவதும் கெந்துவதுமாய் நடப்பது மிக மிக இன்பமானது.

வடக்கு வீதியில் கோயிலை ஒட்டிய பூங்காவனம். அது என்றும் நறுமணம் வீசும் நந்தவனம். திருவிழா இல்லாத காலங்களில் ஆத்தியடி இளைஞர்களின் விளையாட்டு மைதானமும் அந்த வடக்கு வீதிதான். கால் பந்தென்றால் என்ன கைப்பந்தென்றால் என்ன அவர்கள் கூடிக் குதூகலிக்கும் இடம் அது. திருவிழாக் காலங்களில் சப்பரம் என்றால் என்ன? தேர் என்றால் என்ன? சூரன் போர் என்றால் என்ன? அந்தப் பெரிய வடக்கு வீதியிலே சில மணித்தியாலங்கள் தரித்து மேளக்கச்சேரியும், நாதஸ்வரமுமாய் நெஞ்சை நிறைக்கும்.

வெளிவீதி சுற்றி காவடி வெளிக்கிட எப்படியும் ஏழுமணியாகி விடும். காவடி மயில் இறகுகளுடன் அழகாக இருந்தாலும் காவடி ஆடுபவர்களைப் பார்க்கச் சகிக்காது. அவர்களின் முதுகில் செடில் குத்தப் பட்டிருக்கும். அதிலிருந்து நீளும் கயிற்றை யாராவது பிடித்துக் கொண்டு நிற்பார்கள். நடக்கும் போதெல்லாம் அவர்கள் முதுகுத் தோல் இழுபட்டுக் கொண்டே இருக்கும். எதற்காக இது..? என்று மனசு சங்கடப் படும். சிலர் வாயில் அலகு குத்தியிருப்பார்கள். அது வாயின் ஒரு பக்கத்தில் குத்தி மற்றப் பக்கத்தால் எடுக்கப் பட்டிருக்கும். அலகு குத்தியிருக்கும் போது குத்தியிருப்பவர் பேசவோ வாய் திறக்கவோ முடியாது. அவரவர் நேர்த்திக்கு ஏற்ப நேர்த்திக்கடன் என்ற பெயரில் இந்த ஆரவாரம் நடக்கும். கடவுள் இத்தனை தூரம் கஸ்டப் படும் படி மனிதர்களைக் கேட்டாரா என மனசு எண்ணும். சிலர் அலகை நாக்கில் கூடக் குத்திக் கொள்வார்கள்.

மெதுவாக வீதியில் இறங்கும் காவடிகள் சிறிது நேரத்திலேயே பலத்த ஆட்டங்களுடன் எங்கள் வீடு தாண்டும். புதியாக்கணக்கன் ஊடாக அப்பாச்சி வீடு தாண்டி பண்டாரி அம்மன் கோயிலுக்குப் பயணிக்க நாங்களும் பின் தொடர்வோம். காவடி ஆடுபவர்களின் மேல் வீடுகளுக்குள் இருந்து வாளியுடன் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவார்கள். காவடி எடுப்பவர்களின் உருத்துறவுப் பெண்கள் பாற்செம்புடன் பின் செல்வார்கள்.

மாயக்கைப் பிள்ளையார் கோயில் காவடியும் பண்டாரி அம்மன் கோவிலுக்கு வந்து சேரும். இவைகளுக்குள் வேறு வேறு கோவில்களிலிருந்து கரகாட்டக் காரர்களும் வந்து சேருவார்கள்.

24.5.2004

(தொடரும்)

Sunday, May 23, 2004

பயம்

- தொடர்ச்சி -

அது 1984ம் ஆண்டு புரட்டாதி மாதம் 1ந் திகதி.(1.9.1984)

அப்போது எனது கணவர் தவிர்ந்த மற்றைய எல்லாப் பிள்ளைகளும் வெளிநாடு சென்று விட, மாமி தனியேதான் இருந்தா. அதனால் நாங்களும் எங்களது ஆத்தியடி(புலோலி மேற்கு) வீட்டை விடுத்து மாமிக்குத் துணையாக மாமியுடன் காக்கியவளவு(புலோலி கிழக்கு) வீட்டில் தங்கியிருந்தோம்.

அன்று வழக்கம் போல் நானும் எனது கணவரும் எங்களது மூன்று குழந்தைகளும் எங்களுக்கான அறையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம். எங்களது வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

இந்த அர்த்தஜாமத்தில் மாங்காய்ப்பூட்டுப் போட்டு பூட்டப் பட்டிருக்கும் கேற்றைத் தாண்டி வந்து உள் வீட்டுக் கதவைத் தட்டக் கூடியவர்கள் வேறு யாராக இருக்க முடியும். இலங்கை இராணுவத்தினர்தான். கணப்பொழுதில் கோர்வையாக்கப் பட்ட எண்ண ஓட்டத்தில் திடமாக முடிவெடுத்துக் கொண்டேன். பயத்தில் நெஞ்சு படபடத்தது.

அது இலங்கை இராணுவத்தினர் வீடுவீடாகப் புகுந்து ஆண்களை இழுத்துச் செல்லும் காலம். எமது ஆத்தியடி வீட்டை விட இந்த வீடு பாதுகாப்பாக இருக்கும் என்ற சின்னதான நம்பிக்கையும் தளர்ந்து போக எனக்கு உடம்பு வெடவெடத்தது.

பேய் பிசாசு என்று எதுவுமே இல்லை என்று எனக்குள்ளே நான் ஒரு தீர்வுக்கு வந்திருந்தாலும் மாமி வீட்டின் பின் வளவுக்குள் அசுரத்தனமாய் குடை விரித்திருக்கும் புளியமரங்களின் அசைவுகள் இரவின் இருட்டில் என்னை மருட்டும். அதனால் முடிந்தவரை இரவு 9மணிக்கு மேல் அந்தப் பக்கம் போகவே மாட்டேன். இப்போது இராணுவ வடிவில் மனிதப் பேய்கள் என் வீட்டு வாசலில்...
எனது கணவரை - பின் கதவால் - அந்தப் புளியமரங்களினூடே இழுத்துக் கொண்டு எங்காவது ஓடி விட நான் தயார்.

கதவு மீண்டும் தட்டப் பட்டது. எனது கணவரில் கூட ஒரு தடுமாற்றம். ஆனாலும் கதவைத் திறக்க முன்னேறினார். நான் அவசரமாய் அவரை மறித்து திறக்க விடாது தடுத்தேன். அறையின் பின் கதவைச் சுட்டிக் காட்டி அந்த வழியால் ஓடும் படி சைகை காட்டினேன். வாய் திறந்து பேசவோ பலத்து மூச்சு விடவோ முடியாத பயம். பின் கதவைத் திறந்தால் அது Binding அறை. அதைத் திறந்தால் நாற்சார முற்றம். அதனூடு பின் கதவு வழியாக ஓடினால் புளியம்மரங்களைத் தாண்டி.. அடுத்த காணிக்குள் குதித்து ஓடலாம். ஆனாலும் எனது கணவர் ஒரு வித தடுமாற்றத்துடன் முன் கதவைத் திறக்க முனைந்தார்.

இப்போ என்ன நடக்கப் போகிறது? எனக்கு நடுங்கியது. எல்லா வீடுகளிலும் போல் எனது கணவர் எனக்கு முன்னாலேயே சுடப் படுவாரா..?
அல்லது இழுத்துச் செல்லப் பட்டு எங்காவது நிறுத்தி வைக்கப் பட்டு மற்றவர்களுடன் வரிசையில் நிறுத்திச் சுடப் படுவாரா..? அல்லது பிடித்துக் கொண்டு போய் திரும்பி வராதவர்கள் பட்டியலில் சேர்க்கப் படுவாரா..? நெஞ்சு திக் திக் கென்று கொண்டே இருந்தது. பயம் நெஞ்சை அடைக்கப் பின் தொடர்ந்தேன். ஆனால் வெளியிலே இராணுவம் இல்லை. எனது தம்பிதான் வெளிறிய முகத்துடன் நின்றான்.

போன உயிர் திரும்ப வந்தது போன்ற ஒரு பெரு நிம்மதி. ஆனாலும் ஏன் இந்த நேரம் வந்தான் என்ற கேள்வி மனதுள் அவசரமாய் எழுந்தது. அவன் சத்தமாகக் கதைக்கத் திராணியற்றவனாய் எனது கணவரை வெளியில் அழைத்துச் சென்று மேலே காட்டினான். ரவுண் பக்கமாக வான் நோக்கிய தீச்சுவாலையும் அதனோடு போட்டி போட்டுக் கொண்டு கரிய புகையும்................

தம்பியின் கிசுகிசுப்பில் எல்லாம் விளங்கி விட்டது. இராணுவம் தன் கைவரிசையைக் காட்டி விட்டது. New Market எரிகிறது. கூடவே எனது கணவரின் புத்தகக்கடையும்.

சில லட்சங்களை விழுங்கிக் கொண்டிருக்கும் வானளாவிய தீச்சுவாலையை அந்த அர்த்தஜாமத்தில் புளியமரங்களுக்கு அருகில் நின்று பார்த்துக் கொண்டு நின்றேன். புளியம்மரங்களின் அசைவுகள் எனக்கு எந்தப் பயத்தையும் தரவில்லை.

22.5.2004

Thursday, May 20, 2004

பயம்

பயம் இது கூட காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப மாறி விடும் என்பதை வான்கெல்சிங் பார்த்த பின்தான் உணர்ந்தேன்.

வான்கெல்சிங் பார்க்கப் போனாயா? உனக்கு வேறை வேலை இல்லையா..?
இப்பிடித்தான் எனது வேலையிடத்துத் தோழி கேட்டாள்.
உண்மையைச் சொன்னால் வான்கெல்சிங்கை விட ஒரு சலங்கை ஒலியோ, அல்லது ஒரு தில்லானா மோகனாம்பாளோ.. அல்லது ஒரு பாரதியோ பார்த்திருந்தால் அவை எனது ரசனைக்குப் பெரிய விருந்தாகியிருந்திருக்கும்.

அதற்காக வான்கெல்சிங் எல்லாம் பார்க்கக் கூடாதென்றில்லைத்தானே!
ஊரில் இருந்த போது சின்ன வயதில் எனது அண்ணன் முதல் முதலாக றெகுலா படம் பார்த்து விட்டு வந்து கண்களை உருட்டி உருட்டிக் கதை சொன்ன போது வந்த பயம் இந்தப் படத்தைப் பார்த்த போது வரவில்லைத்தான்.

அண்ணன் அவன் கதை சொல்வதில் விண்ணன். அவன் படக்கதை சொன்னால் சிலகாலம் கழித்து அந்தப் படத்தை நான் பார்த்தேனா அல்லது அண்ணன் கதை சொன்னானா என்று தடுமாறுமளவுக்கு காட்சியை மனதில் பதித்து விடுவான். அப்படித்தான் ரெகுலா படங்கள் இரண்டை எனக்குள் பதித்திருந்தான். எப்படி ரெகுலா இரத்தம் குடிக்கும் என்பதைக் கூட சொல்லித் தந்திருந்தான். சின்ன வயதில் அது பல தடவைகள் என்னை இரவுகளில் பின் வளவில் இருந்து குடல் தெறிக்க ஓட வைத்திருக்கிறது.

அப்படியான பயங்கரமான படங்களை நானே பார்ப்பதற்கான வாய்ப்புகள் என்னவோ யேர்மனிக்கு வந்த பின்தான் எனக்குக் கிடைத்தன. எனது கணவரோடு எனது வீட்டிலிருந்து (தொலைக்காட்சியில்) பார்த்ததாலோ என்னவோ அப்படங்கள் கூட என்னை அவ்வளவாகப் பயமுறுத்தவில்லை.

ஆனாலும் ஒரு தரம் ஒரு படத்தில் குளியல் அறை பேசினுக்குள் தண்ணீர் துளித்துளியாய் சிந்தும் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு இரவின் கதை அது. ஒரு வீட்டில் வாழும் குடும்பத்தை விடை கண்டு பிடிக்க முடியாத ஒரு தொந்தரவாய் ஒரு இரவு முழுக்க பேய்கள் தொந்தரவு செய்வதும் குருதி சிந்தியிருப்பதும் எனறமைந்த படம். அந்தச் சத்தம் அதாவது துளித்துளியாய் தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்கும் போதெல்லாம் அந்தக் குளியலறை பேசினுக்குள் ஒரு வயதான பெண்ணின் சடலம் இருக்கும்.

அப்படத்தைப் பார்த்த பின் சில காலங்களாக எனது வீட்டில் சமையலறையில் பைப் சரியாகப் பூட்டப் படாது தண்ணீர் சிந்தினால் அப்போது எழும் சத்தம் எனக்கு அந்தப் படத்தில் இறந்து கிடந்த பெண்ணை ஞாபகப் படுத்தி ஒரு வித அசௌகரியத்தையே ஏற்படுத்தியது. அதனால் ஓடிப்போய் பைப்பை நிற்பாட்டி விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன்.

ஆனாலும் பெரிதான பயங்கள் என்பது சின்ன வயதில் போல் தாக்கியது குறைவுதான். இதற்கான காரணம் எமது நாட்டுப் பிரச்சனைகளும் அதனாலான பாரிய உயிர் இழப்புகளுமாகக் கூட இருக்கலாமோ என நான் நினைப்பதுண்டு.

19.5.2004

Tuesday, May 18, 2004

சினிமாப் பாடல்கள் - 11


தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழ்நீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாலம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை.


தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா


விரக்தி சொட்டும் இப்பாடலைக் கேட்கும் போது கூடிய பங்கு சோகம்தான் தெரிகிறது. ஆனால் படத்திலோ பாடற்காட்சி விரக்தி, சோகம், சென்ரிமென்ரல் எனபதோடு அழகும் கலந்து சுவைக்கிறது. காரணம் கமலஹாசன் மது அருந்தி விட்டு கிணற்றுக்கட்டில் நின்று பாடிப்பாடி பரதநாட்டியத்துடன் தள்ளாடுகிறார்.

ஓம் நமச்சிவாய
தங்கநிலாவினை அணிந்தவா
பாடுகிறேன்..........
பஞ்சபூதங்களும் முகவடிவாகும்.
ஆறு காலங்களும் ஆடைகளாகும்.......
என்ற பாடலுக்கு சைலஜா நடனமாடும் போது
பஞ்சபூதங்களும் முகவடிவாகும்.........

என்ற வரிகளுக்கேற்ப சைலஜாவின் முகபாவம் சரியாக அமையவில்லை. வெறும் கை தட்டலுக்கும் பாராட்டுக்களுக்குமாகவே சைலஜா நடனமாடினார் என்று பாலகிருஸ்ணனாக வந்த கமலஹாசன் எழுதிய விமர்சனத்துடன் ஆரம்பிக்கிறது சைலஜாவுக்கும் கமலுக்குமிடையில் சண்டையும் சலங்கைஒலி படமும்.

கமலஹாசனின் படங்கள் தோல்வி காண்பது குறைவு. அதிலும் சலங்கை ஒலி அருமையாக அமைந்து விட்ட படங்களில் ஒன்று. படம் முழுவதிலுமே நர்த்தனம்.

கதையின் படி
சைலஜா வேறு யாருமல்ல. ஏழ்மை நிலையிலிருந்த கமல் நாட்டிய உலகில் முன்னுக்கு வர உதவிய, கமலின் காதலுக்குப் பாத்திரமாகிய ஜெயப்பிரதாவின் மகள்தான் அவள். ஜெயப்பிரதாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி சீதனப் பிரச்சனையால் திருமணத்தன்றே கணவனால் கைவிடப்பட்டவள்.
கமலுக்கும் அவளுக்குமிடையில் காதல் அரும்பி கல்யாணம் பற்றிச் சிந்திக்கும் வேளையில் அவளைக் கைவிட்ட கணவன் தன் பிழை உணர்ந்து, திரும்பி வந்து அவளை அழைத்துச் சென்று விடுகிறான். அதிலிருந்து கமல் குடிகாரனாகி விடுகிறான்.

அந்த விரக்தி இந்த வரிகளில் இயைபு கலந்து அழகாகச் சொல்லப் பட்டுள்ளன.
பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாலம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை.


அடுத்து
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

என்று அழகாக மடக்கு அணியில் ஒலிக்கும் இவ்வரிகள் பாடல் எடுப்பாக அமைந்ததற்கான முக்கிய காரணிகளில் ஒன்று என்றே எனக்குத் தோன்றுகிறது.

பல வருடங்கள் கழித்து கமல் வாழும் இடத்தில் சைலஜாவின் நாட்டிய நிகழ்ச்சி நடை பெறுகிறது. அங்குதான் கமல் அவளது நாட்டியத்தைப் பற்றி பத்திரிகையில் விமர்சிக்க, கமலின் விமர்சனத்தால் எரிச்சலடைந்த சைலஜா ஊர் சென்றதும் தனது தாயிடம் அந்த விமர்சனத்தைக் காட்டி சினக்கிறாள். குடிகாரன் என்று சொல்லித் திட்டுகிறாள்.

விமர்சனம் எழுதியவர் பாலகிருஸ்ணன்(கமலஹாசன்) என்பவர் என்னும் போது ஜெயப்பிரதாவுக்கு அது தனது பாலகிருணஸ்ணன்தான் என்ற உண்மை விளங்கி விடுகிறது. அவர் குடிகாரனாக இருப்பது அவளுக்குக் குழப்பத்தையும் வேதனையையும் கொடுக்க.. நிலைமையை அறியும் விருப்புடனும், பரிகாரம் தேடும் முனைப்புடனும் அந்தப் பாலகிருஸ்ணனிடமே நடனம் பயில சைலஜாவை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறாள்.
ஆனால் ஜெயப்பிரதாவின் கணவர் ஏதோ ஒரு விபத்தில் ஏற்கெனவே இறந்து விடுகிறார். ஜெயப்பிரதா நல்லாக வாழ்கிறாள் என்ற நம்பிக்கையோடே வாழ்ந்து கொண்டிருக்கும் கமலுக்கு அவள் கணவனில்லாத தனிமரமாய் வாழ்கிறாள் என்பது தெரிந்து விடக்கூடாது என்பதில் கமலின் நண்பனும், ஏற்கெனவே ஜெயப்பிரதாவுக்குப் பரிச்சயமுமான சரத்பாபு அக்கறை கொண்டதால் ஜெயப்பிரதா தன்னைக் காட்டிக் கொள்ளாமல் தனது மகள் சைலஜாவை கமலிடம் நடனம் பயில வைக்கிறாள்.

இந்தக் கட்டத்தின் ஒரு பொழுதில்தான் கமல் நன்றாக மது அருந்தி விட்டு மழை கொட்டும் ஒரு இரவில் கிணற்றுக்கட்டின் மேல் நின்று இந்த நடனத்தை ஆடுவதாகக் காட்சி.

குடிபோதையில் தள்ளாடியபடி கிணற்றுக்கட்டில் ஆடும் போது நடனம் அழகாயும், கிணற்றுக்குள் விழுந்து விடக் கூடும் என்ற நிலை நகைச்சுவை கலந்த தத்தளிப்பாகவும் இருந்தாலும் பாடல் வரிகள் விரக்தியோடு தத்துவார்த்தமும் கலந்து ஒரு விதமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.

கமல் குடிபோதையுடன் இந்த நடனத்தை ஆடுவதைப் பார்த்து மனம் பதைத்து ஜெயப்பிரதா அவரைக் காப்பாற்ற விளையும் போது
பொட்டில்லையே நெற்றியில் என்பது உறுத்த கணவனை இழந்திருந்த போதும் கமலைக் கவலைப் படுத்தக் கூடாது என்பதற்காக அவசர முடிவாக குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு போகிறாள். இது தமிழ்ப்படத்தில் ஒரு புரட்சி.

கமல் ஜெயப்பிரதாவைக் கண்டு அதிர்ந்து மகிழ்ந்து அவள் பொட்டு மழையில் நனைகிறதே அழிகிறதே என்று பதைத்து அவசரமாய் தன் கைகளால் மழைத்துளிகள் அவள் நெற்றியில் விழாதவாறு தடுத்து........ இது சென்ரிமென்ரல்.

ஆனாலும் பாடல் இளையராயாவின் இசையில் பாலசுப்ரமணியத்தின் குழைவான குரலில் எதுகை, மோனை, இயைபு, உவமானம், உவமேயம், மடக்கு என்று எல்லாம் கலந்து மனதை விட்டகலாத ஒரு பாடலாகவே அமைந்து விட்டது.

சந்திரவதனா
யேர்மனி

Monday, May 17, 2004

Van Helsing


நேற்று முன்தினம் Stephen Sommers இன் Van Helsing பார்க்க முடிந்தது.



Set in the late 19th century, monster hunter Dr. Gabriel Van Helsing (Jackman) is summoned to a mysterious land in East Europe to vanquish evil forces... evil forces with names like Count Dracula (Roxburgh), the Wolf Man (Kemp), and Frankenstein's Monster (Hensley). Assisting him once he gets there is Anna (Beckinsale), the heir of a long-running family committed to hunting down and destroying Dracula



நன்றாக எடுத்திருந்தார்கள்.
திகில் நிறைந்த படமென்பதால் திரையரங்கு பயத்தில் உறைந்து கிடக்கும் என்றுதான் நினைத்தேன். மாறாக நகைச்சுவை கலந்து சிரிப்பால் நிறைந்தது.

Photos - Spiegel

Thursday, May 13, 2004

முகவரி தேடும் மனவரிகள்



தீட்சண்யன்

இதயத்தின் ஓரத்தில் ஆறாத சோகம்
விழிகளின் ஈரத்தில் வடியாத ஏக்கம்
உறக்கத்தில் கூட உறங்காத நினைவு
இதையெல்லாம் தந்து நீ எங்கு சென்றாய்...?


அண்ணா..!
இப்போ நான் மிகவும் பலவீனமானவளாகி விட்டேன்.
அடிக்கடி அழுவதும், அர்த்தமின்றிக் கோபப் படுவதும்
நீண்ட இரவுகளிலும் சோர்ந்த பொழுதுகளிலும்
நீயில்லா நினைவுகளில் வீழ்ந்து போய்க் கிடப்பதுவும்
என் வாழ்க்கையாகி விட்டது.

எனக்குள்ளே ஒளிந்திருக்கும் அழுகை அருவியாகக் கொட்ட இன்ன இன்னதுதான் காரணமென்றில்லாமல், சிறு துரும்பு அசைவில் கூட துயர் என்னைத் தாக்க நிலை குலைந்து போகிறேன்.

இன்றைய இப்போதைய அணை உடைத்துப் பாயும் என் அழுகைக்குக் காரணம், உன் மகளின் பிறந்தநாள் புகைப்படம்.

உனக்கு நான் எழுதவென்று, எனக்குள் நான் எழுதி வைத்தவைகளை உனக்கு அனுப்ப முடியாத படி, உன் முகவரியைக் கூடத் தராது நீ எனை விட்டுப் போன ஒரு சோகமான பொழுதில்தான் அப் புகைப்படங்கள் என்னை வந்தடைந்தன.

கடித உறையில் கூட நீதான் உன் கைப்பட விலாசமெழுதியிருந்தாய். எப்படி என் நெஞ்சு படபடத்தது தெரியுமா..? உறை கசங்காமல் அவசரமாய்ப் பிரித்து, உள்ளிருந்த படங்களுக்குள் மனங் கலங்கியபடி உன் முகம் தேடினேன்.

ஒரு படத்தில் ஷெல்லிலே தொலைந்து போன உன் கால் பற்றி யாருமே காணாத படி எப்படியோ மறைத்து உன் பிள்ளைகளுக்கு நடுவில் அழகாக நீ அமர்ந்திருந்தாய். வாரி விடப்பட்ட நெளிந்த சுருண்ட உன் கேசமும், புன்முறுவல் பூத்த உன் முகமும் எப்போதும் போல் அழகாய்...........! அதுதான் உன் இறுதிப் புகைப்படம் என நினைக்கிறேன்.

அந்தப் புகைப்படங்களைத்தான் மீண்டும் இன்றெடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்தேன். ஒரு படத்தில் உன் மகள் அழகாக பரதநாட்டிய முத்திரைகளுடன் அபிநயித்த படி....! புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் போதுதான் அதைக் கண்டேன். ஒரு ஓரமாக உன் பாதம் நீண்ட படி...... பெருவிரல் இல்லாது..! ஓ.......வென்று அழுது விட்டேன். உன் கால் படத்தில் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நீ ஓரமாய் உட்கார்ந்திருந்திருப்பாய். உன் மகளைப் படம் பிடித்தவனும் சரியாகப் பார்க்கவில்லை. நான் பார்த்து விட்டேன்.

இப்படித்தான் அடிக்கடி ஏதவாது காரணங்கள், துயரத்துக்கு நான் போட்டு வைத்திருக்கும் அணையை உடைக்க வரும். அழுகை வெள்ளமாய்ப் பாயும்.
அழுகை ஓய்ந்த சில பொழுதுகளில் மூக்கை உறிஞ்சிய படியோ, சமைத்து முடிந்த பொழுதுகளில் கழுவிய கைகளைத் துடைத்த படியோ, வேலையால் வந்ததும் உடைகளை மாற்றிய படியோ, படுக்கைக்குப் போன பின்னும் தூக்கம் வராத பொழுதுகளிலோ நான் உன் புகைப் படங்களை எடுத்துப் பார்ப்பேன். துக்கம் நெஞ்சை அடைக்கும். பக்கம் பக்கமாக நீ எனக்குப் பிரியமாக எழுதிய கடிதங்களை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அழுகை வரும்.

இன்றும் மூக்கை உறிஞ்சிய படி உனது ஒரு கடிதத்தை எடுத்தேன். அழுகை ஓய்ந்திருந்தாலும் விம்மலும் பெருமூச்சும் இன்னும் ஓயாதிருந்தன. கன்னத்தில் எச்சமாய்க் கண்ணீர் அரை குறையாகக் காய்ந்தபடி இருந்தது.

நான் வாசிக்கத் தொடங்கினேன்.


157/1 OLR Lane
Hospital Road
Jaffna
Srilanka
29.6.1991


பிரிய தங்கைக்கு,
உனது தொகுதி தொகுதியான கடிதம் இன்று - இப்போ கிடைத்தது. ஆற்றாமையினாலும், விரக்தியினாலும் இறுகிப் போயிருந்த என்னுள் எரிமலை வெடித்தது போன்ற கொந்தளிப்பு உருவாகி கண்ணீராய்ச் சொரிகிறேன்.
என்னையே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவேசம் வரும் கட்டங்களில் இப்படியான அன்புப் பிரவாகங்கள் தாக்கி - என்னுள் இருக்குமெல்லாம் பீறிட்டு வெளியேறுவதால் ஒரு விதமான களைப்பும் ஓய்வும் ஏற்படுகிறது.

20.12.90 அன்று எனது பாடசாலை ஆசிரியர்களுக்குரிய சம்பளப் பணத்தை எடுப்பதற்காக கொழும்பு சென்றேன். அவ்வேளை எமது தம்பி பார்த்திபன் யேர்மனி பயணமாகத் தயாராக நின்றான். சந்தோசமாக அவனை பயணமனுப்பினேன். வவுனியாவில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததால் கொழும்பில் 29ந் திகதி வரை நின்றேன். அங்கு நின்ற ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக எனது பிள்ளைகளுக்குத் தேவையான சில கல்வி உபகரணங்கள் உடைகள் போன்றவற்றை வாங்கினேன்.

29.12.90 அன்று வவுனியா வந்தும் - சீனி, சவர்க்காரம் போன்றவற்றிற்கு ஊரில் தட்டுப்பாடு என்பதால் - 30.12.90 வரை தங்கி நின்று அப்பொருட்களை வாங்கினேன். இதற்கிடையில் எத்தனையோ இராணுவத் தடைகளில் பார்த்திபன் பயணிக்கும் போது தந்து விட்ட மின்சார உபகரணங்களைப் பறிகொடுத்தேன்.

காலையில் ஒரு சூட்கேசுடனும், மூன்று பைகளுடனும் சைக்கிளில் கடைசித் தடையையும் தாண்டினேன். மிதிவெடி நிறைந்த வயல்களினூடு - தொடை வரை சேறு புரள சைக்கிளை முக்கி முக்கித் தள்ளினேன். இனியென்ன..! என்ற பூரிப்பில் முந்தி முந்தி வந்தேன். பூந்தோட்ட கிரவல் பாதையில் ஏறும் போது 100 யாருக்கப்பால் - எனது வலது புறமாக ஒரு பவல் Armoured car ம் இரண்டு Trucks ம் வருவதைக் கண்டேன். சனங்கள் இடது புறமாக ஓடினர். நானும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.

Firing தொடங்கி விட்டது. பல சைக்கிள்கள் விழுந்தன. பெரிய காயங்களில்லை. நானும் சைக்கிளை ஒரு மரத்துடன் சாத்தி விட்டு, பெரிய மரமொன்றின் பின்னால் படுத்தேன். தொடர்ந்து Firing. எனக்குப் பக்கத்தால் எல் 222....222 என்று குண்டுகள் பாய்ந்தன. ஓய்ந்தன. - பின் பாய்ந்தன. பின்னர் Armoured car இலிருந்து Canonshell முழங்கியது. பாரிய பயங்கரச் சத்தம். என்னருகில் ஒருவன் நின்றான். Canon தொடங்க - பாய்ந்து கிடங்கில் வீழ்ந்து ஓடி விட்டான். என்னால் அசைய முடியவில்லை. பயம் - எதுவும் நடக்காதென்ற நம்பிக்கை. படுத்திருந்தேன்.

மிகப் பாரிய ஓசையில் Canon குண்டுகள் பட்டுக் கொப்புகள் முறிந்தன. திடீரென மின்வெட்டும் அதிர்ச்சி. தலை நிமிர்த்தி என் உடலைப் பார்த்தேன்.
(மல்லாக்காகப் படுத்திருந்தேன்.) என் முழங்கால் இருந்த இடத்தில் கொழுப்பும், இரத்தமும், சதையுமாக ஒரு பள்ளம். வெள்ளையாக எலும்புகள். காலை அசைத்தேன். இரண்டு எலும்புகள் உரசி....... ஐயோ..... அம்மா.....! என்று என்னால் முடிந்தளவு பலமாகக் கத்தினேன். கண்ணீர் வந்தது. பதிலாக படபடவென குண்டுச் சத்தம் வந்தது.

எனது மற்றைய கால் பெருவிரல் போனதோ, கை முறிந்ததோ அந்தக் கணத்தில் எனக்குத் தெரியாது. நான் இப்படியே இருந்தால் செத்து விடுவேன் எனத் தெரிந்தேன். குருதி அருவியாகப் புல்லில் ஓடிக் கொண்டிருந்தது. நான் மயக்கமாவதை உணர்ந்தேன்.

கூடாது.... இது ஆபத்து...... என என்னறிவு உணர்த்தியது. திரும்பிப் பார்த்தேன். சைக்கிள் நிற்கிறது. எனது சக்தியெல்லாவற்றையும் கூட்டி - அண்ணை என்னைத் தூக்குங்கோ...! - என்று கத்தினேன். மீண்டும் புலன்கள் குறைகிறது. யாரோ ஒருவர்(நாட்டாண்மை) வந்து என்னைப் பார்த்தார். - ஐ..யே..யே - என்றார்.
- பொறுங்கோ வாறன். - என்றார்.

எங்கோ எப்படியோ போய் நால்வர் வந்தனர். என்னைத் தூக்கினார்கள். தொடர்ந்து A.K.47 Firing. - அண்ணை என்ரை சாமான்களும் சைக்கிளும். - என்றேன். - ஆளே முடியப் போகுது. சைக்கிளாம். - என்றார்கள்.

கால் புல்லில் தேய, குருதி ஆறாய் ஓட தூக்கி வந்து சாக்கில் கிடத்தி (இயக்கம் அல்ல) Tractor இல் ஏற்றினார்கள். ரக்ரர் பெட்டி முழுக்க இரத்தம். பெடியளின் சென்றிக்கு வர சனம் குவிந்தது புதினம் பார்க்க. எனக்குத் தெரிந்த பெடியள் யாரும் இல்லை.

ரக்றர் ஓட்டி மேற்கொண்டு பயணிக்க மறுத்தான். மினிவான்கள் ஏராளம் நின்றன. யாவரும் மறுத்தனர். என்னைக் கிட்டிய மருத்துவமனையான கிளிநொச்சிக்குக் கொண்டு போகக் கூட மறுத்தனர். - நான் செத்து விடுவேன். - என்று நம்பினர்.
யாரோ.... எனது மனைவியின் தூரத்து உறவினர் என்னுடன் வர ஒப்புக் கொண்டார். எனக்கு அவரைத் தெரியாது. அவருக்கு என்னைத் தெரியுமாம்.

- எனது சைக்கிளையும், சூட்கேசையும் எடுத்து வையுங்கோ. - என ஒரு அன்பரிடம் சொன்னேன். பத்திரிகை நிருபர்கள் முகவரி கேட்டனர். சொன்னேன். செஞ்சிலுவைச் சங்க வாகனம் வந்தது. உதவும் படி ஆங்கிலத்தில் கேட்டேன்.
அவன் எனது இடுப்புப் பட்டியை உருவி, ஒரு தடி முறித்து முறுக்கிக் கட்டினான்.(இரத்தம் போகாதிருக்க). ஒரு கோப்பை தேநீர் தந்தான். தான் அநுராதபுரம் போவதாயும் என்னை யாழ்ப்பாணம் போகும் படியும் சொன்னான். நல்லவன்.

இறுதியில் மினிவான்காரன் ஒருவன் கிளிநொச்சி போக 5000ரூபா கேட்டான். ஒப்புக் கொண்டேன். வழி வழியே வாகனத்தின் படிகளினூடு குருதி வடிந்ததாம். நான் ஏதேதோ கதைத்தேனாம். - மயங்கினேனாம். அது பெரிய கதை. பின் கிளிநொச்சி மருத்துவமனையில் டெக்ஸ்ற்றோஸ் ஏற்றினார்கள். இன்னும் பத்து நிமிடம் தாமதமானால் இறந்திருப்பேன் என்றார்களாம். (இறந்திருக்கலாமென இப்போதெல்லாம் நினைக்கிறேன்.)

மீண்டும் அங்கிருந்து பூநகரி ஜெற்றிக்கு வர செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்புலன்சுக்கு டீசலுக்குப் பணம் கேட்டார்கள். 3200ரூபா கொடுத்தேன். பின்னர் ஜெற்றியிலிருந்து யாழ்ப்பாணம் வர 1300ரூபா கேட்டார்கள். கொடுத்தேன்.

நடுநிசியில் யாழ் மருத்துவமனையில் வைத்தியர்கள் சொன்னார்கள் - நீரெண்ட படியால் வந்திருக்கிறீர். உமக்கு மனோதிடம் கூட.....! - என்று. (என் மனோ திடத்திற்காக வருந்துகிறேன்.)

ஆறுமாத காலமாக ஒரு கால் இல்லாமல், ஒரு கை இயங்காத நிலையிலிருக்கிறேன். போன சனிக்கிழமை எக்ஸ் றே எடுத்தேன். கை எலும்பு பொருந்தவில்லை. அதை மீள வெட்ட வைத்தியர்கள் விரும்ப வில்லை. முன்னைய மருத்துவ வசதிகள் இப்போ இங்கில்லை. கால் போட்டாலாவது ஏதாவது செய்யலாம். ஜெயப்பூர் கொம்பனியில் கால் இல்லை. கூட்டுப் படைத் தலைமையகம் கால் கொண்டு வர மறுக்கிறது...

எனது வீட்டுக் கேற்றைத் தாண்ட முடியாத நிலையில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்த படி, யாரோ சொன்ன தகவல்களைக் கேட்ட படி முடங்கியிருந்த எனக்கு இப்போ ஆறுதல் தரும் ஒரு விடயம் பொட்டம்மான் அவர்களிடம் கடமையாற்றுவது ஒன்றுதான். அவர்களில் ஒருவர் காலையில் வந்து என்னை மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்று மாலையில் எனது கடமை முடிந்ததும் என்னை வீட்டில் கொணர்ந்து விடுவார். அங்கு கடமையாற்றும் பொழுதுகளில் நான் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறேன்.

இது ஒரு துன்பியல் கடிதமாக அமையக் கூடாது என்பதற்காகப் பலவற்றைத் தவிர்த்துள்ளேன். என்னால் தாளமுடியவில்லையம்மா. எப்படியிருந்த நான் எப்படிக் கூட்டுப் பறவையாய்ப் போனேன். நீ வருந்தாதே.

உன் பிரிய
அண்ணன்.


இப்போது நான் அழவில்லை. மனசு பாரமாக இருக்கிறது. கடிதத்தை மூடி வைத்த பின்னும் படம் போல நினைவுகள். நீயும் நானும் எமது ஆத்தியடி வீட்டில் - விறாந்தை நுனியில் குந்தியிருந்து, பிச்சிப் பூப்பாத்திக்குள் காகிதக் கப்பல் விட்டதிலிருந்து..... எத்தனையோ நினைவுகள்..! எப்படி வாழ்ந்தோம் எமது பருத்தித்துறை மண்ணில்..! ஏன் இன்று இப்படியானோம்..?

பத்து வருடங்களாக ஒற்றைக் காலுடன் துயர்களைச் சுமந்த நீ.....
உனது ஒவ்வொரு நிலை பற்றியும் எனக்கு எழுதிக் கொண்டிருந்த நீ....
இப்போது மட்டுமேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

போவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட
- டொக்டர் என்னைக் கெதியாச் சுகப் படுத்தி விடுங்கோ. நான் புலிகளின் குரல் வானொலிக்குக் கவிதை எழுதோணும். - என்று சொன்னாயாமே...!
- தங்கைச்சி யேர்மனியிலையிருந்து ரெலிபோன் பண்ணினவளோ..? - என்று கேட்டு, டொக்டர் ஓமென்றதும் கண்களில் ஏதோ மின்னத் திருப்திப் பட்டாயாமே..!
பிறகேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

முகவரியைக் கூடத் தராது சென்று விட்டாயே..! உனக்கு எழுத என்று நான் எனக்குள் எழுதி வைத்தவைகளை எங்கே அனுப்ப........?

13.5.2000 அன்று (தனது 42வது வயதிலேயே) காலமாகி விட்ட
எனது அண்ணன் கவிஞர் தீட்சண்யனின் - நினைவாக....


சந்திரவதனா
யேர்மனி
9.7.2000

Monday, May 10, 2004

Film

டுபுக்கு கமராவுக்கு பிலிம் வேண்டாமல் பிறந்தநாள் கொண்டாடினதை வாசிக்க எனக்கும் ஒரு ஞாபகம் வந்தது.
அது 78ம் ஆண்டு. எனது கணவரின் சகோதரிக்கு திருக்கேதீஸ்வரத்தில் திருமணம்.
மிக நெருங்கிய உறவினர்களுடன் தாலி கூறை பலகாரங்களும் கொண்டு இரண்டு மூன்று கார்களில் பயணமானோம்.அங்கு தங்கி பாலாவியாற்றில் குளித்து தாலி கட்டி......... மிகவும் சந்தோசமாகப் பொழுதுகள் கழிந்தன. எல்லாச் சந்தோசங்களையும் எனது கணவர், மைத்துனர் என்று கமராவுக்குள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

திருமணம் முடிந்து திரும்பிய போது எனது கணவரே இரண்டு Films ஐயும் கழுவக் கொடுப்பதாகத் தீர்மானித்துஅவை எனது சூட்கேசுடன் எனது வீட்டுக்கு வந்து விட்டன. வீட்டுக்கு வந்ததும் சூட்கேசைத் திறந்து ஏதோ எடுத்து விட்டு நான் திரும்ப முன்
எனது மகன் (1வயதுதான்)மின்னல் வேகத்தில் Film சுருளின் நுனியைப் பிடித்து இழுத்து விட்டான்.நான் விக்கித்து அதைக் கையில் எடுக்கவும் மற்றையதையும் அவன் இழுத்து நிலத்தில் போடவும் சரியாக இருந்தது.

எனது கவலைக்கு மேலால் குறை கேட்க வேண்டியதாயிற்று.
இன்று வரை எனது கணவரின் சகோதரியின் திருமணத்துக்குச் சான்றாக எந்தப் புகைப்படமும் இல்லை.

Monday, May 03, 2004

சினிமாப் பாடல்கள் - 9


அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே


படம் - பூமகள் ஊர்வலம்
பாடியவர் - உன்னி கிருஷ்ணன்
இசை - சிவா


தாய் தந்தையருக்கு இணையாக இந்த உலகில் வேறெதுவுமே இல்லை.
அந்தப் பாசதீபங்கள் இல்லையென்றால் நாமும் இல்லை. ஆனாலும் நாமெல்லோரும் தாய் தந்தையரின் அருகில் இருக்கும் போது அவர்களின் அன்பையும் அருமையையும் புரிந்து கொள்வதில்லை. அன்பைப் புரிந்தாலும் அவர்களின் தியாகங்களைப் புரிந்து கொள்வதில்லை.

வெயிலின் அகோரத்தில்தான் நிழலின் அருமையைப் புரிந்து கொள்கிறோம். அதே போலத்தான் தாய், தந்தையரைப் பிரிந்த ஒரு தனிமையான காலத்திலோ அல்லது அவர்களை இழந்த ஒரு கொடுமையான தனிமையிலோதான் அந்தப் பாசதீபங்களின் அன்பையும், ஆதரவையும், தியாகத்தையும் உணர்ந்து கொள்கிறோம். அந்த அன்பு நிறைந்த அணைப்புக்காக ஏங்குகிறோம்.

ஒரு தாயின் அன்புக்கு இணையாக ஒரு தந்தையால் ஈடு கொடுக்க முடியாதென்றாலும் எமது வாழ்க்கையில் வளர்ச்சியில் தந்தையின் பங்கும் அளப்பரியதே. தாயின் அன்பை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு தந்தையின் அன்பைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. தூணாக நின்று தாங்கிய அந்தத் தோள்கள் தந்த பலமான ஆதாரத்தைக் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்வதில்லையென்று சொல்வதை விட கவனத்தில் கொள்வதில்லை என்று சொல்லலாம். அதையெல்லாம் கவனத்தில் கொள்ளும் போது அனேகமாகக் காலம் கடந்திருக்கும். திரையுலகம் கூட இந்த விடயத்தில் கொஞ்சம் பாரபட்சமாகவே இருந்திருக்கிறது. தாயின் அன்பை எமது மனசை உருக்கக் கூடிய வகையில் எத்தனையோ விதமாகப் பாடி வைத்த திரையுலகம் தந்தையின் அன்பை அவ்வளவாகப் பாடவில்லை.

எனக்குத் தெரிந்த வரையில் தேவர்பிலிம்ஸ்ஸின் முதற் படமான தாய்க்குப் பின் தாரம் படத்தில் தந்தை இறந்திருக்கும் போதான காட்சிக்காக TMS ஆல் பாடப் பெற்ற
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவனென்றால்
விந்தை உண்டோ


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஒளவையின் பொன்மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அநுபவமே இதுதானா

உண்ணாமல் உறங்காமல்
உயிரோடி மன்றாடி
என் வாழ்வின் இன்பமே
எதிர் பார்த்த தந்தை எங்கே?
என் தந்தை எங்கே?
கண்ணிமை போலே எனை வளர்த்தாரே
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே ----- பாழான சிதையில்
கனலானார் விதிதானோ...!

என்ற பாடல் தவிர்ந்த வேறு எந்தப் பாடலும் தந்தையின் அன்பு, பாசம், அவசியம் பற்றி அவ்வளவாகப் பேசவில்லை. வழமையாக எம.ஜி.ஆர் படங்களில் தாயை முன்னிறுத்தியே பாடல்கள் அமைந்திருக்கும். இப்படத்தில் சற்று வித்தியாசமாக தந்தையை முன்னிறுத்தி இப் பாடல் அமைந்துள்ளது. ஆனாலும் இப் பாடல் ஏனோ பெரியளவில் பேசப் படவில்லை. நல்ல வரிகள், நல்ல இசை, நல்ல குரல்வளம் இருந்தும் இந்தப் பாடல் பிரபல்யமாகாததால்தானோ என்னவோ பிற்காலத்தில் யாரும் தந்தையைப் பற்றிப் பாடாமலே விட்டு விட்டார்கள். அவ்வப்போ ஓரிரு பாடல்கள் திரைப்பங்களுக்காகப் பாடப் பட்டிருந்தாலும் அவைகள் கூட ஏதோ சாட்டுக்கு தந்தை என்ற சொல்லை பிரயோகித்தனவே தவிர தாயின் அன்பை வெளிப்படுத்திய பாடல்கள் போல் தந்தையின் அன்பை வெளிப்படுத்திய பாடல்களாக அமையவில்லை.

இது பலபேரின் மனதில் ஒரு குறையாகவே இருந்து கொண்டுதான் இருந்தது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் திரையுலகம் எமக்குத் தந்த இப்பாடல் எம் எல்லோரையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

கடும் கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை
ஒரு ஏழைத்தாய் போல்
உலகில் தெய்வம் இல்லை.

தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.


தாயோடு தந்தையையும் சேர்த்து 1999 இல் வெளியான பூமகள் ஊர்வலம் திரைப்படத்துக்காகப் பாடப் பட்ட அருமையான இப் பாடலின் வரிகளில்
தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

என்ற வரிகள்தான் சற்று அதிருப்தியை வரவழைக்கின்றன. தாயின் அன்பு ஈடிணை இல்லாததுதான். அதனால் அன்புக்கு ஆதாரமாய் அவளைச் சொல்வது சாலப் பொருத்தமே. ஆனால் அறிவுக்கு ஆதாரமாய் தந்தையை மட்டும் சொல்வது பொருத்தமாக இல்லை. ஆண்களே பெரும்பாலும் பாடல் ஆசிரியர்களாய் இருப்தால் ஏற்படும் தவறு இது.

இருந்தாலும் உன்னி கிருஷ்ணனின் குரல் சிவாவின் இசையோடு இணைந்து பாடல் மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது.

சந்திரவதனா
யேர்மனி
28.4.2004

எனது ரசனைகளிலிருந்து.....



Schwaebisch Hall to Stuttgart - Germany - 24.4.2004

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite