Tuesday, June 29, 2004
முத்தம்
அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட
அழகான முத்திரை
ஆழ்ந்த அன்பைக் கூறும்
அழகான சொல்
காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்
அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த
இனிய மது
ஆயிரமாயிரம் தரம் எழுதியோ
சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஷை.
சந்திரவதனா
யேர்மனி
21.7.99
Sunday, June 27, 2004
துண்டுப் பேப்பருக்காய்..
புலம் பெயர்ந்த பின் நிர்வியாவும் என்னைப் போல அவதிப் பட்டுள்ளார்.
நான் யேர்மனிக்கு வந்த காலங்களில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளி வந்தாலும் என் கைக்கு அவை கிடைப்பதில்லை. அந்தச் சமயங்களில் எனக்கு வாசிப்புத்தாகத்துக்கு தீனியாக யேர்மனியப் பத்திரிகைகளே கிடைத்தன. விளங்குதோ விளங்கவில்லையோ வாசித்துத் தள்ளுவேன்.
சிலசமயங்களில் அகராதியைத் தலைகீழாகப் புரட்டியும் வாசித்த விடயத்தின் பொருள் விளங்காது தலையைப் பிய்த்துக் கொள்வேன்.
அந்த நேரத்தில் எங்காவது ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலே எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்போது கூட எனது யேர்மனிய நண்பிகள் அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.
ஆனாலும் தமிழில் எதுவும் கிடைக்காதது பெரும் குறையாகவே இருந்தது.
அது கிடைக்க கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
வலைவலம் 27.6.2004
ஈழநாதன் தன்பணியை செவ்வனே தொடர்கிறார்.
நான் தினம் தரிசிக்கும் பதிவுகளில் இதுவும்
(ஈழத்து இலக்கியங்களின் வரலாற்றுப் பதிவு ) ஒன்று.
Saturday, June 26, 2004
வலைவலம் 26.6.2004
எழுத்து ஒரு தனி உலகம். தினமும் கொஞ்ச நேரம் அந்த உலகத்துக்குள் எட்டிப் பார்த்து விட்டு வருவதை பழக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். எதை எழுத வேண்டும் என்பதை விட, எதை எழுதக் கூடாது என்பதே எழுத்தாளன் ஆக விரும்புபவன் முக்கியமாய்த் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அநாவசியமாய்க் கதையில் ஒரு வரி கூட வைக்க வேண்டாம். அப்புறம் கதையை வெட்டி விட்டார்கள், சிதைத்து விட்டார்கள் என்று புலம்புவதில் அர்த்தமில்லை. ஒரு வார்த்தையை நீக்கினாலும் கதை கெட்டு விடும் என்கிற மாதிரி நறுக்கென்று எழுதிப் பழக வேண்டும்.
இதை நான் சொல்லவில்லை.
இது ராஜேஸ்குமாரிடம் இருந்து சத்யராஜ்குமார் கற்றுக் கொண்டது.
என்னை எழுதியவர்கள் என்று சத்யராஜ்குமார் தமிழ்ஓவியத்தில் தரும் சுயசரிதமே ஒரு சுவையான கதையாகத் தொடர்கிறது.
Friday, June 25, 2004
வலைவலம் 25.6.2004
என் மூக்கினூடாக பாலாஜி இணைப்புக் கொடுத்திருக்கும் அண்ணா கண்ணனின் வலைப்பதிவில் பெண் கவிஞர்கள் சிலர் பற்றிய பதிவுகளைப் பார்க்க முடிந்தது.
இப்போது பல தளங்களில் சர்ச்சைக்குரிய விடயமாகக் பேசப்படும் மாலதி மைத்ரி, திலகபாமா.......... போன்றோரின் படைப்புகள் பற்றிய பார்வைகள் இங்குள்ளன.
இப்போது பல தளங்களில் சர்ச்சைக்குரிய விடயமாகக் பேசப்படும் மாலதி மைத்ரி, திலகபாமா.......... போன்றோரின் படைப்புகள் பற்றிய பார்வைகள் இங்குள்ளன.
Thursday, June 24, 2004
வலைவலம் 24.6.2004
எனது எழுத்துக்கள் கதை, கட்டுரை, கவிதை... இலக்கியம் என்ற கோட்பாடுகளுக்குள் அடங்குகின்றனவோ இல்லையோ.... அது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், எதுவானாலும் என் மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதுவேன்.
அதை ரசிக்கக் கூட ஒரு சிலர் இருக்கிறார்கள் என்னும் போது உண்மையிலேயே
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. புதிதாக வலைப்பதிய ஆரம்பித்திருக்கும் நிர்வியா எனது எழுத்துக்குத் தான் அடிமையாம். அதைத் தனது வலைப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். அதைப் பார்க்க நேர்ந்த போது மனசு ஒரு தரம் சந்தோசத்தில் ஜில்லிட்டது. நன்றி நிர்வியா.
இதே கருத்துப்படத்தான் ஒரு தரம் திவாகரனும் தனது பதிவில் எழுதினார்.
அவரை ஏனோ நீண்ட நாட்களாகக் காணவில்லை.
அவர் முற்றத்தில் நிலா அநாதரவாய்க் காய்கிறது.
விவசாயம் பார்க்க என்று போன நாட்டாண்மை போனது போனதுதான்.
திரும்பி வரக் காணோம்.
வலைப்பூக்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரியர் என்று வருவதில்
ஒவ்வொரு வாரமும் அதன் சாராம்சம் வேவ்வேறு விதமாக அமைகிறது.
இம்முறை கொள்ளிடம் வாசன்பிள்ளை தன் கோணத்திலான தனது ரசனையுடனும் ஆர்வத்துடனும் கூடிய விடயங்களைத் தந்து கொண்டிருக்கிறார். வாசித்துப் பாருங்கள். interesting.
கல்கியில் வெளியாகி, இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற ஒரு விநாடியும் ஒரு யுகமும் கதையை துகள்கள் சத்யராஜ்குமார் கொஞ்சம் கொஞ்சமாகத் தர உள்ளார். வாசித்துப் பாருங்கள்.
Tuesday, June 22, 2004
சுகமான நினைவு
செங்கொண்டைச் சேவல்
குரலெடுத்துக் கூவ
செம் மஞ்சட் கதிர்களை
கதிரவன் வீச
பறவையினம் சிறகடிக்க
வண்டினங்கள் ரீங்கரிக்க
குயிலினங்கள் இசைபாட
மெல்லென விடிந்தது
அங்கெனது காலை
மாட்டு வண்டி கடகடக்க
மாடு இரண்டும் விரைந்தோட
சலங்கைகள் கிலுகிலுக்க
பால் காரன் மணியோசை
வீதிகளில் ஒலித்து நிற்க
கோயில் மணி ஓசையிலே
கலகலத்தது அக்காலை
சூரியக் கதிர் பட்டு
கிணற்று நீர் பளபளக்க
துலாபதித்து நீர் மொண்டு,
சிரித்து நிற்கும்
செம்பருத்தி வேலி
மறைத்து நிற்க
மனங்குளிரக் குளிக்கையிலே
சிலிர்த்து நின்றது
அங்கெனது காலை
ஆர்ப்பரிக்கும் கடலோசை
காற்றலையோடு தவழ்ந்து வர
அரசு உதிர்த்த இலைகள்
சரசரக்கக் கால் பதித்து-எனது
ஆத்தியடி வீதியிலே நடந்து
நெடிதுயர்ந்த பனையுதிர்க்கும்
பனம் பூவை நுகர்ந்த படி
பனங் கூடல் வழியேகி
காணிக் கந்தோர்
கறுத்தக் கொழும்பானும்
வேலாயுதன் காணி
புளியங்காயும்
களவாய்ப் பிடுங்கி
பள்ளியைத் தொடுகையிலே
கலகலத்த மாணவரின்
கள்ள மற்ற சிரிப்பினிலே
மகிழ்ந்திருந்தது அக்காலை
பாணி ஊற்றி பக்குவமாய்
பாட்டி செய்த பனாட்டும்
கொடியினிலே அரைகுறையாய்
காய்ந்திருந்த பனங்கிழங்கும்
நினைவினிலே வந்து
பசி கிளப்ப
பள்ளிக் கூட மணியும்
பார்த்து ஒலிக்க
துள்ளியெழுந்து ஓடுகையிலும்
வைரவர் கோயில்
இலந்தைக் காய்க்காய்
வழியினிலே மெனக்கெட்டு
முனி யென்று ஒருத்தி கத்த
குடல் தெறிக்க ஓடி
சுடச் சுட அம்மா வடித்த
சுடு சாதமும்
பொரியலும் வறுவலும்
தொட்டுக் கொள்ள
துவையலுமாய்
சுவையும் மணமுமாய்
ஆறுசுவையாய் நகர்ந்தது
அங்கெனது மதியம்
நகரும் மதியத்தை விட்டு
நகரா மனமோ
நொட்டு நொறுக்குக்காய்
சட்டிகளையும் சாடிகளையும்
தட்டியும் தடவியும்
தொட்டுத் தேடியும்
கிண்டிக் கிளறியும்
அதை நோண்டி
இதை நோண்டி
அரை குறையாய்
ஒவ்வொன்றிலும்
அணில் கோதல் கோதியும்
அடங்காது,
வேலிகளில்
அண்ணா முண்ணா
பூவும் தேடி----!
மாலையானதும் மாங்கொட்டையும்
கூடி இருந்து
கொக்கானும் வெட்டி
அம்மா திட்ட
விட்டுச் செல்ல மனமின்றி
கால் முகம் கழுவி
படிப்பதாய் சொல்லி
தங்கைமாருடன்
பலகதை பேசி
இரவு உணவுக்காய்
அம்மா அழைக்க
இதுதான் சமயமென்று
புத்தகத்தை மூடி
இரவுப் படுக்கையின் முன்
மணக்கும்
மல்லிகைப் பந்தலின் கீழ்
நிலவின் ஒளியில்
ஒய்யாரமாய் அமர்ந்து
உடன் பிறப்புகளுடன்
ஓராயிரம் அளந்து---
நினைவே சுகமாகும்
இந்த நினைவே நனவானால் ..
நிறைகிறது மனது
மீண்டும்
நிஜமாகுமென்ற கனவில்..!
சந்திரவதனா
யேர்மனி
2000
Thursday, June 17, 2004
முதல்முறையா...?
எங்கு பார்த்தாலும் செல்போன் வைரஸ் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
குழப்பமாக இருக்கிறது.
ஏனெனில் இது எனக்கு ஏற்கெனவே அறிமுகமான ஒன்று.
சித்திரை மாதம் இறுதிப் பகுதியில் எனது மகள் லண்டனிலிருந்து வந்திருந்தாள்.
அவள் தனது கைத்தொலைபேசியில் இருந்து சில புகைப்படங்களை எனது
கணினிக்குத் தரவிறக்கம் செய்தாள்.
செய்து முடிந்த உடனேயே எனது கணினி அந்தப் புகைப்படங்களில்
ஒன்றில் வைரஸ் இருப்பதைக் காட்டியது.
எனக்கு அன்றுதான் கைத்தொலைபேசியையும் வைரஸ் தாக்கலாம் என்ற
விடயமே தெரிய வந்தது.
ஆனால் இப்போ வெங்கட் போன்றவர்கள் பேசுவதைப் பார்த்தால்
இது இப்போதுதான் வந்தது போலல்லவா உள்ளது.
இது சற்று வித்தியாசமானது என்றாலும் எனக்குக் குழப்பம்தான்.
Wednesday, June 16, 2004
கனவுகள்
"சும்மா கொஞ்சம் என்னைப் படுக்க விடு."
"நீ இப்ப வேலைக்கெல்லோ போகோணும்.... சமைச்சுப் போட்டம். எழும்பிச் சாப்பிட்டிட்டு வெளிக்கிடு."
சந்திரனும் அலெக்சுமாக பாலாவை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பாலா உணவுவிடுதியில் வேலையை முடிச்சிட்டு சாமம் இரண்டு மணிக்குத்தான் வந்தவன். வந்தவன் உடனை படுத்திருக்கலாம். அதில்லை. காதலுக்குமரியாதை படத்தை ஆறாவது தடவையாகப் போட்டுப் பார்த்திட்டுத்தான் படுத்தவன்.
அவனுக்குச் சாலினி மாதிரி மனைவி வேணுமாம். அவனுக்குள்ளை இருக்கிற நிறையக் கனவுகளுக்கை இதுவும் ஒன்று.
ஏன் சந்திரனுக்கும் அலெக்சுக்கும் இல்லையே..! அவையளுக்கும்தான். பத்து வருசத்துக்கு முந்தி யேர்மனிக்கு வந்த புதுசிலை ரோகிணி, அமலா, குஸ்பு.. என்று கனவுகள் இருந்தது.
சந்திரன் ஒவ்வொருநாளும் உணவுவிடுதியிலை சலாட் கழுவுற பொழுது தன்ரை கனவுகளையும் சேர்த்துக் கழுவிக் கொண்டிருப்பான்.
அலெக்ஸ் சுப்பர்மார்க்கெட்டிலை நிலத்தைக் கூட்டிக் கழுவுகிற பொழுது தன்ரை கனவுகளையும் கூட்டிச் சேர்த்து கற்பனையில் பறந்து மகிழ்ந்து பின் கழுவித் துடைப்பான். நிலம் பளிச்செண்டு துலங்கும். இவன் மனசோ வெறுமையாகித் துக்கத்தில் துவண்டு ஏக்கத்தால் நிரம்பும்.
"எழும்படா.."
"இவங்கள் இரண்டு பேரின்ரையும் ஆய்க்கினை தாங்கேலாமல் கிடக்குது."
முணுமுணுத்தபடி பாலா எழும்பினான்.
கட்டிலில் இருந்த படியே....
"என்னைத் தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்கத் தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ..."
பாடத் தொடங்கினான்.
பாடி முடியும் வரை பொறுத்திருந்த அலெக்சும், சந்திரனும்
"சரி.. சரி.. சாலினியைப் பிறகு பார்ப்பம். இப்பப் போய் பல்லைத் தீட்டிப் போட்டு வா... சாப்பிடுவம்..." என்றார்கள் ஒரு வித நெகிழ்ச்சியோடு.
யேர்மனிக்கு வந்து பத்து வருசமாச்சு. இந்தப் பழக்கங்களை மட்டும் நீங்கள் விடேல்லை. சொல்லிய படி குளியலறைக்குள் நுழைந்தான் பாலா.
தண்ணீர்ச் சத்தத்தையும் மீறி
"தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ?
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ?
கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே...
லல லாலால்ல லலலால...
எனது இரவு அவள் கூந்தலில்..
எனது பகல்கள் அவள் பார்வையில்..
காலம் எல்லாம் அவள் காதலில்..
கனவு கலையவில்லை கண்களில்..
இதயம் துடிக்குது ஆசையில்..
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்..
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்..
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்..
நாளைக்கு நான் காண வருவாளோ..
பானைக்கு நீர் ஊற்றிப் போவாளோ..
வழியோரம் விழி வைக்கிறேன்......
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா?
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா?
கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே.."
பாலாவின் குரல் தன்னை மறந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
வெளியே மேசையில் பணம் கேட்டு வந்த ஊர்க்கடிதம் காத்திருப்பது தெரியாமல்....
சந்திரவதனா
12.8.1999
பாடல் வரிகள் - பழனிபாரதி
Tuesday, June 15, 2004
கவிஞர் சல்மா
ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கவிஞர் சல்மாவின் பேட்டியொன்று வாசிக்கக் கிடைத்த போது........
அது என்னுள் பெரும் வியப்பையும், இன்னும் பல உணர்வுகளையும் தோற்றுவித்தது.
எங்கோ ஒரு மூலையில் யாரும் அவ்வளவாகப் பார்க்காத இடத்தில்
அதாவது குறிப்பிட்ட ஒரு இணையத் தளத்தில் மட்டும் அப்பேட்டி இருந்து
என்றைக்கோ ஒரு நாள் அதிலிருந்தும் எடுபட்டு
குறிப்பிட்ட சிலரைத் தாண்டாமல்............. போய் விடுமோ
என்றொரு கவலை எனக்குள் எழுந்தது.
இதைக் கண்டிப்பாக மற்றவர்களது பார்வைக்கும் கொண்டு வரவேண்டுமென்ற ஆவலில் எனது
சாதனைப்பெண்கள்(முக்கியப் பெண்கள்) பகுதியிலும், தோழியரின் வலைப்பதிவிலும் இட்டேன்.
எந்தத் தளத்தில் இருந்து வாசித்தேன் என்பதைத்தான் மறந்து விட்டேன்.
எழுத்தை சுரதாவின் செயலியில் மாற்றி எழுத்துப் பிழைகளைத் திருத்தி நேர் சீராக பதிவதற்கு எனக்கு நிறைய நேரம் தேவைப் பட்டது. அவ்வளவு நேரத்தையும் செலவழித்த பின் இவ்வளவு நீளத்தை யாராவது வாசிப்பார்களா..? என்று மனதில் மெதுவான சந்தேகம் எழுந்தது.
ஆனாலும் சந்தேகத்தை தீர்க்கும் படி றஞ்சி, ரவி, புகாரி மூவரும் அதை வாசித்து தத்தமது கருத்துக்களைத் தோழியரில் பதிந்தார்கள். அது எனக்கு மிகுந்த திருப்தியையே தந்திருக்கிறது.
இவர்களோடு மதியும் இதை வாசித்து இதை மரத்தடியில் போட
இது பற்றியதான ஒரு கருத்தாடல் மதியின் மரத்தடிக் குழுமத்தில் தொடர்கிறது.
இதில் எனக்கு சந்தோசமே.
சல்மா என்ற அந்தப் பெண்ணின் வாழ்வு மற்றைய பெண்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.அது பற்றிய கருத்தாடல்கள் கூட நல்ல விடயங்களைத் தேர்ந்தெடுத்து முன்னேற உதவும்.
இதுவரையில் நான் சல்மாவின் கவிதைகளில் ஒரு சிலதைத்தான் வாசித்துள்ளேன். அதனால் சல்மாவின் கவிதைகளையொட்டிய எனது கருத்துக்களையோ, அது பற்றிய ரவியியினதோ அல்லது மற்றவர்களினதோ கருத்துக்களுக்கான பதிலையோ என்னால் இங்கு தர முடியவில்லை. ஆனாலும் எளிய சொற்களால் பேசுவதை மட்டும் கவிதையெனக் கொள்ளும் அவரது வரையறைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை.
ஒரு பெண் என்பதால் அவர் முன்னே கட்டியெழுப்பப் பட்டிருந்த தடைகளும், அதனால் அவர் எதிர் நோக்கிய பிரச்சனைகளும், அதையும் தாண்டி அவர் வெளியுலகுக்கு வந்த விதங்களும் பெண்களுக்கு - முடியும் - என்றதொரு தன்னம்பிகையை அளிப்பதாகவே இருக்கிறது.
அதே நேரம் அவரது அரசியல் வாழ்க்கைக்கு முன்னான காலகட்டங்களைப் பற்றியதான அவர் பேச்சில் ஒரு இயலாமை, மீற முடியாமை... என்று இன்னும் பல பெண் உலகத்துக்கான சலிப்புகள் தெரிகின்றன.
அரசியல் தற்போதைக்கு அவர் தன் மீதான தடைகளை உடைத்தெறிவதற்குத் தகுந்த பலமான ஆயுதமாகத்தான் இருக்கிறது. அதுவே அவர் தன்னை தொலைத்துக் கொள்வதற்கான அதளபாதாளமாக மாறாதிருக்க வேண்டும்.
மதியின் மரத்தடிக் குழுமத்தில் தொடர்கின்ற கருத்தாடலை வெட்டி இங்கே ஒட்டுகிறேன்.
From: "usha"
Date: Fri Jun 11, 2004 7:35 pm
இப்போது சின்னப் பையன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன
செய்வார்களோ என்ற நினைப்பு எனக்குள் ஓடுகிறது. நான் இலங்கைக்குப்
புறப்படும்போது "எந்த அம்மா இப்படி வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்கி
றார்கள்" என்ற கேள்வியை எழுப்பி, ஏதோ தேவையற்ற காரியங்களில்
ஈடுபடுவதைப்போல நினைத்துப் பேசுகிறான். சின்னப் பையன்களைக்கூட திசை தி
ருப்புவதாக நம் சமூகச் சூழல் இருக்கிறது. நாளை யாரோ ஒரு ஆண் நண்பருடன் பேசி
க்கொண்டிருக்கும்போது "நீ ஏன் அவருடன் பேசுகிறாய்" என்ற கேள்வியை அவன்
எழுப்புவதற்கான எல்லாச் சாத்தியங்களும் உள்ளது.
வீட்டுக்கு வீடு வாசப்படி. இதில் பெண் எந்த சமூகமாய் இருந்தால் என்ன? எந்த
நாடாய் இருந்தால் என்ன? இலக்கியம், எழுத்து என்று எழுதும் பெண்கள் வெற்றி பெறும் வரையில்
பிறர் பார்வையில் கேலியாய்தான் பார்க்கப்படுகிறாள். என் மகண் கண்ணிலும்,
இந்த எழுத்து, குழு, நண்பர்கள்( ஆண்) போன்றவை சிறிது சந்தேக கண் மற்றும் இது
எதற்கு என்றுதான் பார்க்கப்படுகிறது.
உஷா
------------------------------------------------------
From: sadayan
Date: Sat Jun 12, 2004 9:39 am
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2
கே: நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?
அன்பின் மதி...
நேர்காணலை தட்டச்சு செய்தீர்களா ? அல்லது வெட்டி ஒட்டினீர்களா ? காரணம்
முழு பேட்டியும் உலகத் தமிழ் வலைத் தளத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே
வெளியானது. தவிர 'இரண்டாம் ஜாமங்களின் கதை' யும் உலகத் தமிழ்
வலைத்தளத்தில் தொடராக வெளி வந்து, பின்னர் காலச்சுவடு அத் தொடரை
பொத்தகமாக வெளியிட இருப்பதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.
இது பொத்தகமாக வெளிவந்தால் நிச்சயம் சர்ச்சைக்குள்ளாகும்.ஆண்களே எழுதக்
கூச்சப்படும் சில வார்த்தைகளை தனது பொத்தகத்தில் தைரியமாக
கையாண்டுள்ளார்.(பெண் சாருநிவேதிதா) காலச்சுவடு தணிக்கை செய்து
வெளியிடப் போகிறதா தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்புடன்
சாபு
துபாய்
----------------------------------------------------------
From: swastik ads
Date: Sat Jun 12, 2004 10:45 am
Subject: Re: [Maraththadi] Re: An interview with Kavinjar Salma -3
வீட்டுக்கு வீடு வாசப்படி. இதில் பெண் எந்த சமூகமாய் இருந்தால் என்ன? எந்த
நாடாய் இருந்தால் என்ன? இலக்கியம், எழுத்து என்று எழுதும் பெண்கள் வெற்றி பெறும் வரையில்
பிறர் பார்வையில் கேலியாய்தான் பார்க்கப்படுகிறாள். என் மகண் கண்ணிலும்,
இந்த எழுத்து, குழு, நண்பர்கள்( ஆண்) போன்றவை சிறிது சந்தேக கண் மற்றும் இது
எதற்கு என்றுதான் பார்க்கப்படுகிறது.
உஷா
உஷா,
இதைப் படித்தவுடன் நிஜமாகவே உங்கள் மேல் அனுதாபம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. உங்கள் மேல்
அவர்களுக்கு உள்ள possessiveness-தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இயன்றால் அவர்களையும்
இதில் பங்கெடுக்க வைங்களேன்..
Suresh
----------------------------------------
From: Madhurabarathi
Date: Sat Jun 12, 2004 11:22 am
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2
கே: நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?
பெண்ணுரிமை மறுக்கப்படுவதற்குக் காரணம் இந்துமதம் அல்லது இசுலாம் என்று
இவ்வாறு சொல்வது இப்போது மிகவும் அறிவுஜீவித்தனமாகி விட்டது. ஆனால்
உண்மை என்னவென்றால் எங்கெல்லாம் ஆண் இருக்கின்றானோ, அவன் தன்னுடைய
மிகையான உடல்வலு, பொருளாதார வலு, அரசியல் வலு இவற்றை வைத்துப்
பெண்ணை அமுக்கிவிடுகிறான். அவன் கையில் மதநூல் இதற்கு ஒரு
கருவியாக்கப்படுகிறது. அந்த நோக்கத்துக்கேற்ப வேத விளக்கமான
சாத்திரங்கள் எழுதப்படுகின்றன. எனவேதான் பாரதி "பேய் அரசு செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று கூறினான்.
இந்த சல்மாவின் நேர்காணலில் கூட அவர் திருக்குர் ஆனைக் குறை
சொல்லவில்லை. அதில் பெண்களுக்குச் சாதகமாக இருப்பவற்றைப் பேசவிடாமல்
ஒரு ஆண் எழுத்தாளர் தடுத்தார் என்றுதான் சொல்லி இருக்கிறார்.
சகோதரி மதிக்கு ஒரு வேண்டுகோள். இங்கே நமது முஸ்லிம் சகோதரர்கள்
நிறைய இருக்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியானவற்றை இங்கே
இடவேண்டுவதில்லை. கட்டுரைகளின் சுட்டியை மட்டும் இட்டால் வேண்டுமென்பவர்கள்
அங்கே போய்ப் படித்துக் கொள்வார்களே.
இது எனது அன்பான வேண்டுகோள். தவறாக நினைக்கவேண்டாம். என் கருத்தில்
ஒப்புமை இல்லாதவர்கள் தமது பக்கத்தைச் சொல்லலாம். நம்முடைய மிகப்பெரிய
பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம் காப்பதுதான்.
அன்புடன்
மதுரபாரதி
----------------------------------
From: "K.V.Raja"
Date: Sat Jun 12, 2004 11:26 am
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2
சகோதரி மதிக்கு ஒரு வேண்டுகோள். இங்கே நமது முஸ்லிம் சகோதரர்கள்
நிறைய இருக்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியானவற்றை இங்கே
இடவேண்டுவதில்லை. கட்டுரைகளின் சுட்டியை மட்டும் இட்டால் வேண்டுமென்பவர்கள்
அங்கே போய்ப் படித்துக் கொள்வார்களே.
அன்புள்ள மதுரபாரதி அண்ணா,
நான் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனாலும் சொல்ல வந்தது வேறு அர்த்தத்தில்
புரிந்துகொள்ளப்பட்டு என்னை தவறாக நினைக்க வைத்துவிடுமோ என்றே மௌனமாக இருந்தேன்.
என் மனதில் இருந்த கருத்தை மிகத் தெளிவாக சொன்னதற்கு நன்றி.
என்றும் அன்புடன்,
கேவிஆர்
------------------------------
From: "Abul Kalam Azad"
Date: Sat Jun 12, 2004 12:42 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
நம்முடைய மிகப்பெரிய பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம்
காப்பதுதான்.
அன்புடன்
மதுரபாரதி
பாரதிண்ணா,
நேத்து கவிஞர் சல்மாவோட பேட்டிய மதி போட்டதும் மேலோட்டமா
படிச்சிட்டேன். பதில் எழுதணும்னு தோணுச்சு, நீங்க மேல சொன்ன
கருத்துக்கு ஒப்ப அப்படியே விட்டுவிட்டேன். நமது பலவீனம்..சல்தா
ஹை..இல்லை..:)
சல்மாவின் குற்றச்சாட்டு:
தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடுகிறார்கள்
நான் விளங்கிக்கொண்டதும் பதிலும்:
இப்பொழுதெல்லாம் நபிகள் நாயகத்தின் பொன்பொழிகளை அனுப்புபவ
ர்கள் கூடவே இரண்டு வரிகளை மறக்காமல் அனுப்புகிறார்கள்.
அதாவது,
"எந்தப் பிரச்சனைக்கும் ஒரே ஒரு ஹதீசின் அடிப்படையில் தீர்வு காணக்
கூடாது. மார்க்க அறிஞர்களைக் கலந்து ஆலோசித்து அதன் அடிப்படையில்
தான் தீர்வு காணவேண்டும்"
சல்மா அவர்கள் சொன்னதுபோல் ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு
யாரேனும் பெண்ணுரிமையைத் தடுத்தார்களென்றால் அது தவறு.
தனிப்பட்ட ஆணோ பெண்ணோ சொல்வதைவிட சல்மா என்ன விளங்கிக்
கொண்டார் என்பதை அவர் சொல்லியிருக்கலாம். நாம் பேசும் விஷயத்தில்
முதலில் நமது நிலைபாடு என்ன.
பெண்ணுரிமையை இஸ்லாம் மறுக்கிறது என்று சல்மா நம்புகிறாரா அல்லது
அல்லது இஸ்லாமியப் போர்வையில் சிலர் ஆணாதிக்கத் தனமாக நடந்துகொ
ள்கிறார்கள் என்று சொகிறாரா என்பது சரியாகப் பிடிபடவில்லை.
படித்துவிட்டு எழுதுகிறேன் அண்ணா.
மௌனமாக இருக்காதே என்ற உங்கள் அறிவுரையை ஏற்கிறேன் :)
அன்புடன்
ஆசாத்
பி.கு.: நண்பர்களே! சல்மா சொல்வதைப் போல் பயணம் என்பதும் பேட்டி
என்பதும் இஸ்லாமியப் பெண்களுக்கு விலக்கப்பட்டதல்ல. என் மனைவி தனியா
கத்தான் பயணம் செய்து வருடாவருடம் இங்கு வந்து போகிறார்.
ராஜா எழுதித் தந்ததாகச் சொன்னேனல்லவா அந்த குவிஸ் நிகழ்ச்சியில்
வளர்ந்த மாணவிகள் என் முன்னே அமர்ந்து நேருக்கு நேர் வினாடி வினாவில்
பதில் சொன்னது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் முன்னிலையில்தான். அது
வும் மேடையில், ஐநூறு பார்வையாளர்களின் முன்னிலையில். இது பதிவும்
செய்யப்பட்டு சிடிக்களாக நேற்று வெளியிடப்பட்டும் உள்ளது. (இஸ்லாமிய
மார்க்க அடிப்படைக்கு சிறு மாற்றமாக இருந்தாலும் சவூதியில் சிடி
வெளியிடுவது முடியாது என்பதை அனைவரும் அறிவீர்கள்)
-------------------------------------
From: "Arul"
Date: Sat Jun 12, 2004 1:16 pm
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2
பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம்
காப்பதுதான்.
அன்புடன்
மதுரபாரதி
அன்பின் மதுரபாரதி,
நாம் (தமிழர்கள்) ஒன்று மவுனம் காப்போம், இல்லை உணர்ச்சிவசப்பட்டு வசைப்பாடத்துவங்கிவிடுவோம், இதற்கு
இடைப்பட்ட நிலையான ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் பெரும்பாலும் ஏற்படாமல் போவதுதான் நம்
பலவீனம் என்று *நான்* நினைக்கிறேன்
அன்புடன்,
இர.அருள் குமரன்.
---------------------------
From: "mathygrps"
Date: Sat Jun 12, 2004 2:23 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
--- In Maraththadi@yahoogroups.com, sadayan
அன்பின் மதி...
நேர்காணலை தட்டச்சு செய்தீர்களா ? அல்லது வெட்டி ஒட்டினீர்களா ? காரணம்
முழு பேட்டியும் உலகத் தமிழ் வலைத் தளத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே
வெளியானது. தவிர 'இரண்டாம் ஜாமங்களின் கதை' யும் உலகத் தமிழ்
வலைத்தளத்தில் தொடராக வெளி வந்து, பின்னர் காலச்சுவடு அத் தொடரை
பொத்தகமாக வெளியிட இருப்பதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.
இது பொத்தகமாக வெளிவந்தால் நிச்சயம் சர்ச்சைக்குள்ளாகும்.ஆண்களே எழுதக்
கூச்சப்படும் சில வார்த்தைகளை தனது பொத்தகத்தில் தைரியமாக
கையாண்டுள்ளார்.(பெண் சாருநிவேதிதா) காலச்சுவடு தணிக்கை செய்து
வெளியிடப் போகிறதா தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.
sadayan
அன்புள்ள சாபு ஐயா,
வணக்கம்!
நான் இந்த நேர்காணலைப் படித்தது தோழியர் கூட்டு வலைப்பதிவில். சந்தி
ரவதனா அங்கே இட்டிருந்தார். அவருக்கும் ஒரு மடல் அனுப்பி இருக்கிறேன். செவ்வி
யைப் படித்ததும் காலச் சுவட்டில் வந்ததோ என்று நினைத்தேன். செவ்வியின் முடிவில்
நன்றி சொல்வதற்காகக் கேட்டிருந்தேன். அவரிடம் இருந்து பதில் வரத் தாமதமானதால் சந்தி
ரவதனாவிற்கும் தோழியர் கூட்டுப் பதிவிற்கும் நன்றி சொல்லி இங்கே இட்டேன். சாபு
ஐயா நன்றி 'உலகத் தமிழ்' பற்றிய விவரம் சொன்னதற்கு.
*எனக்கு* சல்மா பற்றித் தெரிந்ததெல்லாம் இணையத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்ததே (அதுவும் உலகத் தமிழ் படித்து ஒரு வருடத்தி
ற்கு மேலாகிறது. :( ). இங்கே மரத்தடியில் சல்மாவின் கவிதைகள் சில பகி
ர்ந்துகொள்ளப் பட்டிருக்கின்றன. அத்தோடு அவருடைய கவிதைகளைப் பற்றி இங்கே வி
வாதித்தும் இருக்கிறோம். அதனால்தான் இங்கே இடுவது நண்பர்களுக்கு உதவியாக
இருக்கும் என்று இட்டேன்.
*என்¨னைப்* பொருத்தவரைக்கும் சல்மா என்ற படைப்பாளி பற்றி எதுவும் தெரியாமல்
இருந்தது. இப்போது கொஞ்சமேனும் தெரிந்துகொண்டிருக்கிறேன்.
சல்மா பஞ்சாயத்துத் தலைவர் என்று தெரியும். ஆனால், அந்த நிகழ்வைச் சுற்றிய
சம்பவங்கள் எதுவும் அறியாமல் இருந்தேன். பல விஷயங்களைத் தெளிவு படுத்திக்
கொள்ளக் கூடியதாக இருந்தது. அவருடைய கவிதைகளை மீள வாசிக்கவேண்டும் என்று
மனது அலைபாய்கிறது.
(வேண்டுகோள்: பிகேஎஸ் மற்றும் சல்மாவின் கவிதைத் தொகுப்பு கைவசம் இருக்கும்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவருடைய சில கவிதைகளை இங்கு
இடுங்களேன். பிகேஎஸ் - உங்களிடம் இந்தத் தொகுப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில்
எழுதுகிறேன். மனது ஆலாய்ப்பறக்கிறது ஐயா. :( )
எனக்கு தைரியமான பெண்களை மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில்
பிறந்து ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய ஒருவர் இவ்வளவு தூரம் வளர்ந்திருப்பது
மனதிற்கு உத்வேகமாக, சந்தோஷமாக இருக்கிறது. இவரைப் போல முன்னேறிய
பெண்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.
நீங்கள் இலங்கை சென்றிருந்தபோது சல்மாவும் வந்திருந்ததாகக் கூறியது நினைவிருக்கி
றது. அவருடன் நீங்கள் பேசிப் பழகி இருப்பீர்கள். உங்கள் எண்ணங்களைப் பகி
ர்ந்துகொள்வீர்களா சாபு ஐயா?
அன்புடன்,
மதி
------------------------------------------
From: "mathygrps"
Date: Sat Jun 12, 2004 2:48 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
இது எனது அன்பான வேண்டுகோள். தவறாக நினைக்கவேண்டாம். என் கருத்தில்
ஒப்புமை இல்லாதவர்கள் தமது பக்கத்தைச் சொல்லலாம். நம்முடைய மிகப்பெரிய
பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம் காப்பதுதான்.
அன்புடன்
மதுரபாரதி
அன்புள்ள மதுரபாரதி ஐயா,
வணக்கம்!
ஐயா உங்களின் கருத்தில் இருந்து சற்றே மாறுபடுகிறேன்.
*என்னை*ப் பொருத்தவரைக்கும் 'பெண்ணியம்', 'பெண்ணியவாதிகள்'
என்றெல்லாம் தனியாகச் சுட்டப்பட்டு விவாதிக்கப்படும்போதும், நான் பெண் எனக்கு சி
றப்புத் தகுதி என்றும் இன்னபிற விஷயங்கள் பேசும்ப்பொது வாய்மூடி கவனிக்கிறேன்.
வளர்ந்த நாடுகளில் இப்படிக் கோஷம் போட்டுப் பேசுவது ஏன் என்று எனக்குப் புரிவதே
இல்லை. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் மற்றைய நாடுகளைப் போல அல்லாது
மக்கள் அவரவர் விருப்பப் படி நடந்துகொள்ளும் சுதந்திரம் இருக்கிறது.
அதே நேரத்தில் நான் வித்தியாசமானவள் என்று சொல்லி, ஆடை அணிகலன், பழக்க
வழக்கங்களை - பட்டுப் புடவை கட்டினால் கூடாது, நகைகள் அணிந்தால் கூடாது,
வாசனைத் திரவியங்கள் அணிந்தால் கூடாது, சமையலைப் பற்றிப் பேசினால் பி
ற்போக்குவாதி என்றெல்ல்லம் மேலோட்டமாகக் கருதுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.
(சம்பந்தா சம்பந்தமில்லாமல் முன்னுரை எழுதியாச்சு இனி விஷயத்துக்கு )
நீங்கள் சொன்னதுபோல இங்கே சல்மா மதத்தைப் பற்றி செவ்வி கொடுத்திருக்கவில்லை
என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய வாழ்க்கையை, அனுபவங்களை,
போராட்டங்களை எல்லாம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
மதரீதியாக சச்சரவு எழுப்புவது அவருடைய நோக்கம் இல்லை என்று நம்புகிறேன். சல்மா
தன்னுடைய வலிக்களை, நோவை, ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இப்படியும் நடக்கிறது என்று தெரிந்துகொள்ள அவருடைய செவ்வி உதவியாக இருக்கிறது.
நமது மக்கள் எப்போதுமே ஒன்று பேசாமல் இருப்பார்கள் அல்லது knee-jerk ரியாக்ஷன்
செய்வார்கள். நிறைய விஷயங்களில் அப்படித்தான். பல சமயங்களில் we take things
too personal. இதுபோல பாய்க்குக் கீழே தள்ளித் தள்ளி அது ஒரு குன்று போல
வளர்ந்துவிட்டது ஐயா.
நான் இந்தச் செவ்வியை இங்கே அனுப்பும்போது சல்மா என்ற படைப்பாளியைப் பற்றி
நண்பர்கள் அறிந்துகொள்வது நல்லது என்று அனுப்பினேன். இப்போது இன்னுமொரு
யோசனையும் எழுகிறது. இங்கே கற்றறிந்த, உணர்ச்சிவசப்படாத, நடுநிலமையான
(ஆணுக்கொரு வாதம் பெண்ணுக்கொரு வாதம் என்று சொல்லாத ஆசாத் பாய் இருக்கி
றார். சாபு ஐயா, ஆசீ·ப் இருக்கிறார்.
மதுரபாரதி ஐயா: இப்பேட்டியைப் படித்த பிறகு முன்பே பிடித்திருந்த கவிஞர் சல்மாவை
இன்னமும் அதிகமாகப் பிடித்திருக்கிறது.
விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு,
மதி
(பி.கு: இதனால் யாரேனும் மனம் நொந்தால் தயவு செய்து கூறுங்கள்.)
--------------------------------
From: "Abul Kalam Azad"
Date: Sat Jun 12, 2004 3:40 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
மதரீதியாக சச்சரவு எழுப்புவது அவருடைய நோக்கம் இல்லை என்று
நம்புகிறேன்.
இனிய மதி,
மதரீதியாக பிரச்சனைகளை எழுப்புவது அவரது நோக்கம் அல்ல. ஆனால்,
இந்த செவ்வியின் பல பகுதிகளில் பேசப்படுவது என்ன. தலாக் பேசப்
படவில்லையா?
முத்தலாக் என்ற வார்த்தையே தவறு என்று சில அறிஞர்களும் என்னைப்
போன்றவர்களும் சொல்வதை இங்கு நான் ஏற்கெனவே பகிர்ந்துள்ளேன்.
சல்மா அவர்களின் செவ்வியிலும் இந்த தலாக் பிரச்சனையைச் சொல்கிறார்.
அது சரியாக விளக்கப்படவில்லையென்றால் சர்ச்சைக்குறியதாகும்.
இங்கே கற்றறிந்த, உணர்ச்சிவசப்படாத, நடுநிலமையான
(ஆணுக்கொரு வாதம் பெண்ணுக்கொரு வாதம் என்று சொல்லாத *ஆசாத்
பாய்* இருக்கிறார். சாபு ஐயா, ஆசீ·ப் இருக்கிறார்.
அதெல்லாம் சரிங்க, ஆசாத் அண்ணன் உங்களுக்கு எப்ப ஆசாத் பாய் ஆனாரு :)
அன்புடன்
ஆசாத்
பி.கு.:
ரெண்டு நாள்..ரெண்டே நாள், சல்மா லாத்தா பேட்டில இருக்க மார்க்க சம்
மந்தப்பட்ட விஷயங்களுக்கு பதிலோட வரேன்.
----------------------
From: "mathygrps"
Date: Sat Jun 12, 2004 3:49 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
அன்புள்ள ஆசாத் *அண்ணனுக்கு*,
அதெல்லாம் சரிங்க, ஆசாத் அண்ணன் உங்களுக்கு எப்ப ஆசாத் பாய் ஆனாரு :)
முந்தியும் சில சமயம் பாய்னும் சில சமயம் அண்ணன்னும் விளித்திருக்கிறேனே?
(கேவியார் இதுக்கும் ஒன்லைனர் போட்டிராதீங்க. தாங்காது! :) )
மதரீதியாக சச்சரவு எழுப்புவது அவருடைய நோக்கம் இல்லை என்று
நம்புகிறேன்.
மதரீதியாக பிரச்சனைகளை எழுப்புவது அவரது நோக்கம் அல்ல. ஆனால்,
இந்த செவ்வியின் பல பகுதிகளில் பேசப்படுவது என்ன. தலாக் பேசப்
படவில்லையா?
எனக்குப் புரியலை. என்னால பிரிச்சுப் பிரிச்சுப் பார்க்க முடியலை. என்னைப்
பொருத்தவரைக்கும் சல்மா பற்றிய படைப்பாளியை அறிய இந்தச் செவ்வி உதவி இருக்கி
றது. அவ்வளவுதான். அன்னம் மாதிரி எனக்குத் தேவையான விஷயங்கள் நிறைய இந்தச்
செவ்வியில் இருக்கு. அதை எடுத்துக்கிட்டேன்.
நான் இங்கே இந்தச் செவ்வியைப் போட்டது கூடாது என்று நினைக்கிறீங்களா
ஆசாத் அண்ணே?
பி.கு.:
ரெண்டு நாள்..ரெண்டே நாள், சல்மா லாத்தா பேட்டில இருக்க மார்க்க சம்
மந்தப்பட்ட விஷயங்களுக்கு பதிலோட வரேன்.வாங்க வாங்க. காத்துக்கிட்டு இருக்கேன்.
அன்புடன்,
மதி
----------------------------------------------------------
From: "Abul Kalam Azad"
Date: Sat Jun 12, 2004 4:01 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
நான் இங்கே இந்தச் செவ்வியைப் போட்டது கூடாது என்று நினைக்கிறீங்களா
ஆசாத் அண்ணே?
இனிய மதி
என்னைப் பொறுத்தவரையில் அந்த செவ்வியை நீங்கள் இங்கு போட்டது சரி தவறு
என்பதைவிட அவர்கள் சொல்லியிருக்கும் சில கருத்துகளுக்கு விளக்கம் சொல்ல
வாய்ப்பு கிடைத்ததே என்பதால் மகிழ்கிறேன்.
விளக்கமாக பிறகு எழுதுகிறேனே...
அன்புடன்
அண்ணன்
ஆசாத்
------------------------------------------
தொடர்ச்சி
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )