எனது இந்தக் கட்டுரையை திண்ணையில் வாசித்து விட்டு கலைமணி இம்மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். கலைமணி அவர்களை அவமதிக்கும் எண்ணத்துடனோ, அல்லது அவரோடு சண்டை பிடிக்கும் எண்ணத்துடனோ இதை இங்கே நான் பதியவில்லை. அவரது கருத்தை கருத்தாக ஏற்று, இதற்கான மற்றவர்களின் கருத்துக்களை அறியும் நோக்குடனேயே இதை இங்கு தந்துள்ளேன்.
கற்பனைகள் கற்பனைகளாகவே இருக்கட்டும்.
7/11/2005 தேதி திண்ணையில், புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும் என்ற தலைப்பில் உங்களது கட்டுரையினை படித்தேன். கட்டுரையின் பொருளும், நோக்கமும் பொது கருத்தையோ அல்லது ஒரு கருத்தாக்கத்தையோ கொண்டு உருவாக்கவில்லை என்று நம்புகிறேன். உங்களுடைய அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் அனுபவம் கொண்டு எழுதினீர்கள் போலும்.
இதற்கு முன்னர் இப்படி ஒரு கட்டுரை வெளியிட்ட போது, எனது கண்டனத்தை தெரிவித்துள்ளேன். இருந்தாலும் நீங்கள் அதை எல்லாம் ஒரு பொருட்டாகவே கொண்டதாக தெரியவில்லை. மாறாக இன்னமும் அதிக வேகத்துடன் உண்மைக்கு மாறான கருத்துகளை உண்மை போல எழுதுவருகிறீர்கள்.
இந்த கட்டுரைகளை படிக்கையில் எனக்கு தோன்றுவதெல்லாம், அப்படி என்ன உங்களிடம் அப்படி ஒரு தாழ்வு மனட்பான்மை. ஒருதலை பட்சமாக ஆண்வர்கத்தையே விமர்சிப்பது கண்டனத்துகுறியது.
உலகில் உள்ள அத்தனை தமிழர்களையும் ஒவ்வொருவராக கேட்ப்போம், உங்களின் வீட்டில் சந்திரவதனா எழுதியதுபோல் நடக்கிறதா என்று. அனேகமாக 97% மக்கள் இல்லை என்றுதான் கூறுவார்கள்.
ஆணும், பெண்னும் சமம் என்று ஒத்துக்கொண்டதோடு மட்டும் நில்லாமல், பெண் ஆண்களைவிட பல விஷியங்களில் இன்னமும் திறம்பட செயலாற்ற முடியும் என்று நிறுபித்தாகியும் விட்ட இந்த கால கட்டத்தில், பொருந்தாத, உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.
இந்த கட்டுரைகள் மூலம் நீஙகள் தேடுவது என்ன, தொன்று தொட்டு
கெட்டப்பழக்கங்கள் என்று பிரித்துவிடப்பட்ட ஆணின் பழக்க வழக்கங்களிலே
பெண்ணுக்கு சம உரிமைவேண்டும் என்றா? அல்லது ஆண்கள் தனக்கு இளயவளாக தாரம் வேண்டும் என்று கேட்பது போல், இனி பெண்களும் தங்களுக்கு இளையவனாக மாப்பிள்ளை வேண்டும் என்று கோரும் புரட்சியோ? அல்லது கணவன்மார்கள் என்னதான் எடுத்து சொன்னாலும், அடம் பிடித்து வேலைக்கு போய். தனது நலனையும் வீணாக்கியதோடு மட்டும் இல்லாது குடும்பத்தார் அனைவரது நலனையும்
கவலைக்கிடமாக்குவதையா? அல்லது இப்படி வேறு ஏதேனும் ஒரு விஷியத்தில் சண்டித்தனம் செய்வதைத்தான் பெண் சுதந்திரம் என்று கற்பனையாக நினைப்பதோடு மட்டும் இல்லாது. அதை கருத்தாக்கம் செய்யும் வேலை எல்லாம் ஒன்றும் வேண்டாம்.
கதைகளும், நாவல்களும், திரைப்படங்களும், மற்றும் அத்தனை ஊடகங்களும்
கொடுக்கும் அடிமை பெண் கதா பாத்திரங்கள் பார்ப்பவர்கள் பார்த்து சந்தோஷ படுவதற்காக கற்பனையாக உருவாக்கப்பட்டவைகள். அவைகளை பார்த்துவிட்டு இப்படி பிதற்றல் கட்டுரைகளை படைக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.
அன்புடன்,
கலைமணி.