Monday, September 20, 2004

இவ்வாரம் வலைப்பூவில் பணி

ஆரம்ப காலத்தில்தான் யாரும் இல்லாத போது என்னை அழைத்தார்கள்.
இன்று எத்தனை வலைப்பதிவுகள். அத்தனைகளிலும் எத்தனை பெரிய பெரிய வலைப்பதிவாளர்கள். இத்தனை பேர் இருக்க, இத்தனை பெரிய ஆலாபனைகளுடன் என்னை மீண்டும் அழைப்பார்கள் என நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சும்மா நானுண்டு, என் பேரப்பிள்ளைகள் உண்டு என்று விளையாடிக் கொண்டிருந்த என்னை மைக்கை தந்து மேடையில் ஏற்றி விட்டது போல இருக்கிறது. என் பாட்டுக்கு எதையாவது சொல்லலாம். இத்தனை பேர் என் முன்னால் நிற்கிறீர்கள். பேசுவதற்கு நிறைய இருந்தாலும் பேச நா எழவில்லை.

இருந்தாலும் அங்கு வாருங்கள். நீங்கள் தரும் உற்சாகம் ஒரு வேளை என்னை நிறையப் பேச வைக்கலாம்.

Sunday, September 19, 2004

மனுசி குறும்படம் எனது பார்வையில்

குடும்பம் என்றால் என்ன? மனைவி பணிவிடை செய்ய, கணவன் ராஜாங்கம் நடத்த ஏதோ ஒரு கட்டாய நிகழ்வுகளினூடான வாழ்வின் நகர்வுதான் குடும்பமா?

குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள். என்றெல்லாம் ஏட்டிலும் எழுதி, பாட்டிலும் பாடி விட்டால் போதுமா?
நடைமுறையில் என்னவோ இந்தளவு மதிப்பு பெண்ணுக்குக் கொடுக்கப் படுவதில்லையே! பெண் இல்லாமல் ஒரு ஆணால் தனித்து வாழ முடியாது என்பது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும், பெண்ணை விடத் தான் உசத்தி என்று எண்ணும் எண்ணம் இன்னும் ஆண்களை விட்டு அகலவேயில்லை. அதே நேரம் பல பெண்களின் மனதில் இருந்தும், தாங்கள் பெண்கள், அதனால் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணமும் விட்டுப் போகவில்லை. மிகுதி - இங்கே

Saturday, September 11, 2004

இதெல்லாம் எதற்காக...?




அரசியல் விளையாட்டுக்களில் மீண்டும் பலியானவை அப்பாவி உயிர்களே!
மூன்று வருடங்களின் முன் உலகையே திடுக்கிட வைத்த தாக்குதலில் பலியாகிப் போனது
3000 க்கு மேற்பட்ட வெறும் அப்பாவி மக்கள்தான்.

எமது நாட்டில் நடக்காததா..? அமெரிக்காவுக்கு இது வேணும்..? என்பது போன்றதான குரல்கள்
போர் அனர்த்தங்களால் பாதிக்கப் பட்ட நாடுகளில் இருந்து ஆற்றாமையோடு எழுந்திருந்தாலும்
இந்த நிகழ்வினால் மனசாரப் பலர் வருந்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இன்று தொலைக்காட்சியில் அந்த அனர்த்தத்தில்
தாய் தந்தையரை இழந்த குழந்தைகளையும்
உறவுகளை இழந்தோரின் கண்ணீரையும் பார்க்கும் போது
இதெல்லாம் எதற்காக என்று மனம் கலங்குகிறது.

Thursday, September 09, 2004

குழந்தை


சிந்து வந்து போனபின் வீட்டுக்குள்ளேயான சின்னச் சின்ன அசைவுகளும், சிறிய சலனங்களும் அவளாய் என்னை ஏங்க வைக்கின்றன. தெருவிலே ஒரு குழந்தை செல்லமாய் இராகம் பாடிய போது, அது சிந்துவின் சத்தம் போல இருக்கிறது என்கிறார் என் கணவர். அவள் என்னோடு நின்ற ஏழு நாள் பொழுதுகளையும் நினைத்து நினைத்துக் களிக்கிறேன் நான். பத்துமாதக் குழந்தையிடம் உள்ள சிந்திக்கும் ஆற்றல்கள் என்னை வியப்படைய வைத்தன. எனது குழந்தைகளை நான் பார்த்ததை விட, எனது குழந்தைகளின் குழந்தைகளை இன்னும் நுணுப்பமாகப் பார்க்கிறேனோ தெரியவில்லை.

அன்று கடந்த சனி, அவர்கள் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் சிந்துவுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் எனது கணவர் தனது கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அன்றைய பத்திரிகையை வாசிக்கத் தொடங்கினார். சிந்துவின் கவனம் பந்திலிருந்து எனது கணவரின் கண்ணாடியின் பக்கம் திரும்பியது. அதைத் தரும் படி கணவரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். எனது கணவரும் வேறு வேறு விளையாட்டுக்களைக் காட்டி அவளைத் திசை திருப்ப முனைந்தார். அவளோ கண்ணாடியின் மீதே கண்ணாக இருந்தாள். கணவரும் கொடுப்பதாக இல்லை. சற்று நேர முயற்சியில் கண்ணாடி கிடைக்காது என்பதிலான அதிருப்தி அவள் முகத்தில் தெரிந்தது. பந்தைச் சடாரென்று நிலத்தில் போட்டு விட்டு தத்தித் தத்தி நடந்து சென்று மாடிப் படிகளில் தவண்டு ஏறினாள்.

வீழ்ந்து விடுவாளே என்ற பயத்துடன் நானும் பின்னால் ஏறினேன். நேரே காந்திச் சிலை இருக்குமிடத்துக்குச் சென்று காந்தியின் கண்ணாடியை இழுத்து எடுத்தாள். அவளுக்கு படிகளில் ஏறத் தெரியும். இறங்கத் தெரியாது. நான் அவளை தூக்கி வந்து படிகளின் கீழ் விட்டேன். அவள் மீண்டும் தத்தித் தத்திச் சென்று கதிரையில் ஏறி என் கணவரின் அருகில் அமர்ந்து கொண்டாள். கண்ணாடியை சரியான முறையில் போடத் தெரியாது. அதனை எப்படியோ வாயடியில் சொருகிக் கொண்டு தானும் பத்திரிகையை வாசிக்க முயற்சித்தாள்.

இந்த விடயம் எனக்கு மிகுந்த ஆச்சரியமான சந்தோசத்தையே கொடுத்தது. சிறிய காந்தி சிலையின் கண்ணாடியையும், எனது கணவர் அணியும் கண்ணாடியையும் ஒப்பிடும் அளவுக்கு, அவ்வளவு தூரம் ஒரு பத்துமாதக் குழந்தையிடம் கிரகிக்கும் தன்மையும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்குமா என்பது என்னிடம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

சரி இதை ஏன் எழுத நினைத்தேன் என்றால்:
சத்தியராஜ்குமாரின் துகள்களில் பாலூட்டிகள்
என்றொரு கதை வாசித்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. எனது பேத்தி சிந்துவைப் பிரிவதே எனக்கு மிகுந்த கடினமான விடயமாக இருக்கும் போது, தான் சுமந்து பெற்ற மகவைப் பிரிய எந்தத் தாய் துணிவாள்.

பாலூட்டி கதையின் நாயகர்கள் பணமே குறியாகக் கொண்டு இப்படி ஒரு காரியத்தை எப்படிச் செய்வார்கள்..? இது மிக அதீதமான கற்பனையே என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் அது ஒரு உண்மைச் சம்பவத்தின் புனைவு என்று அறிந்த போது இன்னும் கூட அந்தத் தாய்க்காகவும், அந்தக் குழந்தைக்காகவும் என் மனது அசௌகரியப் படுகிறது.

ஒரு குழந்தையின் ஒவ்வொரு கணத்திலான அசைவுகளும், சத்தங்களும்.. அதனோடு சேர்ந்த படியான வளர்ச்சியும் சொல்லியோ, எழுதியோ புரிய வைக்க முடியாத சந்தோசம் கலந்த பொக்கிஷங்கள். அதைப் பார்க்க முடியாது பணம் சேர்த்து என்ன பயன்?

ஒரு குழந்தைக்குத் தாயின் அணைப்புக் கண்டிப்பாக வேண்டும். அந்தத் தொடுகை குழந்தையை உளரீதியாக எவ்வளவோ உவகைப் படுத்தும். விதிவசத்தால்.. போர்களால்.. எத்தனையோ குழந்தைகள் இந்தப் பாக்கியத்தை இழந்தார்கள் என்றால் தாயும் தந்தையும் உயிரோடு இருக்கும் போது இப்படியொரு கொடுமை அவசியமா?

இது தாய்க்கும் கூடாது.
குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும், வளர்ச்சியிலும் ஒரு தாய் குழந்தையே அவளது உலகமாகி உளரீதியாக எவ்வளவு இனிமையடைவாள். இந்த இனிமைகளையெல்லாம் காலுக்குள் போட்டு மிதித்து விட்டு, எதற்காகப் பணம்?

கோடையில் ஒரு பனிக்கட்டி மழை



Photo - Thumilan

யேர்மனியின் Schwaebish Hallநகரை ஒட்டிய Sulzdorf இல்
சரியான வெயில் எறிக்கும் ஒரு கோடை நேரத்தில்(12.8.2004)
திடீரென மேகம் கறுக்க, வானம் திறக்க புறா முட்டைகளின்
அளவில் கொட்டின, இந்தப் பனிக் கட்டிகள். .

கோடையில் ஒரு பனிக்கட்டி மழை யேர்மனியில்
வசந்தத்தில் ஒரு பனிக்கட்டி மழை சிட்னியில்

Wednesday, September 08, 2004

ஒரு பேப்பர்

ஒரு பேப்பர் தெரியுமா உங்களுக்கு...?

"வேறு நல்ல பெயரே உங்களுக்குக் கிடைக்கவில்லையா..?" என்று
ஒரு பேப்பர் வெளியீட்டார்களைப் பார்த்துப் பலர் முணுமுணுக்கிறார்கள்.

"அதென்ன தமிங்கிலிஸ் வேண்டிக் கிடக்கு. தமிழ் பத்திரிகை என்றால்
தமிழிலேயே இருக்கட்டுமே. பிறகேன் அதிலை இங்கிலீஸ்...!"
என்று
சினக்கிறார்கள் சிலர். (சினக்கிறது சும்மா ஒரு சாட்டுக்குத்தான். அவையளின்ரை பிள்ளையள் இந்த இங்கிலீஸ் பகுதியை மட்டுந்தான் வாசிக்கிறவையாம். இதாவது கிடைக்குதே என்று உள்ளாரச் சந்தோசம்தான்.)

இருந்தாலும் கதை, கட்டுரை, கவிதை, அரசியல், சிறுவர் பகுதி, Teens........ என்று
ஜனரஞ்சகத்துடன் 6 பத்திரிகைகள் இணையத்தில் வெளிவந்து விட்டன.
இலண்டன் வாசிகளுக்கு முற்றிலும் இலவசமாக பத்திரிகையாகவே ஒரு பேப்பர் கிடைக்கிறதாம்.

இதே போல பல வருடங்களாக வடலி என்ற அழகிய பெயரில் நல்ல பயனுள்ள பல கட்டுரைகளைத் தாங்கி ஒரு பத்திரிகை இலண்டனில் இலவசமாகவே வந்து கொண்டிருக்கிறது. அதை இணையத்தில் எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

பெயரிலி

சூரியப்பெயரிலி.
இரவுப்பெயரிலி.
பின்மதியப்பெயரிலி.
வேலையில பெயரிலி
வேலையத்த பெயரிலி.
பேயுமுறங்க Bit நன்னும் பிற்சாமப்பெயரிலி.


இவைகளைப் பார்க்க, சின்ன வயசிலை இலந்தைக்காய், புளியங்காய் காணியளுக்கை போனாப்போலை கூட வருகிற பள்ளிப் பிள்ளைகள்
நடுச்சாம முனி, மத்தியானப்பேய்.. கொள்ளிவால்பிசாசு.. என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்தின மாதிரி ஒரு பிரமை என்னைப் போலவே உங்களுக்கும் தோன்றலாம். பயப்படாதைங்கோ.

இது வலைப்பதிவுகளின் நன்மை, தீமை, வளர்ச்சி, தொடர்ச்சி... என்று ஒரு கரை காணும் நோக்குடன் அலசி ஆராய்ந்து எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் இவ்வார வலைப்பூ ஆசிரியர் ரமணிதரனின் அந்தந்த நேரப் பெயர்கள்.

Tuesday, September 07, 2004

மனமுள்


சுமதி ரூபனின் மனமுள் குறும்படம் எனது பார்வையில்

படைப்பாளி பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி ஒரு படைப்பை நோக்கும் போதுதான் படைப்பின் முழுமையான பரிமாணமும் ஒரு நோக்கனைச் சென்றடையும். ஆனாலும் மனமுள் குறும்படத்தை நான் பார்க்கும் போது, தமிழ்ப்பெண் ஒருத்தியின் படைப்பு என்ற குறுகுறுப்புடனான நோக்கு என்னுள் தவிர்க்க முடியாததாகி விட்டது.

படத்தைக் கணினித்திரையில் மிகவும் சிறியதாகத்தான் பார்க்க முடிந்தது. அதனாலோ என்னவோ எடுத்த உடனேயே என் கவனம் தொழில் நுட்பங்கள் பற்றிய பக்கங்களில் செல்லாது, கதையின் கருவோடு சென்றிருந்தது. ஒருவேளை சுமதி ரூபனின் யதார்த்தமான, சமூகப் பிரக்ஞை நிறைந்த படைப்புக்களின் மேல் நான் வைத்திருக்கும் அபிமானமும், மதிப்பும் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

நாசூக்கோடும், நயப்போடும் கதை சொல்லும் சுமதி ரூபனின் திறமை, படத்தின் கதை வசனங்களில் அழகாகக் கை கூடியுள்ளது. தந்தையர் இருவரும் பேசும் போதும் சரி, குழந்தைகள் இருவரும் தாம் வாழும் நாட்டின் மொழியில் இயல்பாகப் பேசும் போதும் சரி, பேச்சுக்கள் நயப்புடன் அமைந்து பார்வையாளரை கதைக்குள் ஈர்த்து விடுகின்றன.

கருவை எடுக்கும் போது அதில் எனக்குச் சற்று ஏமாற்றம் என்றே கூறலாம்.
"நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது. இப்ப.. சரியான தமிழ்ச்சனம்."என்ற வார்த்தைகளைக் கொட்டி.. அந்த ஆணின் தன்மையைக் காட்ட சுமதி முனைந்திருக்கலாம். ஆனால் கூடி வாழ்ந்ததால் கேடு வந்து பாழாய்ப்போன பல புலம் பெயர் மூலைகள் கனடா, பாரிஸ், லண்டன்... போன்ற இடங்களில் இன்னும் இருக்கின்றன.

புலம் பெயர்ந்த பின் தனிமை என்ற ஒன்றைக் கண்டு வெகுண்டு... எங்காவது ஒரு தமிழ் முகத்தைக் கண்டாலே மகிழ்ந்து... தமிழ்க் குரலுக்காக ஏங்கி.... தமிழ் எழுத்துக்களையே காணாது வாடி.... இன்று தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுமளவுக்கு பல தமிழர்கள் வந்து விட்டார்கள். அனேகமான பல தமிழர்கள் கூடி வாழ்வது நல்லது என்பது போல வெளியில் கதைத்தாலும், உள்ளார தமிழர்கள் இல்லாத இடம் தேடித்தான் வாழ்கிறார்கள். யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

தாயகத்தில் நாங்களும் எங்களோடு வாழ்ந்தவர்களும்... தமிழர்கள் என்பதையும் கடந்து அடியடியாக வந்த உறவுகள். எம்மோடு ஒத்து... அதாவது ஓரளவுக்காவது எமது நடைமுறைக்கு.. எமது பழக்கவழக்கங்களுக்கு.. என்று ஒத்து வாழப் பழக்கப் பட்டவர்கள். ஒரு கூட்டாக எம்மோடு வாழ்ந்தவர்கள். அது மட்டுமன்றி அடி, நுனி என்று அவர்தம் பரம்பரைப் பழக்க வழக்கங்கள் கூட எமக்குத் தெரிந்திருக்கும். இந்தக் குடும்பத்துடன் இந்தளவுக்குத்தான் சகவாசம் வைக்க வேண்டும் என்னும் கணக்குப் போட்டு வைக்கும் அளவுக்கு ஓரளவுக்கேனும் ஒவ்வொரு குடும்பத்தையும் அறிந்து வைத்திருப்போம்.

ஆனால் புலம் பெயர் மண்ணில் அப்படியான நிலைமைகள் இல்லை.
சந்திப்பவர்களில் எத்தனையோ பேர் தேவை கருதிப் பழகிவிட்டு, சமயம் வரும் போது உதைத்து விடுபவர்களாகவும், நட்பென்று சொல்லிக் கரம் நீட்டி விட்டு தருணம் பார்த்து முறித்தெறிய முனைபவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது சுயரூபமோ, குணாதிசயமோ எடுத்த எடுப்பிலேயே யாருக்கும் தெரிந்து விடுவதில்லை. சிலரின் அநாகரீகமான பழக்க வழக்கங்களுடன் கூட ஒன்ற முடிவதில்லை.

தனிமை, அந்நியச் சூழ்நிலை... என்ற ஒரு அந்தர நிலையில் தமிழர் என்று கண்ட உடனே மகிழ்ச்சியில் திளைத்து... அவர்கள் பற்றி எதுவுமே தெரியாமலே, நண்பர்களாக மதித்து வீடுகளுக்குள் அனுமதித்து விட்டு... காலப்போக்கிலோ அன்றி ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ... அவர்களின் சில செயற்பாடுகளால் நண்டைத் தூக்கி மடியில் வைத்தவர்களாய் திண்டாடிப் போகிறோம்.

இது இன்று நேற்றல்ல. பலகாலமாக புலத்தில் தொடர்கிறது. இது போன்றதான சில சம்பவங்கள்.. நடைமுறைகள்.. போன்றவற்றின் பிரதிபலிப்புத்தான்
"தமிழர்களோ...! அங்கே வேண்டாம்." "நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது. இப்ப.. சரியான தமிழ்ச்சனம்." போன்றதான குரல்கள்.

அதனால் நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது. இப்ப.. சரியான தமிழ்ச்சனம். என்ற இந்தப் பிரச்சனையைச் சொல்லி அந்த ஆணின் குணஇயல்பைக் காட்ட முனைந்தது அவ்வளவு சரியானதாக எனக்குப் படவில்லை.

அந்த ஆண் தன்னைத் திறம்பட்டவராகக் காட்ட நினைத்து அப்படிச் சொல்லும் போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. படத்தின் முடிவில் அவரின் மனசுள் இருந்த அசூசையான தன்மையைப் பார்த்த போது தனக்குள்ளே இவ்வளவு அழுக்கை வைத்திருக்கும் இவருக்கு அதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்ற எண்ணமும் எழுகின்றது. ஆனாலும் சுமதி சொல்ல வந்த விடயத்தையும் அந்த நபரின் குணஇயல்பையும் இன்னும் சற்று வித்தியாசமான முறையில் சொல்ல முயன்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இந்த எனது பார்வை ஏற்கெனவே தமிழ் பில்ம் கிளப்பில் பதிவாகியுள்ளது.
இன்னும் பலர் மனமுள் பற்றிய தமது பார்வைகளையும் இங்கு தமிழ் பில்ம் கிளப்பில் பதிந்துள்ளார்கள்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite