Sunday, May 29, 2005

ஒரு பேப்பர் - 22

ஒரு பேப்பர் 23ம் வந்து விட்டது.

22ம் பேப்பரைப் பார்த்து எழுத நினைத்தும் எழுதாமல் விட்டவைகளில் முக்கியமானது -
ஒருபேப்பர், செல்வநாயகியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்துள்ள செய்தி. எது ஆன்மீகம்? என்ற செல்வநாயகியின் தொடர் கட்டுரை மரத்தடி.கொம்மில் இருந்து எடுக்கப் படுவது தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

நிற்க, வாசகர் பகுதியில் செல்வநாயகியின் கட்டுரையைப் பாராட்டி யாராவது ஒருவராவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.

மற்றும்,

புலத்தில் புகைப்படம் மட்டும் பார்த்து நடக்கும் திருமணங்களால் விலை போகும் பலரின் வாழ்க்கையைப் பார்த்து குழம்பியிருக்கிறார் எல்லாளன். இது குறித்து உங்களையும் யோசிக்கச் சொல்லியுள்ளார். `ஆயிரம் காலத்துப் பயிர்` என்று அந்த நாட்களில் சொன்னார்கள். இப்போ பயிரின் தரத்தையோ நிலத்தின் தன்மையையோ ஆராயாமல் நட்டால் போதுமென்றுதான் திருமணங்கள் நடக்கின்றன. யோசிக்க வேண்டிய விடயந்தான்.

கைவிசேசத்தையும் பக்கற்றிலே கொடுக்கீனமாம். அருணன் பெருமூச்சு விடுகிறார். செவ்வாய்கிரகத்துக்கு விடுமுறையைக் களிக்கச் சென்று வரும் காலம் வந்தாலும், இலங்கை இனப்பிரச்சனை தீராது, பேச்சுவார்த்தை என்று பேய்க்காட்டப் படும் என்பதை இவர் சொல்லும் விதம் நன்றாயிருக்கிறது.

ந.ஹேமராஜின் பெறுபேறுகள் சிறுகதையும் நல்ல கருவைக் கொண்டுள்ளது.

அறுவைப்பக்கத்தில் வழமை போல அல்வாசிட்டியின் றியாலிட்டி இடம் பிடித்திருக்கிறது. கூடவே சயந்தனின் பின்னப் பெயிலாகாம என்ன செய்ய! வானம்பாடியின் புலம் பெயர் தமிழர் வாழ்க்கை தமிழோசையின் அரசியல் ஒரு விளக்கம் என்பன இடம் பிடித்துள்ளன.

சினிமாப் பகுதியில் அருண் வைத்தியநாதனின் நுனிப்புல் மேய்தலும் தமிழ் சினிமா ரசனையும் மீனாவின் மும்பை எக்ஸ்பிரஸ் என்பன இடம் பிடித்துள்ளன.

Friday, May 27, 2005

இரயில் பயணங்களில்...


அப்போது எனக்கு 22வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும் படி சொல்லி விட்டுச் சென்றார். கொழும்பிலிருந்து கொடிகாமத்திற்குத் தனியாகப் பயணிப்பது எனக்குப் புது அனுபவம். அதனால் சற்றுப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது.

மூன்று மாதங்கள் மட்டுமே ஆனதால் எனது கர்ப்பமான வயிறு வெளியில் தெரியவில்லை. கர்ப்பமான பெண்களுக்குள்ள வழமையான இயல்புகள் என்னையும் விட்டு வைக்கவில்லை. சத்தியிலும், குமட்டலிலும் அதானாலான அசௌகரியங்களிலும் நான் நன்கு மெலிந்திருந்தேன். பூப்போட்ட பச்சை நிறச் சேலை அணிந்திருந்தேன். அதற்கு மச்சிங்காக பச்சை மேற்சட்டையும் என் உடம்போடு ஒட்டியிருந்தது.

என் கணவரின் சிபாரிசு இல்லாமலே எனக்கு உதவத் தயாராக இருந்தான் அந்த இளைஞன். ரெயின் வெளிக்கிட்டு, பிரிய மனமின்றி என் கணவர் பிரிந்த கையோடு அந்த இளைஞன் அவசரமாக எழுந்து என் இருக்கைக்கு வந்து விட்டான். "என்ன வேணும்?" அவன் கேட்ட விதமே எனக்கு என்னவோ போலிருந்தது. அவனைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை.

சடாரென்று எழுந்து நான் இன்னொரு இருக்கைக்கு நகர்ந்தேன். வெறுமையாக இருந்த அந்த இருக்கையில் இருந்து இவனைத் திரும்பிப் பார்த்தேன். இவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். "வந்து இங்கே இரேன்" என்பது போல சைகை செய்தான். நான் அவசரமாகத் திரும்பி விட்டேன்.

றாகம வரை பிரச்சனைகள் எதுவும் இல்லை. தனியாகத்தான் இருந்தேன். இவன் வந்து என் பக்கலில் அமர்ந்து விடுவானோ என்ற பயம் மட்டும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.

நான் எதிர்பாராத ஒரு கணத்தில் றாகம புகையிரதநிலையத்தில், என் பக்கலில் இன்னொரு இளைஞன் வந்து அமர்ந்தான். நான் ஜன்னல் பக்கமாக நன்கு தள்ளி அமர்ந்தேன். அவன் என் பக்கம் திரும்பி மெதுவாகச் சிரித்தான். சாந்தமாக இருந்தான். முதலாமவன் மேல் இருந்த பயம் இவன் மேல் எனக்கு வரவில்லை. ஆனாலும் சங்கடமாக இருந்தது.

வேறெங்காவது இடமிருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். எல்லா இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. இரண்டாமவன் என்னோடு மெதுமெதுவாகப் பேச ஆரம்பித்தான். நான் கஸ்டப் பட்டுப் பதில் சொன்னேன். தனக்கு சாப்பாடு வாங்கப் போகும் போது எனக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு வர வேண்டுமா எனக் கேட்டான். வயிற்றுக்குமட்டலுக்கு ஏதாவது சாப்பிட்டால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஒரு சான்ட்விச் வாங்கும் படி சொல்லிக் காசு கொடுத்தேன். காசை வேண்ட மறுத்தான். "காசு வேண்டாவிட்டால் எனக்கு சான்ட்விச் வேண்டாம்" என்றேன். காசை வாங்கிக் கொண்டு போய், சான்ட்விச் வாங்கிக் கொண்டு வந்தான். அவன் மேல் கொஞ்சம் நன்றியாயிருந்தது.

இப்போது சரளமாக அவன் என்னுடன் பேசத் தொடங்கி விட்டான். பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன் என்றான். சாதாரணமாகக் கதைத்துக் கொண்டு போனவன் திடீரென "ஐ லவ் யூ" என்றான். நான் திருமணமானவள் என்றேன். அவன் நம்பவில்லை. சுத்தமாக அவன் நம்பவில்லை. "நான் கர்ப்பமாகக் கூட இருக்கிறேன்" என்றேன். அவன் நம்பவே இல்லை. நான் முழுப்பொய் சொல்வதாகவே அவன் நம்பினான். என்னைத் தன்னுடன் வவுனியாவுக்கு வந்து விடும்படி கேட்டான். நான் சம்மதித்தால் என் வீட்டுக்கு வரவும் தயாராக இருந்தான். தனது முகவரியைத் தருகிறேன் என்றான். "வேண்டாம்" என்று சொல்லி விட்டேன்.

வுவுனியா புகையிரதநிலையம் வந்ததும் ரெயினை விட்டு இறங்க மனமின்றி அப்படியே இருந்தான். என்னுடன் யாழ்ப்பாணம் வரப் போகிறேன் என்றான்.
அவனது செய்கை சற்றுக் குழந்தைப் பிள்ளைத்தனமாகவே இருந்தது. "போய் உங்கள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடருங்கள்" என்றேன். அரைமனதோடு இறங்கிச் சென்றான்.

வவுனியாவில் ரெயினால் இறங்கும் வரை அவன் வரம்பு மீறவுமில்லை. நான் கர்ப்பமாயிருக்கிறேன் என்பதை நம்பவுமில்லை.

இப்போது அவன் ஒரு பட்டதாரியாக இருக்கலாம். அல்லது எமது நாட்டின் போர் அவனை அடித்துப் புரட்டி அகதியாக்கியிருக்கலாம். அல்லது இன்னும் ஏதாவது நடந்திருக்கலாம். எதுவாயினும்...

அவனை என் நினைவுகளிலிருந்து முற்று முழுதாகத் தூக்கியெறிந்து விட முடியவில்லை. எப்போதாவது வந்து முகம் காட்டிப் போகிறான்.

சந்திரவதனா
ஜேர்மனி
27.5.2004

Tuesday, May 24, 2005

பாலியல் வன்முறை ஜேர்மனியிலும்...


உலகளாவிய ரீதியில் தொடரும் பாலியல் வன்முறை, ஜேர்மனியிலும் அவ்வப்போது தன் கோரமுகத்தைக் காட்டிக் கொண்டே இருக்கிறது.
மீண்டும் ஒரு பெண்குழந்தை இந்தக் கோரத்துக்குப் பலியாகியிருக்கிறது.

6வயதுகள் மட்டுமே நிரம்பிய Ayla, 23.5.2005 அன்று, 37வயதுகள் நிரம்பிய ஒருவரால் கடத்தப் பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டு கொலை செய்யப் பட்டிருக்கிறாள். இது நடந்தது Zwickau (Sachsen)இல்.

இக்கொடுஞ்செயலைச் செய்த 37வயதானவர் 1998இல் தனது பெறாமக்கள் இருவருடன் பாலியல் துர்ப்பிரயோகத்தில் ஈடுபட்டதன் காரணமாக இருவருடத் தண்டனை அனுபவித்திருக்கிறார்.

இதே 37வயதானவர் தனது 17வயதில் ஒரு வயதான பெண்ணைக்கத்தியால் குத்தியதற்காக 15வருட தண்டனை பெற்றுள்ளார். ஆனாலும் இளம்வயதினருக்கான சட்டத்தைக் காட்டி தண்டனை பத்து வருடங்களாகக் குறைக்கப் பட்டிருக்கிறது.

இப்படியானவர்களுக்கான தண்டனைகளின் கனம் குறைவாக இருப்பதுதான் தவறுகள் தொடர்வதற்கான பெரும் காரணிகளாக இருக்கின்றனவோ?

இப்படியானவர்களை மீண்டும் மீண்டும் சமூகத்தின் மத்தியில் நடமாட விடுவது எத்தகைய பயங்கயரமானது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இருந்தும் சட்டங்கள் இவைக்கு உறுதுணையாகின்றனவே!

Monday, May 23, 2005

ஒடியல்ப்பிட்டு


ஒடியல் மாவை தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும்.
மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விட்டு மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுக்கவும்.

இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போலத் தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும். குழைத்த மாவுள் நிறையத் தேங்காய்ப்பூ போட்டு அவிக்கவும்.

இந்தப் பிட்டு மாவுக்குள் கத்தரிக்காய் கீரை.. போன்ற காய்கறிகள் போட்டு பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, தேங்காய்ப் பூவும் தாரளமாகப் போட்டு அவிக்க மிகவும் சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய், நெத்தலி போட்டும் அவிக்கலாம்.

ஒடியல் கூழ்


நா.கண்ணன் அவர்கள் ஒடியல் மாவை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார். அவருக்காக ஒரு பதிவு.

தேவையான பொருட்கள்.
ஒடியல் மா - 1 கப்
மிளகு தூள் - சிறிதளவு
செத்தல் மிளகாய் - 10
மஞ்சள் - சிறிதளவு
சின்னச்சீரகம் - சிறிதளவு
உள்ளி - ஒரு பெரிய பூடு
உப்பு - ருசிக்கேற்ப
புளி - ஒரு அளவான உருண்டை (மோதகத்தை விடச் சிறியது)

மரவள்ளிக்கிழங்கு
பலாக்கொட்டை
பயத்தங்காய்(அல்லது போஞ்சி)
பூசணிக்காய்

மீன்
இறால்
நண்டு
நெத்தலி

செய்முறை
ஒடியல் மாவை குறைந்தது பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற விடவும்.
புளியை இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊறவிடவும்.

இந்த இடைவெளியில் மரக்கறிகளை சிறிதாக வெட்டி, மீன் வகைகளைத் துப்பரவாக்கி எடுத்துக் கொள்ளவும்.

மிளகு, மஞ்சள், செத்தல், உள்ளி, சின்னச்சீரகம் அனைத்தையும் பசுந்தாக அரைத்தெடுக்கவும். பெரிய பாத்திரமொன்றில் தண்ணீர் விட்டு, அதனுள் இந்த அரைத்த சரக்குக் கலவையை இட்டுக் கொதிக்க விடவும். கொதித்து வர மரக்கறிகளையும், மீன் வகைகளையும் அதற்குள் போட்டு அவிய விடவும். மரக்கறிகள் அவிந்து கொண்டு வர, ஊற வைத்த புளியை நன்கு கரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றவும். புளியும் நன்கு கொதித்த பின் ஊற வைத்த ஒடியல் மாவின் மேலுள்ள தண்ணீரை வடித்து ஊற்றி விட்டு, அந்த மாவையும் கொதிக்கும் கலவைக்குள் போட்டுக் கிளறவும். கூழ் இறுக்கமாக இருந்தால் அளவான பதத்துக்கு வருவதற்கேற்ப கொஞ்சம் கொதிநீர் விட்டுத் துளாவவும்.

சுவையான ஒடியல் கூழ் தயாராகிவிடும்.

Thursday, May 19, 2005

சிகரத்தைத் தொடு

பரணிலிருந்து....

சிகரம் தொடுவது
சிரமம் போல்
உலகம் நிறைய
விரசங்கள்

அகரத்தில் தொடங்கி
உலகத்தை அளந்தவனுக்கு
சிகரத்தைத் தொடுவதில்
சிரமம் ஒன்றும் இல்லையே

துயரத்தை
களைந்து விடு
துரோகங்களை
ஒதுக்கி விடு

மனித நேயமும்
மனதில் நேசமும் கொண்டு
கரங்களை உயர்த்தி
சிகரத்தைத் தொடு

சந்திரவதனா
யேர்மனி 2001

இலவசமாக ஐரோப்பிய ஈழமுரசு


இணையங்களின் வரவில் ஐரோப்பியாவில் பத்திரிகைகளின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் இலவசப்பத்திரிகைகளே பெரும்பாலும் வாழ்கின்றன. பாரிசிலிருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகையும் இந்த விடயத்தில் பலமாக ஆட்டம் கண்டு இப்போது இலவசமாக வெளிவருகிறது.

தொடர்புகளுக்கு:
POOBALAM
22 Rue Perdonnet
75010 Paris
FRANCE
தொலைபேசி : 00331 40059515
தொலைநகல் : 00331 40059516
மின்னஞ்சல் : ஆசிரியர் பீடம்:poobalam@free.fr
விளம்பர விநியோக தொடர்புகளுக்கு : poobalam@free.fr

Thursday, May 12, 2005

கைத்தொலைபேசிகளின் ஆக்கிரமிப்பு


சின்ன வயதில் வானொலி.. பத்திரிகை.. இரண்டையும் தாண்டி எனக்குச் செய்திகளைக் கொண்டு வருவது எனது அண்ணன்தான்.

எங்காவது விறாந்தை நுனியிலோ, அல்லது யாராவது ஒருவரின் கட்டிலில் சுவரோடு சாய்ந்து அமர்ந்தோ, அல்லது பின் வளவுக்குள் பனங்கொட்டில் அமர்ந்தோ... நாங்கள் கதையளப்போம். அப்போதெல்லாம் அண்ணன், தான் அறிந்தவைகளையும் அதனால் தன்னுள் எழுந்த வியப்புக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்வான்.

"உனக்கு ஆச்சரியமாயில்லையோ...? சும்மா ஒரு என்வெலப்பிலை ஒரு ஆளின்ரை பெயரை எழுதி, தெருவின்ரை பெயரையும் எழுதி, நகரத்தின்ரை பெயரோடை நாட்டின்ரை பெயரையும் எழுதி தபாற்பெட்டிக்குள்ளை போட, ஒரு கடிதம் அமெரிக்காவிலை உள்ள அந்த ஆளட்டையே சரியாப் போய்ச் சேருது." என்பான்.

இன்னொரு தரம் வயர் வழியே வரும் மின்சாரம் பற்றியும், இன்னுமொருதரம் அலை பற்றியும்... என்று ஏதாவது சொல்லி என்னைச் சிந்திக்கவும், சில சமயங்களில் சிரிக்கவும், பல சமயங்களில் வியக்கவும் வைப்பான்.

இப்படித்தான் ஒருநாள் சொன்னான்.
"உனக்குத் தெரியுமோ அமெரிக்காவிலை கார் இல்லாத வீடுகளே இல்லை. சில வீடுகளிலை இரண்டு காரும் இருக்குதாம்" என்று.

எனக்கு ஆச்சரியம்தான். அப்போது எங்கள் ஊரில் ஓரிருவர் வீட்டில் மட்டுமே கார்கள் இருந்தன. அவர்களும் இனியில்லையென்ற பணக்காரர். எங்களுக்கு கார் தேவையென்றால், யாராவது சைக்கிளில் ரவுணுக்குப் போய் ரக்சிக்குச் சொல்லி விட்டு வருவார்கள்.

அண்ணனுக்கு அவனது றலி சைக்கிள் ஒரு விமானத்தை விடப் பெறுமதியானது. சின்னத் தூசி பட்டாலே தேங்காய் எண்ணெய் பூசி துடைத்துத் துடைத்து அத்தனை பத்திரமாக வைத்திருப்பான். அப்பா கொடிகாமம் புகையிரதநிலையத்தில் வேலை செய்கிற போது பஸ்சைப் பிடிக்கத் தவறி விட்டார் என்றால், தனது ஏதோ ஒரு (பெயர் மறந்து விட்டது) சைக்கிளில்தான் பத்துக்கிலோ மீற்றர் தூரத்தையும் கடப்பார்.

இப்படியெல்லாம் எமது வீட்டு.. நகரத்து.. நாட்டு நிலைமைகள் இருக்க `அமெரிக்காவில் ஒரு வீட்டில் இரண்டு காரோ...!` மனசு அதைப் பற்றிக் கனக்க யோசித்துக் கொண்டே இருக்கும். `அமெரிக்கா எப்படி இருக்கும்? அங்கு மனிதர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள்?` என்று அறிய அங்கலாய்க்கும்.

இந்த அங்கலாய்ப்புகளுக்கோ, அல்லது பனங்கொட்டின் மேல் இருந்து கதைக்கும் காலத்துக்கோ முற்றுப்புள்ளி வைக்கும் காலம், நாம் நினைக்காத ஒரு நேரத்தில் வந்து சேரும் என்று யார் கண்டது.

வந்து விட்டது. இந்த நேரத்தில் நான் இன்னும் ஊரில் அதே சின்னவளாய் இருக்க, எனது அண்ணன் எனக்குப் புதினம் சொல்வதானால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தேன்.

"உனக்குத் தெரியுமே...? நோர்வேயிலை கைத்தொலைபேசி வைச்சிருக்காத ஆக்களே இல்லையாம். சில ஆக்கள் ஒன்றுக்கு இரண்டு கைத்தொலைபேசியும் வைச்சிருக்கினமாம். சரியான சின்னனாய் இருக்குமாம். பொக்கற்றுக்குள்ளையோ போட்டுக் கொண்டு போவினமாம். "

நான் தபாற்கந்தோரிலை இருக்கிற, சுழற்றி நம்பர் அடிக்கிற தொலைபேசியை நினைத்துப் பார்த்துக் குழம்பிக் கொண்டு, அவன் சொல்லுறதை நம்ப முடியாமல் தடுமாறிக் கொண்டு நிற்பன்.

அவனுக்கு விளங்கீடும். அவன் தொடர்ந்து சொல்லுவான்.
"எனக்குத் தெரியும். உனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் உண்மை. 2004 கடைசியிலை கணக்கெடுப்புச் செய்தவையாம். நோர்வேயிலை 4.6மில்லியன் மக்கள்தான் இருக்கினமாம். ஆனால் 4.71மில்லியன் கைத்தொலைபேசி பாவனையில் இருக்காம்."

இப்ப எனக்கு கைத்தொலைபேசி எப்படி இருக்கும் அதைப் பார்க்கோணும் என்ற ஆசை கட்டாயம் வந்திருக்கும்.

சந்திரவதனா
12.5.2005

நூல் வெளியீட்டு விழா


கடற்கரையில் அந்தக் கல்லறைகள்

"தென்றல் வரும் தெரு". "விடியலின் முகவரி" ஆகிய இரு கவிதைநூல்களை வெளியிட்ட கவிஞர் த.சரீஷ் அவர்களின் மூன்றாவது கவிதைத்தொகுப்பான

கடற்கரையில் அந்தக் கல்லறைகள்
என்னும் நூல் வெளியீட்டு விழா
காலம் - 15.05.2005 ஞாயிறு (மாலை 15மணி)
இடம் - ஹம் ஸ்ரீ அம்பாள் ஆலயம்ஹம் - யேர்மனி

எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் விமர்சகர்கள் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றார்கள்

தொடர்புகளுக்கு-
Tel: 0033617029563 & 00492381956609
e-Mail: poet.sharish@gmail.com
www.sharishonline.com



Original Notice

Saturday, May 07, 2005

ஒரு நாளும் இல்லாத திருநாளாய்...


ஒரு நாளும் இல்லாத திருநாளாய் இண்டைக்கு எங்கடை நகரத்திலை சந்திரமுகி படம் ஓடீனம். நான் யேர்மனிக்கு வந்து 19 வருசமாச்சு. இதுவரையிலை ஒரு தமிழ்ப்படம் எங்கடை நகரத்திலை ஓடேல்லை. முந்தநாள்த்தான் ஒரு பெடியன் ரெலிபோன் அடிச்சு "அக்கா சந்திரமுகி படம் ஓடுறம், வாங்கோ அக்கா" என்றான்.

"எங்கை? எந்தத் தியேட்டரிலை?" எண்டெல்லாம் கேட்டுப் போட்டு, "ரிக்கற் என்ன விலை?" எண்டு கேட்டன். "15யூரோ" எண்டான்.

`அவ்வளவு காசோ...! நானும் என்ரை மனுசனும் போறதெண்டால் 30யூரோ வேணும். வீட்டிலை ஏதாவது படம் ரீவியிலை ஓடினால், ஆராவது என்னை ஆய்கினைப் படுத்தி கூப்பிட்டு படத்தைப் பார்க்க வைச்சாலே அரைவாசியிலை நித்திரையாப் போற ஆள் நான். இப்ப 30யூரோ குடுக்கட்டே!

ஓசிப்பேப்பர் ஓசி வலைப்பதிவு... எண்டு கொண்டு திரியிற என்னைப் பற்றி அவையளுக்கு விளங்கேல்லை.` நான் போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன். என்ரை மனுசனும் சொல்லிப் போட்டுது "இது ஊரிலை ஆடு அடிச்சு பங்குக்கு ஆள் சேர்க்கிற மாதிரித்தான்" எண்டு.

ஆனால் என்ரை பிள்ளையள் மட்டும் சொல்லிப் போட்டீனம். "எங்கடை தமிழ்ஆக்கள் படம் போடக்கை, அதுவும் எங்கடை நகரத்திலை போடக்கை, நாங்கள் போகாட்டில் சரியில்லை. அதால நாங்கள் போறம் எண்டு."

"சரி ஏதோ உங்கடை பிரச்சனை" எண்டு விட்டிட்டம்.

பார்த்தால் படம் தொடங்கிற நேரத்துக்கு அரைமணித்தியாலம் முதல்ல பிள்ளையைக் கொண்டு வந்த தந்து, "பேத்தியோடை கொஞ்சுங்கோ" எண்டு சொல்லிப் போட்டு அவை படத்துக் ஓடீட்டினம்.

பேத்தியோடை கொஞ்சிக் கொண்டிருக்கக்கைதான் ஓசியாய் வருகிற ஒரு பேப்பரிலை, சந்திரமுகியைப் பற்றி கனடா நண்பன் லண்டன் நண்பனுக்கு எழுதினது ஞாபகம் வந்தது. அட பேப்பர் வந்து கனநாளாப் போச்சு. இன்னும் அதைப் பற்றி ஒரு வார்த்தை வலைப்பதிவிலை எழுதேல்லை எண்டும் ஞாபகமும் வந்திச்சு.

இனி எழுதியும் என்ன...? அடுத்த பேப்பரே அங்கை லண்டனிலை வந்திட்டுது போலை இருக்கு. எல்லாளன் மறுபடியும் வந்தால் அங்கை பேப்பர் வந்திட்டுது எண்டுதான் அர்த்தம். (இது என்ரை ஒரு கணிப்புத்தான்.) ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. இந்தப் பேப்பரிலை எல்லாளன் எழுதியிருக்கிற கருத்திலை வழமைக்கு மாறா எனக்கும் நிறையவே உடன்பாடு.

எல்லாளன் மாதிரித்தான் எனக்கும். அப்பப்ப தொலைக்காட்சியிலை போற ஏதாவது நாடகங்கள் ஓரிரு நிமிடங்கள் என்ரை கண்ணிலையும் தட்டுப்படும். (ஓசியாய் ஏதாவது ஒளிபரப்பினால் மட்டுந்தான்). அந்த நேரங்களிலையெல்லாம் சடாரென்று தொலைக்காட்சி சணலை மாற்றிப் போடுவன். அவ்வளவு எரிச்சல் வரும் அந்த அழுகுணி நாடகங்களைப் பார்க்க. எந்த யுகத்துக் கதையளையெல்லாம் அவையள் எடுக்கினையோ எனக்குத் தெரியாது.

எங்கடை நாட்டுப் பொம்பிளையள் இந்த நாடகங்களைப் பார்க்கிறதுக்காண்டியே கார்ட் வேண்டி வைச்சிருக்கினமாம். இவையள் எல்லாளன் சொல்லுறது போலை அந்தந்த நாட்டு தொலைக்காட்சிகளில் போற தொடர் நாடகங்களைப் பார்த்தினம் எண்டால் எங்கடை தமிழ் தொலைக்காட்சிகளிலை போற நாடகங்கள் எவ்வளவு பின் தங்கியிருக்குது எண்டது விளங்கும். அது மட்டுமே அந்தந்த நாட்டு மொழிகளையும் ஓரளவுக்கேனும் தெரிந்து தமது வேலைகளைத் தாங்களே பார்த்துக் கொள்ளவும் முடியும்.

அடுத்து வசந்தனின் நாய்ப்பிறப்புகள் எப்பவோ வலைப்பதிவில் வந்தாலும் நான் ஒரு பேப்பரிலைதான் அதை வாசிச்சனான். நல்ல பதிவு. ஆனாலும் அந்தத் தலைப்புச் சரியோ எண்டு யோசிக்கிறன். அந்த நாய்களுக்குத்தான் எத்தனை வைராக்கியம். உயிரே போனாலும் வாழ்ந்த மண்ணையும் வீட்டையும் விட்டு வர மனமின்றி...

அறுவைப்பக்கத்தில் வழக்கம் போலை அல்வாசிட்டி விஜய் இடம் பிடிச்சிருக்கிறார்.

செல்வநாயகியின் ஆன்மீகம் அழகாகத் தொடர்கிறது.

சந்திரவதனா
7.5.2005

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite